1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் கதை முயற்சிகள்

Discussion in 'Stories in Regional Languages' started by saidevo, Jul 22, 2012.

  1. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    [13]

    "என்ன மன்னிச்சிடுங்க வாசு சார்! அன்னைக்கு உங்ககிட்ட ’எங் கொய்ந்தய அடகுதான் வெக்கறேன். எங்கூட்டுக்கார்க்கு ஒடம்பு சொகமானதும் எப்டியாச்சும் கஷ்டப்பட்டு உங்க பணத்தக் கொடுத்திட்டு எம்மவள மீட்டுக்குவன்’னு சொன்னேன். இப்ப அவரும் போய்ட்டாரு, என்கிட்டயும் பணமில்லை! தங்கம்னு நம்பித்தாங்க உங்ககிட்ட அடகு வெச்சேன். நீங்க ரெண்டு பேரும் பாசத்தால புடம்போட்டு சொந்த மவளா வளர்த்தீங்க. இன்னிக்கு அது வெறும் பித்தளையாய்ட்டதுன்னு தெரிஞ்சதுக்கப்பறம் நான் திரும்ப வாங்கிக்கிறது தாங்க நியாயம். இருந்தாலும்---"

    வாசு ஒரு நெடிய பெருமூச்சுடன் இடம்வலம் தலையாட்டி, கையை உயர்த்தி, அவள் மேலே பேசுவதைத் தடுத்தான்.

    அவர்கள் மூவரும் உதவி கமிஷனர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர். கீதா கைகளில் முகத்தை முட்டுக் கொடுத்து கர்ச்சீப்பால் வாய்பொத்தி சப்தமில்லாமல் விசித்துக்கொண்டிருந்தாள். அவளது அழுது சிவந்த கண்கள் லட்சுமியை நோக்கி உயர்ந்தபோது மேலும் பளபளத்தன.

    உதவி கமிஷனர் முகத்தை சிலைபோல் வைத்துக்கொண்டு நிலைத்த கண்களால் வாசுவை அளந்துகொண்டிருக்க, அவர் அருகில் ஶ்ரீதர் சலனமின்றி அமர்ந்திருந்தான்.

    எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு வாசு அமைதியான குரலில் தொடங்கினான்:

    "நடந்த எல்லாத்துக்கும் நான் முழுப் பொறுப்பு ஏத்துக்கறேன், உதவி கமிஷனர் சார். I plead guilty of your charges. சட்ட விரோதமான முறையில ஒரு குழந்தையை சுவீகாரம் பண்ணிகிட்டது, அந்த உண்மையை உங்ககிட்ட மறைச்சது. தவிர என்னோட செய்கை மூலமா தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு பாவமும் அறியாத ஒரு உயிரோட மரணத்துக்குக் காரணமாய்ட்டேன்! ப்ளீஸ், என்னைக் கைது செய்ங்க, மத்தவங்களை விட்டுடுங்க."

    "அய்யா வேண்டாங்க! அவரை விட்டுடுங்க. நான்தான் எல்லாத்துக்கும் காரணம். என்னை அரஷ்டு பண்ணுங்க."

    "நீங்க செஞ்ச குற்றத்துக்கு உங்க மூணுபேரையும் குறைஞ்சது மூணு வருஷம் உள்ள தள்ளலாம் தெரியுமா?"

    லட்சுமி பயந்துபோய், "அய்யா, தப்பு எம்மேலதாங்க. கொளந்தையும் வித்துட்டுப் புகாரையும் கொடுத்தது நான் தானுங்களே? வேற வழியில்லாமத்தான் உண்மையை மறைக்க வேண்டியிருந்ததுங்க. அய்யாதான் எப்டியாச்சும் எங்க மூணு பேரையும் மன்னிச்சு என் புகாரை நான் வாபிஸ் வாங்கிக்க அனுமதிக்கணும்."

    உதவி கமிஷனரால் அவள் சொற்களில் ஆச்சரியப் படாமலிருக்க முடியவில்லை. ஶ்ரீதர் தன் வியப்பை வார்த்தைகளில் வெளியிட்டான்:

    "உன் வீட்டுக்காரர் தானம்மா புகார் பண்ணது. நீ எப்படி அதை வாபஸ் வாங்கிக்க முடியும்?"

    "அவரால கையெளுத்துப் போடமுடியாம நாந்தானுங்களே உங்க காயிதத்தில கையெளுத்துப் போட்டது! நான் தீர ரோசனை பண்ணி மனப்பூர்வமாத்தான் எங்கொளந்தயை அவங்களுக்கு சுவீகாரத்துக்குக் கொடுத்தங்க. எங்கிட்ட இருக்கறதக் காட்டிலும் இவங்ககிட்ட அது இளவரசி மாதிரி இருக்கும் இல்லீங்களா? எங்க பொளப்புத்தான் இப்படி ஆய்ட்டதால, எம்மவ நல்லார்க்கறது தானுங்களே எனக்கு வேணும்? எதோ எம் புருசனுக்கு வைத்தியம் பாக்கப் பணம் தேவைப்பட்டதாலதான் வாசு சார்கிட்ட பணம் வாங்கிக்கிட்டங்க. இதுல தயவுபண்ணி சட்டம்லாம் பாக்காதீங்கய்யா! ஒரு வேளை இப்ப வாசு சார் கொளந்தைக்கு வைத்தியம் பார்க்க இஸ்டப்படலேன்னா எங்கிட்ட திருப்பித் தந்திரட்டுங்க. கஸ்டமோ நஸ்டமோ நானே பாத்துக்கறேன். விதியிருந்தா பொளச்சுக்கிது..."

    "என்னைக்கு நாங்க பாசத்தோட உங்கிட்டேர்ந்து வாங்கிட்டமோ அன்னைக்கிலேர்ந்து ரம்யா உன் குழந்தை இல்லேம்மா...", என்றாள் கீதா முதன்முறையாக.

    உதவி கமிஷனரின் கண்கள் அவள்மேல் விழுந்து பின் வாசுமேல் நிலைத்தன.

    "நான் உங்களை விட்டுவிட முடியாது வாசுதேவன்! நீங்க ஒரு படித்த இளைஞர், பொறுப்பான வேலையில இருக்கீங்க. ஏய்யா சட்டத்தை ’இவேட்’ பண்ண நினைச்சீங்க? நீங்க மூணுபேரும் எங்க டிபார்ட்மென்டுக்கு எவ்வளவு தொல்லை கொடுத்துட்டீங்க!"

    வாசு பதில்பேசத் தொடங்கும் முன் அவர் ஶ்ரீதரிடம் "எதுக்கும் எஃப் ஐ ஆர் ரெடி பண்ணிருங்க" என்றார்.

    குரலில் கோபம் பொதிந்திருக்க வாசு பேசத் தொடங்கினான்:

    "கேரி ஆன், ஜென்டில்மென்! உங்களைப் பொறுத்தவரைக்கும் சட்டம்தானே முக்கியம்? என்னைக் கைது செய்யறதால என்னோட வேலை போய், எதிர்காலம் பாழடைஞ்சு, என் குடும்பம் தெருவில நிக்கப்போகுது. ரம்யாவும் வியாதியில பட்டுப் போய்டப் போறா. உங்களுக்கென்ன நஷ்டம்? இந்தக் கேஸை வெற்றிகரமாக ஸால்வ் பண்ணினதுக்கு இந்த இளம் இன்ஸ்பெக்டருக்குப் ப்ரொமோஷன் கிடைக்கும். ஒரு பெரிய போலீஸ் ஆஃபீஸர் தன் பல்வேறு அலுவல்களுக்கிடையில ஒரு எளிய, நலிவுற்ற குடும்பத்தோட புகாரை சிரமேற்கொண்டு கேஸை வெற்றிகரமா நடத்திக் கொடுத்ததற்காக உங்களுக்குப் பாராட்டும் புகழும் கிடைக்கும்!...

    "ஐ யம் சாரி சார், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிட்டேன்! ப்ளீஸ் சார், நான் என்னுடைய செயலை நியாயப் படுத்தறதா நினக்காதீங்க. நான் செஞ்சது குற்றமில்லை, ஒரு அட்வென்சர்தான்! ஒரு குற்றத்தை வேணும்னா ஒருத்தன் திட்டமிட்டு செய்யலாம். ஆனால் ஒரு துணிகரமான செயலையும் அதன் விளைவுகளையும் சூழ்நிலைகள்தான் தீர்மானிக்கின்றன. சமயத்தில அட்வென்சர் விபத்தாகிவிட வாய்ப்பு இருக்கு, என்னுடைய இந்த அட்வென்சர் மாதிரி!

    "என்னோட முதல் குழந்தை ரம்யா ஒரு விபத்தில உயிர் இழந்தாள்னு கண்டுபிடிச்சீங்க இல்லையா? அந்த விபத்துக்கு என்னோட முன்கோபம்தான் காரணமாக இருந்தது இன்ஸ்பெக்டர்! ஒரு நாள் நான் வீட்டு வாசல்ல தெருவில வெச்சு என் ஸ்கூட்டரைத் தொடச்சிக்கிட்டிருந்தபோது ஆசையா பக்கத்தில வந்து தானும் தொடைக்கறேன்னு தொட்ட குழந்தையை, அது ஸ்பார்க் ப்ளக்கில கையை வெச்சிரப்போறதேன்னு பயந்து கோவத்துல ’போ அந்தாண்ட’ன்னு பிடிச்சுத் தள்ளினேன். குழந்தை தெருவில நிலைதடுமாறி விழுந்ததும் அந்தக் கார் அவள்மேல ஏறினதும் ஒரே சமயத்தில நடந்தது!... இதை விதின்னு சொல்லறதா, இல்லை நான் குற்றவாளின்னு சொல்லறதா? ரம்யாவோட மறைவு எங்க மனசையும் குடும்ப வாழ்க்கையையும் ஆழமா பாதிச்சதுல நான் இம்போடன்ட் ஆகிவிட, இன்னொரு குழந்தைகூட பெத்துக்க முடியாத நிலையிலதான் இந்த ரெண்டாவது ரம்யாவைக் கடவுள் தந்த பரிசா நினைச்சு சுவீகாரம் பண்ணிக்கிட்டேன் சார்! It was never my intention to evade the Law. இப்ப நீங்க அனுமதிச்சீங்கன்ன சட்டப்படி இந்தக் குழந்தையை நான் என் மகளா ஏத்துக்க்கறேன். ப்ளீஸ் ஹெல்ப் மீ சார்!"

