1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (26) மாலே ! மணிவண்ணா !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Dec 10, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    26) ஆண்டாள் பாடல் ( மார்கழி நோன்புக்கான பொருட்களை கண்ணனிடம் யாசித்தல்)

    மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
    ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
    பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
    போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
    சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
    கோல விளக்கே கொடியே விதானமே
    ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.

    பாசுரப் பொருளுரை


    "சரணடைந்தவர்களைக் காக்கும் நெடுமாலே ! நீலமணி வண்ணக் கண்ணனே ! எங்கள் குலப்பெரியோர் நீண்ட காலமாக கடைபிடித்து வந்த காரணத்தாலே, நாங்களும் இந்த மார்கழி நீராடலைத் தொடர்கிறோம் ! நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் நோன்புக்குத் தேவையான, பொருட்களைக் கூறுகிறோம், கருணையுடன் எமக்களிப்பாயாக ! பால் போன்ற வெண்மை நிறமுடைய, உலகங்கள் எல்லாம் அதிரும் வகையில் ஒலியை ஏற்படுத்த வல்ல (உன் இடக்கையில் உள்ள)பாஞ்ச சன்னியத்தை ஒத்த வெண்சங்குகளையும், அகலமான பறை வாத்தியங்களையும், பல்லாண்டு பாடுபவர்களையும், அழகிய விளக்குகளையும், கொடியையும், பந்தலிடும் துணியையும் ஆலின் இலையில் துயில்பவனான நீ, கருணை கூர்ந்து எங்களுக்கு அளிப்பாயாக!"

    பாசுரக் குறிப்பு

    5 X 5 + 5 இல் , இறுதியாகவும் , உறுதியாகவும் , இறை அடியார்கள் நாடி வந்தது என்னவென்று கண்ணனிடம் சொல்லி, நித்ய கைங்கர்யம் என்பதான வீடுபேற்றை அருளும்படி வேண்டிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ள, இறுதி ஐந்தின் தொடக்கப் பாசுரம். ஆண்டாள் மற்றும் அவள் தோழியர், இப்பாசுரத்தில் தாங்கள் நோற்கும் நோன்பிற்கு அவசியமான ஆறு பொருட்களைத் தருமாறு கண்ணனை வேண்டுகின்றனர்.
    இது 26 ஆவது பாசுரம்.தத்துவங்களின் வரிசையில், எண் 26 பரமாத்மாவைக் குறிக்கும் தத்துவம். (2+6=8; எட்டெழுத்து). இன்னும் நுணுக்கமாகச் சொன்னால் ,எண் 2 த்வய மந்திரத்தைக் குறிக்கும். எண் 6 என்பது சரணாகதி தத்துவத்தின் ஆறு அங்கங்களைப் ,பகுதிகளைக் குறிக்கும்.

    இறைவனடியின் கீழ் என்றுமிருந்து பணி செய்வதான வீடுபேற்றினை அடைய மேற்கொள்ளும் சரணாகதி வழியாகிய, ப்ரபத்தி மார்க்கத்தின் ஆறு அங்கங்கள் குறித்த மீள்பதிவு கீழ்வருமாறு :

    1)அநுகூல்ய ஸங்கல்பம் (இறைவனுக்கு உகந்த செயல்களை மட்டுமே செய்வது என்கிற உறுதி)
    2) ப்ரதிகூல்ய வர்ஜன ஸங்கல்பம், (, இறைவனுக்கு உகந்ததல்லாதவற்றை ஒரு போதும் செய்யாதிருத்தல் என்கிற உறுதி )
    3)பலத் த்யாகம்,( தான் எனது என்று சுயநலத்தோடு இல்லாமல், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்று எவ்வித பலனும் கருதாமல், இறைத்தொண்டில் ஈடுபடுதல்)
    4)மஹா விஸ்வாஸம் ,(இறைவன் காப்பான் என்று உறுதியாக நம்புதல்)
    5)கார்பண்யம், ( அவனன்றி ஓரணுவும் அசையாது என்றுணர்ந்து, எல்லாம் அவன் செயல் என்று அறிதல்.)
    6)கோப்த்ருவ வரணத்துடன் (ஆண்டவனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கோரிக்கை செய்தல், தொழுதல்) கூடிய ஆத்ம நிக்ஷேபம்- (நம் மனச்சுமைகளை ஆண்டவன் மீது இறக்கி வைத்தல்)

    இதன் விளக்கங்களை இவ்விணையப் பதிவில், படிக்கலாம்.

    இஜ்யா கால பஞ்சகத்தின் கீழ் வரும் பாசுரம் - புறத்தாலே செய்யும் திருவாராதனை (பாஹ்ய ஆராதனம்) என்கிற இறை பூசனைகள் பற்றி குறிப்பிடப்படுகின்றது.

    மந்த்ர,திருமஞ்சன,அலங்கார,நைவேத்ய,த்வஜ ,பர்யங்காஸ என்கின்ற ஆறு நிலை ஆராதனம்.
     
    periamma likes this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    நல்லடியார் மீதிலன்பு கொள்ளும் பரமனே,
    நீலமணி வண்ணத்துக் கண்ணனே,நாங்களும்
    காலங்காலமாய் எம் பெரியோர்கள் காட்டிய
    மேலான வழியில் மார்கழி நோன்பிருக்கிறோம் !
    மேலும் இந்நோன்பிற்கு வேண்டிய பொருட்களை
    ஏலுவதற்காக உனை வந்து பணிகின்றோம் !
    பாலின் வண்ணத்திலுன் கையில் இருக்கின்ற,
    உலகெலாம் அதிர ஓங்கி ஓங்கியொலிக்கின்ற,
    மேலானவுன் சங்கு பாஞ்சசன்னியம் போலவே,
    மேலாம் இந்நோன்பிற்கு எதிராய் இருப்போரை
    அலறியடிக்கச் செய்யும் சங்குகள் வேண்டும் !
    மாலுந்தன் நோன்பிற்குப் புறப்பாடு ஆனதை
    ஒலித்து முழங்கிட பேரிகையும் வேண்டும் !
    நல்லோர்கள் புறப்பாட்டைக் காப்பு செய்திட
    பல்லாண்டு இசைத்து வாழ்த்துவார் வேண்டும் !
    காலையிருள் இன்னும் நீங்காது இருப்பதால்
    நல்லொளி காட்டிடும் தீபங்கள் வேண்டும் !
    தொலைவில் இருப்பவர் நோன்பிடம் அறிந்திட
    மேலேறிப் பறக்கும் கருடக்கொடி வேண்டும் !
    நல்லாற்றின் கரையிலே நோன்பிரு களத்திலே,
    வல்லதாம் நோன்பு நோற்றிடும் அடியார்கள்
    தலையிலே பனித்துளி வீழாமல் காத்திட,
    நல்ல பந்தலமைக்கத் துணியும் வேண்டும் !
    ஜலப்பிரளய சமயத்தில் மிக ஆனந்தமாகவே
    கால்விரல் வாயிலே வைத்தொரு அழகுடன்,
    ஆலினிலையில் துயில் கொள்ளும் இறைவனே,
    மேலே சொன்னதாம் நோன்பு பொருட்களை
    நல்லடியார் எமக்கு நீ கொடுத்தருளிடுவாய் !

