1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குழந்தைக் கவிதைகள்!!

Discussion in 'Regional Poetry' started by Nilaraseegan, Nov 14, 2009.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    அ)
    அப்பாவும் அம்மாவும்
    தராத அரவணைப்பை
    பொம்மைக்கு தந்தபடி
    உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
    கனவில் தோன்றிய கடவுள்கள்
    அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
    வரமாய் கேட்டனர்.
    வரிசையில் நின்றிருந்த
    கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
    தந்துவிட்டு பொம்மையை
    இறுக்கி அணைத்துக்கொண்டதது.
    பொம்மையாதலின் வழிமுறைகள்
    அறியாமல் விழித்தபடிநின்றனர்
    கடவுள்கள்.

    ஆ)
    கதை சொல்ல நச்சரித்தது
    குழந்தை.
    பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
    அனைவரும் உறங்கிவிட்ட
    ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்
    துரத்தி ஓடிவந்தன என்று
    தொடங்கினேன்.
    பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
    பின்னெப்படி ஓடிவரும் என்றது
    குழந்தை.
    உறங்கிவிட்ட பாவனையில்
    கண்மூடிக்கிடந்தேன் நான்.

    இ)

    கூரையிலிருந்து வழிந்து
    கொண்டிருக்கும் மழைத்துளிகளை
    சேகரித்து தங்கமீன்கள் இரண்டு
    நீந்திக்கொண்டிருந்த கண்ணாடி
    தொட்டிக்குள் விட்டுக்கொண்டிருந்தாள்
    அச்சிறுமி.
    மழை நிற்கும் வரை
    இதைச்செய்தவள் மழை நின்றபின்
    கைகள் இரண்டையும் தேய்த்து
    கன்னத்தில் வைத்துக்கொண்டு கேட்டாள்
    "ஸ்ஸ்ஸ் ரொம்ப குளிருதில்ல?"
    வாலாட்டியபடி ஆமோதித்தன
    மீன்கள்.

    ஈ)
    அப்பாவிடமும் அம்மாவிடமும்
    பள்ளியில் பெற்ற "வெரிகுட்"ஐ
    பலமுறை சொல்லி
    ஏதோவொன்று குறைந்தவளாய்
    தன் பொம்மைகளிடம்
    சொல்ல ஆரம்பித்தாள் அச்சிறுமி.
    தலையாட்டிக்கொண்டிருந்தன பொம்மைகள்
    அப்பாவாய்,அம்மாவாய்.

    உ)
    மழையில் நனைந்து
    விளையாடிக்கொண்டிருந்தார்கள் அந்த
    சிறுவனும் அவனது நாயும்.
    அப்பாவிடம் அடியும்
    அம்மாவிடம் திட்டும் வாங்கிக்கொண்டு
    தலைதுவட்டினான் சிறுவன்
    அம்மா கொடுத்த துவாலையால்.
    "கவலப்படாத அப்பா உன்னை
    அடிக்க மாட்டார்" என்றான்
    தன் நாயிடம்.
    உடம்பை சிலிர்த்துக்கொண்டு
    அவனையே பார்த்தது அச்சிறுநாய்.

    ஊ)
    இந்தப்பசுவிற்கு நான் தான்
    அம்மா என்றது.
    இந்தப்பசு எப்போதும்
    பால்தருமென்றது.
    பசுவின் கன்றுக்கு
    தன் மொழி புரியுமென்றது.
    பசுவைக் கட்டிக்கொண்டே
    உறங்குவேன் என்றது
    கோணலாய் இருப்பினும்
    குழந்தையின் உலகிலிருக்கும்
    ஓவியப்பசு அழகாய்த்தானிருக்கிறது.

