செப்டம்பர் 11 அமெரிக்க வரலாற்றில் மறக்கமுடியாத நாள். நான் சொல்வது செப்டம்பர் 11, 1893. அந்த நாளில்தான் இந்தியாவிலிருந்து சென்ற முன்பின் தெரியாத துறவியொருவர் சுமார் ஏழாயிரம் பேராசிரியர்களும், சிந்தனையாளர்களும், மதகுருமார்களும், தத்துவவாதிகளும், பெருந்தனவந்தரும் நிறைந்த உலகச் சமயப் பெருமன்றத்தில் எழுந்து நின்று ”அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே!” என்று தொடங்கிய அழைப்பிலேயே உலகத்தின் கவனத்தைக் கவர்ந்தார். காவி அங்கியும், காவித் தலைப்பாகையும், இடுப்பில் அங்கியின்மேல் வரிந்து கட்டிய மஞ்சள் துண்டுமாக, மேலைநாட்டவரின் கண்களில் வினோதப் பிராணியாகக் காட்சியளித்த அவரது மதுரமான குரலில் வெளிப்பட்ட முதல் 5 ஆங்கில வார்த்தைகளுக்குத் தொடங்கிய கையொலி அடங்க முழுதாக இரண்டு நிமிடங்களுக்கு மேலானது. இதைப் பற்றிப் பின்னாளில் நினைவுகூர்ந்த திருமதி பிளாட்ஜட் சொன்னார்: “அந்த இளைஞன் எழுந்து நின்று அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே என்றதும், 7000 பேர் தாமறியாத ஏதோ ஒன்றுக்கு அஞ்சலியாக எழுந்து நின்றனர்.” ஒரு தலைமுறை முந்தைய பொதுவுடைமையாளர்கள் சுவாமி விவேகானந்தரை ‘வீரத்துறவி’ என்று புகழ்ந்து பேசுவர், எழுதுவர். “சூறாவளித் துறவி” (The cyclonic saint) என அமெரிக்கத் தாளிகைகள் அவனை வர்ணித்து மகிழ்ந்தன. அடிமைப்பட்டுத் தன்னம்பிக்கை இழந்து கிடந்த பாரதத்தின் முதுகெலும்பில் மின்னற் சாரமேற்றி நிமிர்ந்து நிற்கவைத்த தீரன் அவன். அவனுடைய வாழ்க்கை அவனுடைய தோற்றத்தைப் போலவே வசீகரமானது. அவனுடைய சொற்கள் அவனுடைய கண்களைப் போன்றே ஒளிவீசுவன. அவனுடைய அறிவு அவனுடைய தோள்களைப் போல விசாலமானது. அவனுடைய சிந்தனை அவனுடைய பார்வையைப் போன்றே ஆழமானது. அவன் ஆன்மீகச் சிங்கம். அந்த அதிசயிக்கத்தக்க மகானின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை இங்கே பார்க்கலாம். அவை நம் வாழ்க்கைக்குப் பொருளூட்டி, நெஞ்சுக்கு உரமூட்டுவன. ‘திமிர்ந்த ஞானச் செறுக்கு’ என்ற வாக்குக்கு இலக்கணமாய் நிற்பன. மனித சிந்தனைப் போக்கையே மாற்றவும் வல்லன. மேலே படியுங்கள்…. —- 1. துயருற்றோருக்குத் தோள் தருவான் “நான் ஒரு துறவி. எனக்கு வேண்டியது ஒன்றுதான். விதவையின் கண்ணீரைத் துடைக்காத, அநாதையின் பசியைப் போக்காத மதத்தையோ, கடவுளையோ என்னால் நம்ப முடியாது… எதை உனது மதம் என்று பெருமிதத்தோடு சொல்கிறாயோ அதை நடைமுறைக்குக் கொண்டுவா, முன்னேறு. