கவிழ்கப்பரையாய் ஒழிந்திருக்கிறாய் சிலநாள். பஞ்சுப்பொதி பல விரவிக் கிடப்பதும் உண்டு. சூல் கொண்டதாலோ மேனி கறுத்திருப்பாய் அரிதாய். செவ்வேள் போல் சிவந்து கண் அகலாதிருந்ததுண்டு. இந்திரனாய் உடலெங்கும் கண்கள் கொண்டிருப்பாய் நீ. சந்திரனின் சோதரனால் உடல் வெளிறி நிற்பாய். எந்திரங்கள் செய்தோம் உனைக் கடந்திட, ஆனால் நீ மந்திரமும் தெரிந்தவனோ? அந்தரத்தில் நிற்பாய்! சுந்தரனார் தலையில் ஓர் சிற்றணியாய்த் திகழ்ந்து, கண்டிடுமோ கண்களென பரிதவித்து நின்று காத்திருப்போரில் சிலரே பிறையதனைக் கண்டு களித்திடவே, நீ மறைப்பாய் கள்ளமிகக் கொண்டு! ஒரு விலங்கா? இரண்டா? பலநூறும், பின் மேலும், எமைப் பிணைக்க, அதனால் யாம் மண் மீதே உழலும் புழுவெனவே தவிக்க, நீ அங்கிருந்தே யாவும் அறிந்தவனாய் புன்னகைத்தால் எம் நிலை என்னாகும்?