ஏண்டி விசாலம், எப்படி இருக்க? (சிறு கதை) “ஏண்டி விசாலம், எப்படி இருக்க? உன் புள்ளைக்கு கல்யாணம் ஆனாலும் ஆச்சு, உன்ன வெளியிலே பார்க்கிறதே அதிசயமா இருக்கே!” தோழி ஜானகி வினவிக்கொண்டே விசாலத்தின் வீட்டுக்குள் வந்தாள். “எனக்கென்னடி ஜானு? நன்னாத்தான் இருக்கேன். நீ என்ன திடீர்ன்னு இந்த பக்கம்?” “திடீர் எல்லாம் இல்லடி. கொஞ்ச நாளாவே உன்ன பார்த்து பேசணும்னு தோணிண்டு இருந்தது. இப்பதான் நேரம் கிடைச்சது. அதான். அது சரி, சுந்துவின் இடுப்ப கட்டிண்டு உன் மருமகள் ஹாய்யா ஸ்கூட்டர்ல போரா, நீ இங்க அடுப்ப கட்டிண்டு அவஸ்த படற. என்னடி இதெல்லாம்?” ”புதுசா கல்யாணம் ஆனா குழந்தைகள். கொஞ்சம் ஜாலியா தான் இருப்பா. ஏதோ ‘தர்பார்‘னு படம் வந்திருக்காமே, அதுக்கு ரெண்டு டிக்கெட் கடைச்சதாம். நான்தான் போய்விட்டு வாங்கோன்னேன். அதுக்கென்ன இப்போ?” “அதுக்கென்னவா? இப்படிதாண்டி ஆரம்பிக்கும். ரெண்டு டிக்கெட் வாங்கினவனுக்கு மூணு வாங்கமுடியதா என்ன?” ”சீச்சீ, சிறுசுகள் சந்தோஷமா இருக்க போகிற இடத்தில நமக்கென்னடி வேலை? மோகம் முப்பது நாள்; ஆசை அறுபது நாள்னு சொல்லுவா. கொஞ்ச நாளாச்சுன்னா எல்லாம் நார்மல் ஆயிடும். அவன் எனக்கு டிக்கெட் வாங்கிண்டு வந்திருந்தாலும் நான் போயிருக்க மாட்டேன்.” ”அடி பைத்தியம்! அவ தர்பார் பாக்க போகலடி. உன் வீட்டுலயே தர்பார் பண்ண போறா. பார்த்துண்டே இரு. உன் தலையிலே நீயே மண்ண வாரிப் போட்டுண்டா நான் என்ன பண்ண முடியும்?” “என்னடி சொல்ர? புரியற மாதிரி பேசமாட்டியா?” “மொதல்ல ஒண்ணு புரிஞ்சுக்கோ. ‘மோகம் முப்பது நாள்’னு சொன்னதெல்லாம் நம்ம காலம். முப்பது நாளுக்குள்ள நம்ம ஆசாமிங்களுக்கு நம்ம கிட்ட இருந்த மோகம் போயிடும். நமக்கு அதுக்கு மேல பிடிச்சு வச்சுக்கற ட்ரிக் தெரியல. இந்த காலத்து பொண்ணுக என்னமோ வசியம் பண்ணி பசங்கள பைத்திய மாக்கி வச்சுடறாங்க. முப்பது வருஷ மானாலும் நாக்க தொங்க போட்டுண்டு அவங்க பின்னாலயே பசங்க சுத்த ரெடியா இருக்காங்க. நம்ம கிட்ட இல்லாம அவங்க கிட்ட அப்பிடி என்னதான் இருக்குமோ? இவங்க பொறக்கும்போதே பல வித்தைகளுடன் தான் பொறப்பாங்க போல- அபிமன்யுக்கு அடுத்த படி.” “மாட்டுப்பொண்ணே நம்ம பொண்ணு மாதிரி இல்ல பார்க்கணும்னு சொல்லுவாங்க?” “சுத்த லூசுடி நீ. அந்த காலத்துல மாடு மாதிரி நாம் உழைச்சோம். மாட்டுப் பொண்ணுன்னு சொன்னாங்க. இந்த காலத்துல இதெல்லாம் மாட்டுப் பொண்ணு இல்ல, மாட்டும் பொண்ணு. நம்மை மாட்டிவிடும் பொண்ணுங்க. இப்போ பார் உன்னைய சமையக்கட்டுலயே மாட்டிண்டு நிக்க வச்சுட்டா பார். எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் புரிச்சுக்கிறயோ அவ்வளுக்கவ்வள்வு உனக்கு நல்லது. இப்போ நான் என் வீட்டுல மாட்டிண்டு முழிக்கிறேன். அப்படி உனக்கும் ஆகக்கூடாதேங்கிற ஆதங்கத்தில் ஏதோ சொன்னேன். புரிஞ்சுண்டா சரி. கல்யாணம் ஆன புதுசுலேயே இவங்கள கிடுக்கிப் பிடில பிடிக்கணும். அமுக்கி வைக்கணும். இல்ல உன்ன ஏறி மேஞ்சுடுவாங்க. ஜாக்கிரதை. எதுக்கும் ஏதாவது ப்ராப்ளம்னா உடனே எனக்கு போன் பண்ணு.” தான் வந்த காரியம் வெற்றிகரமாக முடிந்ததை எண்ணி சந்தோஷத்துடன் ஜானு என்னும் ஜானகி விடை பெற்றாள். ஒரு வாரம் கழித்து: “என்னடி விசாலம்? உன் கிட்டேயிருந்து ஒரு போனும் இல்ல. எல்லாம் சௌக்கியம் தானே?” “சௌக்கியத்துக்கு என்னடி கொறச்சல். நன்னா தான் இருக்கேன்.” “நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கோனோ?” “இருக்கு. இருக்கு. அததான் தினமும் யோசிச்சிண்டு இருக்கேன்.” “ஏன்? என்ன ஆச்சு. அந்த வில்லி வேலைய காட்ட ஆரம்பிச்சுட்டாளா?” “வில்லின்னு எல்லாம் சொல்லதடி. பாவம். அறியாப்பொண்ணு, தெரியாம ஏதாவது செஞ்சுடரா. நமக்கு தான் கொஞ்சம் மனக்கஷ்டம். அதை புரிஞ்சிண்டு நடந்துண்டா பரவாயில்லை.” “என்ன ஆச்சு? சீக்கிரம் சொல்லு. நான் ஒரு வழி சொல்ல மாட்டேனா?” “ஒண்ணும் இல்ல; அவ சுந்துவை ‘சுரா, சுரா’ன்னு கூப்பிடறா. சுராவாவது, விராலாவது? கேக்கவே அசிங்கமா இருக்கு. அவனைக் கூப்பிட்டு விசாரித்தேன். அவளுக்கு சுந்துன்னு நான் கூப்பிடறது பிடிக்கலையாம். அதுனாலே சுந்தர ராமன்கிற பேரை சுருக்கி சுரான்னு கூப்பிடறாளாம். அவனுக்கும் அது பிடிச்சுருக்காம். ‘அவளுக்கு நான் சுரா, உனக்கு நான் சுந்து போதுமாங்கிறான்’. அத்தோட இல்லாம நேத்து ராத்திரி அவா பெட் ரூம்ல பேசறது காத்து வாக்கிலே வந்து என் காதில் விழுந்தது. அவ “சுரா சுரா என்னை தன் கண்ணாலே விழுங்கும் சுரா; அசுரா அசுரா ஓடி வந்து என்னை முழுசா கடிச்சு தின்னுடா அசுரா”ன்னு அவ பாடுறா. இவன் ‘ஹீ ஹீ‘ன்னு இளிச்சுண்டு “குட்டி மாமியே! என் பட்டு மாமியே!! குழந்தை ஒண்ணு பெத்து கொடு ப்ரெட்டி மாமியே”ன்னு பதில் பாடறான். சகிக்கலை. என்ன செய்வது?” “ரொம்ப சிம்பிள். இது வெஜிடேரியன் வீடு. சுரா, விரா வெல்லாம் உள்ள வரக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிடு. இதுக்கு ஏன் பயப்படற?” “பயமெல்லாம் ஒண்ணும் இல்ல. சுந்து மனசு கஷ்டப்படுமேன்னுதான்.” “உன் மனசப்பத்தி அவங்க நினைக்காதப்போ அவங்களைப் பத்தி நீ ஏன் நினைக்கணும்? தனக்கு மிஞ்சிதான் தான தருமம். அததை அப்பொப்போ சொல்லலைன்னா அப்புறம் சரி செய்ய முடியாது. ஸ்ட்ராங்கா சொல்லிடு இந்த வீட்டிலே ‘வாங்க போங்க’ தான் வழங்கணும்னு. அப்புறம் பார் ‘ஆடி வாடா என்னை அள்ள வாடா; ஓடி வாடா என்னை தின்ன வாடா‘ வெல்லாம் அடங்கிடும்.” “சரிடி ஜானு. ஆபீஸிலிருந்து