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்!” –விவேகானந்தர், சென்னை அழகியசிங்கருக்கு எழுதிய கடிதம் (அக் 27, 1894) <>oOo<> நரேந்திரநாத தத்தாவின் (விவேகானந்தருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் அதுதான்) சிறுவயதிலிருந்து தொடங்கி காலவரிசைப்படி வரலாற்றைச் சொல்வது இந்தத் தொடரின் நோக்கமல்ல. அவர் வாழ்க்கையே சுடர் விடுவதுதான் என்றாலும் அதிலும் தெரிந்தெடுத்த சில வைரங்களை உங்கள் முன் இட்டு, முன்பு இவரை அறியாதவருக்கு (முழுவதும் அறிவதற்கு முயலும்) விவேகமும், அறிந்தவருக்கு ஆனந்தமும் ஊட்டுவது நோக்கம். ஆனால் இவர் ஒருநாள் உலகுபோற்றும் மகான் ஆவார் என்பதற்கான அடையாளங்கள் நரேந்திரனாய் இருந்த போதே தெரிந்தன. முளையிலே தெரிந்த குறிகளில் ஓரிரண்டைப் பார்ப்போம். அவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம். அந்நாட்களில் அந்தக் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை அல்லது கட்டணத் தள்ளுபடி கொடுப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு செய்யுமுன் அந்த மாணவர் தன் ஏழைமையை நிரூபிக்க வேண்டும். அத்தகைய விஷயங்களில் தீர்மானம் எடுப்பது ராஜ்குமார் என்ற முதுநிலை ஊழியரின் கையில் இருந்தது. பரீட்சை வந்துவிட்டது. நரேந்திரனின் வகுப்புத் தோழனான ஹரிதாஸ் சட்டோபாத்யாயா பெரும் பணநெருக்கடியில் இருந்தான். அதுவரை சுமந்துபோன கட்டணங்களையோ, தேர்வுக் கட்டணத்தையோ செலுத்த முடியாத நிலை. என்ன செய்யமுடியும் என்று பார்க்கிறேன் என்பதாக நரேந்திரன் நண்பனுக்குச் சொல்லியிருந்தான். ஓரிரண்டு நாட்களுக்குப் பின் ராஜ்குமாரின் அலுவலக அறையில் ஒரே மாணவர் கூட்டம். அதில் நுழைந்து நரேந்திரன் சென்றான். “ஐயா, ஹரிதாஸால் கட்டணங்களைச் செலுத்த இயலாது. அவற்றுக்குத் தள்ளுபடி கொடுப்பீர்களா? அவன் பரீட்சை எழுதாவிட்டால் வாழ்க்கையே பாழாகிவிடும்.” “உன்னுடைய அதிகப்பிரசங்கித்தனமான பரிந்துரையை யாரும் கேட்கவில்லை. நீ போய் உன் துருத்தியை ஊது. கட்டணம் செலுத்தாவிட்டால் பரீட்சைக்கு அனுப்பமுடியாது” என்றார் ராஜ்குமார். நரேந்திரன் அங்கிருந்து அகன்றான். நண்பருக்குப் பெருத்த ஏமாற்றம். “கிழவர் அப்படித்தான் பேசுவார். நீ தைரியம் இழக்காதே. நான் ஏதாவது வழி கண்டுபிடிக்கிறேன்” என்றான் நரேந்திரன். மாலை கல்லூரி முடிந்தது. நரேந்திரன் வீட்டுக்குப் போகவில்லை. கஞ்சா பிடிப்பவர்களின் கூடாரம் ஒன்று இருந்தது. இருள் கவியும் வேளையில் ராஜ்குமார் அங்கே வருவது தெரிந்தது. திடீரென்று அவர்முன்னே போய் வழிமறைத்து நின்றான் நரேந்திரன். அந்த நேரத்தில் அங்கே நரேனை எதிர்பார்க்காவிட்டாலும் ராஜ்குமார் அமைதியாகக் கேட்டார் “என்ன விஷயம், தத்தா? நீ இங்கே!” என்றார். மறுபடியும் பொறுமையாக ஹரிதாஸின் நிலைமையைச் சொன்னான் நரேன். அதுமட்டுமல்ல, இந்த வேண்டுகோள் மறுக்கப் பட்டால் கஞ்சாக் கூடாரத்திற்கு ராஜ்குமார் வருவது கல்லூரியில் விளம்பரமாகும் எனவும் தெளிவுபடுத்தினான். “எதுக்கப்பா இப்படிக் கோபிக்கிறாய்? செய்துவிடுவோம். நீ சொல்லி நான் மறுக்கமுடியுமா” என்றார் முதியவர். பழைய கட்டணத்தைக் கல்லூரியே கொடுக்கும், தேர்வுக்கானதை மட்டும் ஹரிதாஸ் செலுத்தவேண்டும் என்று முடிவாயிற்று. நரேன் அவரிடமிருந்து விடை பெற்றான். காலம் அறிந்து,ஆங்கு இடமறிந்து செய்வினையின் மூலம் அறிந்து விளைவு அறிந்து - மேலும் தாம் சூழ்வன சூழ்ந்து துணைமைவலி தெரிந்து ஆள்வினை ஆளப் படும் --