    மூச்சடைக்க நிறுத்தியவன், குரலைக் கொஞ்சம் தாழ்த்திக்கொண்டு சொன்னான்:

    "எனக்கு உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்தான் சார்! இந்தக் கேஸை ஒரு ’ஹ்யூமன் ஆங்கிள்ல’ பாருங்க. நான் லட்சுமியோட குழந்தையை விலை கொடுத்து வாங்கவும் இல்லை, அவள் அதை விற்கவும் இல்லை! அவளுக்கு நான் என் பணத்தால உதவி செஞ்சிருக்கேன், அவ்வளவுதான். ஒரு விதத்தில பார்த்தா நான் குற்றவாளிதான். அதையே இன்னொரு விதத்தில பார்த்தா, நான் இந்தம்மாவோட கணவனுக்கு சிகிச்சை செய்துகொள்ளப் பண உதவி செஞ்சிருக்கேன்; ஏறக்குறைய அநாதையாகத் திருவில திரிஞ்சிக்கிட்டிருந்த ஒரு குழந்தையை எடுத்து வளர்த்துக்கிட்டிருக்கேன்; இப்ப அந்தக் குழந்தைக்கு வந்திருக்கற தொழு நோயையும் குணப்படுத்த என்னோட பணத்தையும் நாட்களையும் செலவிடப்போறேன். நான் சட்டத்தை மீறியிருக்கலாம், என்னோட சொந்த சந்தோஷத்துக்காக. ஆனால் என் நேர்மையை மட்டும் சந்தேகிக்காதீங்க சார்! ஒருவேளை உங்களுக்கு ரம்யா மாதிரி ஒரு குழந்தை இருந்து அது ஒரு நாள் அகாலமா திடீர்னு இறந்துபோயிருந்தா அந்த புத்திர சோகம் உங்களுக்குப் புரியலாம். மற்றபடி, ஏற்கனவே கடவுள் எங்களுக்கு தண்டனை கொடுத்திட்டார். அதுக்குமேல சட்டப்படியும் எங்களை நீங்க தண்டிக்க விரும்பினா, வி ஆர் அட் யுவர் டிஸ்போஸல்."

    வாசுவின் ’ஒரு வேளை உங்களுக்கு ரம்யா மாதிரி’ பேச்சில் ஶ்ரீதர் கொஞ்சம் திடுக்கிட்டு அவர் முகத்தை நோக்க, உதவி கமிஷனரிடம் இருந்து ஒரு மெல்லிய, நீண்ட பெருமூச்சு வந்தது. நெற்றியில் சோக ரேகைகள் படர எழுந்துகொண்டவர் வாசுவின் தோள்களில் கை வைத்தார்.

    "Alright, young man! We police officers do appreciate human values. லட்சுமி அவள் புகாரை வாபஸ் வாங்கிக்க நான் அனுமதிக்கிறேன். ரம்யாவை நீங்க சட்டப்படி சுவீகாரம் பண்ணி ஒரு கோர்ட் ஆர்டர் வாங்கிக்கங்க. சொந்த விஷயமா சொன்னா நானும் அந்த புத்திர சோகத்தை அனுபவிச்சவன்தான். என்னோட ஒரே பையன் சுரேஷ்--இப்ப இருந்த அவனுக்கு உங்க வயசிருக்கும்--ஏழு வயசில கான்சர் நோயில உயிர் விட்டது உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. அதனாலதான் நான் இந்த கேஸ்ல நான் பர்சனலா அக்கறை காட்டினேன். ஶ்ரீதர், இந்தக் கேஸை இப்படி முடிக்கிறது பத்தி உங்க கருத்தைச் சொல்லுங்க."

    "எனக்கு சம்மதம்தான் சார். காணாமல் போன குழந்தையை நாம் வெற்றிகரமா ட்ரேஸ் பண்ணிட்டோம். அந்த சுவீகார விஷயத்தைப் பொறுத்தமட்டில குழந்தையோட நலன்தானே முக்கியம்? எனவே, நாம் கேஸை இப்படி முடிச்சிறலாம் சார்."

    "ஆனால் ஒரு கண்டிஷன், வாசுதேவன். குழந்தையோட சேர்த்து அதோட முன்னாள் தாயாரையும் நீங்கதான் கவனிச்சுக்கணும்."

    "எங்களுக்கு அதில் முழு சம்மதம் சார். லட்சுமி எங்க வீட்டிலேயே தங்கட்டும். சரிதானே லட்சுமி? உன் உடைமைகளை எடுத்திட்டு காலையில வந்திரும்மா", என்றாள் கீதா.

    *** *** ***
     
  2. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    [14]
    (இறுதிப் பகுதி)

    மறுநாள் காலை வாசு செய்தித்தாளைப் பிரித்தபோது, உள்ளிருந்து ஒரு கவர் விழுந்தது.

    கவரைப் பிரித்தபோது சில பத்து ரூபாய் நோட்டுகளும் ஒரு துண்டுக் காகிதமும் இருந்தன.

    காகிதத்தில், "என்னை மன்னிச்சிடுங்க. உங்க வாள்க்கைல குறுக்கிட எனக்கு உரிமை இல்லை. தகுதியும் இல்லை. அப்படியே இருந்தாலும் எனக்கு மன நிம்மதி இருக்காது. இன்னைக்கு நான் என் கஷ்டமர் ஒருத்தரோட பம்பாய் போறேன். நெசமாவேதான்! அதிரிஸ்டம் இருந்ச்சினா சினிமாத் திரையில வருவேன். இல்லாங்காட்டி இருக்கவே இருக்கு திரை மறைவில என் தொளில். எப்படியும் சினிமாவில வருவேன்னு நம்பிக்கை இருக்கு. என்னத் தேட வேண்டம். உங்கள் ரம்யாக்கு என் அன்பு.--இப்படிக்கு, லெச்சுமி" என்று எழுதியிருந்தது.

    (முற்றும்)

    *** *** ***
     
  3. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    பயணம்
    நாவல்
    ரமணி

    முகவுரை

    து ஒரு ரொமான்டிக் நாவல். அதாவது, காதலிக்க முற்பட்ட ஒரு சங்கோசப்படும் (timid), அகமுக (introvert) இளைஞனின் கதையைப் படர்க்கையில் (third person) சொல்லும் சுயசரிதம். கதையின் காலம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது--எழுபதுகளில். களம் தமிழகத்தின் கிராம நகர வாழ்க்கை. கதை மாந்தர்கள் சுற்றமும் நட்பும் சூழ்ந்த ஒரு பிராம்மணக் குடும்பத்தின் சம்ப்ரதாய, சற்றே முற்போக்கான உறுப்பினர்கள், உறவினர்கள்.

    ஆங்கிலத்தில் stream of consciousness என்று ஒரு நாவல் உத்தியுண்டு. இந்த உத்தியில் ஆசிரியரின் குறுக்கீடு இல்லாமல் பாத்திரங்களின் மனவோட்டத்தின் மூலமே கதை சொல்லப்படும். James Joyce, Virginia Wolf போன்ற நாவலாசிரியர்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தி இலக்கிய அந்தஸ்தும் புகழும் பெற்றனர். இந்த நாவலில் இந்த உத்தி கொஞ்சம் நீர்த்த வகையில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

    தடாலடி திருப்பங்களும் நிகழ்வுகளும் கதையோட்டத்துக்கு முக்கியம் இல்லை எனும்போது, கதையின் வளர்ச்சியில் கதைமாந்தர்களுடைய குணநலன்களின் வளர்ச்சி (அல்லது வீழ்ச்சி), அவர்களின் ஊடாட்டம், உள்வினைகள் போன்ற கூறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வாழ்க்கை என்பதே இவ்வகைக் கூறுகள் அடங்கியதுதானே?

    கதையின் ஒவ்வொரு வரியையும் ஊன்றிக் கவனித்து, கணித்து, ஒவ்வொரு சொல்லையும் மனதில் வாங்கி, சொற்களில் பயிலும் கவிதையை அனுபவித்து, வருணனைகளை ரசித்துப் பின் எல்லாவற்றையும் மனதில் அசைபோட்டுக் கதாசிரியர் எழுதியதுபோலவே வாசகரும் படித்தால் கதையின் முழுத் தாக்கம் கிடைக்கும்.

    பயணம் என்ற தலைப்புடன் கூடிய இந்த நாவலில், ஒரு சங்கோசப்படும் அகமுக இளைஞனின் இல்லறம் நோக்கிய வாழ்க்கைப் பயணம் ஒரு ரயில் பயணத்துடன் தொடங்குகிறது. ரயிலில் பயணிக்கும்போதே அவன் மனம் அவனது கடந்த கால வாழ்க்கை நிகழ்ச்சிகளில் பின்னோக்கிப் பயணம் செய்கிறது...

    கனவுகளில் முன்னோக்கியும் நினைவுகளில் பின்னோக்கியும் காலத்தில் எப்போதும் பயணம் செய்யும் மனம், யதார்த்தத்தை எதிர்கொள்ளும் போது முதலில் தடுமாறிப் பின் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு, கிடைத்ததை உத்தமாக்க முயலும்போது வாழ்க்கை சிறக்கும் என்பதை உணர்ந்துகொள்கிறது.

    முப்பது வருடங்களுக்கு முன்னரே நான் இந்த நாவலின் பெரும் பகுதியை எழுதியிருந்தபோதிலும், மனதுக்கு சமாதானம் தரும் சரியான முடிவு கிடைக்காமல் நாவலின் இறுதி வடிவத்தை ஒத்திப்போட்டு வந்தேன். ஒரு வழியாக அந்த சரியான முடிவு மனதில் உதித்து நான் தொண்ணூறாம் ஆண்டுத் தொடக்கத்தில் நாவலை என் மனதுக்குப் பிடித்த வகையில் முடிவு செய்தேன். என்னைப் பொறுத்தவரையில் என் இலக்கிய முயற்சிகளின் சிகரமாக நான் இப்படைப்பைக் கருதுகிறேன். அதே சமயம் வாசகர்களின் நேர்மையான பின்னூட்டங்களையும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

    தினத்தந்தி செய்தித்தாளில் வந்த (வரும்?) சிந்துபாத் தொடரின் அளவிடக் கொஞ்சம் கூடுதலான, சிறிய தவணை முறைகளில் கதையை இங்குப் பதிய எண்ணியுள்ளேன். ஒரு கவிதையைப் படிப்பதுபோல் மனம் விட்டு, மனம் இட்டு வாசகர்கள் படிக்கவேண்டும் என்று விழைகிறேன். உங்கள் பின்னூட்டங்களை இந்த நூலிலேயே பதிவு செய்யலாம்.