அவங்க வர்ற நேரம். ரொம்ப டயர்டா வருவாங்க. ஏதாவது டிபன் ரெடி பண்ணனும். அப்புறம் பேசறேன்.” “நீயும் உன் சமையல் கட்டும். உனக்கு இல்லாத டயர்ட் அவாளுக்கு என்ன? வாழ தெரியாத அசடு நீ. சொன்னா கேக்கவா போற? என்னவோம்மா, உன் நல்லதுக்கு தான் சொன்னேன். புரிஞ்சா சரி. நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும். அப்புறம் பேசு.“ ஓரு மாதம் கழித்து ஜானுவின் போன். “ என்ன விசாலம்? பேச்சு மூச்சே காணும். இன்னும் ராத்திரி பாட்டுச் சத்தம் கேக்கிறதா?” “அதெல்லாம் இல்ல. ஆனா சுந்து நடந்துக்கறதே சரியாயில்ல. ஆபிசிலிருந்து வந்த உடனேயே ரெண்டு பேரும் அவா ரூமுக்குள்ள போயி கதவ சாத்திக்கறா. இல்ல ஊர் சுத்த போயிடறா. அடிக்கடி அவ பொறந்த வீட்டுக்கு வேற போறா. கூடவே இவனும். அங்கேயே சாப்பிட்டுவிட்டு லேட்டா வரவேண்டியது. இன்னிக்கு சாப்பாடு வேண்டாங்க வேண்டியது. அவன் என்கூட உட்கார்ந்து பேசியே ஒரு மாசம் ஆகறது. அதுக்கு மேலே இவ வேற. வாய திறந்தா ஏதோ முத்து கொட்டிடுங்கற மாதிரி. வீட்டில நிம்மதியே இல்ல.” “இதை தாண்டி அன்னிக்கே சொன்னேன். நீ கேக்கல. அவளை ஆரம்பத்திலிருந்தே அடக்கி வச்சிருக்கணும். சுந்துவை உன் பிடியிலேயே வச்சிருந்திருக்கணும். உனக்கு எங்கே புரிஞ்சது. அவ தலையணை மந்திரம் ஓதினா இவன் பெட்டிப் பாம்பா அடங்கறான். உடனே அவனை சபரி மலைக்கு மாலை போடச்சொல்லு. உன் புருஷன் போறதுக்கு முன்னால சொன்னதா சொல்லு. அப்புறம் பாரு. ஒருமாசத்துலே எல்லாம் சரி பண்ணிடலாம்.” “அடிப் போடி, நீ வேற. பொண்டாட்டி துப்பட்டாவை பிடிச்சிண்டு ”மாமி சரணம், மாமி சரணம்”னு சுத்தறவன் மாலை போட்டுண்டு ”சாமி சரணம்” சொல்லப்போறானா என்ன? அதோட அவள் முழுகாம வேற இருக்காளாம். அவனாவது? மலையாவது? ஒண்ணும் சரிப்பட்டு வராது. விடு”. “இங்கப் பாரு விசாலம். என்ன ஆனாலும் நீ தான் இங்கே பாஸ் என்று புரூவ் பண்ணணும். குழந்தைக்கு இப்போ என்ன அவசரம்னு சுந்துவை துளைச்சு எடு. இன்னும் ரெண்டு வருஷம் ஆகட்டும்னு அவளையும் கூப்பிட்டு ஸ்டராங்கா சொல்லிடு. கொஞ்சம் டென்ஷன் கொடுத்து பாரு. கெஞ்சிண்டு வழிக்கு வருவாங்க. அப்போ விட்டு கொடுக்குற மாதிரி ‘சரி, அடுத்த கொழந்த அஞ்சு வருஷத்துக்கு கூடாது’ன்னு அடிச்சு சொல்லு. அப்புறம் பாரு, குட்டி மாமி, பட்டு மாமியெல்லாம் பொத்திண்டு நீ சொல்றத கேக்கும்”. “நீயும், உன் ஐடியாவும். ஆளை விடு. நானே பார்த்துக்கறேன்”. விசாலம் போனை வைத்து விட்டாள். ஆறு மாதத்திற்குப் பின். இடம் கபாலி கோயில். “ஏண்டி ஜானு, எப்படி இருக்க?“ “அட காமுவா? எவ்வளவு நாளாச்சு உன்னை பார்த்து? நான் நன்னா தாண்டி இருக்கேன். நீ எப்படி இருக்க?