அறை வாயிலில் நிழலாடியதை கண்டு தலை திருப்பிய அந்த வளமான குரலுக்கு சொந்தக்காரன், கடுகடுத்த முகத்தோடு நிதானமாக எழுந்து அவளருகே வந்தான். வந்த அந்த இளைஞன் அதே கோபத்தோடே கேட்டான், "யார் நீ? கதவை தட்டி அனுமதி கேட்கும் 'basic manners' கூட தெரியாதா?" அவளுக்கு அவமானமாக இருந்தது. இந்த அறையாக இருக்குமோ என்ற எண்ணத்தில் கதவின் மேல் கையை வைத்து விட்டாள் தான். ஆனால் பாதி சாத்தியிருந்த கதவு அப்படி எளிதாய் திறந்து கொள்ள..உள்ளே இவன் யாருடனோ பேசிக்கொண்டிருப்பான் என்று அவளுக்கு எப்படி தெரியும்? அதற்கு இவ்வளவு கடுமையா? வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம்? அவள் என்ன வேண்டுமென்றா ஒட்டு கேட்டாள்? அல்லது, அப்படி தான் இவர்கள் ரகசியம் பேசினார்களா? ஊருக்கே கேட்கும்படி உரக்க பேசிவிட்டு தன மேல் பாய்ந்தால் எப்படி? அப்படியே சிதம்பர ரகசியம் பேச வேண்டுமென்றால் கதவை தாளிட்டுக்கொண்டு பேச வேண்டியதுதானே? அவளுள்ளும் கோபம் குமுறிக்கொண்டு வர அவனுக்கு சரியாய் பதில் தர வாயெடுக்கையில், அவன் மேலும் கடுகென பொரிந்தான். "Hello?! கேட்டது புரியவில்லையா? தமிழ் தானே?" எரிச்சலும், கிண்டலுமாய் அவன் வினவ, வேகமாய் கைப்பையில் கிடந்த அந்த கடிதத்தை எடுத்தாள் மிதுனா. கணநேரத்தில் முடிவெடுத்து அதுவரை அசைவின்றி அவளை ஒரு சுளித்த பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்த அவனை தவிர்த்து, அவன் 'வேறு ஏதாவது பேச சொன்ன' அந்த தாத்தாவிடம் சென்று நீட்டினாள். அவர்தான் அவள் தேடி வந்த சுந்தரம் தாத்தாவாக இருக்க வேண்டும். இந்த கடுவன் பூனையிடம் அவளுக்கென்ன பேச்சு?! கடிதத்தை மேலெழுந்தவாரியாக படித்துவிட்டு, "வாம்மா, உன்னை ரொம்பவும் எதிர்பார்த்திருந்தேன். பயணத்தில் களைத்திருப்பாய். குளித்து முடித்து, ஏதாவது சாப்பிட்டுவிட்டு வாம்மா. ஆற அமர பேசலாம்.", என்று பாசமாய் கூறினார். "தாத்தா, நான்.." என அவள் ஏதோ கூற வந்ததை தடுத்து, "எல்லாம், அப்புறம் பேசிக்கொள்ளலாம்..இதை உன் வீடாய் நினைத்துக்கொள் அம்மா" என்றார். அவரது உபசரிப்பு உள்ளத்தை தொட, சரி என தலை ஆட்டியவள், அவனை ஒரு வெற்றி பார்வை பார்த்தாள். என்னை கதவை தட்டி விட்டு வரச்சொன்னாயே, இப்போது பார், உன் தாத்தா எனக்கு கொடுத்த உரிமையை என்று அவனுக்கு பதிலடியாகத்தான் அவள் அவனை நோக்கினாள். அவளிடம் கடுமையாக பேசியதற்கு ஒரு வருத்தத்தையோ அல்லது குறைந்த பட்சமாக, அதீத கோபத்தையோ அவனிடம் எதிர்ப்பார்த்தவளுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.ஒரு கூரிய பார்வையை மட்டுமே அவள்பால் செலுத்தியவன், மேற்கொண்டு பேச விருப்பமோ, தெம்போ இல்லாதவர் போல முகம் சோர ஒரு பெருமூச்சு விட்ட தன் தாத்தாவை யோசனையோடு பார்த்தான். அவன் பார்வையை கவனித்த பெரியவர், "முத்துவிடம் சொல்லியிருந்தேன்..இவளுக்கு ஒரு அறையை ஒழித்து வைக்க..அவனிடம்..போகும் போது அவனிடம் சொல்லி விடப்பா.." என்று கோர்வையாக பேச முடியாது களைத்து போய் கண்களை மூடிக்கொண்டார். அவரை தொந்தரவு செய்ய விரும்பாமல், ஒரு கையசைவில் 'வா' என்று சைகை செய்த அவன், பின்னோடு அவள் வருகிறாளா, இல்லையா என்று கூட சட்டை செய்யாது அறையை விட்டு வெளியேறினான். அவனது துரித நடைக்கு ஈடு கொடுக்க அவள் கிட்டத்தட்ட ஓட வேண்டியிருந்தது. மகா அலட்சியம் தான்! 'வா' என்று வாய் திறந்து அழைத்தால், தன் உயரத்தில் ஒரு இன்ச் குறைந்து விடுவானாக்கும். மனதுள் குமுறியவாரே அவனை வேக வேகமாக பின்தொடர்ந்தவள் அவன் சட்டென வெளி வாயிலில் நிற்க, அவன் முதுகின் மீது கிட்டத்தட்ட மோதியே விட்டாள். "Sorry Sir, Sorry..." என அவள் திணற மறுபடியும் அவன் முகத்தில் அதே ஏளனம். வேண்டுமென்றே அவனை இடித்ததாக நினைக்கிறானா? இருக்கும். எடுத்த எடுப்பிலேயே ஒட்டு கேட்டதாக நினைத்தவன் தானே! மனம் சோர்ந்தது மிதுனாவுக்கு. பேசாமல் ஏதாவது ஒரு விடுதியில் கௌரவமாக தங்கி இருக்கலாம். அவன் வந்ததை கவனித்த ஒரு வேலையாள் கையில் இருப்பதை அப்படியே கீழே போட்டுவிட்டு அவர்களை நோக்கி விரைந்து வந்தான்.முகத்தின் கடுமை மறைய, சாதாரண குரலில், "முத்து. இந்த அம்மாவிற்கு கீழே ஏதேனும் ஒரு அறையை ஒழித்து கொடு" என்றவன், அந்த முத்து ஏதோ கேள்வி கேட்க போவதை யூகித்து, "எனக்கு நேரமாகி விட்டது, எதுவானாலும் தாத்தா எழுந்தபின் அவரிடமே கேட்டுக்கொள்" என்று பொறுமையின்றி கைகடிகாரத்தை பார்த்தான். ஒரு அவசரத்தோடே அவள் பக்கம் திரும்பி, " ஏதும் தேவை என்றால் முத்துவை கேள். பெரும்பாலும் தோட்டத்திலோ வெளி வெரண்டாவிலோ தான் இருப்பான்" என்றவன், அதே அவசரதோடே தன் கார் garage-ஐ நோக்கி விரைந்தான். எடுத்த எடுப்பிலேயே ஏக வசனமா என்றிருந்தது அவளுக்கு.