    இந்த நாவல் இதுவரை எந்தப் பத்திரிகையிலும் வெளிவரவில்லை. இதைப் பகிர்ந்துகொள்ளும் வாசகர்கள், தனியே படியெடுக்காமல் இந்த ’லிங்க்’ கொடுத்துப் பகிர்ந்துகொள்ளக் கோருகிறேன், கொஞ்சம் கொஞ்சமாக நான் இந்த நாவலை என் வலைதளத்தில் பதிவு செய்வதால்.
    ரமணி
    01/09/2012

    *** *** ***
     
  4. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    1

    மிக்க நலமுடைய மரங்கள்---பல
    விந்தைச் சுவையுடைய கனிகள்---எந்தப்
    பக்கத்தையும் மறைக்கும் வரைகள்---அங்கு
    பாடி நகர்ந்து வரு நதிகள்...
    ---மஹாகவி பாரதியார், கண்ணன் என் காதலன் 3


    ருகிலும் எதிரிலும் உட்கார்ந்து இருந்தவர்களை மெல்லத் தலையைத் திருப்பிப் பார்த்தவாறே தன் இருக்கையில் உட்கார்ந்தான் ராஜா.

    "மதுரை செல்லும் வைகை எக்ஸ்ப்ரஸ், முதலாவது ப்ளாட்ஃபாரத்திலிருந்து புறப்படும் சமயம்..."

    அறிவிப்பின் பேரலையில் அத்தனை சந்தடியும் இரைச்சலும் கணநேரம் அமிழ்ந்து தலைதூக்க, மெல்லிய திடுக்கிடலுடன் சிலர் தங்கள் பெட்டிகளின் வாசலுக்கு விரைந்து தொற்றிக்கொள்ள, இன்னமும் சிலர் டிக்கெட் பரிசோதகர்களுடன் ஏதோ விவாதித்துக்கொண்டிருக்க, தலைகளும், பின்னல்களும், விரல்களும் வார்த்தைகளின் பின்னணியில் அவசர விடைகூறி வழியனுப்ப, எழும்பூர் ஸ்டேஷன் ஒரு பெரிய தீவுபோல் பின்னால் நகரத் தொடங்க, அவனுக்கு அது தன் வாழ்வில் மிக முக்கியமானதொரு பயணம் என்ற உணர்வு தலைதூக்க, கண்களை வெளியே ஓடவிட்டபோது கூட்டத்தைக் கலைத்துக் கொண்டு பாஸ்கர் முன்வந்து கூடவே நடந்து அவன் கைகளைப் பிடித்துக் குலுக்கிவிட்டுக் கூறினான்:

    "All the best RAjA! Have a nice time."

    வண்டியின் சூழ்நிலை பரிச்சயமாகி, ஆரம்ப சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு அவன் ஒருவித லயிப்புடன் சாய்ந்தபோது, மனம் விழித்துக்கொண்டு ’வைகை’க்குப் போட்டியாகத் தன் பயணத்தைத் துவக்கியது.

    ந்த ரெயில் பிரயாணத்தில் இருக்கும் சுகமும் மகிழ்ச்சியும் அலாதி. ஒரே நேரத்தில் இயற்கையையும் மனிதர்களையும் பார்க்கும், நேசிக்கும் வாய்ப்பு வேறு எந்தவகைப் பயணத்திலும் கிடைக்காது என்று தோன்றியது.

    பஸ் பிரயாணத்தின் அசதியும் குலுக்கலும் இரைச்சலும் இல்லாமல் அமைதியாக வசதியாக மெல்லத் தாலாட்டியபடி முன்னேறும் ரயிலின் இந்த சூழ்நிலை அவனுக்கு எப்போதும் மிகவும் பிடித்தவொன்று.

    இந்தச் சிலமணிநேரப் பயணத்தின்போது அறிமுகமாகும் மனிதர்கள்தான் எத்தனை! அதிலும் சிலர் பார்த்த உடனே பிடித்துப்போய் வெகுநாள் பழகியவர்களாக எவ்வளவு அன்னியோன்னியமாகி விடுகிறார்கள்! என்ன இருந்தாலும் முன்பின் அறிந்திராத ஒரு அன்னியன் என்ற நினைவு இல்லாமல் தன் குடும்பம் முழுவதையும் அறிமுகம் செய்துவைத்து, உணவு உடைமைகளைப் பகிர்ந்தளித்து, அவனை மகிழ்சியிலும் நன்றியிலும் திளைக்கவைத்து---

    ல்லாவற்றையும்விட ரயிலில் அறிமுகமாகும் குழந்தைகள்தான் எத்தனை இனிய நினைவுகள்!

    "அம்மா, அந்த மாமாவுக்கும் ஒரு எக்ளேர்ஸ் குடும்மா!", என வாஞ்சையுடன் வினவிய குழந்தை---

    இப்படித்தான் ஒருமுறை அவன் திடீர் பரிச்சயத்தில் தோழியாகிவிட்ட ஓர் அழகிய குழந்தைக்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்க நினைத்து வழியில் ஒரு சின்ன ஸ்டேஷனில் இறங்கி ஸ்டால் ஸ்டாலாக அலைந்து இறுதியில் வெற்றியுடன் ஒரு மில்க் பிக்கி பாக்கெட்டைக் கைப்பற்றி பாக்கி சில்லறையைக்கூட வாங்கமுடியாமல் வண்டி கிளம்பிவிட, கடைசிப் பெட்டிகளில் ஒன்றில் ஏறி வெஸ்டிப்யூல் வழியே தன் பெட்டியை அடைந்தபோது, கவலையின் சாயல் படரத் தொடங்கிவிட்ட முகங்களை சந்தித்தது நினைவுக்கு வந்தது: "எங்கம்மா அந்த அண்ணாவைக் காணோம்?"​

    அப்பாவின் மடியில் அமர்ந்தபடியே அகல விரியும் கண்களுடன் அவனையும் சுற்றுப்புறத்தையும் பார்த்த குழந்தை---

    மெல்ல அருகில் வந்து அவனை, அவன் உடைமைகளை தொட்டுப் பார்த்த குழந்தை---

    பத்திரிகைகளைக் கையில் எடுத்துக்கொண்டு எனக்கு-ஒரு-கதை-சொல்லுவியா பாணியில் பார்த்துவிட்டு அவன் அரவணைப்பில் கதை கேட்ட குழந்தை---

    "ஒ தேகோ, கித்னா சுந்தர் ஹ ஓ சிடியா!" என்று அவனுடன் மழலை ஹிந்தியில் பேசிய குழந்தை---
    ["அங்கே பார், எவ்வளவு அழகு அந்தப் பறவை!"]

    "பப்பா! ஹம் உப்பர் ஸோயேங்கே?" என்று தம் வினவியபடி கிடிகிடுவென மேல் பெர்த்தில் ஏறிவிட்ட குழந்தைகள்---
    ["அப்பா! நாங்க மேலே தூங்குவோமா?"]

    பின் அங்கிருந்தபடியே மாடப் புறாக்களாக எட்டிப்பார்த்து மழலைக் கூவல்களை மிதக்கவிட்டு கார்ட்ஸ் விளையாடும், சாப்பிடும், மீண்டும் கீழிறங்கி ஓடும், "மத்ராஸ் கப் ஆயேகா, பப்பா!" ["மதராஸ் எப்போ வரும், அப்பா!"] என்று வாசல் வழியே எட்டிப் பார்க்கும் குழந்தைகள்---

    ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்தபடியே, ’ரேலு காடி ரேலு காடி’ என்று பாடிக்கொண்டு, ரயிக்குள் ரயில் விளையாடி வெஸ்டிப்யூலில் அங்கும் இங்கும் அலைந்து டிக்கெட் வழங்கிய குழந்தைகள்---
     
  5. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    ப்புறம் ரயிலில் அறிமுகமாகும் பெண்கள்தான் எத்தனை பேர், எத்தனை வகையினர்!

    மௌனச் சாமியார்போல் அமர்ந்திருக்கும் தம் கணவன்மார்களிடம் அவர்கள் தலையாட்டுவது அனுமதியா மறுப்பா என்ற கவலையில்லாமல் பேசிக்கொண்டே...யிருக்கும் மனைவியர்கள்---

    எதிரில் இருப்பவர்களைப் பார்த்துக்கொண்டே ரகசியக் குரலில் பெற்றோரிடம் (அல்லது தன் சகோதர சகோதரியிடம்) கிசுகிசுக்கும்--மற்றவர்களிடம் பேச வெட்கப்படும்--உயர்நிலைப் பள்ளிப் பெண்கள்---

    நுனி நாக்கில் ’அமெரிக்கன் ஸ்லாங்’ தவழவிட்டபடி அலட்சியம் தெரியும் கண்களுடன் கையில் ஹெரால்ட் ராபின்ஸ் அல்லது டிரான்சிஸ்டருடன் பெரிதாகச் சிரிக்கும் ஜீன்ஸ், பெல்பாட்டம், மாக்ஸி, மினிகள்---

    எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்து பார்பரா கார்ட்லாண்ட் அல்லது டென்னிஸ் ராபின்ஸ் படிக்கும் எழில்-முக-இளம்-பெண்கள்---

    இன்னும் சுடிதார் அல்லது புடவையில் நம் தென்னிந்திய மக்களைவிடக் கொஞ்சம் வெளுப்பான நிறத்தில், வார்த்தைகளில் தைரியமும் தன்னம்பிக்கையும் தொக்கி நிற்க வினோத மொழிகளில் தம் ஆடவ, மகளிர் சுற்ற நட்புகளுடன் உரையாடும் எழுவகைப் பெண்கள்: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, மற்றும் பேரிளம்பெண்கள்.

    இன்னும் எப்போதாவது பால்போன்று வெளுத்த நிறத்தில், ஆடவர்போல ஆடை அணிந்து, கையில் மினரல் வாட்டர் பாட்டிலுடன், யாரென்று புரியாத சக ஆணிடம் ரகசியக் குரலில் உரையாடும் வெளிநாட்டுப் பெண்கள்.

    ப்போதும் அவன் தன்னைச் சுற்றி உட்கார்ந்து இருப்பவர்கள் மேல் மெல்லக் கண்களை ஓட்டினான்.

    எதிரில் மழமழவென்று முகம் மழித்துக்கொண்டு முகத்தின் தசைநார்கள் தெரிய, ஒரு உலகியல் அறிவுஜீவியின் தோரணையுடன், ஹிண்டுவில் ஆழ்ந்திருக்கும் காதோரம் தலை நரைத்த கம்பெனி எக்ஸிக்யூட்டிவ் அல்லது கல்லூரிப் பேராசிரியர்---

    அருகில் கூஜா, கூடையில் பழம் பிஸ்கெட் தெர்மாஸ்ஃப்ளாஸ்க் சகிதம் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம்: கணவன், மனைவி, சீருடையில் ஏழெட்டு வயதுப் பையன் மற்றும் கைக்குழந்தை. வாய்பேசாது உழைக்கும் உயிர்கள்---

    அவனையடுத்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் தூக்கத்தில் மூழ்கியிருக்கும் நீள்முடி இளைஞன்---

    ல்லவேளை அவனுக்கு ஜன்னலோர இருக்கை. இப்போதும் அவன் குழந்தைத் தனமாக ’விண்டோ ஸீட் ப்ளீஸ்’ என்று பயணச் சீட்டுப் பதிவுப் படிவத்தில் எழுதுவதுண்டு. அதை ஓரக் கண்ணால் பார்த்துப் புன்னகையுடன் அவன் விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் பெண் எழுத்தர். இதனாலேயே அவள்மேல் அவனுக்கு ஒரு பாசம்.

