மிகநல்ல வீணை தடவி நாம் ஏதோ ஒரு நல்ல காரியத்திற்காக வெளியூருக்கு புறப்பட்டால் வீட்டில் இருப்பவர்கள் நாள் , நேரம் பார்ப்பார்கள். அது வழக்கம். சரியாக மகனது இன்டர்வியூ அன்று அஷ்டமி ...மேலும் அவன் ராசிக்கு அன்று சந்திராஷ்டமம் வேறு..என்று வைத்துக் கொள்வோம்...அதற்கு பரிகாரம் என்ன எனக் கேட்கக் கிளம்பி விடுவார்கள். அவன் பெற்றோர்கள் ....ஜோஸ்யத்தில் நம்பிக்கை உள்ளவர்களாய் இருந்தால்.....பரிகாரம் கிழே விதித்துள்ள நிகழ்வில் உள்ளது. வீணைக்கு மற்ற இசைக்கருவிகளுக்கு இல்லாத சில தனிச் சிறப்புகள் உண்டு. அது, தார ஸ்தாயியிலும் மந்தர ஸ்தாயியிலும் இனிதாக இசைப்பது. வீணையை மீட்டி நிறுத்தி விட்டால், அதன் இன்னொலி உடனே நின்றுவிடுவதில்லை. அதன் ஒலி அலைகள் பின்னும் நீண்டு ஒலித்து மெல்லிய அலைகளைப் போல அடுத்தடுத்துப் பரவி நிற்கும். மற்ற வாத்தியங்களில் அப்படியல்ல; வாத்தியத்திலிருந்து கையை எடுத்தவுடன் ஒலியும் நின்றுவிடும். பிடிலில் வில்லை எடுத்துவிட்டால் உடனே ஒலி நிற்பதை அறியலாம். வீணை அத்தகையதல்ல. வீணையை சிவ பெரு மானே உருவாக்கினார். அதனால்தான் அதற்கு ருத்திர வீணை என்றும் பெயர். அது மட்டுமல்ல; வீணையில் 7 நரம்புகள் உள்ளன. அவை சப்த கிரகங்களை குறிப்பவை. வீணை ஒரு பக்கம் அகன்றும், இன்னொரு பக்கம் சிறுத்தும் இருக்கும். அகன்ற பாகம் ராகுவை குறிக்கும், சிறுத்த பாகம் கேதுவை குறிக்கும் . வீணையில் 4 பெரிய நரம்புகளும், 3 சிறிய நரம்புகளும் இருக்கும். 4 பெரிய நரம்புகள் ஆண் கிரகங்களையும்(சூரியன், செவ்வாய், குரு,சனி), 3 சிறிய நரம்புகள் பெண் கிரகங்களையும் (சந்திரன்,சுக்கிரன், புதன்) குறிக்கும் எனச் சொல்வதும் உண்டு. திருமறைக்காடு ஸ்தலத்தில் திருஞான சம்பந்தர் , அப்பர் இருவரும் சேர்ந்து இருந்த சமயம் அது. மதுரை மன்னன் கூன் பாண்டியன் சமண மதத்தில் இருப்பது பொறுக்க இயலாமல் , இராணியார் மங்கையர்க்கரசி , அமைச்சர் குலச்சிறையார் இருவரும் சம்பந்தப் பெருமான் வந்தால் தம் மன்னர் சைவம் மாறுவார் எனத் திட்டமிட்டு ,திருமறைக்காடு ஸ்தலத்திற்கு தூது அனுப்புகின்றனர். சம்பந்தர் அந்தத் தூதுவனிடம் முழு விபரம் கேட்டு , சமணர்களின் அநீதிப் போக்கை மாற்ற நினைத்து மதுரை கிளம்ப திட்டமிட்டு அப்பரிடம் சொல்கிறார். அப்பருக்கு வான சாஸ்திரம் நன்கு தெரியும். கண் மூடி ஏதோ கணக்கு இடுகிறார்..