“ “எனக்கு ஒரு குறையும் இல்ல. வர வழில விசாலத்தை பார்க்க போனேன். அவள் தான் பாவம். அவள் பையன் வீட்டை விட்டு மாமியார் வீட்டுக்கு பக்கத்திலேயே தனிக்குடித்தனம் போயிட்டானாம். அவளுக்கும் மாட்டுப்பொண்ணுக்கும் ஒத்து வரலன்னு தோண்றது. விசாலம் மாதிரி ஒரு நல்ல மாமியார் கிடைக்க அவள் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கணும்? இந்த காலத்து பொண்ணுகளே சரியில்லை.” “அப்பிடியெல்லாம் இல்லடி காமு. என்னைப் பார். என் மாட்டுப்பொண்ணோட ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கேன். என்னை ‘அம்மா, அம்மா’ன்னு அவ ஒரு பக்கமும் என் புள்ளை ஒரு பக்கமும் தாங்கறா. எல்லாம் நாம் நடந்துக்கறதுல தான் இருக்கு. புள்ளைக்கு கல்யாணம்னு ஆச்சுன்னா கொஞ்சம் விட்டு தான் கொடுக்கணும். அன்னிக்கு உன்னை உன் மாமியார் படுத்தினான்னா நீ உன் வீட்டுக்கு வந்த மஹாலட்சுமியை படுத்தறதா? அப்படி ஏதாவது சொல்லுவார் பேச்சை கேட்டுண்டு விசாலம் அவ மாட்டுப் பொண்ண அடக்கப் பாத்திருப்பா. இந்த காலப்பொண்ணோனோ? எகிறி குதிச்சிருக்கும். யாரோ சொன்னான்னா அவ புத்தி எங்க போச்சு? புள்ள வீட்டை விட்டே போயிட்டானா? போச்சு போ! எல்லாம் தலை விதி. அவஸ்த்தை படணும்னா பட்டு தான் ஆகணும். சரி, சரி. எனக்கு என் புள்ளையும் மாட்டுப்பொண்ணும் ஆபிசிலிருந்து வர டயம் ஆயிடுத்து. ரொம்ப டயர்டா வருவா. போய் ஒரு உப்புமாவாவது கிளறி வைக்கணும். நீயாவது உனக்கு நாளைக்கே ஒரு மருமகள் வந்தா நல்ல படியா நடந்துக்கோ. வரட்டுமா?” தன் யோசனைகளை தன் வீட்டிலேயே முயற்சி செய்து பார்க்காத சாமர்த்தியத்தை எண்ணி ஒரு வித சந்தோஷத்துடன் ஜானு வீட்டை நோக்கி நகர்ந்தாள். அன்புடன், RRG 02/02/2020
Thanks for you feedback madam. In fact, I wrote this story keeping in mind a relative of mine who continues to have a difficult relationship with her daughter-in-law for over 30 years now. The elder relative is a retired high school teacher who was very good at teaching. Very helpful person by heart. But, perhaps she got mislead by her ‘so called friends’ and tried to control DIL in the early stages, leading to disastrous results. A stage has come now where mending the fences look impossible. DIL is adamant; son expresses helpless ness; and the mother living alone forlorn at her ripe old age. I keep counselling both MIL and DIL but still their dislike for each other and keenness to settle scores has not diminished a bit. I only hope the teacher and her DIL would learn their lives’ lesson well soonest. Cheers