    இந்த ஜன்னல் ஓர இருக்கைதான் எவ்வளவு வசதி! கம்பியில் கைவைத்தபடி ஜன்னல் விளிம்பின் வழியே எட்டிப் பார்ப்பதில் எத்தனை மகிழ்ச்சி!

    தரையில் ஒரே சீராக வேகமாக ஓடும் தண்டவாளத்தை அடுத்த பொன்னிற ஒற்றையடிப் பாதை. அதற்குமேல் சீரான மரகதப் பட்டை. மங்கிய பச்சைக் கற்றாழைக் கோடுகள்.

    பின்னால் கம்பீரமாக நகரும் பனை மரங்கள். சதுரங்கக் கட்டங்கள் போல் விரியும் பசுமை வயல்கள், புல்வெளிகள். ஆச்சரியத்துடன் தலையை உயர்த்திப் பார்க்கும் ஆடுமாடுகள். அங்கங்கே பளிச்சென்று மனிதர்கள்.

    ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு ஓடும் தந்திக் கம்பங்கள். அவற்றை இணைக்கும் அலைஅலையான இசைக் கோடுகளில் வால்குருவி, காக்கை மற்றும் பிற பறவைகளின் சங்கீதக் குறியீடுகள். இந்த இசைக் குறிகளுக்கு ஒலி வடிவம் கொடுக்கும் ரயில் சக்கரங்களின் தாளக் கச்சேரி.

    தூரத்தே அடிவானத்தை ஒட்டியபடி ரயிலின் திசையில் நகரும் பசுமைத் தீவுகள். எல்லாவற்றையும் உள்ளடக்கிப் பரந்து விரியும் வானமாகிய பெருந்திரை. அதில் அவ்வப்போது காற்றுத் தூரிகையால் கதிரவன் தீட்டும் மேகவண்ண ஓவியங்கள்.

    "டாடி, இந்த வைகை எக்ஸ்ப்ரஸ் எப்போ டாடி திருச்சிக்குப் போகும்?"

    மழலைக் குரல் ஒன்று அவன் சிந்தனையைக் கலைக்க, தலையைத் திருப்பிப் பார்த்தவன் கண்களில் பளிச்சிட்டு மறைந்தது ஒரு அழகிய சிறுவன் முகம்.

    அந்த முகத்தை, ஆர்வம் தோய்ந்த அந்தக் கருநீல குண்டு விழிகளை அவன் எங்கேயோ---

    சிறிதுநேர நினைவுகூரலுக்குப் பின் மனத் திரையில் தெளிவாகத் தோன்றியது Close Encounters of the Third Kind படத்தில் ’காஸ்மிக்’ கடத்தலுக்கு ஆளாகும் அந்த ஏழு வயதுப் பையன் ’பெயர்ரி’யின் முகம்.

    என்ன ஒற்றுமை! அடுத்த பெட்டியில் இருக்கும் அந்தப் பையனைப் பார்த்துப் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
     
  6. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    திடீரென்று மனம் விலகிச் சென்று வைகை விரைவு-வண்டியின் சிறப்புகளில் அலைபாய்ந்தது. சென்னையில் இருந்து அவன் எப்போது மதுரைக்குச் செல்வதானாலும் பயன்படுத்துவது, பகல் பயணத்துக்கு வைகை எக்ஸ்ப்ரஸ். இரவுக்கு பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்.

    அதிகம் சோர்வு தோன்றாத வண்ணம் இவர்களால் எப்படி இவ்வளவு விரைவில் மதுரை போய்ச்சேர முடிகிறது? நினைக்கவே பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்த ’பாப் மியூசிக்’ இரைச்சல் மட்டும் இல்லாவிட்டால் இது ஓர் அழகிய மானோ ரயில்தான்.

    கூடவே, வைகை எக்ஸ்ப்ரஸ் அறிமுகப் படுத்தப்பட்ட புதிதில் எதிர்பார்த்ததற்கு மிக முன்பாகவே வீடு சேர்ந்து அவன் அம்மாவைக் கன்னத்தில் கைவைக்கச் செய்தது நினைவுக்கு வந்தது.

    "ராஜாவா! மெட்ராஸ்லேர்ந்து எப்படி இவ்ளோ சீக்கிரம் வந்துட்டே? கார்த்தாலதான் வருவேன்னு பார்த்தேன். என்ன, ப்ளேன்லயா வந்தே?"

    அவன் அப்பா எப்போதும் ’வெல் இன்ஃபார்ம்ட்’. இதுபோன்ற விஷயங்கள் ஒன்று அவர் எதிர்பார்த்ததாக இருக்கும். அல்லது அவ்வளவு வியப்புத் தருவதாக இருக்காது. அப்படியே இருந்தாலும் அவர் அதை அதிகம் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்.

    ப்பா என்றதும் அவருடைய சிந்தனை தோய்ந்த ஒளிவீசும் கண்களும், தெளிவாகத் திருநீறு அணிந்த அகலமான நெற்றியும், செந்நிறக் கடுக்கன்கள் அணிந்த செவிகளும், தீர்க்கமான நாசியும் (குறைந்தது அரைமணி நேரப் ப்ராணாயாமம் அவரது தினசரி யோகப் பயிற்சி), எப்போதும் புன்சிரிக்கும் வசீகர முகமும் (புன்சிரிப்பு உதட்டிலா, கண்களிலா அல்லது மெல்லச் சிவந்து விரியும் நாசியிலா என்று சொல்வது கடினம்), நேர்த்தியாக வாரி முடியப்பட்ட கட்டுக் குடுமியும் நினைவுக்கு வந்தன.

    இன்னைக்கெல்லாம் பார்த்தாக்கூட அவரை அறுபது வயதைக் கடந்த ஒரு ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் என்று யாரும் சொல்லிவிட முடியாது.

    வீட்டில் இவ்வளவு கனிவாக இருந்தாலும் பள்ளியில் அவர் கணிதத்தைப் போதிக்கத் தொடங்கினால் போதும், குண்டூசி விழும் ஓசை கேட்கும் மௌனம் நிலவும்.

    கணீரென்ற குரலில் அவர், "A plus B whole square is equal to, A square plus two AB plus B square..." என்று அல்ஜீப்ராவையோ,

    "ஒரு செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்தை உள்ளடக்கிய பக்கங்களின் கூடுதல் அதன் கர்ணத்தை விடப் பெரியது. ஆயினும் அந்தப் பக்க அளவுகளின் வர்க்கங்களின் கூடுதல் அதன் கர்ணத்தின் வர்க்கத்திற்குச் சமாமகும்" என்று ஜியோமிதித் தேற்றங்களையோ அலசும்போது வகுப்பு முழுவதும் சிலையெனச் சமைந்திருக்கும்.

    கரும்பலகையில் எழுதிவிட்டு வகுப்பை வலம் வரும்போது, சரியாகப் பாடத்தைப் புரிந்துகொள்ளாத முகங்களை அவர் எளிதில் இனம் கண்டுகொள்வார். பின் அவர்களில் ஒரு மாணவனை எழுந்திருக்கச் சொல்லிக் கரும்பலகையில் எழுதச் செய்து மீண்டும் மீண்டும் தெளிவுறுத்தி எல்லோருக்கும் புரியும் வரை விடமாட்டார். கணிதத்தைப் பொறுத்தவரை அவர் வகுப்பில் ஒவ்வொரு வருடமும் நூறு சதவிகிதம் ’பாஸ்’. இத்தனைக்கும் அவர் தன் முப்பத்தைந்து வருட சர்வீஸில் எந்த ஒரு மாணவனையும் கைநீட்டி அடித்ததில்லை. ’இம்பொசிஷன்’ கொடுத்ததில்லை. எப்போதாவது கோபத்தில் ஓரிரு சொற்கள் அவர் வாயிலிருந்து நழுவி விடுவதுண்டு. உடனே சிரித்துவிடுவார்.

    அப்பாவிடம் அவனுக்கு ஒரே ஒரு குறை.

    ஊரில் எல்லோருக்கும் அவர் ஓர் ஆசிரியராக, வழிகாட்டியாக, வணக்கத்திற்குரிய பெரிய மனிதராக இருந்தாரே தவிர ஒருவரும் அவரைத் தன் உற்ற நண்பராகக் கருதியதில்லை. சக ஆசிரியர்கள் கூட அவரைத் தம்மினும் உயர்ந்த பெரியவர் என்று நினைத்துப் பழகினார்களே தவிர, நண்பர் என்ற முறையில் அல்ல.

    இதற்குக் காரணம் அப்பாவின் வயதா, அறிவா, தோற்றமா என்பது விளங்கவில்லை. ஆனால் இதற்கு அப்பாவைக் குறைசொல்வதைவிட அவரைச் சுற்றி இருந்தவர்களைக் குறைசொல்வது பொருத்தமாகப் பட்டது. அவர்கள் உருவாக்கியுள்ள ’இமேஜுக்கு’ அப்பா என்ன செய்வார்?

    வனும் அப்படியொரு ’இமேஜை’ மனசில் வைத்தே அப்பாவிடம் பழகியிருக்கிறான். ஒருகால் அந்த முப்பத்தந்து வருட வயது-இடைவெளி காரணமோ? அவன் தன் இருபத்து-நான்காம் வயதில், இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு கல்லூரியில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பொறுப்பேற்ற போது அப்பா ரிடயராகி விட்டார்.

    அல்லது அப்பாவுக்கு மணமாகி நீண்டநாள் குழந்தைப் பேறில்லாமல் பதினைந்து வருடங்கள் கழித்து அவன் பிறந்ததாலும், சிறுவயதில் அவனைச் சுற்றி இருந்த உறவினர்கள் அவரைப் பெரியப்பா என்றும் தாத்தா என்றும் அழைத்தபோது அவன் மட்டும் அப்பா என்று அழைத்தது வியப்பாக இருந்ததாலும், இத்தகைய ஒரு ’சைகலாஜிகல்’ பின்னணியில் அவனுடைய அப்பா ஒரு அப்பாவை விட வயதானவராகத் தோன்றிட அவருக்கு ஒரு தாத்தாவின் அந்தஸ்தையே கொடுத்து வழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

    உண்மையில் சிறுவயதில் அவன் தன் அப்பாவை தாத்தா என்றே கூப்பிட்ட நிகழ்ச்சிகள் உண்டு!

