வழக்கம் போல விடிந்த நாளும் சிறப்பு மிக்கதாய் மாறியது, இராமர் விரைவில் மகுடம் தரிப்பார் என்னும் செய்தியினால். கோலாகலங்கள் பெரிதாய்த் தொடங்க, அயோத்தி திணறியது, கருத்தும் விட்டது, எல்லோர் வீட்டிலும் இனிப்புகள் செய்ததினால். அன்னையரெல்லாம் தன் மகனுக்கே கிரீடம் என்று மகிழ்ந்திருக்க, தந்தையர் எல்லாம் தயரதன் அனையராய் பெருமை கொண்டிருக்க, குழந்தைகள் பெற்றோர் முகங்களைக் கண்டு துள்ளித் திரிந்திருக்க, வானமும் மகிழ்ந்து அயோத்தியில் மட்டும் பன்னீராய் தெளிக்க, இராமரை அரசவை வரச் சொல்லி, ஆள் மேல் ஆள் பறக்க, நான், நீ என்று சேவகர் இடையே போட்டியும் வலுத்திருக்க, இராமர் வரும் வரை சபையினிலே சலசலப்பும் நிறைந்திருக்க, அனைவரின் விழிகளும் முக்கிய வாயில், அதையே பார்த்திருக்க, வந்தார் இராமர் நிதானமாய், தன் அருங்குணத்துக்கு ஏற்ப, எப்போதும் போல் அவர் முகத்தாமரை நன்கு மலர்ந்திருக்க. அவரைக் கண்டதும் சத்தம் ஓய்ந்து, ஒரு அமைதி படர்ந்திடவும், அனைவர் செவியும் தயரதர் சொல்லைக் கேட்க வளைந்திடவும், சொன்னார் மன்னர் செவிக்கு அமுதம் போன்ற மொழியதனை. விரைவில் அரசினை ஏற்பாய்; இது இச்சபையின் முடிவென்றே! தந்தை சொல்லை மீறா மைந்தர், அசைத்தார் தலையதனை. அவரிடம் அனைவரும் கண்டதெல்லாம் அச்சிறு அசைவொன்றே! தூமகேதுவின் தாக்கமோ, அன்றி, விதி தான் செய்த மாயமோ, இராமரையே தன் மகனெனக் கொண்டவள் மனமும் மாறியது. அயோத்தியில் நிலவிய புழுக்கம் கண்டு வானும் பொருமியதோ? அறிவார் யாரோ, அந்நாள் முழுவதும் புழுங்கித் தள்ளியது. இராமரும் அழைத்து வரப்பட்டார் தந்தையின் அரண்மனைக்கு. பட்டம் இல்லை; ஈரேழாண்டுகள் நீ கானகம் சென்றிடுவாய்! தந்தையின் ஆணை! என்று சொன்ன சிற்றன்னை குரலுக்கு, பணிந்தவர் முகத்தில் இருந்த மலர்ச்சி துளியும் குன்றவில்லை.
குறிப்பு: (1) தூமகேது - ஒரு வால் நட்சத்திரம். அப்போது வானில் தோன்றியதே அயோத்தியில் கெட்ட சகுனமாகக் கருதப்பட்டது (2) இராமரைத் தன் மகனெனக் கொண்டவள் - கைகேயி (3) குன்றவில்லை - குறையவில்லை (3) இந்தப் பத்தி முழுவதும் ஒரே ஒரு 4 வரி கம்ப இராமாயணப் பாட்டின் தாக்கம். அந்தப் பாட்டு இதோ! மெய்த்திருப்பதம் மேவென்றபோதினும், இத்திருத் துறந்தேகென்றபோதினும், சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகத்தினையுன்னுவான். எப்படி, சித்திரத்தில் இருக்கும் மலர்ந்த தாமரையில் மாற்றம் இல்லையோ, அப்படியே இராமர் முகத்திலும் எந்த சூழ்நிலையிலும் மாற்றம் இல்லாது மலர்ச்சியே இருந்ததாம்.நீண்ட குறிப்புக்கு மன்னிக்கவும். -ஸ்ரீ
லதா, உங்கள் விரைவான பின்னூட்டத்துக்கு நன்றி. இராம காதையில் என்னை பாதித்த சம்பவங்களை அவ்வப்போது எழுத முயற்சி செய்கிறேன், கொஞ்சம் கற்பனை சேர்த்து. அவ்வளவு தான். தவிரவும், இராமரின் வாட்டம் காணா முகம் மிகவும் அற்புதமானது தானே! சோகத்தில் முடிக்கவில்லை இதை. அவருடைய பல சிறப்புகளில் ஒன்று இது. -ஸ்ரீ
arumayaana kavithai sri.....yethayum ore maathiri yetrukkollum manam ramarukku irunthathu.....nanru....
ராமரின் இந்த கதை நல்லவை அல்லவை அனைத்தையும் சமமாக பாவிக்க நமக்கு அறிவுரை கூறும் விதத்தான் அமைந்திருகிறது ராம காவியம் இல்லையா ஆர்ஜீஎஸ். இந்த கருத்தை அழகிய கவிதை வடிவில் தந்தமைக்கு மிக்க நன்றி
ஆம். இராமாயணம் தரும் சேதிகள் தான் எத்தனை? கம்பரே சொன்னாராம் இப்படி: பாற்கடலை பூனை நக்கிக் குடித்து, தீர்த்து விட முயல்வது போல் அவர் முயற்சி என்று. உங்கள் பாராட்டுக்கு நன்றி ரமா. -ஸ்ரீ
உங்கள் கற்பனையும், கற்பனையில் விரிந்த காட்சிகளின் அற்புதமும் அருமை. உங்கள் வரிகளைப் படிக்க நேர்ந்ததில் மெத்த மகிழ்ச்சி