டெல்லி - 2001, டிசம்பர். இந்திய நாடாளுமன்றத்தின் இறுக்கமான பாதுகாப்புக் கெடுபிடிகளையும் மீறி உள்ளே ஊடுருவிய தீவிரவாதிகளின் துப்பாக்கிகள் தடதடத்தன. நாட்டின் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என உயர்மட்ட அரசியல் வி.ஐ.பி-க்கள் இருந்த சமயம் அரங்கேறியது இந்த அசம்பாவிதம். 'இவ்வளவு துணிச்சலுடன் செயல்பட்டது யார்?' என்ற கேள்விகளுக்கு விடை தேடிப் புறப்பட்டது சிறப்பு அதிரடிப் படை. அடுத்த 48 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்தது. அந்த எக்ஸ்பிரஸ் வேகத்துக்குக் காரணம், அந்தப் படையில் இடம்பெற்று இருந்த இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் ஷர்மா! திருநெல்வேலி - 2005, டிசம்பர். நாடாளுமன்றத்துக்கும் டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் வெடிகுண்டு இ-மெயில் மிரட்டல். அலறித் துடித்தது டெல்லி. பொறுமையாக இ-மெயிலை ஆராய்ந்த மோகன் சந்த் ஷர்மா உடனடியாக திருநெல்வேலிக்குக் கிளம்பினார். அங்கிருந்த ஒரு பிரவுசிங் சென்டரில் இருந்துதான் அந்த இ-மெயில் அனுப்பப்பட்டு இருந்தது. ஒரு துளி விவரத்தையும் மிச்சம்வைக்கா மல் சேகரித்த ஷர்மா, 'உடனடியாக எந்த ஆபத்தும் இல்லை!' என்று தகவல் அனுப்பிய பிறகுதான் ரிலாக்ஸ் ஆனது டெல்லி. டெல்லி - 2008, செப்டம்பர். தலைநகரின் தொடர் குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான தீவிரவாதிகள் ஜமியா நகரில் தங்கி இருப்பதாகத் தகவல். விடுமுறையில் இருந்த ஷர்மா உடனடியாக துப்பாக்கியுடன் கிளம்பினார். சந்தேகத்துக்கு இடமான வீட்டுக்குள் புல்லட் புரூஃப் ஜாக்கெட்கூட அணியாமல் நுழைந்த ஷர்மாவை வரவேற்றன மூன்று புல்லட்டுகள். துப்பாக்கித் தோட்டாக்கள் தன்னைத் துளைத்ததை நம்ப முடியாத ஷர்மா, உடனடியாக உணர்விழந்தார். மீண்டும் அந்த இன்ஸ்பெக்டர் கண் விழிக்கவே இல்லை! எது முடியாதோ அதை முடிப்பதும், எது ஆபத்தானதோ அதை ஏற்றுக்கொள்வதும் ஷர்மாவின் ஸ்டைல். ஜனாதிபதி விருது உள்பட 7 மதிப்பான விருதுகள், 150-க்கும் மேற்பட்ட காவல் துறையின் சிறப்புப் பரிசுகள் பற்றியெல்லாம் மூச்சுக் காட்டாத ஷர்மா, 35 தீவிரவாதிகளையும் 40-க்கும் மேற்பட்ட ரவுடிகளையும் என்கவுண்ட்டரில் காலி செய்ததைத்தான் தனது அடையாமாக பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புவார். சப்-இன்ஸ்பெக்டராகப் பணியில் சேர்ந்த ஷர்மா, இன்ஸ்பெக்டரான சமயம், டெல்லியில் தொடர் குண்டுவெடிப்புகள். தீவிரவாதிகளை அதிரடியாகக் கட்டுப்படுத்த, சிறப்பு அதிரடிப் படை அமைக்கத் திட்டமிட்டனர். 