பட்டிழையாய் முதல் நூலும் பிறர் அறியாமல் இறங்கியது. செம்மையிலே அது கலந்ததும் மென்பழுப்பும் கூடியது. மிக விரைவில் அடர்த்தி கூட கரும்போர்வை என ஆகியது. உயிர்கள் பல, அசைவொடுங்க, அமைதி வந்து மூடியது. உறங்காத உயிர்கட்கு ஒரு நற்றுணையாக உறுமீன் எனத் தாரகையும், அக்குளிர்நிலவும், உறுத்தாது வான் வரவும், அவையும் மெதுவாக உறங்கிடவும், நிறைந்ததுவே மற்றோர் இரவதுவும். மூத்த பின்பு நரை கூடி, கிழப்பருவம் எய்தி, இரவதுவும் தான் வெளிறி, தன்னுடலும் வற்றி, முதல் வாளின் செவ்வொளியும் பாய்ந்திடவும் மயங்கி, சென்றதுவே உயிரெல்லாம் எழுந்திடவும், விலகி.