செயல்முறை தேசபக்தி என்பது வெறும் உணர்ச்சியோ, தாய்நாட்டின் மீது ஏற்படும் காதல் உணர்வோ அல்ல. மாறாக, சக தேசத்தவர்களுக்குச் சேவை செய்வதற்கான வெறி. நான் இந்தியா முழுதும் நடந்தே சுற்றியிருக்கிறேன். மக்களின் அறியாமை, துயரம், வறுமை இவற்றை என்னிரு கண்களால் பார்த்திருக்கிறேன். என் ஆன்மா பற்றி எரிகிறது. இந்தக் கொடிய நிலையை மாற்றும் பேராசை என்னை எரிக்கிறது. —விவேகானந்தர், திருவனந்தபுரத்தில் ஓர் உரையாடலில் (1892). இதுவும் நரேனின் பள்ளிப்பருவத்தில் நடந்ததுதான். அவருக்குத் தியானம் செய்வதுபோல் விளையாடுவதில் மிகவும் விருப்பம். உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டுவிடுவார். விளையாட்டுத்தான் என்றாலும் இது அவருக்குள் ஆழ்ந்த ஆன்ம உணர்வுகளை ஏற்படுத்தியது. அப்படியே நெடுநேரம் சிலைபோல அமர்ந்திருப்பான். சில சமயம் அவரைப் பிடித்து உலுக்கித்தான் இயல்பு நிலைக்குக் கொணரவேண்டி இருக்கும். சில சமயம் உலுக்கினாலும் விழிக்க மாட்டான். மற்றச் சிறுவர்களும் இதை விளையாட்டாய் நினைத்து நரேனைப் போலவே கண்ணை மூடி உட்கார்ந்து கொள்வதும் உண்டு. ஒரு மாலை நேரம். பிள்ளை நிலா வானில் ஏறிக்கொண்டு இருந்தது. பூஜை மண்டபத்தில் நரேனும் சில சிறுவர்களும் தியான ‘விளையாட்டில்’ இருந்தனர். சிறிது கண்விழித்த ஒரு பையன் கல் பாவிய தரையில் ஒரு பெரிய நாகம் நெளிந்துவருவதைப் பார்த்தான். ஒரே அலறல், எல்லோரும் துள்ளி எழுந்தனர். ஆனால் நரேனுக்குத் தியானம் கலையவில்லை. மற்றவர்களும் சேர்ந்து கூக்குரல் இட்டனர், பயனில்லை. ஓடிப்போய் நரேனின் பெற்றோரிடம் சொல்ல அவர்களும் அங்கு விரைந்தனர். பாம்பு நரேனின் முன்னே படத்தை விரித்து நின்றது அவர்களுக்கு ஓர் அச்சம் கலந்த வியப்பான காட்சி. ஆனால் குரலெழுப்பினால் பாம்பு துணுக்குற்று நரேனைக் கொத்துமோ என்ற பயம். என்ன நினைத்ததோ, தலையைக் கீழே இறக்கிய நாகராஜன் ஏதும் நடவாததுபோல வெளியேறினான். எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. பாம்பைப் பார்த்தால் ஓடிப்போயிருக்க வேண்டாமா என்று கேட்ட பெற்றோருக்கு நரேனின் பதில் “எனக்குப் பாம்போ வேறெதுவுமோ தெரியவில்லை. சொல்லமுடியாத ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தேன் நான்.” ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க் கச்ச முண்டோ டா? - மனமே! தேன்மடை யிங்கு திறந்தது கண்டு தேக்கித் திரிவமடா! (பாரதி, ‘தெளிவு’) --
