காருண்ய தர்ப்பணம் பித்ரு பூஜையை புனித நீர்நிலைகளில் செய்வது சிறப்பு. புனித நதிகள், கடற்கரை ஓரங்கள், கோவில்க ளில் உள்ள தீர்த்த குளங்கள் ஆகியவை இந்த பூஜைக்கு ஏற்றவையாக கருதப்படுகிறது. புனிதத்தலங்களில் உள்ள நீர் நிலைகளில் புரட்டாசி அமாவாசை அன்று வேத விற்பன்னர்கள் மூலம் தர்ப்பணம் செய்யும்போது அளிக்கப்படும் எள்ளும், தண்ணீரும், பிண்டமும் மூதாதையர்களை சென்று அடைந்துவிடும். மகாளயபட்சத்தின் 15 நாட்களில் கடைசி தினமான அமாவாசை தினத்து அன்று நாம் அளிக்கும் தர்ப்பணம் நம் முன்னோர்களுக்கு மட்டும் அல்லாது தாவரங்கள், மரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் உள்பட அனைத்து உயிரினங்களுக்கும் சென்று சேரும். இந்த தர்ப்பணம் ‘காருண்ய தர்ப்பணம்’ என்று அழைக்கப்படுகிறது. கலியுகத்தில் உயிர்களின் வாழ்க்கை உணவைச் சார்ந்ததாக அமைந்துள்ளது. அரிசி, கோதுமை, பால், மாமிசம், காய்கறிகள் போன்றவற்றைச் சார்ந்து தானே மனித வாழ்க்கை உள்ளது. உண்டு கழித்தோமென எண்ணி எத்தனை கோடி உயிர் வகைகளை அழித்து, காய்கறிகளை, மாமிசந்தனைச் சுவைத்து வாழ்கின்றோம். (தாவர, விலங்கு) உயிர்வதை செய்து நாமுண்ட பயிர்களும் உயிர் வகைகளும் விமோசனம் பெறத் தர்ப்பண பூஜை அவசியமே! வள்ளலார் சுவாமிகள் “வாடிய பயிரைக் கண்டு வாடிய” மஹான் அல்லவா. எனவே நம்முடைய நல்வாழ்விற்காகத் தம்முயிரை ஈந்த கத்தரிக்காய், வெங்காயம், கீரை, கோழி, மீன், நண்டு, ஆடு போன்ற உயிரினங்களின் நன்னிலைக்காகவும், உயிர்வதைக் கான பிராயச்சித்தமாகவும் நாம் காருண்யத் தர்ப்பண பூஜையைக் கட்டாயம் செய்திடல் வேண்டும்.