உறவுகளில் உன்னதம் ! உணர்வுகளின் சங்கமம் ! முதன்முதல் சொந்தம் ! தொப்புள்கொடி பந்தம் ! பிஞ்சொன்று பூவாகிக் காயின்றிக் கனிந்து, மேடிட்ட வயிற்றோடு பெண்ணாக ஒளிர்ந்து, அடைப்பிட்ட வழிதிறந்து புதுஜீவன் முகிழ்க்கும் ! அம்மாவெனும் பட்டம் பரவசத்தில் மகிழ்த்தும் ! உலகத்தில் முதலாக வெளிப்பட்டப் பின்பு, சிறுபிள்ளை இனமெங்கும் கையாளும் மொழியாம், அழுகைக்குப் பலவாறு பொருளுண்டு எனினும், அமுதாகும் அன்னைப்பால் பெறுதற்கே முதன்மை ! உள்ளுக்குள் கருவாகக் குடியிருந்த போதில், ஏதொன்றும் வேண்டாத சிசுவது வெளிவந்து, தன்னுயிர்க் காப்பாற்றி வெளிவிட்டத் தாயை, அன்போடு கேட்கின்ற உரிமைப்பொருள் அதுவே ! ஏதொன்றும் தீமை கலவாத தாய்மை, என்றென்றும் நன்மை பயக்கின்ற பாலை, தன்னூணில் சீராட்டித் தாலாட்டும் மகவின் மண்வாழ்க்கை எந்நாளும் நலமாகத் திகழத், தாய்ப்பாலைத் தருதல் தலையாய கடமை ! பிறந்த நொடியிருந்து மூவிரண்டு திங்கள் வேறெந்த உணவும் குழந்தைக்கு வேண்டாம் ! சிறந்ததொரு உணவை இயற்கையெனும் அன்னை பரிசாகத் தானே பெண்ணுக்குள் வைத்தாள் ! பசியாற்ற மட்டும் பால் புகட்டுவதில்லை ! பிணிபோக்கு மருந்தும் தாய்ப்பாலே அன்றோ ? அமரர்கள் குடித்ததோ ஒரேமுறை அமுதம் ! அம்மாக்கள் தருவதோ தலைமுறைக்கும் அமுதம் ! மாசற்ற சிசுவினை மார்போடு சேர்த்து மாதாக்கள் பாலூட்ட ஈடதற்கு ஏது ? ஆகஸ்ட் 1 முதல் 7- உலகத் தாய்ப்பால் வாரம் Regards, Pavithra
உலகத் தாய்பால் வாரம் வரமாவது சில குழந்தைகளுக்கே ! நல்ல கருத்துள்ள கவிதை. தாய்பால் சிசுவுக்கு மட்டுமல்ல தாய்மார்களுக்கும் சிறந்த பயனளிக்குமே.! உரிமைக்கும் கடமைக்கும் அன்பே பாலம்.
பவித்ரா தாய்ப்பால் அமுதம் .அதன் முக்கியத்துவத்தை மிக அழகாக கவிதையில் சொல்லி விட்டீர்கள் . கணிணி மக்கர் செய்து விட்டது .அதனாலே தாமதமான பின்னூட்டம்
தாமதமானாலும் தாய்மனத்துடன் பின்னூட்டமளித்து இங்கே எழுதும் எங்களை ஊக்குவிக்கும் உங்களுக்கு என் நன்றி,பெரியம்மா ! தாய்ப்பால் அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டிய அமுதமல்லவா ? லக்ஷ்மி சொன்னது போல் அவ்வாறு எல்லோருக்கும் கிடைப்பதும் அரிது தான். என் ஆதங்கப் பதிவே இது.