நானும்ரவியும்ஒருவங்கியில்ஒரேகிளையில் பணியாற்றிக்கொண்டிருந்தோம். ஒரு ஞாயிற்றுக்கிழமை ரவியைப் பார்ப்பதற்காக அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். ஹாலில் உட்கார்ந்திருந்த ரவி விட்டத்தைப் பார்த்தபடி எங்கேயோ யோசனையாக இருந்தார். என்னைக் கண்டவுடன் எழுந்து வந்து வரவேற்று உட்கார வைத்தார். “என்ன ரவி பலத்த யோசனை போல் இருக்கிறதே”, என்றேன். “ ஒன்றுமில்லை , எங்கள் ஊரில் சிறுவயதில் நான் படித்தது நண்பர்களுடன் விளையாடியது எல்லாம் ஞாபகத்திற்கு வருகின்றது”, என்றார். “ ஓ ! பள்ளிப்பருவமா? அதையெல்லாம் மறக்க முடியுமா அதுதான் நீங்கள் ……”’ என்று நான் கூறி முடிக்கும் முன்பு, “அவற்றையெல்லாம் “நினைக்கிறேன் மணக்கிறது, நெஞ்சமெல்லாம் இனிக்கிறது “, என்று கூறினார். -................................................................. அது ஒரு பெரிய கிராமம். பஞ்சாயத்து யூனியன் . கோபால ஐயங்கார் அந்த ஊரில் ஒரு பெரிய நிலச்சுவான்தாரர். நல்ல உயரமும் அதற்கேற்ற பருமனுமாக நல்ல ஆகிருதியுடன் இருப்பார். கொஞ்சம் கூட கர்வம் கிடையாது. தயாள குணம் கொண்டவர் . மற்றவர்களுக்குத் தன்னாலான உதவிகளை எப்பொழுதும் செய்து கொண்டிருப்பார் . ஊரில் அவருக்கு நான்கு இடங்களில் நிலங்கள் உண்டு . வீடு அரண்மனை போல பெரிதாக இருக்கும். அவருக்கான கட்டில் , ஈசி சேர் போன்றவைகளும் பெரிதாக இருக்கும். நிலங்களை கவனித்துக்கொள்ளும் நான்கு விவசாயிகளும் தினம் சாயங்காலம் அவருடைய வீட்டிற்கு வருவார்கள் . .அவருடன் ஏறக்குறைய ஒரு மணி நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு வீட்டிற்குச்செல்வார்கள். கோபாலய்யங்காருடைய மூன்று பிள்ளைகளும் மதராஸ் , பம்பாய் டெல்லியில் வேலை நிமித்தமாக இருந்தார்கள். ஒரு பெண்ணும் மாப்பிள்ளையும் ஜாம்ஷெட்பூரில் இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் இரண்டு மூன்று குழந்தைகள். ஒவ்வொரு குழந்தைக்கும் மூன்று வயது முடிந்தவுடன் அவர்களைப் பெற்றவர்கள் கோபாலய்யங்காரிடம் கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். கோபாலய்யங்கார் பத்மா தம்பதியினர் அந்த குழந்தைகளை வளர்த்து , சில்லு தட்டி , 5 அல்லது 6 வகுப்பு வரை படிக்க வைப்பார்கள். .அதன் பிறகு அவர்களுடைய பெற்றோர்கள் அந்த குழந்தைகளை தங்களிடம் அழைத்துக் கொள்வார்கள். ------------------------------------------------------- ( நான் சிறுவனாக இருந்த காலம். எங்கள்வீட்டில்அப்பளம்தயாரிப்பார்கள். அம்மா சித்தி அக்கா எல்லோரும் அப்பளம் செய்வதற்கான உருண்டைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு வைத்து விடுவார்கள். அதைச் சுற்றிலும் அப்பளம் இடுவதற்கான ரவுண்டான கற்கள் நான்கு அல்லது ஐந்து மற்றும் அவற்றுக்கான குழவிகள் வைத்து விடுவார்கள் . இரண்டு பெரிய தாம்பாளம் வைத்து விடுவார்கள். நாங்கள் சிறுவர் சிறுமியர் அந்த அப்பள உருண்டைகளை எடுத்து உள்ளங்கை அளவுக்கு சிறிய சிறிய அப்பளங்களாக இட்டு அவைகளை தாம்பாளத்தில் போட்டு விடுவோம். இதற்குத்தான் சில்லு தட்டிப் போடுவது என்று பெயர். சமையல் வேலையெல்லாம் முடித்து கொண்டு அம்மா, சித்தி, மாமி