    இத்தகைய பின்னணியில் அவன் தன் ஆசை அபிலாஷைகளை, எண்ணங்களை, கருத்துகளை, மற்றபிற உணர்வுகளைத் தன் அப்பாவுடனோ--அல்லது அம்மாவுடனோ--பகிர்ந்துகொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. அல்லது உருவாக்கிக் கொண்டதில்லை.

    ’நோநோ! அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. அம்மாவுக்கு இதெல்லாம் புரியாது. அவா வளர்ந்த சூழ்நிலை வேற, நாம வளர்ற சூழ்நிலை வேற. இதெல்லாம் அவாளுக்கு சரின்னு படாது. அல்லது என்னைத் தப்பாப் புரிஞ்சுக்குவா. ஏன் அனாவசியமா அப்பா அம்மா மனசை நோக அடிக்கணும்?’---

    என்ற நினைவில், அவன் தன் ’அடலெசென்ட்’ (பருவ) உணர்வுகளை, அதைத் தொடர்ந்த ஆசைகளை, அனுபவங்களைத் தனக்குள்ளேயே பூட்டிச் சிறைப்படுத்தி விடுவது வழக்கம்.

    ஒரு முயற்சியாகக் கூட அவற்றை அவன் அப்பாவிடம் வெளியிட்டது இல்லை. அவர் கருத்துக்களை அறிய முனைந்தது இல்லை.

    ’இனிமேல் அதற்கு வழியில்லை’ என்று அப்பாவின் சமீபத்திய கடிதம் உணர்த்தியது.

    *** *** ***
     
  7. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    2

    ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
    ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன்;
    ஈங்கோர் கன்னியைப் பன்னிரண் டாண்டினுள்
    எந்தை வந்து மணம்புரி வித்தனன்.
    ---மஹாகவி பாரதியார், சுயசரிதை 35


    ன்புள்ள ராஜா,

    வெகு நாட்களாக உன்னிடம் இருந்து கடிதம் வராதது குறித்து வருத்தம். ஏன் எழுதவில்லை? அஃப் கோர்ஸ், கல்லூரியில் முதல் தவணைத் தேரிவுகள் நெருங்குவதால் வேலை அதிகம் இருக்கும். அல்லது உடல் நலமில்லையா?

    இங்கு அம்மாவும் நானும் நலம். நம் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து அவ்வப்போது கடிதம் வருகிறது. கோயம்புத்தூரில் வசந்தியும் குழந்தைகளும் நலம். மற்ற இடங்களிலும் அப்படியே.

    அங்கு நீ எப்படி இருக்கிறாய்? கல்லூரி மற்றும் ஜாகை வசதிகள் எப்படி? அதே ரூமில்தான் இன்னமும் இருக்கிறாயா? ஓய்வு நேரங்களில் என்ன செய்கிறாய்? விடுமுறை நாட்களில் அனாவசியமாக வெய்யிலில் அலையாதே. உன் நண்பன் பாஸ்கர் நலம்தானே? ’ப்ரமோஷ’னுக்குப் பின் அவன் ’பாங்க்’ உத்தியோகம் எப்படி இருக்கிறது?

    எனக்குத்தான் பொழுதே போகவில்லை. என் தினசரி நியமனுஷ்டானங்களில் ஒன்றும் குறைவில்லாமல் செய்கிறேன். மூன்று வேளையும் தவறாது சந்தியா வந்தனம் செய்கிறேன். காலை மாலை நேரங்களில் ’கனகதாரா, விஷ்ணு சஹஸ்ரநாமம்’ போன்ற ஸ்தோத்திரங்களை நானும் அம்மாவும் தவறாது காஸட் போட்டுக் கேட்கிறோம். இருந்தும் நேரம் நிறைய மீந்துவிடுகிறது. பலர் வற்புறுத்தியும் ட்யூஷன் வைத்துக்கொள்ள விருப்பப்படவில்லை.

    நான் புதிதாக ஒரு ’ஹாபி’யை மேற்கொண்டுள்ளேன். என்ன தெரியுமா? ஜேன் ஆஸ்டினின் எம்மாவைப் போல ஜோடி சேர்க்கும் வேலை! என் ஜாதகப் பொருத்தம் பார்க்கும் பணியைத்தான் குறிப்பிடுகிறேன். முன்பெல்லாம் நேரம் கிடைத்தபோது எப்போதேனும் செய்துவந்ததை இப்போது ஆர்வத்துடன் முழுமூச்சாக செய்யத் தொடங்கியிருக்கிறேன். ஜாதகப் பொருத்தம் மட்டுமின்றி மற்றபிற ஆலோசனைகளையும் வழங்க யத்தனிக்கிறேன்.

    இந்த இடத்தில் திடீரென்று ஒரு விஷயத்தை, ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட வேண்டியுள்ளது. உனக்கு ஒரு பெண் பார்த்திருக்கிறேன். பெண் நல்ல இடம். பி.ஏ. இங்லிஷ் படித்திருக்கிறாள். வாஸ்தவமாகவே மூக்கும் முழியுமாக இருக்கிறாள். நன்றாகப் பாடுகிறாள். வீணை வாசிக்கத் தெரியும். ஆத்துக் காரியங்களைச் செவ்வனே செய்வதிலும் கெட்டிக்காரி என்று படுகிறது. மொத்தத்தில் அம்மாவின் மனசுப்படி ஒரு ஆதர்ஷ மருமகளாக அமைவாள் என்று தோன்றுகிறது. உனக்கும் வயதாகிவிட்டது, நல்ல வேலையிலும் செட்டிலாகிவிட்டாய். நானும் ஓய்வுபெற்றுவிட்டேன் அல்லவா? உன் சக வயது உறவினர்கள் வசந்தி, முரளி போன்றோர்க்கும் கல்யாணமாகிவிட்டதை நினைவுபடுத்துகிறேன்.

    மற்ற லௌகிக விஷயங்களில் உன் கருத்துப் படியே நான் ஒன்றும் பிரஸ்தாபிக்கவில்லை. அம்மாவுக்கு அதில் கொஞ்சம் கோபம்தான். ஆனாலும் பெண் வீட்டார் எல்லா விஷயங்களிலும் குறைவறச் செய்ய சம்மதித்துள்ளனர். விபரங்களை நேரில் கூறுகிறேன்.

    எனவே, நீ உடனடியாக வரும் 15-ஆம் தேதி வைகை எக்ஸ்ப்ரஸில் புறப்பட்டு வரத் தோதாக ஏற்பாடுகள் செய்துவிடு. 17-ஆம் தேதி நல்லநாள் என்பதால் அன்றே மதுரையில் பெண்பார்க்க ஏற்பாடு செய்துவிட்டேன். உனக்கும் பதினைந்து முதல் விடுமுறை ஆரம்பம் அல்லவா? கல்யாணத்தை உடனடியாக நடத்தப் பெண்ணின் பெற்றோர் விரும்புவதாள் இந்த அவசரம்.

    இதுபோன்ற நல்ல இடம் அமைவது கஷ்டம் என்பதால் இந்த வாய்ப்பை நழுவவிடுவது உசிதமல்ல. பெண்பார்த்தபின் உன் கருத்தை அறிந்து மேலே தொடரலாம்.

    பதினைந்தாம் தேதி இரவு உன்னை எதிர்பார்க்கிறேன். அம்மா உனக்குத் தன் ஆசிகளைத் தெரிவிக்கிறாள்.

    இப்படிக்கு,
    உன் பிரியமுள்ள அப்பா
    மஹாதேவ ஐயர்


    ப்பாவின் கடிதத்தை இரண்டு வாரம் முன் ஒரு நாள் ’லஞ்ச் அவ’ரில் தன் அறையில் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியின் விளைவுகள் இன்னமும் தொடர்ந்தன.

    மனதில் விவரிக்க இயலாத ஒரு சோகம். சூன்யம்.

    தான் ஆசையுடன் கட்டிய மணல் வீடுகள் மழையில் கரைந்துவிட்ட நிகழ்காலத்தை நம்ப மறுக்கும் குழந்தையின் பிடிவாதம்.

    ஏதேனும் நல்லது நடந்து இருள் விலக விடியலின் முதல் ஒளிக்கீற்று தோன்றாதா என்ற ஏக்கம்.

    எப்படியும் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை. அதே நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது போன்ற அச்சம்.

    கொஞ்சம்கூடத் தான் எதிர்பார்த்திராத சாத்தியத்தாலோ அல்லது மூளையின் சாம்பல்நிற செல்களில் ஏதோ ஒன்றன் அனுமானத்தில் எழுந்த எச்சரிக்கையை அசட்டை செய்ததன் விளைவாலோ அடுத்த நாலைந்து ’மூவ்’களின் விஸ்வரூபத்தில் திடீரென்று ’செக்மேட்’ ஆகிவிட்ட சதுரங்க ராஜாவின் நிலையில் தான் இருப்பதாக உணர்ந்தான்.

    Checkmated in life!
     
  8. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    நான் முன்பின் அறிந்திராத, முகம்கூடத் தெரியாத, பி.ஏ. இலக்கியம் பயின்றுள்ள, அப்பாவின் கணிப்பில் வாஸ்தவமாகவே ’மூக்கும் முழியு’மாக இருக்கும் பெண்ணே! யார் நீ? எந்த வகையில் நீ என் ’லைஃப் பார்ட்னர்’ ஆகத் தகுதி உடையவள், அல்லது நான் உன் ’லைஃப் பார்ட்னர்’ ஆகத் தகுதி உடையவன் ஆகிறேன்? அம்மாவின் ஆதர்ஷ மருமகளே! எனக்கு ஆதர்ஷ மனைவி ஆவாயா? என் வழியில் நான் அமைத்துக்கொள்ள விரும்பும் வாழ்க்கையில் குறுக்கிட உனக்கு என்ன உரிமை இருக்கிறது? என் எண்ணங்கள், கனவுகள், ஆசைகள் பற்றி உனக்கு என்ன தெரியும்? நான் இதுவரை அறிந்துள்ள, பழகியுள்ள, நேசித்துள்ள பெண்களைவிட நீ என்ன உசத்தி?

    How can I reconcile myself to a total stranger I have not seen, talked to, moved with, or loved?

    பெரும் இரைச்சலுடன் பாலம் ஒன்றில் ஓடத் தொடங்கிய வைகை எக்ஸ்ப்ரஸ் சாந்தமடைந்து மீண்டும் சமவெளியில் பிரவேசித்தது.

    புதிதாகப் போடப்பட்ட குழாயில் முதலில் வரும் துருவும் அழுக்கும் கலந்த வெதுவெதுப்பான நீரைத் தொடருந்து வரும் தெள்ளிய, குளிர்ந்த நீரைப் போல, வெறுப்பும் கோபமும் கசப்பும் நிறைந்த மனத்தின் முதல் எதிர் இயக்கத்தை அடுத்து எண்ணங்கள் சிறிதுசிறிதாகத் தெளிவடைந்து ஒருமைப்படத் தொடங்கின.

