அவசரமாக ஐயம் தீர்த்துக் கொள்ள விழைந்த பெரியவர் பேச்சின் தீவிரத்தில்.. மிதுனா மறுத்துவிடுவாளோ என்ற பதட்டத்தில் ஆளரவம் கேட்டதையே மறந்து போனார். இருக்கும் குழப்பங்களுக்கு இடையில் மிதுனாவோ ஒரு சத்தத்தையும் கவனிக்கவேயில்லை. அவனை நேசிக்கவில்லை என்று அவள் சொன்னால் கல்யாண பேச்சை விட்டு விடுவதாக தாத்தா சொல்லியும், நேசிக்கவில்லை என்று சொல்லி இக்கட்டை தவிர்த்து தனக்கு செய்த அநியாயத்திற்கு பிராயசித்தம் செய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் அதை மதியாது 'மனதார நேசிக்கிறேன்' என்று அவள் சொன்னது பக்கா சுயநலமாகப்பட்டது அவனுக்கு. அவள் பதிலில் அவன் அடிபட்ட வேங்கையானான். "பெண்ணா நீ?! சீ! இப்போதும் உன் விருப்பம் ஒன்றே மதி என்று பேச உன்னால் எப்படி முடிகிறது?! நேசிக்கிறாளாம்! மனதார!" "டேய் விஜயா!" தாத்தா தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் குரலை உயர்த்தினார். "நீங்கள் சும்மா இருங்கள்! இந்த கல்யாண பேச்சை நிறுத்த நீங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தும், எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்று தெரிந்தும், அதற்கும் மேலாக இவளை இன்றைய தினத்தில் விஷம் போல வெறுக்கிறேன் என்று தெரிந்தும் என்ன திண்ணக்கம் இருந்தால், தன் சுகம் ஒன்றே குறிக்கோளாய், என்னை நேசிப்பதாக அதுவும் மனதார நேசிப்பதாக வாயார பொய் சொல்வாள்?! என் மனம் பற்றிய அக்கறை கொஞ்சமேனும் இருந்தால் இந்த கல்யாணத்தை நிறுத்த வழி செய்வாளா அதை விட்டு இப்படி ஒரு சதி பின்னுவாளா? இவளை.." என்று மீண்டும் அவளிடம் பாய்ந்தான். "உன்னை நம்ப துடிக்கும் என்னை இன்னும் எத்தனை முறையடி வலிக்க வலிக்க கொள்வாய்?!" அவன் உலுக்கிய உலுக்கில் விதிர்விதிர்த்து போனாள் மிதுனா. "என்னடா பெரிதாய் நம்பினாய்? அவள் தான் அந்த பத்ரி நாயை பற்றி சொன்னாளே .. நீ எதை காதில் போட்டுக் கொண்டாய்?" என்று அவள் சார்பாய் தாத்தா நியாயம் கேட்டார். "நம்பாமலா? என் ஒவ்வொரு அணுவும் இவளை நம்ப துடிப்பதால் தானே அவனை தேடி எங்கெல்லாம் அலைந்தேன். இவள் அடாது பழி போட்ட பத்ரி ஊரில் இறங்கியதும் அடித்த நாட்டுசரக்கு ஒத்துக் கொள்ளாமல் தெரு முனை மருத்துவமனையில் மதியமே அட்மிட் ஆகிவிட்டானாம். விசாரித்து வந்த வேலன் சொன்னான். " என்று கைத்த குரலில் முடித்தான். மிதுனா வாயடைத்து நிற்க, தாத்தா பிரயாசைப்பட்டு வாய் திறக்க, அவரை கையமர்த்தி, "வேலன் பொய் சொல்ல மாட்டான். நம்மிடம் பரம்பரை பரம்பரையாய் வேலை பார்ப்பவன். அப்படியே மருத்துவமனையில் காசு