பின் அப்பர் தியானித்து கோள்களின் நகர்வு சம்பந்தர் சுவாமிகளுக்கு சாதகமாக இல்லை. எனவே மதுரை போக வேண்டாம் என்கிறார். சம்பந்தர் சுவாமிகளும், வான சாஸ்திரம் அறிந்தவர். அப்பரிடம் அவருக்கு சமாதானமாக தம் பதிலை சொல்லுகிறார். கோளறு பதிகத்தின் முதல் பாடல் இங்கு நினைவு கூறத் தக்கது. வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவிமாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டுமுடனே ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. வீணையை இசைக்கலாம்..அல்லது மீட்டலாம்.அதென்ன வீணை தடவி...எனப் பாடி இருக்கிறார்...? வீணையை சொடுக்கி வாசிக்காமல் , விருடைகளின் மேல் விரல்களை வைத்து இழுத்துக் கொண்டே போனால் கமகத்தை உண்டாக்க முடியும்.சிவம் கமகம் வாசிக்கிறது என எட்டாம் நூற்றாண்டில் அதுவரை இல்லாத ஒரு புது இசை உத்தியை சம்பந்தர் அறிமுகப்படுத்துகிறார். கமகம் என்பது கருநாடக இசையில் இசையொலிகளுக்கு அழகூட்டும் ஒலி அசைவுகள் அல்லது அலைவுகள் ஆகும். இதனைப் பழந்தமிழில் உள்ளோசைகள் என அழைத்தனர். சுரங்களைப் பாடும்போது அல்லது இசைக்கருவிகளில் வாசிக்கும்போது இனிமையும் அழகுணர்வும் கூடுவதற்குச் சில குறிப்பிட்ட இடங்களில் தக்க ஒலி அசைவுகள் உண்டாக்குதலைக் கமகம் என்பர். சிவம் வீணையை தடவி கமகம் மட்டும் வாசிக்க வில்லை. சம்பந்தர் பெருமானுக்காக கிரகங்களின இருப்பிடத்தையும் மாற்றுகிறார். அவை சம்பந்தருக்கு சாதகமாக மாறுகின்றன. சிவம் மீட்டும் வீணை நல்ல வீணையாகத்தான் இருக்க முடியும்... அதுவும் காழிப் பிள்ளையார் மதுரை போய் சமண மதத்தை துவம்சம் செய்ய வேண்டும்...எனவே அது மிக நல்ல வீணை ஆகி விட்டது. இந்த சம்பவம் திருமறைக் காட்டில் நடக்கிறது. சுவாமியின் பெயர் திருமறைக்காடர்.தாயாரின் பெயர் யாழைப்பழித்த மென்மொழி யம்மை,.இந்தக் கோயிலில் சரஸ்வதி கையில் வீணை இருக்காது.இங்கு இருக்கும் நவக்கிரகங்கள் நேர்கோட்டில் இருக்கும். இப்பொழுது புராணத்தை தொடர்பு படுத்திப் பாருங்கள். சம்பந்தர் மதுரை போனது, அங்கு அவர் இருந்த மடத்தை சமணர்கள் கொளுத்தியது.... தொடர்ந்து பல தொந்திரவுகள் கொடுத்தது..அப்பர் ஊகித்த அத்தனையும் நடந்தது. ஆனால் சிவம் நகர்த்தியதில் கோள்கள் அவருக்கு சாதகமாக மாறியதும் நடந்தது. சம்பந்தருக்கு மதுரையில் சமணர்களால் உண்டான இன்னல்கள் கேள்விப்பட்டு அவர் தந்தையார் சிவபாதவிருதயர் மதுரை வந்து பதைபதைக்கிறார். அப்பொழுது சம்பந்தர் பாடிய பாடல். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக் கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே. இந்தப் பாடல்தான் அனைத்துத் திருமணங்களிலும் மணமக்களை வாழ்த்தி பாடப்படுகிறது. நமக்காக சிவம் வீணையில் கமகம் வாசிக்க நாம் என்ன செய்ய வேண்டும்...? இப்பொழுதே யோசிக்க ஆரம்பிக்கலாமா...?