    ப்பாவின் கடிதத்தில் அவனுக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெண்ணைப் பிடித்துவிட்டது, அவனுக்குப் பிடிக்காமல்போக நியாயமில்லை என்பது அவர்கள் அபிப்பிராயம்.

    அப்படி ஒன்றும் சாதாரணமான பெண்ணை அவனுக்குப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. யாரந்த இலக்கியம் பயின்ற, அழகான, நன்றாகப் பாடும், வீணை வாசிக்கும் பெண்? எந்த ஊர்?

    இவ்வளவு தூரம் அப்பா அம்மாவின் மனதில் நிறைந்துவிட்ட, அவர்களால் ஒருமனதாகப் பாராட்டப்படும் பெண்ணே, யார் நீ?

    என்ன இருந்தாலும் இந்த விஷயத்தில் அவனை முன்பே ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டும். ’ராஜா, உனக்குக் கல்யாணம் பண்ணிவைக்க விரும்புகிறோம். நீ யாரையாவது மனதில் நினைத்திருக்கிறாயா? அல்லது நாங்கள் முயற்சி செய்யட்டுமா?’ என்று அன்பாக, ஆதரவாக, வெளிப்படியாக அவனை ஒரு வார்த்தை---ஒரே ஒரு வார்த்தை---கேட்டிருக்க வேண்டாம்?

    ’நாங்கள் பார்க்கும் பெண் உனக்குப் பிடித்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. உனக்கு உதவுவதற்காகவே நாங்கள் முயற்சி செய்கிறோம். எப்படி இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போவது நீதானே? எங்களைப் பொறுத்தவரையில் எல்லோரையும் அனுசரித்துக்கொண்டு, குடும்பத்தை நல்லபடியாக நடத்திக்கொண்டு போகக் கூடிய நம்ம ஜாதிப் பெண் யாராக இருந்தாலும் சம்மதமே. உனக்கு இந்த வகையில் அனுபவம் போதாது என்பதால் நாங்கள் முயற்சிசெய்ய நேரிடுகிறது’, என்றாவது ஆலோசனை கூறியிருக்கலாம்.

    ஏன் அப்பாவும் அம்மாவும் இப்படியெல்லாம் செய்யவில்லை? கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போவது அவனல்லவா? வீட்டுக்கேற்ற மருமகள் என்ற சுயநல எண்ணம் காரணமாகத்தானோ அவர்கள் பார்த்திருக்கும் முதல் பெண்ணையே வற்புறுத்தித் தலையில் கட்ட முனைகின்றனர்?

    இப்படியெல்லாம் நினைக்கும் நிலைக்கு அவனை ஆளாக்கிய அப்பா அம்மாவின் நோக்கம்தான் என்ன?

    கூடவே வசந்தியைப் பெண் பார்த்த நிகழ்ச்சியின்போது அவன் அப்பா அம்மா நடந்துகொண்ட விதம் நினைவில் நிழலாடியது.

    "அத்திம்பேர் நீங்க என்ன சொல்றேள்? பையன் எஞ்சினியரிங் டிகிரி. நல்ல வேலை. கை நிறைய சம்பளம். பாக்கறதுக்கும் லக்ஷணமா இருக்கான். அவா அப்பா அம்மாகூட ரொம்ப நல்ல மாதிரியாத் தோண்றது. அவாளுக்கு வசந்திகிட்ட இப்பவே எவ்வளவு ஒட்டுதல் பார்த்தேளா? இந்த இடம் மட்டும் குதிர்ந்ததுன்னா நாங்க ரொம்ப பாக்யசாலிகள்."

    சித்தியின் ஆதங்கத்துக்கு அப்பாவிடமிருந்து வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பதில் வந்தது.

    "ஏம்மா காமு, நா ஒண்ணு கேக்கறேன், தப்பா நெனச்சுக்க மாட்டியே? நீங்கள்ளாம் இவ்வளவு தூரம் குதிக்கறேளே, யாரவது பொண்ணை ஒரு வார்த்தை கேட்டேளா? கல்யாணம் பண்ணிக்கப்போறது அவதானேம்மா? காலத்துக்குத் தகுந்தமாதிரி நாம்பளும் நடந்துக்க வேண்டாமா? நீ என்ன சொல்றே மீனாக்ஷி?"

    "ஆமா காமு. அத்திம்பேர் சொல்றது வாஸ்தவம்தான். வசந்தி ரொம்ப நாளா எங்ககிட்ட வளர்ந்தவ, அவள் மனசப் பத்தி நேக்கு நன்னாத் தெரியும், பெரியவா சொல்லைத் தட்டமாட்டா. இருந்தாலும் அவளையும் ஒரு வார்த்தை கேட்டுர்றதுதான் சரி."

    இதற்குள் பையன் வீட்டாரை வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்த அவன் சித்தப்பாவின் குரல் ஒலிக்க---"என்ன வசந்தி, பையன் எப்படி? முதல்ல உனக்கு பிடிச்சிருக்கா சொல்லு?"---நினைவலைகள் கலைந்தன.

    யோசித்துப் பார்த்ததில் அப்பாம்மா பேரில் தப்பில்லை என்று பட்டது. தன் மகனின் திருமணத்திற்கு முதல்படியாக எந்த பெற்றோரும் தொடங்கும் காரியத்தைத்தானே அவனுடைய பெற்றோரும் செய்திருக்கிறார்கள்? திடீரென்று இந்த இடம் எதிர்பாராத விதமாக அமைந்திருக்கலாம். போதிய அவகாசம் இல்லாததால் நேரில் அவனிடம் பேசிக்கொள்ள நினைத்திருக்கலாம். அப்பாதான் விவரங்களை நேரில் சொல்வதாக எழுதியிருக்கிறாரே?

    ப்புறம் அந்த ஜேன் ஆஸ்டினின் எம்மா!

    அப்பா எப்போது ’எம்மா’ படித்தார்? அவருக்கு இந்த நாவல்கள் எல்லாம் கட்டோடு பிடிக்காது என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தான்? வீட்டில் உள்ள ஆங்கில நாவல்கள் எல்லாம் அவன் மட்டும் படிப்பதுதானே வழக்கம்?

    அம்மாவின் கருத்து, புத்தகங்களை விலைகொடுத்து வாங்குவது வீண் செலவு. அவாளுக்குத் தேவையான ’விகடன், கதிர், கல்கி, கலைமகள்’ போன்ற பத்திரிகைகளை அண்டை வீடுகளுடன் பகிர்ந்துகொண்டு படித்துவிடுவார்கள்.

    ஓய்வு நேரத்தில் கூட அப்பா ’ஹிண்டு’வும் ’கீதா’வும் தானே படிப்பார்? பத்திரிகைகளைப் பொறுத்தவரை அவர் எப்போதாவது ’டைஜஸ்ட், பவன்ஸ் ஜர்னல்’ அல்லது ’வீக்லி’ படிப்பார். அதுகூடத் தனக்குப் பிடித்த பகுதிகள் மட்டும்தான்.

    ரிடயர் ஆனதுமுதல் ஒருவேளை இந்த நாவல்கள் எல்லாம் படிக்க ஆரம்பித்திருக்கிறாரோ? அதுகூட அவன் விடுமுறை நாட்களில் வந்திருந்தபோது வெளிப்படையாகத் தெரியவில்லையே?

    முன்பு ஒருமுறை அப்பா தன் கல்லூரி நாட்களில் பி.ஏ. பயின்றபோது படித்ததாகச் சொன்ன புத்தகங்களும் ஆசிரியர்களும் நினைவுக்கு வந்தன.

    "இந்தக் காலத்தில இங்க்லிஷை சரியாகவே ’டீச்’ பண்ணறதில்லை. டிகிரி சிலபஸ்லாம்கூட ரொம்பக் குறச்சலாகவும் ஏனோதானோன்னும் இருக்கு. நாங்கள்லாம் பி.ஏ. பண்றச்சே ’மெயின் சப்ஜக்ட்’ கணிதமாக இருந்தாலும் எங்க இங்க்லிஷ் பேப்பருக்கு ஏகப்பட்ட புத்தகங்கள் வெச்சிருந்தா. ஷேக்ஸ்பியர் நாடகங்கள் என்ன, டென்னிஸன், வேர்ட்ஸ்வர்த், பைரன், ஷெல்லி, கீட்ஸ், மில்டன் இவாளோட ’பொயட்ரி’ என்ன, லாம்ப், ஆர்னால்ட், தோரூ இவாளோட கட்டுரைகள்னு ஏகப்பட்ட ஆதர்ஸ். இதைத் தவிர ’நான்-டீடெய்ல்ட் ஸ்டடி’ன்னு ஜேன் ஆஸ்டின், ஸ்காட், டிக்கன்ஸ், ஹார்டி, கால்ஸ்வர்தினு ஒரு பெரிய லிஸ்ட். இதெல்லாம் போக ’ரென் அன்ட் மார்டின் கிராம்மர்’. அந்தக் காலத்தில எங்களுக்கு சாமுவேல் எல்டன்னு ஒரு வெள்ளைக்காரன் க்ளாஸ் எடுத்தான். அவன் க்ளாஸ்ல போர்டு பக்கத்தில நடந்துண்டு ஷேக்ஸ்பியரையோ, மில்டனையோ எடுத்தா நேரம் போறதே தெரியாது. நானெல்லாம் அப்பவே இங்க்லிஷ்ல ஸெகண்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணினேன். என்ன படிக்கிறேள் நீங்கள்ளாம் இப்போ?"

    உண்மைதான். அப்பாவின் ’இங்க்லிஷ்’ பேச்சும் எழுத்தும் கற்றுத்தேர்ந்த ஒரு வெள்ளைக்காரன் பாணியில் இருக்கும்.

    அப்பா பி.ஏ. படித்தது சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்னால். இன்னுமா அவர் தான் படித்தவற்றை ஞாபகம் வைத்திருக்கிறார்?

    *** *** ***
     
  9. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    3
    நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
    நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
    ஊடகத்தில் வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
    ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்.
    ---மஹாகவி பாரதியார், சுயசரிதை, பாரதி-அறுபத்தாறு 52


    அவனால் அப்பாவைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எத்தனை அப்பாக்கள்!

    தும்பைப்பூ போன்ற வேஷ்டி சட்டை ஜரிகை அங்கவஸ்திரம் அணிந்து ஸ்கூலுக்குப் போகும் அப்பா.

    வகுப்பில் கண்டிப்பே உருவான அப்பா.

    ஊரில் எல்லோராலும் வணக்கத்துக்குரிய பெரிய மனிதராகக் கருதப்படும் அப்பா.