    மாலே! மணிவண்ணா - அடியார் மீது அன்பு கொண்ட திருமாலே, நீலமணி வண்ணக் கண்ணனே ! மால் என்றால் அன்பு என்று பொருள். இங்கே மால் உடையவனே என்று சொல்லாமல் மாலே என்றது அதாவது அன்பே என்றே விளித்தது ,கோபிகைகளுக்கும் கண்ணனுக்குமான காதலுறவைக் காட்டினாலும்,(அன்பே ஆருயிரே ?!!) இறைவன் அன்புருவானவன், அன்பையும் ஆண்டவனையும் பிரிக்க முடியாது என்ற கருத்தில் தான். அன்பே சிவமல்லவா ?

    மேலையார் செய்வனகள் - எங்களது குடியின் மூத்த மக்கள் செய்த இந்த, மார்கழி நீராடுவான்- மார்கழி நோன்பை நாங்களும் நோற்கிறோம்

    வேண்டுவன கேட்டியேல்
    - நாங்கள் நோற்கும் நோன்பிற்குத் தேவையான பொருட்கள் என்னவென்றால்,

    ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன - அண்ட பேரண்டங்கள் அதிரும்படி ஒலிக்கும்

    பால்வண்ணத்து பாஞ்சசன்னியம் போல் சங்கங்கள் - எங்கள் நோன்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்போரை அடக்கி, எங்கள் நோன்பை வெற்றிகரமாகத் துவக்கியதை அறிவிக்கும் வகையில் ஒலிசெய்யும் (சங்கநாதம்- மங்கலச் சின்னம்) சங்குகள் வேண்டும். "அரியென்ற பேரரவம்" என்று 6 ஆம் பாசுரத்தில் குறித்தாள், அல்லவா ? அங்கும் "வெள்ளை விளிசங்குகள் தானே அப்பேரரவத்தைச் செய்தன ?
    ஸாரூப்யம் என்னும் இறை தரிசனத்தைப் பெற்றதன் அடையாளமாக "உன் பாலன்ன வண்ணத்துப் பாஞ்சஜன்யம் " என்ற சொல்லாடல்.

    போய்ப்பாடு உடையனவே - நல்ல அகன்ற ஆழமான உட்புறம் கொண்ட சங்கு. சங்கு என்பது ப்ரணவத்தின் வடிவம். ஒவ்வொரு சீவாத்மாவும் கருவிலடைந்து பிறந்து, ஆச்சார்ய உபதேஸத்தால் , ப்ரணவம் சொல்லுகின்ற இறைஞானம் அடைந்து, மீண்டும் பரமாத்மாவோடே இணைகின்ற மூன்று நிலையைக் குறிக்கும் விதத்தில், மூன்று வரிகளால் சங்கின் பெருமை சொல்லப்பட்டது.

    சாலப் பெரும்பறையே
    - நோன்பிருப்பதற்குப் புறப்படுவதை அறிவிக்கும் பேரிகை, முரசு வேண்டும் (முரசு கொட்டி அறிவித்தல் )இவ்விடத்திலும் போய்ப்பா டுடையனவே என்று சேர்த்துப் பொருள் கொண்டால், அந்தப் பறையாகிய முரசும், மிகவும் பெரிதாக இருக்க வேண்டும். அப்போது தான் அதிலிருந்து எழுப்பப்படும் பேரொலியானது, நோன்பிருப்பவர்களின் கவனத்தை வேறெங்கும் சிதறாமல், இறை நினைவிலேயே நிறுத்தும்.

    பல்லாண்டு இசைப்பாரே - நோன்பிருப்போரை வாழ்த்தும் பல்லாண்டு பாடும் பெரியோர்கள் வேண்டும். இறைவனுக்குக் கண்ணூறு வரக்கூடாதே என்று பதைத்து, ஒரு தாயின் அன்போடும் அக்கறையோடும் ஆண்டவனுக்குக் காப்பிடும் வகையாகப் பல்லாண்டு இசைத்தவர் பெரியாழ்வார். அவரது புதல்வியானபடியால், அப்படிப்பட்டவர்களின் பெருமை நன்குணர்ந்த ஆண்டாள் இச்சொல்லாடலை செய்திருக்கிறாள்.

    கோல விளக்கே - விடியலிருள் இன்னும் இருப்பதால் மற்ற அடியாரைக் காண உதவியாய் விளக்குகள் வேண்டும்
    கொடியே- பரந்தாமனைக் குறித்து நோன்பிருப்பதை அறிவிக்கும் கருடக் கொடி வேண்டும்
    விதானமே - தலையில் மார்கழி காலத்துப் பனி விழாமல் ஆற்றின் கரையில் நோன்பிருக்கும் அடியார்கள் அமர பந்தலமைக்கத் துணி வேண்டும்

    ஆலின் இலையாய் - அண்டங்கள் எல்லாம் ஒடுங்கி மீண்டும் புதியதாய் துவங்கும் வேளையில்,பரந்தாமன் ஒரு ஆலமர இலையில் கால் கட்டைவிரலை வாயில் சூப்பிய குழந்தை வடிவில் பள்ளிகொண்ட உருவம் வடபத்ர (ஆலிலை ) ஸாயி ( பள்ளிகொண்டவன்) ஆண்டாள் வாழ்ந்த திருவில்லிப்புத்தூரில் வடபத்ரஸாயியாக (ஆலிலைத் துஞ்சிய பாலன்) இறைவன் அருள் புரிவதால், இப்படிக் குறித்தாள் போலும் !

