முதுகுச் சுமையில் யார்? ஹோஹென்ஸ்டான்ஃபென் வமிசத்தைச் சேர்ந்த (Hohenstanfen Dynasty) மூன்றாம் கான்ராட் (1093-1152 - Conrad –III) ஜெர்மனியை ஆண்டு வந்த போது நடந்த உண்மைச் சம்பவம் இது. 1040ஆம் ஆண்டு பேடன் உர்டெம்பெர்க்கில் (Baden-Wurtemberg) உள்ள வெய்ஸ்ன்பெர்க் (Weinsburg) கோட்டையை அவன் முற்றுகை இட்டான். பெரிய முற்றுகை நீடித்தது. இறுதியில் கான்ராட் வென்றான். கோட்டையைக் கைப்பற்றினான். மன்னன் அங்கு வாழ்கின்ற பெண்மணிகளுக்கு மட்டும் ஒரு சலுகையை அறிவித்து ஆணையும் இட்டான். அவர்களது சொத்தில் அவர்கள் முதுகில் எவ்வளவு தூக்கிச் செல்ல முடியுமோ அவ்வளவு தூக்கிச் செல்லலாம். அவர்களை யாரும் - எந்தப் படைவீரரும் தடுக்க மாட்டார்கள் என்று ஆணையிட்டான். கவுன்டெஸ் வெல்ஃப் என்ற பெண்மணி (Countess Welf) தனது கணவரான ஆறாம் கவுண்ட் வெல்ஃப் - ஐ (Count Welf –VI) தன் முதுகில் ஏற்றிச் சுமந்து சென்றவாறே கோட்டையை விட்டு வெளியே நடக்க ஆரம்பித்தாள். கோட்டையின் தலைவி இப்படி அபார துணிச்சலுடன் செல்வதை படை வீரர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்த வண்ணம் இருந்தனர். தலைவியைத் தொடர்ந்து கோட்டையில் இருந்த அனைத்துப் பெண்மணிகளும் தங்கள் தங்கள் வீட்டில் இருந்த ஆண்களை - கணவர், தந்தை, சகோதரன், குழந்தை யாராக இருந்தாலும் சரி - தங்கள் பலத்திற்கேற்ப முதுகில் சுமந்து செல்ல ஆரம்பித்தனர். இந்தக் காட்சியைக் கண்டு திடுக்கிட்ட படைவீரர்கள் ஓடோடிச் சென்று மன்னனிடம் நடந்ததைச் சொன்னார்கள். மன்னன் ஒரு நிமிடம் நிதானமாக இருந்தான் - பின்னர் கூறினான் - ஒரு மன்னன் தான் சொன்ன சொல்லைத் தவறுவதில்லை! (A King keeps his word!) தலைவியைத் தொடர்ந்து அற்புதமான ஒரு ஊர்வலத்தில் அனைத்து ஆண்களும் பத்திரமாக கோட்டையை விட்டு வெளியேறினர். கணவன் மீது அபார பற்று கொண்ட ஒரு பெண்மணியின் சரியான வழிகாட்டுதலைக் கண்டு உலகமே பிரமித்தது. இந்தச் சம்பவம் “Loyal wives of Weinberg” என்ற பெயரில் பிரபலமானது. இந்தக் கோட்டையின் சிதிலங்கள் இந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவு கூரும் வகையில் “மனைவியின் விஸ்வாசம்” (Weibertreu) என்று அழைக்கப்படுகிறது. 1998ஆம் ஆண்டு குழந்தைகள் கதையான சின்ட்ரெல்லாவை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட எவர் ஆஃப்டர் (Ever After) என்ற திரைப்படத்தில் அரசனின் இந்த ஆணை கருவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது! நன்றி : Truth weekly. net