குழந்தை படிப்பித்த பாடம்! என் மகன் ஐந்து வயது பாலகன்; ஆரம்பப் பள்ளியிலே அரை மாதம் ஆகவில்லை. அதற்குள் பல சந்தேகம். அவன் மழலை மயங்க வைக்கும்; அவன் கேள்வி மருள வைக்கும். அவன் சந்தேகம் என்றாலே நடுங்கிடும் என் தேகம். என்ன கேட்பான்? எதைக் கேட்பான்? குழும்பிட வைத்திடுவான். என்ன பதில் சொன்னாலும் அடுக்கடுக்காய் தொடர் கேள்வி அள்ளித் தெளித்திடுவான். அணு அணு வாய்த் துளைத்திடுவான். அவன் பிரித்துப் படிப்பது போல் நான் என்றும் படித்ததில்லை. அதன் மூலம் நான் கற்ற பாடங்களோ அளவில்லை. இன்றைய உரையாடல்: “ஆப்பு என்றால் என்னப்பா?” ”முக்கோண வடிவவிலான எளிய பொறி. மரங்களைப் பிளக்கையிலே பிளந்த கட்டை சேர்ந்திடாமல் பிளவுக்குள் சொருகி வைத்து பிரிப்பது ஒரு ஆப்பு. (அது) பிரிவினைப் பெரிதாக்கும்; சேராது பிரித்து வைக்கும்.” ”வேறு?” “ஒரு பொருளடியில் ஆப்பு வைத்தால் அதைத் தூக்க, நகர்த்த உதவும்” ”இவையன்றி ஆப்பு வைக்க இடம் வேறும் உள்ளதுவோ?” “பொதுவாக இவைதான். இவையன்றி வேறில்லை” “அப்படியே ஆகின், நேற்று நீங்கள் உரைத்த கூற்றின் பொருள் சரியாய் விளங்கவில்லை. உங்கள் நண்பர் உங்களுக்கு எங்கே ஆப்பு சொருகி வைத்தார்?” அவன் கேட்ட கேள்வியினால் அதிர்ந்து விட்டேன். நல்ல வேளை. நான் நேற்றிரவு மனைவியுடன் பேசியத்தைக் கேட்டுவிட்டு என்னைத் தனியே கேட்டான். நண்பர் முன்னே கேட்கவில்லை. “ஆப்பு என்றால் ஏமாற்றம், தடங்கல் என்றும் பொருள் உண்டு.” இன்னும் ஏதேதோ சொல்லி எங்கள் உரையாடல் முடித்து விட்டேன். இன்று இவன் கேட்டதினால் தெளிவாகப் புரிந்த தொன்று பிள்ளைகள் அருகிருக்க (பொறுப்பற்று) பேசுவது தவறென்று. அன்புடன், RRG (பி கு): பஸ் ஸ்டாண்டில் (ஒட்டுக்) கேட்டது. பிடித்தது. பகிர்கிறேன்.