    ஆலின் இலையாய் அருளே
    -ஆண்டாள் குழுவினர் உன் பாஞ்சஜன்யம் போல் பல சங்குகள் வேண்டும் என்று கூறுகிறாளல்லவா ? "மற்றதெல்லாம் தரலாம் ஆனால் பாஞ்சஜன்யம் ஒன்று தானே உள்ளது , அதைப் போல் வேறில்லையே அதற்கு நான் என்ன செய்வேன்?" என்று கண்ணன் பதிலளிக்கவும், "நீ பெரிய வித்தைக்காரன், கண்ணா ! அண்டங்களையெல்லாம் வயிற்றிலடக்கியதோடல்லாமல், ஒன்றுமறியாத பாலனாய் ஒரு சிறு ஆலிலையில் துஞ்சியவன் தானே நீ ! இவ்வளவு செய்கிறாய் இதைச் செய்ய மாட்டாயா ?உலகில் இல்லாத ஒன்றைக் கூட உன்னால் உண்டாக்கிக் தர இயலும், அப்படியிருக்க உன் பானச்சஞ்சலம் போல் சங்குகளும் இன்னும் நாங்கள் விழையும் நோன்புக்கருவிகளையும் உன்னால் தர இயலாதா ?" என்று பொருள் படும்படியாய்த்தான் இந்தச் சொல்லாடல் !

    பரமனுடைய எத்தனையோ வடிவங்களிருந்தும் ஆலிலை துஞ்சும் சிசுவைக் குறித்தது, சரணாகத வழியில் செல்ல விரும்பும் அடியவர்கள் ஒரு குழந்தையின் உள்ளத் தூய்மையுடன், இறைவனை உறுதியாக நம்பி ப்ரபத்தியாகிய சரணாகதத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற காரணத்தோடும், அண்டசராசரத்தைத் தன் வயிற்றில் வைத்திருந்தாலும், சிறு ஆலிலையில் அடங்கிவிடும் சிசுவின் உருவில் வளைய வரும் பெரும் ஆற்றலுள்ள,அதே சமயம் சுலபமாக நாம் நெருங்கக் கூடிய ஆண்டவனால், அடியார்களைக் காப்பாற்றி வீடுபேறு அளித்தல் என்பது இயலாத செயலல்ல என்பதைக் குறிக்கவும் தான் .

    அருள் - எங்களுக்குத் தேவையான நோன்பு பொருட்களை அருள் செய்.
     
    periamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம் - உட்பொருள் 1

    என்னைச் சரணடைந்தால் காப்பேன் என்றுரைத்த
    அன்புடைய ஆண்டவனே,அழகொளிரும் மேனியனே !
    உன்னைச் சரணடைய தெளிவான வழிமுறைகள்
    பண்டே எங்களுடை ஆசன்மார் காட்டியுள்ளார் !
    அன்று அவரளித்த வழிவிளக்கம் எவையெதென்று
    நன்றாய் உரைக்கின்றோம், விரும்பிக் கேட்டிடுவாய் !
    விண்ணோடு மண்ணுலகம் எங்கணுமே முழங்குகின்ற
    வெண்சங்கின் ப்ரணவநாதம் வழங்கும் ஞானத்தால்
    அண்ட சராசரமும் படைத்திட்ட இறைவனுக்குத்,
    தொண்டு செய்கின்ற அடியார் தாமென்றுணர்ந்தும்,
    இன்னும் இவ்வுலகிலுள்ள அசைகின்ற, அசையாத
    என்ற பொருளனைத்தும் இறைவன் வடிவாவதனால்,
    ஒன்றும் அவற்றுக்குத் தீங்கெதுவும் இழைக்காமல்,
    பண்டைய சாத்திரங்கள் உரைத்திட்ட வழியதனில்,
    சென்றிடுவோ மென்று உறுதிமொழி பூணுதலே,
    ஒன்றாம் படிநிலையாம் சரணாகத வழிமுறைக்கே !
    நன்றோங்கி முழக்கமிடும் முரசினைப் போலிருக்கும்,
    பண்டைப் பெருஞ்சாத்திரமும், மேலான நான்மறையும்,
    நன்மையில்லை என்றேதாம் ஒதுக்கி வைத்தவற்றை ,
    ஆண்டவனும் அடியவரும் விரும்பாத செயலவற்றை ,
    என்றைக்கும் செய்வதில்லை என்றுறுதி பூண்டிடுதல்
    நன்றாம் சரணாகதத்தின் இரண்டாம் படிநிலையாம் !
    தன்னந் தனியினிலே இறையருளைப் பெறுவதென்று
    எண்ணங் கொள்ளாமல் இறையடியார் பிறருடனே
    ஒன்றாய்க் கூடியுமே இறைப்பணியில் ஈடுபட்டுப்
    பண்ணும் சரணாகதிக்குப் பலனொன்றும் கருதாமல்
    பண்ணிசைத்துப் பரமனவன் பேரோடு புகழ்பாடி,
    தான்பெற்ற இறையின்பம் எல்லோர்க்கும் என்றிடுதல்
    மூன்றாம் படிநிலையாம் சரணாகத வழிமுறைக்கே !
    சின்னஞ்சிறு விளக்குப் பாய்ச்சியொளி காட்டுவதால்
    கன்னங்கருவிருளில் தேடுபொருள் அடைதல் போல்
    கண்ணில் தெரியாமல் இறைவனவன் இருந்தாலும்
    விண்ணகரக் கோவிலுளே உருவமுள்ள கற்சிலையாய்
    நின்றருள் புரிவதெல்லாம் ஆண்டவனேயெனக் கருதி
    எண்ணத்திலே திடவுறுதி கொள்ளுவதோ டல்லாமல்
    தன்னைச் சரணடைந்தோர் விரும்புகின்ற முக்தியினைத்
    கண்டிப்பாய் இறைவனவன் அருளிடுவான் என்பதிலே
    திண்மையான நம்பிக்கை விசுவாசம் பூணுதலே
    நான்காம் படிநிலையாம் சரணாகத விழிமுறைக்கே !
    நன்றாய் மேலிறிப் பறக்கின்ற கொடியொன்று
    தன்னைப் பறக்கச் செய்தல் காற்றுதானென்றும்
    தன்னால் தானாகப் பறக்க முடியாதென்றும்
    நன்றாம் உண்மையை உணர்ந்தேயிருத்தல் போல்,
    கன்றைக் காக்கின்ற தாய்ப்பசுவே பரமனென்றும் ,
    தன்னைத் தானாகக் காக்கின்ற சக்தியொன்றும்
    தன்னிடத்தில் இல்லையென சீவன் உணருதலும்,
    தன்னைக் காப்பற்றிக் கடைத்தேற்றி விடுதற்கு
    ஆண்டவன் அருளன்றி வழியேதும் இல்லையென்றும்,
    நன்றாய் அறிந்திடுதல் ஐந்தாம் படிநிலையாம் !
    ஆண்டவன் திருநாமம் உச்சரித்தே அடியார்கள்,
    என்னுடைய பாரமெல்லாம் ஏற்றுக்கொண்டு எனை
    நன்றாய்க் காப்பாற்றெனக் கோரிக்கை வைத்திட்டால்,
    தன்னிழலில் இருப்பவரைக் காக்கின்ற பந்தலைப்போல்,
    தன்னடியில் பணிந்தவரை இறைவன் காப்பானென்று .
    நன்றாய் உணர்ந்திடுதல் சரணாகத வழிமுறையில்
    பொன்னென மின்னுகின்ற ஆறாம் கடைநிலையாம் !
    அண்டமெல்லாம் ஒடுக்கி வயிற்றிலிட்டு ஆலினொரு
    சின்னயிலை மீதில் பாலனென்றே பள்ளிகொள்ளும்
    ஆண்டவனே உன்னால் ஆகாதது எதுவுமுண்டோ ?
    ஒன்றுமறியாத சிறுபிள்ளையைப் போல் உள்ளமுற்று,
    உன்னையடைவதற்கு நாங்கள் செய்யும் சரணமிதை,
    நன்றாய்க் கடைபிடித்துன் திருவடிகளில் சேர்வதற்கு
    வேண்டும் கருணையினை அருளிக் காத்திடுவாய் !
     
