*இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்* சார்வரி வருடமிதில் சந்தோஷம் பொழியட்டும் ஊர் ஊராய்ப் பரவிவரும் கொடுநோய்தான் ஒழியட்டும் இயல்பு நிலை திரும்பட்டும் இனிமையே நிலைக்கட்டும் - மனிதன் இட்டம் போல் சுற்றட்டும் இனிது இனிதெனவே கூவட்டும். முகமூடி மறையட்டும் முகத்திரை அகற்றி அகம் திறந்து நட்பை அளவின்றிப் பகிரட்டும் கட்டி அணைக்கட்டும் கல கலென பேசட்டும் காலமெல்லாம் மறைந்திருந்த காதல் அன்பு வெளிப்படட்டும் முதியோர்கள் நிலையில் இங்கு முன்னேற்றம் தோன்றட்டும் - அவரை மதியார்கள் மாறட்டும்; மனமுவந்து உதவட்டும். மகிழ்ச்சி பெருகட்டும் மனித நேயம் சிறக்கட்டும் மறையுணர்வு வளரட்டும் பொறையுணர்வும் பெருகட்டும் உடல் நலம் சிறக்கட்டும் மன நலமும் மேம்படட்டும் உண்மையான உழைப்பிற்கு ஊதியம் கூடட்டும் தொழில்கள் பெருகட்டும் தொழிலாளி மகிழட்டும் தொய்யாமல் உழைத்து வரும் விவசாயி வளமுறட்டும் நாட்டுக்கா உயிர் கொடுக்கும் நல் வீரரைப் போற்றி - அவர் நலம் நினைந்து வீடு தோறும் வழிபாடு நடக்கட்டும் நானிலம் சிறக்கட்டும் நன்மைகள் விளையட்டும் நல்லோர்கள் வழிகாட்டும் வல்லோராய் விளங்கட்டும் தேசம் செழிக்கட்டும், நேச உணர்வு வளரட்டும் பாசம் எனும் மொழியே பார் முழுதும் வழங்கட்டும். நாடு முன்னேறட்டும் நல்லாட்சி நடக்கட்டும் *நான்* எனும் எண்ணம் போய் *நாம்* என்று ஆகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு. நட்புகள், சுற்றங்கள், உற்றார் உறவினர், உள்ளத்தால் இணைந்திருப்போர், இணையாது பிரிந்திருப்போர் மற்றும் இதைப் படிக்கும் அனைவருக்கும் மன நிறைவோடு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக் கூறும் அன்பன், ராஜகோபாலன் 14/04/2020 (பி. கு) வரிக்கு வரி ‘டும் டும்’ புத்தாண்டை மேளதாளத்துடன் வரவேற்க!