கவலையோ கவலை! கவலை எனும் வலை வாழ்வில் உண்டு – ஆனால் கவலை வலையிலேயே சிக்கி உழல்வதோ நன்று? அறியாக் குழவிகளுக்கு முழு நேர ஆனந்தம் – விவரம் தெரிய ஆரம்பித்ததும், கவலையும் கூடவே ஆரம்பம்! குறும்பு செய்தால், பெற்றோர் அடிப்பாரெனக் கவலை; அரும்பும் ஆர்வக் கேள்விகளால், திட்டு வாங்கும் கவலை! சிறுவராய்ச் சேட்டைகள் செய்ய இயலாத கவலை; பெரிய வகுப்பில் நுழைந்தால், மதிப்பெண் தரும் கவலை! இடம் நல்ல கல்லூரியில் கிடைக்க வேண்டிக் கவலை; தடம் மாறி வாழ்வு செல்லக் கூடாதே என்ற கவலை! படிப்பு முடித்ததும், வெளிநாடு செல்லும் கவலை; துடிப்பு மிக்க இளமையில், வேலை தேடும் கவலை! காதலில் ஒரு வேளை மாட்டினால், திருமணமும் காதல் புரிந்தவருடன் ஆக வேண்டுமெனக் கவலை! மனம் விரும்பிய வாழ்வு கிடைக்க வேண்டிக் கவலை! மணவாழ்வு தொடங்கிய பின்னர், வரும் வாரிசுக் கவலை; வாரிசுகளுக்கு பள்ளியில் இடம் தேடும் கவலை; பெரிசுகளாய் அவை மாறினால், கூடிடும் கவலை! ஒருவழியாய் அவர்களுக்கும் நல்வாழ்வு அமைந்தால், வேறு வழியில் வந்து சேர்ந்திடும் வெவ்வேறு கவலை! ஓடி ஓடி இளமையில் ஈட்டிய பெரும் பொருள், தேடித் தேடி வந்தடையும் உடல் நலக் குறைவால், நாடி கொஞ்சம் தளரும் வேளையில், அள்ளி அள்ளி நாடி பிடிக்கும் வைத்தியருக்குக் கொடுக்கும் கவலை! வேடிக்கையான உண்மை சம்பவம் ஒன்று அறிந்தேன், வாடிக்கையாகக் கவலை கொள்ளும் பேராசிரியர் பற்றி! கவலைப்பட்டுப் புலம்பியே காலம் கழித்த அவரின் ஒரு நாள் கவலையே, ‘கவலைப்பட ஒன்றுமே இல்லையே’ என்பதாம்! மனக் கவலையைப் பின் எப்படித்தான் போக்குகிறது? மனம் கவரும் வள்ளுவமே ஒரு வழியைக் கூறுகிறது! தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது! எத்துணை உண்மை இது! தினமும் முழு நேரமும் கவலைப்பட்டே கழித்து விடாது, தினமும் மாறாத பக்தியுடன், இறையை நன்கு தொழுது, நடப்பவை எல்லாம் நன்மைக்கே என அற வழி நடந்தால், நடத்தலாம் நல்வாழ்வு, கவலை எனும் வலையில் வீழாது! :idea