    periamma likes this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மாலே-
    "ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச"

    மாம்- இறைவனாகிய நான் என்று பொருள்- என்னைச் சரணடைய எண்ணுபவர்களுக்கு எளிமையாக அணுகும்படி இருக்கிறேன், என்று சொல்வதால் இறைவனுடைய ஸௌலப்யம் குறிக்கப்படுகின்றது.
    அஹம் - நானே செய்ய வல்லவன்- நானே உன் பாவங்களிலிருந்து உன்னை விடுவித்து வீடுபேறு வழங்குவேன் என்று சொல்வதால், இறைவனுடைய பரிபூரண அதிகாரம், ஸ்வாமித்வம், குறிக்கப்படுகின்றது.

    மாலே- கீதையில் கண்ணன் உரைத்த சர்மஸ்லோகத்தின் " மாமேகம் சரணம் வ்ரஜ" என்ற வரியின் சுருக்கமே"மாம்" . அதுவே இங்கு மால் எனக் குறிக்கப்படுகின்றது. தன்னைச் சரணடையும் சீவன் மேல் அளவற்ற அன்புடையவன் ஆண்டவன் என்று பொருள்.

    மணிவண்ணா- ஒளிவடிவான இறைவா,- மார்கழிநீ ராடுவான் - பிரபத்தி என்கிற சரணாகதிக்குக் கடைபிடிக்க வேண்டியவற்றை
    மேலையார் செய்வனகள் - வைணவ நெறியாளர்கள் விளக்கியுள்ளபடி நாங்கள் செய்கிறோம், வேறேதும் நாங்கள் ஞானம் பெறவில்லை.ஆச்சார்யர் சொல்லித்தரும் வழியில் சரணாகதி செய்வதே அடியார் தொழில். ஆச்சார்யர் இல்லாமல் அடியாரால் தனித்து அதைச் செய்ய இயலாது என்பது உட்பொருள்.

    1) சங்கொலிக்கும் ப்ரணவநாதம்-அநுகூல்ய ஸங்கல்பம் (இறைவனுக்கு உகந்த செயல்களை மட்டுமே செய்வது என்கிற உறுதி)
    இறைவனே அனைத்தையும் ஆள்பவனென்றும் நாம் அவன் அடியாரென்றும் உணர்தல், எல்லாமே இறை ரூபமே ஆவதால், யாருக்கும்,எதுவொன்றுக்கும் தீமை கருதாது இருத்தல் என்று உறுதி பூணுதல்.

    2) பெரும்பறை -ப்ரதிகூல்ய வர்ஜன ஸங்கல்பம், (, இறைவனுக்கு உகந்ததல்லாதவற்றை ஒரு போதும் செய்யாதிருத்தல் என்கிற உறுதி )
    பெருமுரசைப் போல் ஓங்கியொலிக்கும் வேதசாத்திரங்கள் தீமையென உரைத்தவற்றை செய்யதிருக்க உறுதி பூணுதல்

    இவ்விடம் சாலப்பெரும்பறை குறிப்பது அநுகூல்ய ஸங்கல்பம் என்றும் சங்காகிய பாஞ்சஜன்யம் குறிப்பது ப்ரதிகூல்ய வர்ஜன ஸங்கல்பம் என்றும் ஓர் பார்வை . அதன் விளக்கம் :

    பறை என்பது சீவாத்மாக்கள் எவையெல்லாம் செய்ய வேண்டுமென இறைவன் விரும்புகிறானோ, அவற்றைப் பற்றி வேத சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கும் கர்மாக்களைக் குறிக்கும் . சாலப்பெரும் என்பதாவது, கவனச்சிதறல்கள், ஆசை அலைக்கழிப்புகள் இல்லாமல்,அந்தக் கர்மாக்களை செய்வதில் சீவாத்மாக்களுக்கு இருக்கக் கூடிய ஸங்கல்பத்தை ,மனவுறுதியைக் குறிக்கும்.

    ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாஞ்சஜன்யம்
    என்பது இந்த உலகத்தில் கர்மாக்களை உண்டுபண்ணக் கூடிய சீவாத்மாக்களை ஆட்டுவிக்கும் ஐந்து இந்திரியங்கள், அதாவது ஐம்புலன்களைக் குறிக்கும். பால்வண்ணமாவது, வெள்ளை. அதாவது நல்லதை மட்டுமே செய்கின்ற ஸத்வ குணத்தைக் குறிக்கும்.
    போய்ப்பாடு உடையன என்பது, நல்லதையும் அல்லதையும் செய்யத் தூண்டக்கூடிய பழங்களின் தன்மையைக் குறிக்கும். சங்கங்கள் பல- இந்தப் புலன்களையெல்லாம், இரஜஸ் ,தமஸ் என்கின்ற குணங்கள் வசம் செல்லாமல், பாலன்னவண்ணத்து, ஸத்வகுண செய்கைகளைச் செய்வதிலேயே ஈடுபடுத்தக்கூடிய ஸங்கல்பத்தை , மனவுறுதியைக் குறிக்கும்.

    3)பல்லாண்டு இசைப்போரே - பலத் த்யாகம்,( தான் எனது என்று சுயநலத்தோடு இல்லாமல், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்று எவ்வித பலனும் கருதாமல், இறைத்தொண்டில் ஈடுபடுதல்) கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று கீதையில் கண்ணன் உரைத்தபடி நடத்தல். சரணாகதம் செய்வதால் வீடுபேறு வாய்க்கும் என்று எதிர்பார்க்காமல், இறைப்பணியில் ஈடுபடுவதையே பெரிதாக எண்ணிச் செய்தல்.தன் கண்களுக்கு மட்டுமே ஆண்டவன் தெரிகிறான் என்பதைப் பொருட்படுத்தாத பெரியாழ்வார், தமது பக்தியின் வலிமையால், தாயன்போடு, வேறெந்த பலனும் வேண்டாது, இறைவனுக்குப் பல்லாண்டு இசைப்பதே பயனென்று கருதி இசைத்தாரல்லவா ?

    "அல்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர்கோன்- அபிமான துங்கன்
    செல்வனைபபோலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்
    நல்லவகையால் ந்மோநாராயணா வெனறு நாமம் பலபரவி
    பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே
    !"--அதுபோன்ற பலத்யாகம்.

    4) கோல விளக்கே -மஹா விஸ்வாஸம், விளக்கின் ஒளி எப்படி இருளைப் போக்குகிறதோ, அதுபோன்று இறைநம்பிக்கை நம் வினையிருள் தீர்க்கும் ,இறைவன் காப்பான் என்று உறுதியாக நம்புதல்) கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் இறைவன் காப்பான் என்று கொண்டு, கல்லிலும் இறைவன் உறைகிறான் என்று நம்புதல்.அவன் நம்மைக் காப்பானோ மாட்டானோ என்றெல்லாம் கவலைப்படாமல், சரணம் செய்தால் காப்பேன் என்று அவன் சொன்னதை உறுதியாக நம்புதல்.

    இறைவன் மேலான பூரண நம்பிக்கைக்குத் தடையாக ஐந்து சந்தேகங்கள் நமக்கு ஏற்படும் என்கிறர்கள் வைணவப் பெரியோர்கள் .

    a) நாம் பெரும் பாவிகள். இறைவனோ எல்லாம் வல்லவன். அவனை நாம் அடைய முடியுமா என்ற கேள்வி.நாம் பெரும்பாவியாயிருந்தாலும் இறைவன் பெருங்கருணையாளன் ஆகவே அவனை நாம் அடையலாம்.

    b)நம் கர்மவினைகளைப் பொறுத்தே இறைவன் பலனளிப்பான் என்றால், நாம் பற்பல பிறவிகளில் செய்த பாவங்களைப் போக்கி வீடுபேறு தருவானா என்ற கேள்வி.இறைவனைச் சரணம் செய்தால் நம் பாவங்கள் தீர்கின்றன. எனவே நிச்சயமாக வீடுபேறு தருவான்.

    c) வீடுபேற்றினை உரிய நேரத்தில் வழங்குவானா என்ற கேள்வி. அவரவருக்கான தகுதியான காலத்தில் நிச்சயமாக வழங்குவான்.

    d)தனக்குவமை இல்லாத இறைவன், இழிபிறப்பாளராகிய நமது பாவங்களைப் போக்க அக்கறை செலுத்துவானா என்ற கேள்வி. அதுவே இறைவனின் பெருங்கருணை. நம்மைக் காப்பதிலே நம்மை விடவும் அவனுக்கே ஆர்வம் அதிகம்.

    e) அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன் என்னை ஆட்க்கொண்டருள்வாய் என்று நாம் செய்யும் மிகச்சிறிய பணியான சரணாகதிக்கு தன்னிச்சையாய் செயல்படும் வல்லமை பொருந்திய இறைவன், வீடுபேறு என்கிற மிகப்பெரிய அருளினை வழங்குவானா என்ற கேள்வி. இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது அவன் பேரிலான உறுதியான நம்பிக்கையை மட்டுமே. அதை எப்போது கொண்டாலும், நம் சரணாகதத்தை ஏற்றுக் கொண்டு வீடுபேறு வழங்குவான்.

    5 ) கொடியே- கார்பண்யம், எல்லாம் அவன் செயல் என்று அறிதல் .பட்டொளி வீசிப் பறக்கும் கொடியானது காற்றின் உதவியால் பறப்பது போல், அவனன்றி ஓரணுவும் அசையாது என்றுணர்ந்து,நானே என்னைக் காத்துக் கொள்கிறேன் என்று ஆணவம் கொள்ளாமல், இறைவனே தன்னைக் காப்பவன் என்று உணர்தல். வீடுபேறு அடைய வழியாக இருப்பதும் இறைவனே என்று உணர்தல்.