விளையாடி வேலனுக்கு பொய் தகவல் தந்திருந்தாலும், அவ்வளவு ஏன் வேலனே பொய் சாட்சி சொல்லியிருந்தாலும், இப்போது கண்முன்னே நான் கண்ட காட்சி பொய் சொல்லுமா? நீ நேசித்தால் திருமணம். இல்லையென்றால் இந்த பேச்சு வேண்டாம் என்று நீங்கள் சொன்ன பிறகும் இவள் என்னை நேசிக்கிறேன் என்று நீலி கண்ணீர் வடித்தால்.. இதை என்னவென்று சொல்வது? வேலனிடம் பேசி விட்டு இந்த அறையினுள் புகும் வரை கூட ஏதோ பேராசையில்.. நூற்றில் ஒரு வாய்ப்பாக என் மேல் கொண்ட ஆசையில் சூழ்ச்சி செய்தாய் என்றே மன்னிக்கவும் முயன்றேன். ஆனால் இதோ இங்கே செய்த தவறு களைந்து, தப்பு உணர்ந்து திருந்த ஒரு வாய்ப்பிருந்தும்.. என் நன்மை நாடி இந்த திருமணத்தை நிறுத்த விழையாமல் உடும்பு பிடியாக என்னை பற்றிக் கொண்டு உன் சுகம் பேண துணிந்தாயே.. உன்னை எப்படி மன்னிப்பது?" அவளை முடிந்தவரை இகழ்ந்துரைத்து வார்த்தைகளை கடித்து துப்பினான் நளந்தன். கண்ணிழந்தான் பெற்றிழந்தான் போல தன் இழப்பை பன்மடங்காய் உணர்ந்தாள் மிதுனா. தன் பக்கம் நியாயம் இருக்க கூடும் என்று நளந்தன் யோசிக்க முன்வந்ததே பெரிய விஷயம். அவனது யோசனை இப்படி அற்பாயுளில் மடிந்துவிட்டதே! "இல்லை இல்லை.. நான் கல்யாணத்தை மறுத்து தான் பேசினேன்.. உண்மை நளந்தன்.. தாத்தாவை கூட கேட்டுப் பாருங்கள்.. " "மறுபடியும் பொய்யா.. மிதுனா.. நீயா இப்படி?!.. தாத்தாவை கேட்பதா? வேலிக்கு ஓணான் சாட்சியா?" ".. அரைகுறையாக எங்கள் பேச்சை கேட்டு விட்டு.. தப்பு கணக்கு போடுகிறீர்களே.. முழுவதும் கேளாமல் பேச்சின் கடைசி பகுதியை மட்டும் கேட்டு இப்படி சீறினால் எப்படி? 'நான் உங்களை நேசிக்கிறேன். ஆனால் இந்த கல்யாணம் வேண்டாம்' என்று சொல்ல தான் வந்தேன். அதற்குள் நீங்கள் அவசரப்பட்டு.." என்று மன்றாடினாள். கை உயர்த்தி அவளை அடக்கினான் நளந்தன். சொல்லில் வடிக்க இயலா அருவருப்புடன் அவளை நோக்கி, "உன்னை இனி நம்புவது கடினம். இயலாத காரியம். இனியும் என் முன் நின்று என்னை கொலைகாரன் ஆக்காதே. போ இங்கிருந்து" என்று அவன் உறும, தாத்தாவின் மூச்சிரைப்பு பேரிரைப்பானது. பெரிய பெரிய மூச்செடுத்தும் முடியாமல் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரியலானார் பெரியவர். "தாத்தா.." என்று இருவரும் ஒரு குரலில் கூவி, மற்றது மறந்து அவரை தாங்கிப் பிடித்தனர். நளந்தன் தன்னை தாயினும் மேலாக பேணி வளர்த்த தாத்தனை ஒரு குழந்தை போல் தூக்கி கட்டிலில் கிடத்தினான். அவர் மூச்சு விடுவது மேலும் சிரமமாக, அவரை கட்டில் சுவரோடு சாய்த்து உட்கார வைத்தான். மிதுனா கட்டிலில் கிடந்த தலையணையை எடுத்து அவர் முதுகுக்கு முட்டு கொடுத்தாள். கடுமையான 'Wheezing'-ல் மூச்சு உள் சென்று வெளியேறுகையில் தாறுமாறாய் விசிலடித்தது.