எல்லோரும் வருவார்கள் . நாங்கள் இட்டு வைத்திருந்த சில்லுகளை அவர்கள் வெகு எளிதாகப் பெரிய அப்பளங்களாகமாற்றிவிடுவார்கள். ) ---------------------------------------------------------- கோபாலய்யங்காருடைய வீட்டில் எப்போதும் ஏழெட்டுக் குழந்தைகள் விளையாடிக் கொண்டும் ஓடிக் கொண்டும் சத்தம் போட்டுக் கொண்டும் இருப்பார்கள். அதில் கோபாலய்யங்காருக்கு கோபமே வராது. வீட்டில் ஒரு சமையல்காரர் உண்டு. குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஒரு மாமியும் உண்டு. அவள் தான் எல்லா குழந்தைகளுக்கும் வேளா வேளைக்கு சாப்பாடு போட்டு கவனித்துக் கொள்வாள். அதில் சில இரட்டைவால் குழந்தைகளும் உண்டு . அவர்கள் வீட்டில் செய்யும் விஷமங்கள் போதாது என்று வெளியிலும் சென்று விஷமங்கள் செய்வார்கள். நான்கைந்து வீடுகள் தள்ளி விவசாயக்கிடங்கு ஒன்று இருந்தது .அதன் மேனேஜர் சீனுவும் பியூன்ராமமூர்த்தியும் சாயங்காலம் நாலு மணி சுமாருக்கு தான் வருவார்கள். அந்த கிடங்குக்கு போர்டு எதுவும் கிடையாது. கதவின் மீது மூன்று இடங்களில் சாக்பீஸால் “விவசாயக்கிடங்கு”என்று எழுதியிருந்தது. ரகுவும் ராஜாவும் மூன்றாம் வகுப்பு படிப்பவர்கள். பொழுது போகாமல் அப்படியே தெருவில் நடந்து பேசிக் கொண்டே சென்றார்கள் . விவசாயக்கிடங்கு வாசலில் வந்ததும் சாக்பீஸால் எழுதி இருந்ததைப் பார்த்தார்கள் . உடனே அந்தக் கதவின் அருகில் சென்றார்கள். ஒருவரை ஒருவர் பார்த்து smile பண்ணிக்கொண்டார்கள்” உனக்கு ஒன்று , எனக்கு ஒன்று,” என்று பேசிக்கொண்டார்கள். “சில எழுத்துக்களை மட்டும் அழித்து விடுவோம் “ என்று பேசிக்கொண்டார்கள். ரவி “ விவசாயக்கிடங்கு” என்று இருந்ததை ,” விவாய கிங்கு” என்று மாற்றினான். ராஜா “விவசாயக்கிடங்கு” என்பதை “சாய டங்கு” என்று மாற்றினான். மூன்றாவதாக இருந்த “ விவசாயக் கிடங்கை”, என்ன செய்யலாம் என்று இருவரும் யோசித்துக் கொண்டு இருந்தார்கள். சரியாக அந்த நேரம் பார்த்து சீனுவும் ராமமூர்த்தியும் சைக்கிளில் வந்து இறங்கினார்கள். சிறுவர்கள் செய்யும் விஷமத்தைப் பார்த்து விட்டார்கள்.ஒருவர் கதவைத்திறந்துகொண்டு உள்ளே செல்ல மற்றொருவர் ரகுவையும் ராஜாவையும் அவர்களின் சட்டைக்காலரைப்பிடித்து கொண்டு உள்ளே சென்றார். அவ்வளவுதான் . ரகுவும் ராஜாவும் வாசற் கதவில் ஆரம்பித்து உள்ளே ஆபீஸ் ரூம் வரை மெட்ரோ வாட்டர் லாரியைப்போல பூப்பூவாய்த் தெளித்துக் கொண்டே சென்றார்கள். உடனே சீனுவும் ராமமூர்த்தியும் அவர்களை விட்டு விட்டார்கள். அதன் பிறகு சீனுவுக்கும் ராமமூர்த்திக்கும் இடத்தை சுத்தம் செய்ய அரைமணி நேரம் ஆயிற்று. அன்றிலிருந்து சீனுவும் ராமமூர்த்தியும் குழந்தைகள் விஷமம் செய்தால் கண்டுகொள்வதே இல்லை, அதே போல ரகுவும் ராஜாவும் அந்த கிடங்கு பக்கம் போவதே இல்லை. _ ------------------------------------------------------ ஒரு நாள் சாயங்காலம் வழக்கம்போல தாத்தா விவசாயிகளிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு எழுந்துகொண்டார். குழந்தைகள் எல்லாம் இரண்டு மூன்று குழுவாக பிரிந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள் .