பசலை நோய்! தலைவனைப் பிரிந்து துயர் கொள்ளும் தலைவிக்குப் பசலை நோய் வருகிறது. அந்நோயால் அவள் உடலின் பொன்னிறம் மாறி, வெளிறிப் போகிறது; உடல் மெலிந்தும் போகிறது; உடல் நலம் குன்றியதுபோல மாறுகிறது! அந்த நிலையை, அடுத்த அதிகாரத்தில் வர்ணிக்கின்றார் திருவள்ளுவர்.
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 366 பசலை வாட்டுகிறது! தலைவன் தன்னைப் பிரிய நேரும் பொழுது, தலைவி தன் நிலைமை பற்றியே சிந்திக்காது, விடை கொடுக்கின்றாள். ஆனால் அந்தப் பிரிவாலே வந்த பசலை நோயை, அவள் யாரிடம் சென்று சொல்ல முடியும் என்று வியக்கின்றாள்! 'என்னைப் பிரிவதற்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், என் உடல் மேல் பசலை படர்வதை யாரிடம் சொல்வேன்?' 'நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க்கு உரைக்கோ பிற', என அவள் வினா. 'தன் பிரிவால் பசலை நோய் தந்தார் என்ற பெருமிதத்தால், என் மேனியில் பசலை ஊர்ந்து பரவுகின்றது', என்கின்றாள். 'அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு', என்பது அந்தக் குறள். அவளது அழகு, நாணம் இரண்டும் எடுத்து, கைம்மாறாக அவளுக்கு, காதல் நோயும், பசலை நோயும் தந்துவிட்டார். 'சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து', என்கிறாள் தலைவி. விடை கொடுக்கும்போது சிந்திக்காது விட்டுவிடுகிறாள்; இடை மெலிந்து, பசலை வாட்டிட, கண்ணீர் விடுகிறாள்! :roll:
திருவாய்மொழி. நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் பசலை நோய் வாட்டுவது பற்றி விரிவாக எழுதியுள்ளார். விரக தாபத்தை, விரசம் இல்லாமல் ரசமாகச் சொல்லுவது, ஒரு சாதனையே!
தன் காதலி பிரிந்து செல்ல, அவன் விரக தாபத்தை வெல்ல முயன்று பாடும் ஒரு திரை இசைப் பாடல் இதோ: mogam ennum - YouTube
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 367 ஏன் என் பசலை நோய்? தன் நினைவு முழுவதும் தலைவனே இருந்திட, எப்படித் தன் உடலில் பசலை நோய் பரவுகிறது என வியக்கிறாள். 'அவரைப் பற்றியே என் நினைவுகள்; எப்போதும் பேசுவது அவரின் திறமையே; பின் ஏன் கள்ளமாக வந்தது பசலை?' 'உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு', என்பது அவள் வியப்பு! அவளைப் பிரிந்து அவன் சிறிது தூரம்கூடப் போகவில்லை; அவள் மீது அதற்குள் பசலை நிறம் ஊர்ந்து படர்கின்றதாம்! 'உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்எம் மேனி பசப்பூர் வது', என்பது மேலும் அவள் வியப்பு! விளக்கின் ஒளி குறைந்தால், உடனே பரவும் இருள்போல, விலகிக் காதலன் போனால், உடனே பசலை படர்கின்றது. 'விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு', என்பது ஒரு கணிப்பு! கொஞ்சம் பிரிந்து தலைவன் சென்றாலும், தலைவியின் நெஞ்சம் வருந்திப் பசலை நோயும் உடனே வருகின்றது! :hiya
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 368 ஊர் பழிப்பினும், வேண்டும் பசலை! 'என் மேனியில் பசலை படர்வதை ஊர் பழிக்கிறது; ஆனால், என் தலைவன் பிரிந்ததால் என்பதைக் கூறுவதில்லையே!' 'பசந்தாள் இவளென்பது அல்லால் இவளைத் துறந்தார் அவரென்பார் இல்', என்பது குறள். தலைவன் நலமாக இருப்பான் என்பதற்குப் பசலை வரின், தலைவி அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறாள்! அவள், 'பிரிவுக்கு ஒப்புக்கொள்ள வைத்தவர் நன்னிலை பெற்றால், பரவும் இந்தப் பசலை என் மீதே இருக்கட்டும்', என்கின்றாள். 'பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவார் எனின்', என்பது குறள். 'பிரிவுக்கு உடன்பட வைத்தவரை அன்பில்லாதவன் என்று பிறர் தூற்றார் என்றால், நானும் பசலை படர்ந்தவள் என்று பெயர் எடுப்பது நல்லதுதான்' என்று உரைக்கின்ற தலைவி, உயரிய காதலுக்காக அழகை இழப்பதிலும் மகிழ்கின்றாள்! 'பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின்'. இது அவள் குரல். பசலை நோய் வந்து, தலைவன் பிரிவினை அறிவித்தாலும், இளமை அழகு குறைவதை, அவன் நலனுக்காக ஏற்கிறாள்! :spin
இருவருக்கும் அன்பு! ஒருவர் மீது அன்பு காட்டி, அதை அவர் மறுத்தால், அன்பு காட்டியவருக்கு அது மிக மன வருத்தம் தரும். தலைவனும் தலைவியும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தி வாழ்வதே இனிமை தரும். பரஸ்பரம் கொள்ளும் காதலின் பெருமையை, வள்ளுவர் அடுத்த அதிகாரத்தில் உரைக்கின்றார். காதலுக்கு மட்டுமன்றி, சுற்றம் மற்றும் நட்பிடம் கொள்ளும் அன்புக்கும் பொருந்துவது போல அமைந்து இருப்பதே, வள்ளுவத்தின் சிறப்பு!
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 369 இனிய காதல்! தான் காதலித்த ஒருவரே தன்னைக் காதலித்தால், அது- தான், காதலில் வீழ்வாருக்கு மிக இனிமை தருவதாகும். விதையே இல்லாத பழம் எப்படி முழுதும் இனிமையோ, அதைப்போலவே காதல் வாழ்வின் கனியாக இனிக்கும். 'தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி', என்பது அந்தக் குறள். வாழ்வுக்குப் பயன் தரும் மழையைப் போன்றதே, காதல் வாழ்வுக்கு, காதலர் சந்தித்து, தமக்குள் பொழியும் அன்பு. 'வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி', என்பது ஓர் ஒப்புமை. காதலில் இணைந்து, அன்பைப் பொழிந்து இருப்போருக்கு, உலகில் நமக்கு நல்வாழ்வு எனும் பெருமிதம் வந்துவிடும். 'வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு'. நிஜமே! ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டி வாழ்வதே காதலருக்கு, பெருமிதமான வாழ்வைத் தரும் என்பது அறிந்திடுவோம்!
ஒருதலைக் காதல். ஒருதலை காதல் செய்வோர் என்றென்றும் இருப்பார்கள்! இது துன்பமே தரும் என்று உரைக்கின்றார் திருவள்ளுவர்.
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 370 ஒருதலைக் காதல்! ஒருவர் மட்டும் காதல் கொண்டு, மற்றவர் விரும்பாவிடில், பெறுவார் காதலித்தவர், மிகப் பெரும் மனத் துயர். இதனை, மூன்று குறட்பாக்களை அமைத்துத் திருவள்ளுவர் நம்மை நன்கு உணர்ந்திட வைக்கிறார். இதோ அந்தக் குறட்பாக்கள். பலரால் விரும்பப்பட்டாலும், நல்வினை இல்லாதவரே, தன் காதலரால் விரும்பப்படாமல், ஒருதலையாகக் காதலிப்பவர்! 'வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின்', என்பது அந்தக் குறள். நாம் காதல் கொண்டவர், நம்மை விரும்பாவிடில், அவரால் நாம் அடையப் போகும் நன்மை ஏதுவும் இருக்க முடியுமோ? 'நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை', என்பது ஓர் ஐயம்! காவடித் தண்டில் இருபுறமும் சரியான எடை இருந்தால்தான், காவடி சமநிலையில், ஒருபுறம் சரியாது இருக்கும். அதுபோல, காதல் என்பது இருவரிடத்தில் மலர்ந்தால், இனிதே இருக்கும்; காதல் ஒருவரிடம் மட்டும் இருந்தால், துன்பத்தையே நல்கும். 'ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது'. இது ஓர் ஒப்புமை! இருவரும் அன்பு செலுத்தி வாழ்வதே மிக உயர்ந்தது என்றும், ஒருவர் மட்டும் அன்பு வைத்தால் துன்பம் என்றும் அறிவோம்.