    நெருங்கின நண்பர்களே இல்லாத அப்பா.

    ஓய்வு நேரங்களில் மற்றவர்களைப் போல திண்ணையில் துண்டை விரித்துப்போட்டு உட்கார்ந்து வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு சீட்டு மற்றும் அரட்டைக் கச்சேரியிலில் ஈடுபடாமல் கீதை படிக்கும் அப்பா.

    தவறாமல் சந்தியா வந்தனம் பண்ணு, தினமும் ஸ்தோத்திரப் பாடல்களை காஸட் போட்டுக் கேட்கும், ஆனால் ஏதேனும் விசேஷ நாட்களில் மட்டுமே கோவிலுக்குப் போகும் அப்பா.

    காய்கறி மளிகை சாமான்கள் விறகு கரி வாங்கி வருவது முதல் எல்லா வேலைகளையும் தானே முன்னின்று செயலாற்றி கவனிக்கும் அப்பா.

    எப்போதும் கொஞ்சம் ’ரிசர்வ்ட்’ ஆகக் காட்சியளிக்கும் அப்பா.

    இப்போது ஜாதகப் பொருத்தம் பார்க்கும், ஜேன் ஆஸ்டின் படிக்கும் அப்பா.

    இத்தனை அப்பாக்களில் எது அவனுடைய அப்பா என்று கேட்டால் உடனே பதில் வராது. பொறுமையாக, நிதானமாக யோசிக்க வேண்டிவரும்.

    அப்பாவின் இதுபோன்ற எல்லாத் தோற்றங்களிலும் அவனுக்கு உடன்பாடு உண்டு. ஆனால் ஒன்றிலாவது ஈடுபாடு கிடையாது.

    மறுபடியும் அந்தத் ’தாத்தா இமேஜ்’தான் தலைதூக்கும். அவனுடைய தாத்தாவாக இருந்தால் இந்த எல்லாத் தோற்றங்களையும் வரவேற்றிருப்பான். ஆனால் அவன் அப்பா இன்னும் கொஞ்சம் நெருக்கமாக, மனம்விட்டுப் பேசுபராக, அவனது எண்ணங்கள், கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பம் அளிப்பவராக, மற்ற பையன்களைப் போல் சமயத்தில் எதிர்வாதம் செய்யவோ எதிர்த்துப் பேசவோ முடிவதற்கு அனுகூலமாக இருப்பவராக அமைந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

    இப்போதும் சரி, அவனால் அப்பாவிடம் எதிர்வாதம் செய்யவோ, அப்பாவின் சொல்லை, கருத்தை மீறவோ முடியாது என்று தோன்றியது. இதுவரை மீறியதில்லை என்பதைவிட மீறுவதற்கு அவர் இடம் கொடுத்ததில்லை என்பதே உண்மை.

    எல்லா விஷயங்களிலும் ஒன்று இணக்கமாக அல்லது ஒதுக்கமாக இருக்கும் அப்பாவை மீறும் துணிச்சல் அவனுக்கு எப்படி வரும்?

    அப்படியே மீறினாலும் அப்பாவின் மனநிலை பற்றி அவனுக்கு என்றுமே தெரியப் போவதில்லை. அவர் தன் விருப்பு வெறுப்புகளை வெளிப்படையாக உணர்த்தியதில்லை. அவருக்குப் பிடிக்காத விஷயங்கள், நிகழ்ச்சிகளில் இருந்து அவர் விலகி இருப்பது மட்டுமில்லாமல் தன் கொள்கையிலும் உறுதியாக நிற்பார் என்பது மட்டும் நிச்சயம்.

    மற்றவர்களைப் போல் அவர் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டார். வார்த்தைகளைக் கொட்டி வெறுப்பையும் கோபத்தையும் வெளியிட மாட்டார்.

    "ராஜா, உனக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். எனக்கு இந்த ’அலையன்ஸ்’ல விருப்பமில்லை. உனக்கு கௌசல்யா ரொம்பப் பொருத்தமானவளா இருக்கலாம். எம்.ஏ. இங்க்லிஷ் படிச்சிருக்கா, உன்னை மாதிரியே காலேஜ் லெக்சரரா இருக்கா, கைநிறைய சம்பாதிக்கறா, இல்லேங்கல. அழகாவும் இருக்கா, முறைப் பெண்ணும் கூட. உன்னைவிட ஒரு வயசுதான் சின்னவள்னாலும் பரவாயில்லை. ஆனால்... அவ அப்பாவோட போக்கு எனக்குப் பிடிக்கலை. அம்மாவோட தம்பிங்கற த்வேஷத்ல இதை நான் சொல்லலை. அம்மாவுக்கே தெரியும் அவனைப் பத்தி. என்னைவிட பத்துப் பன்னிரண்டு வயசு சின்னவன் அவன். பெரிய பணக்காரனா இருந்தா மத்தவாளை மதிக்கக் கூடாதுன்னில்லையே?"

    "கல்யாணங்கறது அதைப் பண்ணிக்கறவாளோட சந்தோஷம் மட்டுமில்லை. அதில நேரடியா சம்பந்தப்பட்ட எல்லோரோட சந்தோஷமும் முக்கியம். அப்பதான் வாழ்க்கை நெறக்கும். அதேமாதிரி, மனுஷாளுக்கு மரியாதை முக்கியம். இன்னிக்கு எனக்குக் கிடைக்காத மரியாதை நாளைக்கு உனக்கு அவாத்தில கிடைக்கும்னு எனக்குத் தோணலே. கௌசல்யாவை நீ கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. ஆனால், அதுக்கப்புறம் ஒண்ணு நீ எங்களை மறந்துடணும் அல்லது அவள் தன் பெற்றோரை மறந்துடணும். இதுக்கு சம்மதம்னா மேலே போங்கோ."

    அப்பாவோட அசைக்கமுடியாத கொள்கைக்கும் கருத்துக்கும் இதைவிட ’கான்க்ரீட் எக்ஸாம்பிள்’ வேறு என்ன வேணும்?

    அம்மாவுக்கு அவனிடம் ஒரே பிள்ளை என்ற பாசமும் அதீதமான அன்பும் இருந்தாலும் அப்பாவை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லவோ அல்லது அப்பாவுக்கு ஆலோசனை
    கூறவோ அம்மாவால் முடியாது. அப்பாவே அடிக்கடி அம்மாவை ’ரெஃபர்’ பண்ணினாலும் அம்மாவுக்கு அப்பாவின் பேச்சை ’என்டார்ஸ்’ பண்ணித்தான் பழக்கம்.

    மேலும் இயற்கையாகவே அம்மா ரொம்ப ’கன்சர்வேடிவ்’. தோற்றத்திலும் கூட. மடிசார் புடவை கட்டிய அளவாகப் பருத்த சரீரம். நல்ல நிறம். மஞ்சள் உரமேறிய முகம். நெற்றியில் சிவப்பு நிலாக் குங்குமம், தலைவகிட்டில் அதன் எதிரொளி. முன்னால் கொஞ்சம் நரைத்த, அடர்ந்த அலைக் கூந்தல். மூக்கிலும் காதுகளிலும் வானவில், உதடுகளில் பவழம். எப்போதும் மலர்ந்திருக்கும் சோகமே அறிந்திராத முகம். மெட்டி ஒலிக்கும் மிருதுவான நடை. கலகவென்று அண்டை அயலாரிடம் பழகும் சுபாவம்.

    கல்யாணம் என்றாலே அம்மாவின் கணிப்பில் முதலிடம் பெறுபவை இவ்வளவு தொகை வரதட்சிணை, இத்தனை சவரன் நகைகள், வைரமூக்குத்தி-தோடு, இவ்வளவு ரூபாய்க்கு வெள்ளி மற்ற பாத்திரங்கள், இத்யாதி இத்யாதி. இதைத் தவிர, வருகின்ற பெண் லக்ஷணமாக, சங்கீதம் கேட்கும் ஞானம் உடையவளாக, தெய்வபக்தி நிறைந்தவளாக, வீட்டுக் காரியம் எல்லாம் சவரணையாகச் செய்யத் தெரிந்தவளாக, மொத்தத்தில் அம்மாவைப் போலவே ஒரு மாமியார் மெச்சும் மருமகளாக இருக்க வேண்டும்.

    அப்பாவின் கடிததில் உள்ள ’ஆதர்ஷ மருமகள்’ போல.

    கைகள் மறுபடியும் அந்தக் கடிதத்தைப் பிரித்தன.

    "இந்த இடத்தில் திடீரென்று ஒரு விஷயத்தை..."

    கண்கள் மீண்டும் மீண்டும் அந்த வரிகளில் ஓடியபோது மனம் கனத்து ஆழமான பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.

    திடுக்கிட்டவனாகச் சுற்றிலும் பார்வையை ஓட்டினான். யாரவது கவனித்திருப்பார்களோ?

    ’பேப்பர்’ படிக்கும் பேராசிரியரின் வாய் மெல்லத் திறந்து மூடிக் கொண்டிருந்தது, ஒரு மீனின் வாயைப் போல. இமைகள் மட்டுமே தெரியும் தாழ்ந்த கண்கள் ’ஹிண்டு’வில் நிலைத்திருந்தன. மற்றபடி வேறு சலனமில்லை.

    அவர் பக்கத்தில் நடுத்தர வர்க்கக் குடும்பம் சுவாரஸ்யமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தது, மடியில் தூங்கும் குழந்தையை நோக்கியபடி.

    பையன் ’காமிக்ஸில்’ மூழ்கியிருந்தான். அருகில் அந்த இளம் சந்நியாசி--அல்லது ஹிப்பி--நிஷ்டையில் மூழ்கியிருந்தான்.

    திருப்தியுடன் தன் ஜோல்னாப் பையிலிருந்து சிவப்பு லெதரில் அழகாக ’பைன்ட்’ செய்யப்பட்ட தன் ’டைரி’யை எடுத்துப் பிரித்தான்.
     
  10. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    வனது டைரி காதலில் தொடங்கியது!

    Love is a blend of affection, reverence, and passion.
    --Rajaraman


    பல நாட்கள் சிந்தனை செய்து, வார்த்தைகளைத் தேடிப் பிடித்து, புடம்போட்டு உருவாக்கி, இது காதலின் அறுதி விளக்கமாக இருக்கலாம் என்று நினைத்துப் போற்றிவந்த வரிகளை இப்போது படிக்கும்போது, அதுவும் அந்த blend மனதின் சலங்கைகளை வருடும்போது, கேலிதான் தலைதூக்கியது.

    The made for each other blend
    That set the filter trend.


    ஏன் அந்த ’லேடிலவ்’ புகை பிடிப்பதில்லை என்று நினைத்துக்கொண்டான்.

    மனதில் ஆறிப்போய்விட்ட வரிகளின் சாம்பலைக் கிளறும்போது தீப்பொறிகள் பறந்தன.

