வள்ளுவரைப் போற்றுவோம் ..... 371 அன்பில்லாத நெஞ்சம். பிரிந்து தன் தலைவன் சென்றபின், மனத் துயர் கொண்டு வருந்திய தலைவி, தன் நிலைமை பற்றி உரைக்கிறாள். இனிய சொல், காதலரிடம் பெறாது வாழ்பவரை விடவும் கொடிய கல் நெஞ்சம் கொண்டவர், உலகில் கிடையாது! 'வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல்'. இது குறள். 'நான் அன்பு செலுத்துபவர், அன்பே காட்டாது பிரிந்தாலும், என் செவிக்கு, அவரைப் பற்றிய புகழ் உரை, இனிது ஆகும்!' 'நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு', என்கிறாள் அவள். 'நெஞ்சமே! வாழ்க! பிரிவுத் துன்பத்தை, அன்பை என்னிடம் கொஞ்சமும் காட்டதவரிடம் சொல்கிறாய்! அதைவிடவும் எளிது கடலைத் தூர்ப்பது', என்று உரைக்கிறாள் தலைவி, பிரிவுத் துயரம் தனது நெஞ்சை மிக வாட்டி வருத்துவதால்! 'உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு', என்பது குறட்பா. அன்பு இல்லா நெஞ்சினனாய், தலைவன் பிரிந்து சென்றிட, அன்பு காட்டும் தலைவி, அளவிலாத் துன்பம் அடைகிறாள்!
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 372 காதல் இனிதே! தலைவனின் நினைவிலேயே இருக்கின்ற தலைவி, தன் தலைவன் பிரிந்த பின்னும் அவனையே நினைக்கிறாள். கள் உண்பவருக்கு இன்பம், கள்ளை உண்டபோது வரும்; காதல் கொண்டவருக்கோ, இன்பம் நினைத்தாலே வரும்! நெஞ்சில் நினைத்தவுடன் இனிமை தரும் இனிய காதல், நெஞ்சை மயக்கும் கள்ளை விட, உயர்வே காதலருக்கு! 'உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது', என்பது குறள். காதலர் கூடியிருந்தபோது இன்பம் வரும்; பிரிந்தபோது, காதலர் நினைவினால் மனதில் இன்பம் வரும். எனவே, எந்த வகையிலும் காதல் இனிதே என்பதை உணர்த்திட, இந்த அழகிய குறட்பாவைத் திருவள்ளுவர் தருகின்றார். 'எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று இல்', என்பது அந்தக் குறள். காதலர் இணைந்து இருந்தாலும், பிரிந்து இருந்தாலும், காதல், இருவர் மனத்திலும் இனிமையே தருவது ஆகும்.
புலம்பல் தொடர்கிறது! 'உன்னை விட்டுப் பிரியேன்!' என்று வாக்களித்த தலைவன், அதை மறந்து பிரிந்து சென்றுவிட, தலைவிக்குப் பிரிவுத் துயர் தாளாமல்போக, மேலும் அவள் புலம்பல் தொடர்கிறது!
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 373 தலைவியின் ஐயங்கள்! தலைவன் பிரிந்து சென்றதும், அவனையே எண்ணித் தலைவியின் உள்ளத்தில் வருகின்றன, பல ஐயங்கள்! 'தும்மல் வருவதுபோல இருந்து, நின்றுவிடுவது போல, துணையாய் இல்லாது சென்றவன், எண்ணுவது போல இருந்து, எண்ணாது விடுவானோ?', என்று நினைத்தும், வருந்தியும், மனதில் துயர் கொள்ளுகின்றாள் தலைவி. 'நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போலக் கெடும்', என்று அவள் ஐயம். தன் நெஞ்சிலே தலைவன் உள்ளது போலவே, அவனும் தன்னை நெஞ்சிலே கொள்ளுவானோ, என்பதும் ஐயம்! 'யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து என்நெஞ்சத்து ஓஒ உளரே அவர்', என்பதும் அவள் நெஞ்சத்தில் ஐயம்! 'நெஞ்சத்தில் எனக்கு ஓர் இடம் தராதவர், என்னுடைய நெஞ்சத்தில் ஓயாது வந்திட, நாணப்பட மாட்டாரோ?' 'தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல்', என்பதும் அவளது ஐயமே! பலவாறு வருந்தி, பிரிவினை எண்ணித் துயர் கொண்டு, பலவாறு ஐயப்பட்டு, மனம் சஞ்சலப்படுகிறாள் தலைவி.
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 374 தலைவனின் நினைவே! தான் உயிர் வாழ்வதே தலைவன் நினைவாலே மட்டும் தான், என்பதைப் பலவாறு கூறி வருந்துகிறாள் அவள். 'அவருடன் இருந்த நாட்களை எண்ணியே இருக்கிறேன் உயிருடன்; வேறு எதை எண்ணி உயிர் வாழ முடியும்?' 'மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன்', என்பது அவளது குரல்! 'மறக்காமல் நினைக்கும்போதே, பிரிவு சுடுகிறதே! நான் மறந்தால் என்ன ஆகுமோ?', என வியந்து போகின்றாள். 'மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்', என்பது அந்தக் குறள். 'எத்தனை அதிகம் நினைத்தாலும் கோபிக்க மாட்டார்; அத்தனை பெருமை தருபவர் அல்லவோ என் காதலர்!' 'எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு', என்பது அவள் நினைப்பு! தலைவன் அவளையே நினைத்தாலும், மறந்தாலும், தலைவன் நினைவிலேயே, தலைவி வாழுகின்றாள்!
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 375 உயிரான தலைவன். தலைவனே தன்னுடைய உயிர் என்பதைப் போன்று ஒரு நிலையிலே, தலைவி அவன் நினைவுடன் இருக்கிறாள். 'நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர், எனக் கூறிய அவர் தாம் சொன்னதை மறந்து, இரக்கமின்றிப் பிரிந்தார். இப் பிரிவை நினைத்து வருந்தி, என் உயிரும் என் உடலைப் பிரிந்து சிறிது சிறிதாகச் செல்கிறது', என்கிறாள் அவள். 'விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து'. இது குறட்பா. இணை பிரியாமல் இருந்த தலைவன், அவளுக்கு ஒரு துணையாய் இல்லாது பிரிய, நிலவிடம் கூறுகின்றாள், 'வாழிய மதி! பிரிந்தவனைக் கண்களால் காணும் வரை, தோழியைப் போல என்னுடன், மறையாது இருப்பாயாக!' 'விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி', என்பதே அவளது மொழி! இயலாமையால் துயரம் அவளை வாட்ட, துணையாக வர இயற்கையில் குளுமை நிறைந்த நிலவை நாடுகின்றாள்!
கனவிலேனும் வருவானோ? தலைவன் பிரிவால் வருந்திய தலைவி உறக்கம் இன்றித் தவிக்கிறாள். ஆனால், உறங்கினால், கனவிலேனும் தலைவன் வருவானோ என்றும் எண்ணுகிறாள். அவள் நிலையைக் குறித்து வருகின்றது, அடுத்த அதிகாரம்.