அன்று தோட்டத்தில் உலவ மனமுமில்லை நேரமுமில்லை. டியூடரிங்கில் ஒரு மாணவனுக்கு 'Integral Calculus' மாதிரித் தேர்வு விடைத் தாள் திருத்தி, அவன் தவறாக விடையளித்த கேள்வி-பதில் பகுதிகளை அவனுக்குத் தெளிவாக விளக்க வேண்டியிருந்தது. இரு தினங்களாக அவள் கண்ணில் படாததை கண்ணுற்ற நளந்தன் அவளறைக்கே அவளைத் தேடி வரும்படியும் ஆனது. கதவைத் தட்டி அவள் குரலுக்குக் காத்திருந்தவன் அவளிடம் பதிலேதும் வராததால் எட்டிப் பார்த்தான். மும்முரமாக கணினியில் அந்த மாணவனின் கடைசி கேள்விக்கான பதிலையும் விளக்கத்தையும் முடித்த மிதுனா அப்போதுதான் நிமிர்ந்தாள். கம்ப்யூட்டரில் அவள் ஏதோ வேலை செய்வதைக் கண்டவன் பட்டவர்த்தனமாக தன் ஆச்சர்யத்தைக் காட்டினான். " கம்ப்யூட்டரில் என்ன செய்கிறாய்? குட்! எடமலைப் புதூரில் கூட கம்ப்யூட்டர் நுழைந்துவிட்டதா? " என்று வியப்பு மேலிட மெய்யான மகிழ்ச்சி காட்டினான். அவன் நல்லவிதமாகத்தான் சொன்னான். ஆனால் அவளுக்குத் தான் ரோஷம் பொங்கிவிட்டது. அன்றும் காரில் செல்கையில், 'எடமலைப் புதூர்' என்றதும் அப்படித்தானே "ஓ!" என்றான்! "எடமலைப் புதூர் ஒன்றும் குக்கிராமம் இல்லை" என்றாள் வெடுக்கென்று. "ஆமாம் ஆமாம்..சொன்னார்கள். ஆனால்..ஆணும் பெண்ணும் கையோடு கை கோர்த்து சென்றால் மட்டும் உடனே கல்யாணம் தானாமே! அப்படியா?! " என்று கண்ணில் இளநகை துலங்க கேலியாகக் கேட்டான் நளந்தன். இதழ்க்கடையில் ஒரு கணம் சிரிப்பு துளிர்த்தாலும், இன்ன பிற எண்ணங்களால் அது மடிந்து மறைந்தது. கை கோர்த்து மட்டுமா அன்று சென்றான்?! அவனும் அந்த செரீனாவும் இடை சேர்த்து, இதழ் சேர்த்து.. மனம் கசங்கிக் கசந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரிந்ததோ?! "ஹேய்..ஈஸி..ஈஸி பேபி" என்று அவள் கன்னத்தை செல்லமாகத் தட்டி, "தாத்தா டின்னருக்கு வரச் சொன்னார். சீக்கிரம் வா" என்று சொல்லிச் சென்றான். ஸ்தம்பித்து நின்றாள் மிதுனா! அந்நியன் தொட்டானே என்று சுருங்காமல், என்ன இவன் என்று வெகுண்டு எழாமல்.. இது என்ன இனம் புரியாத உணர்வு?! ஒரு சுழலில் சிக்கிக் கொண்டது போல, ஒரு மீளாக் கனவில் ஆழ்ந்தது போல.. மின்சாரம் பாய்ந்தது போல..அவன் தொட்ட கன்னம் கதகதத்தது. இதயம் திக்கித் திக்கித் துடித்தது. கன்னத்தை கையில் தாங்கி கொண்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சிலை போல மோனத்தில் ஆழ்ந்த மிதுனா சற்று நேரத்தில் சிரமப்பட்டு தன்னை சுதாரித்துக் கொண்டாள். சரிதான், அநியாய உரிமை எடுத்து அவன் தான் அப்படி கன்னத்தை தட்டினான் என்றால்.. அதற்கு சரியாக தானும் தலை சுற்றிப் போய் விடுவதா?! இருபத்தியொரு வயதில், புத்தி நன்றாக தான் புல் மேய போகிறது. தொடாதீர்கள் என்றோ, குறைந்தபட்சம் அதை தவிர்க்கவோ முயலாமல் வேரோடியது போல நின்றுகொண்டு.. என்ன மடத்தனம். இனி அவனிடமிருந்து ஓரடி தள்ளியே நிற்க வேண்டும். தன்னையே கடிந்து கொண்டாள். நளந்தனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. வெகு சகஜமாக பேசிக் கொண்டு உண்டான். மிதுனா மட்டும் உண்டேன் என்று பேர் பண்ணி எழுந்தாள். நளந்தனின் அருகாமைத் தந்த தாக்கத்தைத் தகர்க்க தனிமை தேவையாய் இருந்தது அவளுக்கு.