ஜெயஸ்ரீயும் ராமனும் ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தி திருமகன் மற்றும் மகாபாரதத்தைப் படித்துக் கொண்டிருந்தார்கள் .அவர்கள் இரண்டு பேர் மட்டும் ஒவ்வொரு சம்மர் ஹாலிடேஸிலும் இந்த புத்தகங்களையும் கல்கியின் புத்தகங்களையும் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு மூலையில் ரகு இரண்டு அடிநீளமுள்ள ஒரு குச்சியை வைத்துக் கொண்டிருந்தான்.” நான்தாண்டா எம்ஜிஆர் “,என்று சொன்னான். உடனே ராஜாவும் அதேபோல ஒரு குச்சியை எங்கிருந்தோ கொண்டுவந்து விட்டான். “ ஏய் நான் தாண்டா வீரப்பா “, என்றான்”. உடனே ரகுவும் ராஜாவும் அந்த குச்சிகளை வைத்துக் கொண்டு சண்டை போட ஆரம்பித்தார்கள். அப்பொழுதுதான் தாத்தா “அப்பாடா “, என்று சொல்லிக்கொண்டு ஈசி சேரில் போய் உட்கார ஆரம்பித்தார். அவ்வளவுதான் ! “தொபேர் “, என்று ஒரு சப்தம் கேட்டது. தாத்தா ஈசி சேருக்குள்விழுந்து விட்டார். “ஆ! “ என்று கத்தினார். உடனே ஐந்தாறு பேர் ஓடி வந்து அவரை தூக்கி மெதுவாக கட்டிலுக்கு கொண்டு போய் படுக்க வைத்தார்கள். தாத்தாவுக்கு பலத்த அடி. இரண்டு வீடு தள்ளி இருந்த டாக்டருக்கு சொல்லி அனுப்பினார்கள் அவரும் வந்தார். நிலைமையைப் புரிந்து கொண்ட ரகுவும் ராஜாவும் குச்சிகளைத்தூக்கி போட்டுவிட்டு ஓடிவந்துதாத்தாவைக்கட்டிக்கொண்டார்கள்.( Anticipatory bail ). அத்தனை வலியிலும் தாத்தா குழந்தைகளை அணைத்துக் கொண்டார். தாத்தாவின் பையன்களான பாச்சாவும் நரசிம்மனும் மிகுந்த கோபத்துடன் பிள்ளைகளை அடிக்க வந்தார்கள். “ எவண்டா அது அது ஈசி சேரில் இருந்து குச்சியை உருவினது ?”,என்று மிகக் கோபமாகக்கேட்டார்கள். ரகுவும் ராஜாவும் தாத்தாவின் அரவணைப்பில் இருந்துகொண்டே பயந்துகொண்டே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். மற்ற எல்லா குழந்தைகளும் ஓடிவந்து தாத்தாவைக்கட்டிக்கொண்டார்கள். தாத்தா மிகவும் பொறுமையாக தன் பையன்களைப்பார்த்து ,”குழந்தைகளை அடிக்காதீங்கடா , ஒன்றும் சொல்லாதீங்கடா “ என்று கூறினார். “ எனக்குத்தேன்கூடுதான் ஞாபகத்திற்கு வந்தது “,என்று முடித்தார்என் நண்பர் ரவி. தாத்தாவிற்குத் தன் பேரப் பசங்க மீது அத்தனை பிரியம்.
என்ன சார் நலமா ? நீங்கள் (உங்கள் கதாபாத்திரம் ரவி ) சொல்லும்படி, பள்ளிப்பருவ வாழ்க்கையின் ஞாபகங்கள் "நினைத்தாலே இனிக்கும் !" என்பது உண்மைதான். நீங்கள் பகிர்ந்த அப்பள நினைவுகள் எனக்குக் கல்லிடைக்குறிச்சியின் அரிசி அப்பளச் சுவையை ஞாபகப்படுத்திவிட்டன. சுட்ட அப்பளமும், நல்லெண்ணெய் மிதக்கும் மணத்தக்காளி வத்தக் குழம்பும், நெய்வாசத்துடன் சுடச் சுட மிளகு சீரக இரசமும், உப்பில் வருடக்கணக்கில் ஊறிய நார்த்தைத் துண்டு அல்லது மாகாளிச் சாற்றுடன் கடைந்த மோர்ச்சோறும் , மின்வெட்டு நேரத்தில் காவிளக்கு வெளிச்சத்தில் , மண்ணெண்ணெய் வாசத்தை நுகர்ந்தபடி, எவ்வளவு பரிமாறினார்கள் என்பதே தெரியாமல் சுற்றியிருக்கும் குடும்பத்தினர்க் கையில் சோற்றுக் கவளங்களைப் போட்டு வயிற்றையும் மனதையும் ஒரு சேர நிறைத்த உறவுகளின் உன்னதத்தை மறக்க முடியுமா ? இதையெல்லாம் அநுபவிக்கக் கொடுத்துவைக்காத இன்றைய பெரும்பான்மை இளைய சமூகத்தை எண்ணி மனதில் ஒரு