"சத்தியம் என்பது, மேதகு மன்னரே, தன்னொப்பில்லாத தனி ஒன்றாகும். மனிதன் ஒரு சத்தியத்திலிருந்து மற்றொன்றுக்குப் பயணம் செய்தபடி இருக்கிறான், ஒரு பிழையிலிருந்து சத்தியத்தை நோக்கி அல்ல” –விவேகானந்தர், கேத்திரி மகாராஜா அஜீத்சிங் ‘சத்தியம் என்றால் என்ன?’ என்று கேட்டபோது. நரேனின் சமயோசிதம் இருந்தபோதே நரேன் விடுமுறை நாட்களில் மற்ற தோழர்களை எங்காவது அழைத்துச் செல்வது வழக்கம். இப்படித்தான் ஒரு நாள் ‘நவாப் மிருகக் காட்சி சாலை’க்குப் புறப்பட்டது வாண்டுகள் பட்டாளம். கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியில் இருந்த அதற்குப் போக ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. மாலையில் திரும்பி வரும்போது படகின் ஆட்டமோ, மதிய உணவின் வேலையோ தெரியவில்லை ஒரு பையனுக்கு வாந்தி எடுக்கத் தொடங்கியது. படகோட்டி கோபமடைந்தார். “வாந்தி எடுத்ததை நீங்கள்தான் சுத்தம் செய்யவேண்டும்” என்று வற்புறுத்தினார். “இல்லையென்றால் இரண்டு பங்கு கூலி கொடு” என்று மிரட்டினார். செய்ய மறுத்தனர் சிறுவர். கரை வந்தது. பிள்ளைகளை இறங்கவிடாமல் தடுத்ததோடு மிரட்டவும் செய்தார் படகோட்டி. இது நடந்துகொண்டிருக்கும்போதே திடீரென்று தண்ணீரில் குதித்துக் கரைக்கு நீந்தினான் நரேன். கரையில் இரண்டு வெள்ளைக்காரச் சிப்பாய்கள் இருந்தனர். தன்னுடைய ஓட்டை ஆங்கிலத்தில் அவர்களுக்கு நடந்ததை விவரிக்க அவர்கள் புரிந்துகொண்டனர். தனது சிறிய கையால் அவர்களது கையைப் பிடித்து இழுத்து வந்தான் நரேன். படகோட்டியைப் பார்த்துச் சிறுவர்களை உடனடியாக விடுவிக்கச் சொல்லினர் சிப்பாய்கள். சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார் துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டில் ஒளிப்பார் என்று பாரதி வர்ணித்தது நினைவிருக்கலாம். ஆகவே சிப்பாய்களைக் கண்டதும் நடுங்கினார் படகோட்டி. பறந்தனர் சிறுவர்கள். நரேனைப் பிடித்துவிட்டது சிப்பாய்களுக்கு. தாம் ஒரு நாடக அரங்குக்குச் செல்வதாகவும் உடன் வரலாம் என்று சொல்லி அழைத்தனர். அவர்களது உதவிக்கும் அழைப்புக்கும் நன்றி கூறி நண்பர்களோடு சென்றான் நரேன். நரேனின் சமயோசித புத்தி, அஞ்சாமை இவற்றோடு அவனுடைய நீச்சல் திறமையும் அவனுக்குக் கைகொடுத்தது இந்த நேரத்தில். ஒரு கண்காட்சியில் மல்யுத்தம் செய்து முதல்பரிசு வாங்கியதுண்டு. அவனுக்குச் சிலம்பம், கத்திச் சண்டை, படகு விடுதல், இசை, சமையல், கவிதை எழுதுதல் என்ற பலவற்றிலும் தேர்ச்சி இருந்தது. நரேன் ஒரு சாதாரணப் பிறவியல்ல என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறினார். சந்தேகமுண்டா? --
இஸ்லாமியர், கிறிஸ்தவர், சமணர், பவுத்தர் ஆகியோர் தம் வீட்டு மக்கள் இறைப்பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவர். அதைத் தம் பேறெனக் கருதுவர். சாதாரணமாக வேலையற்ற வீணர்கள், சோம்பேறிகள், எத்தர்கள், குடும்ப பாரத்தைச் சுமக்க அஞ்சுகிறவர்கள், குறுக்கு வழியில் சம்பாதிக்க விரும்புகிறவர்கள் ஆகியோரே சன்னியாசம் வாங்கிக்கொள்வதாக இக்கால இந்துக்களிடையே ஒரு தவறான நம்பிக்கை நிலவுகிறது. காரணம், ஆன்மீகத் தேடல் குறித்த சரியான