    6)விதானமே- கோப்த்ருவ வரணத்துடன் (ஆண்டவனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கோரிக்கை செய்தல், தொழுதல்) கூடிய ஆத்ம நிக்ஷேபம்- (நம் மனச்சுமைகளை ஆண்டவன் மீது இறக்கி வைத்தல்) தன் கீழிருப்பவரை மழை வெயிலிலிருந்து காக்கும் பந்தல் போல், இறைவன் தன்னடியில் சேர்ந்தவர்களை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காக்கின்றான் என்பதை உணர்ந்து அவனைத் துதித்துத் தொழுதல். சரணாகதியின் முக்கிய செயலே,நமது மனச்சுமைகளையெல்லாம், கவலைகளையெல்லாம் இறைவன் திருவடியில் இறக்கி வைத்துவிடுதலே.
     
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பாவை நோன்பிற்கு ஆண்டாள் வேண்டிடும் ஆறு பொருட்கள் குறிக்கும் உட்பொருள் எவையென்று வைணவ அறிஞர்கள் பற்பல விளக்கம் கொடுக்கின்றனர். அவற்றுள் இரண்டினை இவ்விடம் வார்த்தைப் படுத்த முயன்றிருக்கிறேன். ஏதேனும் குறையிருப்பின் ஆன்றோர் பெருமக்கள் , பொறுத்திட வேண்டுகிறேன்.

    தத்வார்த்தம் - உட்பொருள் 2

    இறைவனுக்கு செய்யும் புற ஆராதனையில் (பாஹ்ய ஆராதனம்) கடைபிடிக்க வேண்டிய ஆறு நிலைகளை வைணவ ஆச்சார்யர் அபிநவ தேசிகன் உரைக்கின்றார். அதனை வார்த்தையில் அமைக்கக் கீழ்கண்ட முறையில் முயன்றிருக்கிறேன் .

    அடியார் பாலளவிலா அன்புடை ஆண்டவனை
    நெடியானைப் புறந்துதித்து ஆராதனம் செய்தற்கு
    ஈடற்ற முறையிதென்று அடியார் அறியும்படி,
    நெடுநாள் முன் ஆசன்மார் சொன்னதெல்லாம்
    பிடிமானம் எதுவுமின்றி அவர் சொல்லிலுள்ள
    திடமான நம்பிக்கையில் கடைபிடித்தோம் -அந்த
    நெடுங்கால வழிபாட்டு முறை கூறுகின்றோம் !
    அடியார் செயும் உருவநிலைத் தொழுதலிலே ,
    விடாதொலிக்கும் சங்கம் போல் பிரணவமாதி
    ஈடில்லாத மந்திரவொலி முதல் நிலையாம் !
    படபடவென ஒலிக்கும் பெரும்பேரிகை போல்,
    நெடியவனின் திருமஞ்சன வேளை தன்னில் ,
    நெடுநேரம் ஒலிக்கும் மங்கள வாத்தியங்கள்
    படியாகும் வழிபாட்டின் இரண்டாம் நிலைக்கே !
    பாடலாலே காப்பிடும் பல்லாண்டைப் போன்றே,
    நெடியவனை அலங்காரம் செய்யும் சமயம்,
    மிடுக்காக ஒலிக்கின்ற நன்மறையும்,தமிழும்
    அடுத்ததாய் வருகின்ற மூன்றாம் நிலையாம் !
    மடந்தையர் ஏற்றுகின்ற விளைக்கைப் போன்றே,
    படியளக்கும் பரமனுக்கு நைவேத்யம் என்னும்,
    படையல் செய்வதுமே நான்காம் நிலையாம் !
    படியென்று மேற்சொன்ன நான்கும் நன்றாய்
    முடித்தபின் பெருமானின் அடியார் அவரை
    அடிபணிந்து வேறேதும் வேண்டுமோ என்று
    கேட்டுக் கருட வாகனத்தைக் காணும்படி
    காட்டி விண்ணப்பித்தல் ஐந்தாம் நிலையாம் !
    படிப்படியாய் இவ்வைந்து நிலை ஆராதனமும்
    முடித்தபின்னே இறைவன் அவன் ஓய்வெடுக்கப்
    படுக்கைத் துணி விரிப்பதே ஆறாம் நிலையாம்!
    நெடுமாலினை இவ்வாறு தொழுத பின்னே ,
    அடியவர்கள் ஆண்டவன் தன் சன்னதியில்,
    நெடுங்கிடையாய் சேவித்து சரணம் செய்தல்,
    விடாது மேற் கொள்ளும் வழிமுறையாகும் !
    கடைபிடிக்கும் இவ்வாறும் முழுமை பெற,
    வடபத்ரம் என்கின்ற ஆலிலையின் மேல்
    மடக்கிய வலக்காலின் விரல் வாயிலிட்டு
    துடுக்குடை சிசுவாக காட்சி தருமெங்கள்
    மிடுக்குடை அழகனவன் அருள் செய்வானே !

    மார்கழிநீ ராடுவான் மேலையார் செய்வனகள்
    - சரணாகதி செய்யும் அடியார் தமது ஆச்சார்யர் அருளிய வழியில் செல்லவே விரும்புவார். அதற்கு வேதப் பிரமாணங்கள் உள்ளனவா, சாத்திரங்கள் உண்டா என்றெல்லாம் ஆராயமாட்டார். ஆச்சார்யர் சொல்வதே வேதவாக்காகக் கொள்வார்.

    சங்கு- ப்ரணவநாதமாய் விளங்கும் மந்த்ராஸனத்தைக் குறிக்கின்றது பறைக்கருவி - பெருமாளுக்கு திருமஞ்சன (ஸ்நாநாஸனம்) நீராட்டு சேவையின் போது ஒலிக்கும் வாத்தியங்களைக் குறிக்கின்றது.
    பல்லாண்டு இசைப்போர் -இறைவனுக்கு அலங்காரம்(அலங்காராஸனம் ) செய்யும் போது ஒலிக்கும் வேத மற்றும் பிரபந்த கோஷங்களையும், அர்ப்பணிக்கும் மந்த்ரபுஷ்பத்தையும் குறிக்கின்றது.
    கோலவிளக்கு - இறைவனுக்குத் திருவமுது படைக்கும் போது (நைவேத்யம்) காட்டப்படும் தீபத்தைக் குறிக்கின்றது.
    கொடி - மேற்சொன்ன நான்கு நிலை ஆராதனைகளுக்குப்பின் புனர்-மந்த்ராஸனத்தின் போது பரமனிடம் "தமது கருட வாகனத்தில் எங்கேனும் எழுந்தருளுகிறீர்களா?" என வேண்டுகோள் விடுக்கும் பாவனையில் காட்டப்படும் கருடக்கொடியினைக் குறிக்கின்றது.
    விதானம்- இவ்வைந்து ஆராதனைகளும் முடிந்த பின்னர், பரமன் ஓய்வெடுக்க படுக்கைத் துணி விரிப்பதான பர்யங்காஸனத்தைக் குறிக்கின்றது.
     