சட்டென தாத்தாவின் 'Nebuliser' கருவியும் மருந்தும் ஞாபகம் வர மிதுனா கண்ணில் வழிந்த நீரை துடைத்தவாறே அவரின் பெட்டியை எடுத்து வர ஓடினாள்.ஓரளவிற்கு நளந்தனும் அவள் நோக்கம் புரிந்து, "என்ன மருந்து என்று தெரியுமா?" என கேட்டான் கனத்த குரலில். தலையை மட்டும் ஆட்டி சென்ற மிதுனா சுருட்டு குடிக்கும் 'பைப்' போன்ற கருவியையும், 'nebuliser' மெஷினையும், கூடவே சில மருந்து பாட்டில்களும் எடுத்து வந்தாள். அந்த பைப்பை தாத்தாவின் மூக்கருகே வைத்து, அதனுள் மருந்தை ஊற்றி, மெஷினை இயக்க, திரவ மருந்து நிலை மாறி ஆவியாக குழாய் வழியே வந்தது. அதை தாத்தா சுவாசிக்க சுவாசிக்க மூச்சு திணறலுக்கு ஒரு தற்காலிக நிவாரணம் தந்தது. ஒரு கையாலாகாதனத்தொடு முகம் இறுக அவர்களை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் நளந்தன். மருந்து தீரும் தருவாயிலும் தாத்தாவிற்கு மூச்சிரைப்பு முழுதும் நிற்காதது கண்ட நளந்தன் தொண்டையை செருமி, "இன்னும் ஒரு 'vial' தரலாமா? நான் தரட்டுமா?" என்று கை நீட்ட, அவனைப் பாராமலே வெற்று குரலில், "இதுவே அதிக டோஸ்.. சில நிமிடங்களில் மூச்சு கட்டுக்குள் வந்து விடும்" என்றாள். சொன்னபடியே அவரின் மூச்சிரைப்பு மெல்ல அடங்கியது. உணர்ச்சிப் பெருக்கிலும், மருந்தின் வேகத்திலும் அரை மயக்கத்தில் அமிழ்ந்தார் பெரியவர். இடையிடையே சந்தானம், சந்தானம் என்று அவர் அரை குரலில் அனத்த இருவருமே குற்றவுணர்வில் குறுகிக் கிடந்தனர். இலக்கின்றி இருளை வெறித்த மிதுனாவின் மனத்திரையில் நடந்தவை எல்லாம் பிடிவாதமாக பின்னோக்கி ஓடியது. யாரும் வருவதற்குள் அவள் மனதை இளக்கி சம்மதம் வாங்க வேண்டி தாத்தா கேட்ட கேள்வி வரவிருந்த கொஞ்ச நஞ்ச ஒளியையும் முடக்கி அவளைக் காரிருளில் தள்ளிவிட்டதே! அரைகுறையாய் விவாதத்தின் பிற்பகுதியை மட்டும் வைத்து விதண்டாவாதம் செய்கிறானே! மூளை மரத்து கோர்த்திருந்த கைகளையே வெறித்தபடி தன்னுள் மூழ்கி கிடந்த மிதுனாவை நளநதனிடம் உண்டான சிறு அசைவு நடைமுறைக்கு இழுத்து வந்தது. ஒரு நெடுமூச்சுடன் எழுந்த நளந்தன் ஜன்னல் அருகே சென்று வானை வெறித்தான். அவனை பார்வையால் தொடர்ந்தவள் தாத்தாவை ஒரு தரம் திரும்பி பார்த்து விட்டு ஒரு முடிவோடு அவனருகே சென்றாள். ஓசை கேட்டு திரும்பிய நளந்தன் புருவம் சுளித்து "என்ன?" என்று ஒற்றை சொல்லில் வேண்டா வெறுப்பாக வினவினான்.