அறிவின்மை. ஆனால், பொய்வேடமிட்டோர்எந்நாட்டிலும் எம்மதத்திலும் எக்காலத்திலும் இருந்திருக்கின்றனர். பாரதி தன் பாஞ்சாலி சபதத்தில் அத்தினபுரத்தில் யார்யார் இருந்தனர் எனச் சொல்லும்போது: மெய்த்தவர் பலருண்டாம் - வெறும் வேடங்கள் பூண்டவர் பலருமுண்டாம் உய்த்திடு சிவஞானம் - கனிந் தோர்ந்திடும் மேலவர் பலருண்டாம் பொய்த்த இந்திர சாலம் - நிகர் பூசையும் கிரியையும் புலைநடையும் கைத்திடு பொய்ம்மொழியும் - கொண்டு கண்மயக்காற் பிழைப்போர் பலராம். என்று சொல்லவில்லையா? நரேந்திரன் எப்படிப்பட்டவன்? அப்படி எதற்கும் உதவாத சாவியா (தானிய உள்ளீடற்ற நெல், பதர்)? அவன் மரத்திலே ஏறியபோது பிரம்மராட்சசன் இருப்பதாக அச்சுறுத்திய பெரியவரைப் பார்த்தோமே. அங்கே இன்னும் கொஞ்சம் பார்க்கலாம். அவருக்கு நரேனின் மேல் மிகுந்த அன்பு இருந்தது. மரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த நரேனிடம் அவர் மீண்டும் பேசினார். அவர் கேட்டார் “இப்படியே வீடு வீடாக மரத்தில் தொங்கிக் கொண்டுதான் இருப்பாயா? இல்லை, படிக்கவும் செய்வாயா?” “ஐயா, நான் படிக்கவும் செய்வேன், விளையாடவும் விளையாடுவேன்” என்றான் நரேன். உடனே அவனைச் சோதித்தார் கிழவர். புவியியல், கணிதம் இவற்றில் கேள்வி கேட்டார். கவிதைகள் ஒப்பிக்கச் சொன்னார். இந்தக் கடினமான தேர்வில் சிறப்பாகத் தேறினான் நரேன். கிழவர் அவனை ஆசீர்வதித்து “உன்னை நெறிப்படுத்த யார் இருக்கிறார்கள் என் மகனே? உன் தந்தை லாஹோரில் அல்லவா இருக்கிறார்?” என்றார். நரேனின் தந்தை விஸ்வநாத தத்தா பிரபல வழக்குரைஞர். பல ஊர்களில் அவருக்கு அலுவலகங்கள் இருந்தன. “தினமும் காலையில் நான் படிக்கும்போது என் தாயார் உதவுகிறார்கள்” என்று சொன்னான். மிகவும் மகிழ்ந்த பெரியவர் “நீ மனிதர்களுக்குள்ளே மகா மனிதன் ஆவாய். நான் உன்னை ஆசிர்வதிக்கிறேன்” என்று முன்னுணர்ந்து சொன்னார். ஆங்கிலம், வரலாறு, வடமொழி ஆகியவற்றில் சிறப்பாகத் தேறிய நரேனுக்கு கணிதத்தில் ஆர்வம் குறைவு. அதை “மளிகைக் கடைக்காரன் கலை” என்று கேலி செய்வாராம். இசையில் மிகுந்த பாண்டித்தியமும், அனைவரையும் கட்டிப்போடும் குரலும் நரேனுக்கு இருந்தன. மற்றவரைப் போல அப்படியே பேசிக்காட்டுவான். நடிப்பான், பாடுவான். இவ்வளவு திறமைகளைப் பெற்றிருந்த நரேன் இருக்கும் இடம் எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும். நரேனின் கல்லூரி நாளில் முதல்வர் வில்லியம் ஹேஸ்டி சொன்னார்: “நரேந்திரன் ஒரு மேதை. நான் உலகத்தின் குறுக்கும் நெடுக்கும் எவ்வளவோ பயணம் செய்திருக்கிறேன். ஜெர்மானியப் பல்கலைக் கழகங்களிலாகட்டும், தத்துவவியல் மாணவர்களிடையே ஆகட்டும், இதுவரை அவனைப் போலத் திறமையும் எதிர்காலமும் உள்ள ஒரு இளைஞனைப் பார்க்கவில்லை. வாழ்வில் ஒரு பெருநிலையை அவன் அடைவான்!” இவன் கையாலாகாததால் உலகைத் துறந்தவனல்ல. சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு (திருக்குறள், நீத்தார் பெருமை, 27) --