    periamma likes this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம் - உட்பொருள் 3

    சரணாகதி மார்கத்தைத் தேர்ந்தெடுக்கும் அடியார்கள், பரமனிடம் விடுகின்ற ஆறு விருப்பங்கள் என்று காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அன்னங்கராச்சார்ய ஸ்வாமிகள் கூறும் விளக்கம். அதனை வார்த்தையில் அமைக்கக் கீழ்கண்ட முறையில் முயன்றிருக்கிறேன்.

    பரமனையடைய சிறந்ததோர் வழி முறை
    சரணாகதம் அதைத் தேர்ந்திடும் அடியார்
    குருவென விளங்கிடும் மூத்தோர், ஆசான்
    அருளிய வழியில் செல்லவே விழைவார் !
    திருவடி நிழலைப் பெறுதலில் அவரும்
    உரியதாம் ஆறு விருப்பமும் கொள்வார் !
    பரமனின் கரமுள்ள பாஞ்சசன்யம் போல்
    ஒருபோதும் இறைவனை நீங்கா திருக்கும்
    அரிய நற்குணம் பெற்ற அடியார்களாகும்
    வரமாம் பேற்றினை இறையிடம் விழைவார் !
    முரசினைப் போன்றே உலகெங்கும் முழங்கி
    குருமார் பரம்பரை அருமையும் பெருமையும்
    உரியதாம் முறையில் பரப்பிட விழைவார் !
    பரமன் என்றாலும் சிசுவென்றே கொண்டு
    திருவடி தமக்குக் காப்பிட்டுப் பாடிய
    பெரியாழ்வார் போல் ஆகிட விழைவார் !
    காரிருள் நீக்கும் ஒளிவிளக்காம் அந்தப்
    பேரருளாளன் இறைவன் தன்னில் தாம்
    இரண்டறக் கலந்து ஒளிர்ந்திட விழைவார் !
    பரமனை அடைந்திடும் பாதையைக் காட்டும் .
    திருக்கொடி கைகளில் தாங்கிட விழைவார் !
    ஒருகணமே ஆகிலும் சிந்தை சிதறாமல்
    கருடனைப் போன்றே பரமனின் சேவையில்
    விரும்பி எந்நாளும் திளைத்திட விழைவார் !
    பிரளயத்தின் காலத்தில் ஆலிலை மீதில்
    ஓர் சிசுவென உறையும் பரமனினருளால்
    விருப்பங்கள் ஆறும் கைவரப் பெற்றால்
    வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சியும் உறுவார் !

    மார்கழிநீ ராடுவான் மேலையார் செய்வனகள்
    - சரணாகதி செய்யும் அடியார் தமது ஆச்சார்யர் அருளிய வழியில் செல்லவே விரும்புவார்
    வேண்டுவன- சரணாகதி மூலம் திருவடிப் பேற்றினை விரும்பும் அடியார், அவர் என்னவாக விழைகிறார் என்று ஆறு உவமானகளைக் காட்டுகிறார்.

    சங்கு- பரமனின் கையிலுள்ள வெண்மையான பாஞ்சசன்யம் போல் எப்போதும் அவனை அகலாத ஸுத்த ஸாத்வீகர்களாய், நற்குணங்கள் நிரம்பிய அடியாராக இருப்பது ஒரு விருப்பம்.

    பறைக்கருவி- வைணவ குரு பரம்பரை என்கிற ஆச்சார்யர்கள் பற்றிய அருமை பெருமைகளை எடுத்துக் கூறுமடியார்கள் ஆவது இரண்டாம் விருப்பம்.

    பல்லாண்டு இசைப்பாரே பெரியாழ்வாரைப் போல பரமன் மீது பேரன்பு கொண்டு பல்லாண்டுப் பாடல்கள் இசைப்பவராய் ஆக வேண்டும் என்றெண்ணுதல் மூன்றாவது விருப்பம். இறைத்துதிகள் சொல்வது என்று கொள்ளலாம்.

    கோல விளக்கே- அனைத்து ஞானப் பிரகாஸமும் தானே தன்னுள் உடைய இறைவனாம் ஸ்வயம் (தானே) ப்ரகாஸனோடு (ஒளிர்பவன்) கலந்து ஒளிர்ந்திட விழைதல் நான்காம் விருப்பம்.

    கொடியே
    - இறைவனை அடைய பாதை காட்டும் ஆச்சார்யருடைய வெற்றிக்கொடியை ஏந்தும் அடியாராவது ஐந்தாம் விருப்பம்.

    விதானமே - பரமனுக்கு அடியாராக, தோழனாய், வாகனமாய், கொடியாய் என்றும் அகலாது தொண்டு செய்யும் கருடனைப் போன்ற அடியாராக விழைதல் ஆறாம் விருப்பம்.
     
  7. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் :-

    சுருதி ( வேதம்) வாக்கியங்களை அறிந்து கொள்வது கடினம்.எனவே நிறைய மஹரிஷிகள் ஸ்ம்ரு தி இயற்றியுள்ளார்.யாக்ஞயவல்க்யர், பராசரர், மனு மற்றும் பலர்.ஆனால் அதுவும் நடை முறையில் கடினம். உன் வம்சத்தில் முன்னோர்கள் செய்ததை நீயும் செய். அதுவும் முடிந்ததைச் செய்.இழுத்துப் போட்டுக் கொண்டு அவஸ்தைப் படாதே என்கிறாள் ஆண்டாள்.very pragmatic girl !