    எ)
    இரண்டு முறை பிரகாரம்
    சுத்திவந்துவிட்டு கால்வலிக்கிறதென்று
    அரச மரத்தில் சாய்ந்து
    கால்நீட்டி அமர்ந்துகொண்டது
    குழந்தை
    கோவிலைச் சுற்ற அழைத்த அம்மாவின்
    அழைப்பை நிராகரித்தபடி.
    என்னசெய்வதென்று புரியாமல்
    கெஞ்சிக்கொண்டிருந்தாள்
    அம்மா.
    குழந்தையிடம் கெஞ்சுகின்ற
    சுகத்தை கடவுளிடம் கெஞ்சுவதில்
    பெறமுடியாதுதான்.

    ஏ)

    வீடு கட்ட குவித்திருக்கும்
    ஆற்றுமணலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்
    சிறுமியும் அவளது பொம்மையும்.
    பொம்மையுடன் பேசுவதற்கென்றே
    தனிமொழியை உருவாக்கியிருந்தாள்
    சிறுமி.
    வெகுநேர விளையாட்டிற்குபின்
    குடிசைக்குள் சென்ற சிறுமியின்
    வலக்கையில் தலையும்
    இடக்கையில் உடம்புமாய்
    துண்டுகளாகியிருந்தது பொம்மை.
    அப்போதும் அதனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்
    அவள்.

    ஐ)

    எப்போதும் கண்டிராத
    ஓவியங்கள் சிலவற்றை
    விற்றுக்கொண்டிருந்தாள்
    அந்தச் சிறுமி.
    சருகு நிறத்தாலான
    அவளது பாவாடையை
    நிறைத்திருந்தன முயல்குட்டிகள் சில.
    ஒவ்வொரு ஓவியம்
    விற்றவுடன்
    தன் பாவாடை முயல்களிடம்
    ஏதோ பேசுகிறாளவள்.
    இக்காட்சியை நிலவில் தீட்டுகிறது
    சூரியக்கரங்கள்.
    நிலவில் உருப்பெறுகிறது
    ஓர் முயலோவியம்.

    ஒ)
    யாருமற்ற அறைக்குள்
    தன் பொம்மைகளுடன்
    நுழைகிறாள் நட்சத்திரா.
    அவளது மழலையை
    உற்று கவனிக்கின்றன பொம்மைகள்.
    அவள் கேட்கும்
    கேள்விகளுக்கும் பதிலளிக்கின்றன.
    கதவு திறக்கும் சத்தம்
    கேட்டவுடன் ஊமையாகி
    அசையாமல் நிற்கின்றன.
    வேலை முடித்து
    வீட்டிற்குள் வருகின்ற
    அம்மா பொம்மையிடம்
    பேச துவங்குகிறாள் நட்சத்திரா.

    ***********************************************************************

    குழந்தைகளுக்கும்,குழந்தை மனதோடு இப்பதிவை ரசித்த இணைய எழுத்தாள/வாசக நண்பர்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் :)

    -நிலாரசிகன்.
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    romba romba nalla kavithaigal.:thumbsup

    ovvondrum kuzhandaihal yetharkaaha yengugirarhal

    yethu kidaikavillai endru bommaihalodu aikiyamaahiraarhal

    yenbathai miha nandraaha kuzhandaihal dinathandru

    periya kuzhandaihalukku eduthu uraithulleerhal.:bonk

    kuzhalandaihalidam anbu paaraatti avarhalai mahizhvippom

    Indrum.........Endrum........Endrendrum........:):):)
     
    Last edited: Nov 14, 2009
  3. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    நண்பரே,
    உம்முடைய கவிதைக் குழந்தைகள் ஒவ்வொன்றையும் கையேந்தி முத்தமிட கல்நெஞ்சும் துடித்திடுமே! யான் எம்மாத்திரம்?
    வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
     
  4. meerapavya

    meerapavya Silver IL'ite

    Messages:
    449
    Likes Received:
    148
    Trophy Points:
    93
    Gender:
    Female
    அழகான கவிதைகள்,
    நிதர்சனமான உண்மைகள்
    இந்த ஏக்கம் என் குழந்தைக்கு வந்துவிடாது
    என்ற உறுதியுடன்

    உங்கள் அன்பு தோழி
     

Share This Page