உயிரும் உணர்வும் நீயளித்தாய் உலகில் உயர்பிறவி தானளித்தாய் உள்ளமெங்கும் நீ நிறைந்தாய் உயர் சிந்தனை மனம் கொடுத்தாய் உமை இமைப்பொழுதும் மறவா உளம்தனை அருள்வாய் உமையம்மைப் பாலகனே !!! கண்களில் நீயே நிறைந்திட்டாய் கருத்தினை நீயும் கவர்ந்திட்டாய் கனவினில் நாளும் நடமிட்டாய் கனிவாய்ப் புன்னகை உதிர்த்திட்டாய் கடிதுயர் அதுவும் வருமுன்னே கண்கவர் பீலி மீதேறி வந்திடுவாய் கருணை பொழிமுகக் கந்தனே !!! மலர்களில் அறுவராய் உதித்தவனே மங்காஒளி கார்த்திகை பெண்டிர்பால் வளர்ந்தவனே மங்கையர்க்கரசி கைபட்டு ஆறுமுகமானவனே ! - மலையனைத்தும் உந்தன் மலையே மலையரசியின் வேல் - வீழ்த்தும் வல்வினையே மருங்கெட்டும் ஒலிக்கும் நின் புகழே ! மக்கள் மனங்கவர் மயில் வாகனனே !!! பழம் கேட்டு உலகை வலம் வந்து பழனி மலையேறி நின்றவனே ! பழமே நீயென்று தமிழ் மூதாட்டி பாட பரமனின் விளையாட்டுக்களை பரமேசுவரி எடுத்தியம்ப பாங்காய் உலகறியச் செய்தாய் பார் போற்றும் திருவிளையாடற் புராணம் !!! வேலும் மயிலும் துணை - அவனை வேண்டுவோரைக் கண்டோடும் வல்வினை ! வேலனை எதிர்த்து நின்ற பதுமனும் ஆனான் வேலாயுதனை அலங்கரிக்கும் சேவலும் மயிலுமாய் வேதனையில் தவிப்போரும் மனமதில் வேலவனை மனமார நினைத்தால் வேகமாய் வரும் துயரதுவும் போகுமே பறந்தோடி !!! முருகா என்றுருகி முருகு முகம் கண்டு முழுமனதுடன் தொழுதிட்டால் முன் நிற்கும் வினையெல்லாம் முண்டியடித்து ஓடிடாதோ ? முன்வினைப் பாவமெல்லாம் `- பரிதி முன்நிற்கும் பனியென விலகிடாதோ? முத்தான வாழ்வதுவும் கை சேர்ந்திடாதோ ?
Beautiful one Muhineel. Very happy to see the image and of course read your nice verses. Thanks. -rgs