'எனக்கு அந்தப் படையில் ஓர் இடம் வேண்டும்!' என்று துணிச்சலாக முதலில் பெயர் கொடுத்தவர் மோகன் சந்த் ஷர்மா. அந்தப் படையின் துணை கமிஷனராக இருந்த ராஜ்பீர் சிங்கோடு இணைந்து ஷர்மா மேற் கொண்ட ஒவ்வொரு ஆபரேஷனிலும் கொத்துக் கொத்தாக வீழ்ந்தனர் தீவிரவாதிகள். இவர்கள் இருவருக்கும் தெரியாமல் குற்றங்களுக்குத் திட்டமிடுவதே தீவிரவாதிகளுக்குத் திண்டாட்டமாகிப் போனது. அச்சுறுத்தும் நபர்களைத்தான் இவர்கள் அப்புறப்படுத்தினார்கள் என்பதால் விமர்சனங்களே இல்லை. ஆனால், தனிப்பட்ட மோதலில் ராஜ்பீர் சிங் சில மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். அதிர்ந்தது டெல்லி போலீஸ். இனி ஷர்மாவும் இல்லை. இரட்டை இழப்பால் இடிந்து கிடக்கிறார்கள் டெல்லி போலீஸார். ஒருவரின் முகத்தைப் பார்த்தே அவர் எந்த நாட்டவர் என்று கண்டுபிடிப்பதில் ஷர்மா கில்லாடி. உலகத்தில் உள்ள அத்தனை தீவிரவாத இயக்கங்களின் வரலாறும் அவருக்குத் தெரியும். டெலிபோனில் எந்த சங்கேத அலைவரிசையில் உரையாடினாலும் கண்டுபிடித்துவிடுவார். டெல்லி குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டறிய 1,221 டெலிபோன் அழைப்புகளைப் பதிவு செய்திருந்தனர். அவற்றை அலசி ஆராய்ந்து தீவிரவாதிகள் ஜமியா நகர் பகுதியில் தங்கியிருப்பதை துப்புத் துலக்கியது மோகன் சந்த் ஷர்மாதான். ஏழு மொழிகளும் அவற்றில் பேசப்படும் சங்கேத பாஷைகளும் ஷர்மாவுக்கு அத்துப்படி. இன்னும் பல டெக்னிக்கலான விஷயங்களில் ஷர்மா அப்டேட். கம்ப்யூட்டரின் ஐ.பி. எண்களை வைத்து அவற்றின் ஜாதகத்தை அட்சரசுத்தமாகக் கூறிவிடுவார். இந்த எல்லா தகுதிகளையும்விட பயம் என்றால் என்னஎன்றே அறியாத குணம்தான் ஷர்மாவின் ஸ்பெஷல். ஒரு வகையில் அதுதான் அவரது மறைவுக்கும் காரணமாகிப் போனது. அவரது அபார துணிச்சல்தான் புல்லட் புரூஃபைத் தவிர்க்கவைத்தது. மனைவி மாயா. ஒரு மகன். ஒரு மகள் என இரு குழந்தைகள். 8-ம் வகுப்பு படிக்கும் மகன் தேவியான்சூ டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்ததால் விடுப்பில் இருந்தார் ஷர்மா. ஆனால், தொடர் குண்டுவெடிப்புகள் யாரும் கேட்காமலேயே அவரை விடுமுறையை கேன்சல் செய்ய வைத்துவிட்டது. என்கவுன்ட்டர் தவிர, ஷர்மாவுக்குப் பிடித்த இன்னொரு விஷயம் கணக்குப் பாடங்கள். ''எனக்கு மேத்ஸ் சொல்லிக் கொடுக்குறதுன்னா அப்பாவுக்கு ரொம்ப இஷ்டம். இந்த மாச எக்ஸாமுக்கு அவரே எனக்கு எல்லா கணக்கும் சொல்லித் தரேன்னு சொன்னார். இனி யாரு எனக்கு சொல்லிக் கொடுப்பாங்க?'' என்று மருத்துவமனை படுக்கையில் மருகிக் கொண்டு இருக்கிறான் தேவியான்சூ தீவிரவாதிகளின் கணக்கை இனி யார் தீர்ப்பது என்ற கவலையில் இருக்கிறது, உள்துறை அமைச்சகமும் டெல்லி காவல் துறையும்!