    ஆலினிலையாய் :-
    தர்க்கப்படி ஆராய்ந்தால் இளம் தளிர் கண்ணனைத்தாங்குகிறதா? கண்ணன் இளந்தளிரைத் தாங்குகிறானா?இளம் தளிருக்கே ஆதாரம் பகவான்தான்.

    ஒரு சமயம் மார்க்கண்டேய மகரிஷி கடலில் ஆலிலையில் சயனிக்கும் எம்பெருமானைப் பார்த்தார்.அக்குழந்தையைத் தொட அருகில் வந்தார்.அப்போது அக்குழந்தை தன மூச்சை வெளியிட்டு அவரைத் தன வயிற்றுக்குள் செல்ல வைத்தது.அந்த வயிற்றினுள் சகல ப்ரஹ்மாண்டங்களையும் கண்டார்.ஆச்சரியம் அடைந்து ஆனந்தப் பட்டபோது எம்பெருமானின் மூச்சுக்கு காற்றால் வெளியே தள்ளப் பட்டார்.பின் ஆஸ்ரமத்தில் பழையபடி அமர்ந்திருந்தார்.சம்தரம், ஆலிலை, குழந்தை எல்லாம் மறைந்து விட்டது.

    ஆலின் நிலையாய் என்றும் கொள்ளலாம்.ஆல மரத்தின் தன்மையைப் பெற்றவன்.மர நிழல் போல் அடியார்க்கு இதம் அளிப்பவன்.

    அருளேலோர் எம்பாவாய்- எந்நிலையிலும் இறைவன் அருள் கிட்டும்.இதை விளக்க உபநிஷத்தின் கதை ஒன்றைச் சொல்வது வழக்கம்.
    ஒரு குருகுலம்.சுயக்ஞயன் என்று ஒரு சிஷ்யன். அவனுக்கு குருவின் துணி துவைக்கும் வேலை.ஒரு நாள் துவைத்த வஸ்திரத்தை ஆச்சாரியார் உலர்த்த எடுத்த போது ஐந்தாறு இறந்த மீன்கள் துணியிலிருந்து விழுந்தன. கோபமடைந்த குரு 'பன்றியாகப் பிறக்கும்படி சிஷ்யனுக்கு சாபம் அளித்தார்.ஆச்சாரியார் நிவாரணம் அளிக்க மறுத்து விட்டார்.

    அவன் தன நண்பர்களிடம் தகுந்த தருணத்தில் ஆச்சார்யாரிடம் கேட்டு, தான் எந்த இடத்தில் பன்றியாகப் பிறந்த விவரம் அறிந்து தன்னைக் கொன்று விடும்படிக் கேட்டுக்கொண்டான். சிறிது நாளில் மரணம் அடைந்தான். நண்பர்கள் குருவின் மூலம் பன்றி இருக்குமிடம் அறிந்தனர்.

    " சுனகளம் என்ற நகரில் உள்ள சேரியில் கடைசி குடிசைக்கு அருகில் ஒரு பன்றிக்கு 6 குட்டிகள் இருக்கும். 5 கருப்பாக இருக்கும்.ஒன்று மட்டும் வாயிலும் , வாலிலும் வெள்ளையாக இருக்கும்.அதுவே என்னால் சபிக்கப்பட்ட .சிஷ்யன் " என்கிறார் குரு.
    நண்பர்கள் ஒரு தடியை எடுத்துக் கொண்டு வெள்ளைப் பன்றியை அடிக்க ஓடினர்." நீ எங்களை அடிக்கச் சொன்னாய். எனவே உன்னை அடித்துக் கொல்லப் போகிறோம் என்றனர்.

    பன்றிக்கும் பூர்வ ஜென்ம நினைவு வந்தது.
    ' நான் மனிதனாக இருந்த போது அப்படிச் சொல்லியிருக்கலாம்.இப்போது பன்றியாக ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.மெத்து மெத்தென்ற சரீரம்..தாய் அழகாகப் பால் கொடுக்கிறாள்.அருமையான சகோதரர்கள்.தேங்கிய சாக்கடை நீரில் படுத்துப் புரண்டு விளையாடுகிறேன்.நான் ஆனந்தமாக இருக்கிறேன்.என்னை அடிக்காதீர்கள் " என்று கெஞ்சியது.

    குரு கூறினார்" இரண்டு லக்ஷ ரூபாய் நோட்டுக்களை பார்த்தால் மனுஷ மனம் பேதலிக்கிறது ( may seem to be unrealistic after demonetisation )ஆனால் ஒரு கட்டெறும்பு பணக் கட்டின் மேல் ஊர்ந்து செல்கிறது.அது அதற்கு வேண்டிய நிலையில் தன்னை விரும்பும்படி பகவான் அருளுகிறார்.பன்றிக்கு அதன் நிலையில் சந்தோஷம்"

    'அருளேலோர் எம்பாவாய் '' என்பது இப்படிப் பட்ட மகிழ்ச்சியையே குறிக்கும் என்பர் அறிஞர்.

    Jayasala 42
     
    periamma likes this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமாகவேத் தோன்றுவது தான் வியப்பு ! அவரவருக்கான மகிழ்ச்சியை இறைவன் அளித்துக் கொண்டே தானிருக்கிறான்.
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றாய் மேலிறிப் பறக்கின்ற கொடியொன்று
    தன்னைப் பறக்கச் செய்தல் காற்றுதானென்றும்
    தன்னால் தானாகப் பறக்க முடியாதென்றும்
    நன்றாம் உண்மையை உணர்ந்தேயிருத்தல் போல்,
    கன்றைக் காக்கின்ற தாய்ப்பசுவே பரமனென்றும் ,
    தன்னைத் தானாகக் காக்கின்ற சக்தியொன்றும்
    தன்னிடத்தில் இல்லையென சீவன் உணருதலும்,
    தன்னைக் காப்பற்றிக் கடைத்தேற்றி விடுதற்கு
    ஆண்டவன் அருளன்றி வழியேதும் இல்லையென்றும்,
    நன்றாய் அறிந்திடுதல் ஐந்தாம் படிநிலையாம் !

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து .
     
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உங்கள் மனதைக் கவர்ந்த வரிகளை மேற்கோளிட்டுப் பின்னூட்டமளித்தமைக்கு மிக்க நன்றி பெரியம்மா !
     

Share This Page