ஒவ்வொரு நாளும் புலருகையில் சற்றே ஆறுதலும் கொண்டிடுவேன். நீ வரும் நாளோ வெகு தொலைவில், என்றுணர, கண்ணீர் சிந்திடுவேன்! எதிர்காலம், வேலை, கடனென்றே பல காரணம் சொல்லி நீ சென்றாய்! ஒருவாறு எனைத் தேற்றிக் கொண்டே சரியென்றேன்! நீயும் புன்னகைத்தாய்! நாள் ஒவ்வொன்றும் ஒரு பேரெடையாய் அழுத்தும், முகத்தில் தெரியாது! வாரம் இருநாட்கள் தான் அழைப்பாய்! காத்திருப்பேன் நானும் உறங்காது! ஒரு வருடம் தான் என்றே சொன்னாய்! வந்தாய், நெடுநாளும் தங்கவில்லை. வாழ்க்கைத் தரம் மேம்படவே என்றாய். செனறாய், என் மனம் பொறுக்கவில்லை! சென்றவை எல்லாம் இனி மீளாது! இளமையும், வயதும் கூடத்தான்! இவ்வுண்மையும் உனக்கு எப்போது புரியும்? என்றே ஏங்குகிறேன் நான்!