சாதிகள் இல்லையடி பாப்பா பாரதியின் கவிதையை படித்தேன் கோனார் நோட்சில் ஒரு கைக்கூ கவிஞன் எழுதிய வரியின் சாராம்சம். வர்ணஸ்ரமம் முறையில் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு பல நூறு ஆண்டுகளுக்கு முன் பிரிக்கப்பட்ட சாதி வேற்றுமை இன்னும் தொடரத் தான் செய்கின்றன. கல்வியில் தொடங்கி அரசியல் வரை சாதியின் ஆதிக்கம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. நாட்டுக்காக உழைத்த காமராசர்,வா.வு.சிதம்பரம் பிள்ளை,பசும்பொன்முத்துராமலிங்க தேவர் போன்ற தியாகிகளின் அரும்பெரும் கொள்கைகளையும் கருத்துகளையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு அவர்களின் பெயரில் சாதிகளை நடத்தி வருகின்றோம். திறமைசாலியான இளைஞகளின் பெயருக்குப் பின்னாலும் இந்த சாதிப்பெயர் ஒட்டிக் கொண்டு பல நாடுகளை சுற்றி வருகின்றது. தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு முன்னுரிமை கொடுத்து அரசும் இந்த சாதிக் கலாச்சாரத்தை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.. 1100 மதிப்பெண் எடுத்த முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவனுக்கு கிடைக்காத மருத்தவப் படிப்போ பொறியியல் படிப்போ 800 900 மதிப்பெண் பெற்ற தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவனுக்கு கிடைத்தால் இதில் திறமைக்கு மதிப்பெங்கேயிருக்கின்றது.1100 மதிப்பெண் எடுத்த மாணவனால் படிக்க முடியாத பாடத்தை 800 மதிப்பெண் எடுத்த மாணவனால் எப்படி படிக்க முடியும் என்று அரசு ஏன் யோசிக்கவில்லையோ. இதே நிலமையில் சென்றால் இன்னும் சில ஆண்டுகளில் பிற்படுத்தப் பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கல்வியின் அடிப்படையில் முன்வகுப்பைச் சார்ந்தவர்களாகவும் முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பிரிவினர் பிற்படுத்தப்பட்டும் போவர். அப்படியென்றால் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பின் தற்போதைய கொடுக்கப்படும் சலுகை மு.வகுப்பப்பைச் சார்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும். இப்படி ஒரு சாதி கலாச்சாரத்தை தான் அரசு ஆதரித்து வருகிறது. சாதிகளற்ற சமூகத்தை உருவாக்க வேண்டுமெனில் திறமைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான படிவங்களில் சாதிப் பற்றிய கேள்வியின் அவசியத்தை என்னால் இன்றளவும் புரிந்துகொள்ள முடியவில்லை.. வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்யும் போது தான் இளைஞர்களுக்குத் தெரிகிறது சாதி வேற்றுமை வேண்டாமென்று. கலப்புத் திருமணங்களிலும் சாதிகள் மறைந்துவிடவில்லை; மாறிவிடுகின்றன. சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியின் பாடலும் சாதி இரண்டொழிய வேறில்லை என்ற அவ்வையின் பாடலும் பாடப் புத்தகங்களில் வெறும் பாடமாகவே இருந்துவிடுமா? சாதியில்லாத இந்தியா வெறும் கனவு தானா? குறிப்பு: பிற்படுத்தப்பட்ட வகுப்பு முற்படுத்தப்பட்ட வகுப்பு போன்ற வார்த்தைகளுக்குச் சமமான வேறு வார்த்தைகள் தெரியாததால் அதையே உபயோகிக்க வேண்டியதாயிற்று.