மெல்லிய சோகம் படர்வதைத்தான் மறைக்க முடியுமா ? இருப்பினும், காலமாற்றத்தின் விளைவுகளை அதன் போக்கில் எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டால், கொஞ்சம் ஆறுதலாக இருக்குமென்று தோன்றுகின்றது. எல்லாவித காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்றாற்போல், வாழ்க்கை அதன் அநுபவ பாடங்களை வழங்கி கொண்டுதானிருக்கும். அதைக் கூர்ந்து நோக்கி இரசிப்பதற்குத் தான் நாம் இந்தக் காலத்துக் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டுமென எண்ணுகிறேன். கொஞ்சமே கொஞ்சம் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டால், எப்படிப்பட்ட வாழ்விலும் இனிமை காண முடியும் என்றும் எண்ணுகிறேன். பல பிரச்சனைகளையும் எளிதாய் வெல்லும் ஆற்றல் நகைச்சுவை உணர்வுக்கு உண்டு. உங்கள் பதிவுகளில் அந்த உணர்வு மெல்லியதாகவேனும் இழையோடுவது இரசிக்கும்படி உள்ளது. அதற்கு உங்களுக்கு என் நன்றி !
------------------------------------------------- Madam , I am well and I hope you are also in the same well ( ).(the smiley I posted is missing) It is a pleasant surprise for me to receive your feedback. கடைசியாக 2016 இல் எழுதியதாக ஞாபகம் . இரண்டு வருடங்களுக்கு பிறகும் ஒரு IL என்னை நினைவுகூர்ந்து அடையாளம் கண்டு கொண்டார் என்பதை நினைக்க மிகவும் குதூகலமாக இருக்கிறது. நம்முடைய அனுபவம் நமது சந்ததியினருக்கு கிடைக்க வில்லையே என்ற ஆதங்கம் நமக்கு இருந்தாலும், அவர்கள், தங்களுடைய அனுபவம் நமக்கு கிடைக்கவில்லையே என்று எண்ணுவார்கள். ஸ்மார்ட் போனை கொடுத்து இது எப்படி, அது எப்படி என்று எனது பேரனையோ பேத்தியையோ தான் கேட்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் எங்கேயோ இருக்கும் உங்களுக்கு நான் இப்படி எழுத முடியுமா ? நமது சொற்படி அவர்களையும் நமது காலத்திலேயே நிறுத்திவிட்டால், ( நம்மால் முடியாதது தான் ,இருந்தாலும் ) நாமும் கற்காலத்திலேயே இருக்க வேண்டியது தான். பழையன கழிதலும் புதியன புகுதலும் மாற்ற முடியாத இயற்கையின் நியதிகள். மாறாதது மாற்றம் ஒன்றுதான். இன்னும் எவ்வளவோ சொல்லத் தோன்றுகிறது, ஆனால் அவற்றை பின்னூட்டத்தைக் காட்டிலும் PM இல் எழுதலாம் என்றால் Profile Error நந்தி வழியை மறைத்துக் கொண்டு இருக்கிறது. தங்களுடைய திருக்குறள் போன்ற கவிதைகளை படித்தேன். மிக நன்றாக ரசிக்கும்படியாக இருக்கின்றன . தங்களுடைய இலக்கண விளக்கம் பற்றி : நான்படிக்கும் காலத்திலேயே இவ்வளவு விரிவாக விளக்கமாகப் படித்ததில்லை . எனக்கு நினைவில் இருப்பவை அறுபதுகளில் (நிறைய )மனப்பாடம் செய்த செய்யுட்களில் பத்து பதினைந்து பாக்கள் மட்டுமே. மற்றபடி நீங்காத நினைவாக இருப்பது தமிழாசிரியரின் ' அடி ' ஒன்றுதான் . அவர் சொல்லிக்கொடுத்த அசை , சீர் , தளை , வெண்பா , ஆசிரியப்பா இவையெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதப்பா ! ( இதை பக்கத்திலேயே இருந்து உங்களிடம் சொன்னால் தலையில் குட்டிவிடுவீர்களோ ?நல்லவேளை தப்பித்தேன் ; வாழ்க ஸ்மார்ட்போன் ! ) தங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி! k.suji.