    காதலை அவன் விரும்பும் வகையில் அழகாக, எளிமையாக, ஆழமாகப் படம் பிடித்துக்காட்டிய ஆசிரியர்கள் யார்யார் என்று நினைத்துப் பார்க்க,

    ஜேன் ஆஸ்டின்தான் முதலில் நினைவுக்கு வந்தார். அவரது பாத்திரங்கள் எலிசபெத்-டார்ஸி, எம்மா-நைட்லி, ஹென்றி-காதரின் இவர்களில் யார் உண்மையான காதலர்கள்? கொஞ்சம் யோசனைக்குப் பின் மனம் எம்மா-நைட்லி ஜோடிக்கு வாக்களித்தது.

    மற்ற ஆசிரியர்களை நினைக்கும்போது---

    எமிலி ப்ரான்டியும் (ஹீத்க்ளிஃபின் காதல் ஆழமானது, மூர்க்கத்தனமானது),

    தாமஸ் ஹார்டியும் (நண்பனுக்காகத் தன் காதலைத் துறந்த அந்த ’ட்ரம்பெட் மேஜர்’ஐ அவனுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை),

    ஆர்தர் ஹெய்லியும் (நடைமுறை அமெரிக்கக் காதலர்கள்),

    ஸிட்னி ஷெல்டனும் (’தி அதர் ஸைட் ஒ மிட்னைட்’இல் வரும் காதலர்கள் காதலில் தோல்வி அடைந்து தடம் மாறியவர்கள்),

    இந்துமதியும் (’தரையில் இறங்கும் விமானங்கள்’ நாவலில் அந்த அண்ணியும் தம்பியும் காதலர்களாக இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது. அப்புறம் அந்த மாயா-ப்ரஸன்னா-நந்தகோபால் முக்கோணத்தில் மாயாவும் டாக்டரும் ஒன்று சேர்ந்தது ஒரு ஆறுதல்), மனதில் வந்து போயினர்.

    இந்த ஆசிரியர்கள் படைப்பில் உண்டான காதலர்களிடம் ஏதோ ஒரு குறை இருப்பதாகப் பட்டது. அவர்கள் வாழ்க்கையில், காதலில், சந்தர்ப்பம் ஒரு பெரிய இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதாகப் பட்டது.

    ’சந்தர்ப்பங்கள் மனிதனை உருவாக்குவதில்லை. மனிதனே சந்தர்ப்பங்களை உருவாக்குகிறான்’, என்றது மனத்தில் ஒரு மூலை.

    இப்போதெல்லாம் ஜேன் ஆஸ்டின் போல் திட்டமிட்டு வளர்ந்து முழுமையுறும் காதலை ஏன் ஆசிரியர்கள் சித்தரிப்பதில்லை?

    இந்த நாவல்களைவிட ஜார்ஜ் மெர்டித்தின் ’தி ஆர்டியல் அஃப் ரிச்சர்ட் ஃபெவரல்’ தேவலாம். தூய்மையான, தெய்வீகக் காதலை வேறு யாரும் இவ்வளவு அழகாகப் படம்பிடித்துக் காட்டியதில்லை.

    ஷேக்ஸ்பியரைத் தவிர. ஷேக்ஸ்பியரிடம்கூட அவரது புகழ்பெற்ற ரோமியோ-ஜூலியட், ஆன்டனி-கிளியோபாட்ராவை விட, ஃபெர்டினான்ட்-மிராண்டா, ஆலிவர்-ரோஸலின் போன்ர காதலர்கள் அவனுக்குப் பிடித்தமானவர்கள்.

    ’அன்பும், மதிப்பும் வேட்கையும் இரண்டறக் கலந்திருப்பதே காதல்’ என்ற அவன் கருத்துக்குப் பொருத்தமானவர்கள்.

    நாவல்களிலும், ’ஃப்ரெண்ட்ஸ்’, ’சோட்டி ஸி பாத்’, ’சித்சோர்’ போன்ற திரைப்படங்களிலும் சித்தரிக்கப்படும் காதலும், காதல் சூழ்நிலையும் நிஜ வாழ்க்கையில் ஏன் சாத்தியமாவதில்லை? அல்லது எவ்வளவு தூரம் சத்தியமாகிறது?

    இளைஞர்களின் முனைப்பாகவும் இளம்பெண்களின் கனவாகவும் விளங்கும் இந்தக் காதலை மேலை நாட்களில் உள்ளது போன்று வாழ்வில் ஒரு அங்கமாக்கி, நெறிப்படுத்தி, வெற்றிகரமான விவாகங்கள் நிகழ இன்றைய சமூகம் என்ன செய்துள்ளது?

    இன்றைய மாறுபட்ட சூழ்நிலையில் தம் மக்கள் திருமண முயற்சிகளில் பெற்றோர் தம் பங்கை சரிவர ஆற்றுகிறார்களா?


    பாரதியும், திரு.வி.க.வும் கண்ட ’பெண் விடுதலை’க் கனவு இன்று எவ்வளவு தூரம் நனவாகியுள்ளது?

    மனம் அடுக்கடுக்காக கேள்விக் கணைகளைத் தொடுக்க, அவனுடைய நண்பர்களில் யாராவது காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் இருக்கிறார்களா என்று நினைத்துப் பார்த்தான்.

    ஏன், வசந்த் இருக்கிறானே!

    வசந்த் தன் எதிர் வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணைக் காதலிப்பதை முன்பே அவனிடம் கூறியிருந்தான். இவன் தன் அறையிலிருந்தும் அவள் தன் வீட்டுத் திண்ணையிலிருந்தும் வெறும் சைகைகளாலும் கண்களாலும் பேசிக்கொண்டே தம் காதலை வளர்த்துக்கொண்ட விதத்தை, ’ராஜா, அவர்ஸ் இஸ் அ ப்ரிமிடிவ் லவ்’ என்று வசந்த் வேடிக்கையாக வருணித்ததைக் கேட்டபோது பெருமையாக இருந்தது. பொறாமையாகக்கூட இருந்தது.

    வீட்டில் ஆயிரம் எதிர்ப்பு இருந்தும் வசந்தைப் புரிந்துகொண்டு ஊக்குவிக்க ஒரு அண்ணன் இருந்தான்...

    விரல்கள் டைரியின் பக்கங்களை மெல்லத் திருப்ப

    My Early Days
    I was born on Fifth June as people say,
    But I do not at all remember that day!

    Well, the earliest thing I remember---


    கல்லூரியில் படித்த நாட்கள் முதல் அவன் தன் டைரியை விடாமல் எழுதிவந்திருக்கிறான். மற்றவர்களைப் போல் அச்சிட்ட டைரிகளில் அவனுக்கு நம்பிக்கையில்லை. தினசரி நடந்தவற்றை அப்படியே இயந்திர கதியாகக் குறித்து வைப்பதிலும் விருப்பமில்லை.

    முதலில் ’டைரி’ என்ற அந்தப் பதமே ஒரு ’க்ளிஷே’ (cliche)-வாகத் தோன்றியதால் அவன் தன் நாட்குறிப்புகளுக்கு ’ஜர்னல்ஸ்’ என்று பெயர் சூட்டியிருந்தான்.

    அவனைப் பொறுத்தவரையில் ’ஜர்னல்ஸ்’ அவன் சுயசரிதம். சுயசரிதம் என்றால் சாதாரணமாக அல்ல. அது அவனுடைய கதை, கமலா தாஸின் ’மை ஸ்டோரி’ போல. அதில் அவன்தான் கதாநாயகன். காலவோட்டத்தின் பிராவகத்தில் அமிழ்ந்து விடாமல் ரத்தமும் சதையும் தனித்தன்மையுடைய மனமும் கொண்டு விஸ்வரூபம் எடுத்து நிற்கும் கதாநாயகன்.

    பெரும் இரைச்சலுடன்
    பாறைகளின் இடுக்குகளில் பரணி பாடி,
    அருவியாகக் கொட்டி,
    ஆறாக நெளிந்து,
    சமவெளியில் பரந்து,
    மனிதர்கள் அனைவர் வாழ்க்கையையும்
    இரக்கமில்லாமல் அடித்துக்கொண்டு போய்
    முடிவே இல்லாத
    கடலில் சங்கமித்துவிடும்
    காலம் என்னும் ஜீவ நதியில்

    நானூறடி நினைத்து
    நாலடி எதிர் நீச்சலிட்டுத்
    தன் உண்மையான ஸ்வரூபம்
    எனும் சிற்பத்தை,
    வரும் தலைமுறை அறிவதற்காக
    அறிந்து நினைவிற் கொள்வதற்காக
    காலம் தொடாத கரையில்
    விட்டுச் செல்லும் நோக்குடன்
    நடத்தும் போராட்டம்


    அவன் கதையின் ’ப்ளாட்’.

    டொரதி வேர்ட்ஸ்வர்த், மெக்காலே, கீட்ஸ், ஆர்.கே.நாராயண் போன்றவர்களின் நாட்குறிப்புகளையும், கடிதங்களையும் அவன் இப்போதும் பலமுறை விரும்பிப் படிப்பதால் அவர்கள் பாணியிலேயே அவன் தன் ’ஜர்னல்ஸ்’ பக்கங்களை எழுதி, நேர்த்தியாகத் தொகுத்து ’எடிட்’ செய்து ஒரு சுவையான நாவல் போலாக்கி, சிவப்பு லெதரில் அழகாக ’பைன்ட்’ செய்துவைத்திருக்கிறான்.

    மனம் வெறுமையாகி, விரக்தியாகி, அல்லது தளர்ச்சி அடைந்து, ஒன்றுமே நினைக்கப் பிடிக்காமல், சாப்பிடப் பிடிக்காமல், தூங்கப் பிடிக்காமல், நண்பர்களுடன் வெளியே செல்லப் பிடிக்காமல், புத்தகம் படிக்கப் பிடிக்காமல், இப்போது இருப்பதுபோல் இருக்கும் சமயங்களில் அவனுக்கு உற்ற துணைவன் அவன் ’ஜர்னல்ஸ்’.

    அவன்தன் பள்ளிப் பருவத்தைப் பற்றி எழுதியிருந்த முதல் வரிகளில் விழிகள் ஓடியதும், ஏதோ ஒரு ’ஸ்விட்ச் ஆன்’ செய்ததுபோல் வரிகள் ஃபிலிம் சுருள்களாகி மூளையாகிய ப்ரொஜக்டரில் சுழல, வெளியுலகம் மூடப்பட்டு இருளடைந்து அந்த இனிய நாட்கள் வண்ணத் திரைப்படமாக மனத்திரையில் ஓட ஆரம்பிக்க, அவன் அனுவை சந்தித்தான்.

    *** *** ***
     

Share This Page