இப்படியும் மனிதர்கள்! அன்று என் தாயின் நினைவு நாள். என்னை ’கண்ணே’ என்று அழைத்தவள், கண்ணெனக் காத்தவள் கண் மறைந்து கனவாகிப் போன நாள். என் பெற்றோரின் நினைவு தினங்களில் ஏதாவது ஒரு முதியோர் காப்பகம் சென்று அங்கு தங்கியிருப்போர்களுடன் சில மணி நேரம் செலவழித்து விட்டு வருவது என் வழக்கம். பழங்களும், தின் பண்டங்களும் உடன் எடுத்து செல்வேன். அம் முதியோர்கள் முகத்தில் மகிழ்ச்சியைக் காண்பது ஒரு சொல்லிலடங்கா அனுபவம். ஒரு மன நிறைவுடன் வெளி வருவேன். அன்றும் வழக்கம் போல் ஒரு காப்பகம் சென்றேன். நேரம் செலவிட்டேன். ஒரு முதியவர் மட்டும் எங்களிடமிருந்து நீங்கி வாசலில் ஒரு நாற்காலியில் அமர்திருந்தார். அவர் யாரையோ எதிர்பார்ப்பது நன்கு தெரிந்தது. அவரை அணுகி விசாரித்ததில் தன் மகனின் வருகைக்காக அவர் காத்திருப்பது தெரிந்தது. அன்று மகனின் பிறந்த தினமென்றும், ஆசி வாங்க நிச்சயம் வருவனென்றும் சொன்னார். பொழுது மதியத்தை நெருங்கிய போதும் காலையிலிருந்து ஒன்றும் உண்ணாமல் காத்திருப்பதாக அங்குள்ளோர் சொன்னார்கள். நான் வெகுவாக வேண்டி அவரை உண்ண வைப்பதற்குள் ‘போதும் போதும்’ என்றாகி விட்டது. நான் கிளம்பும் வரை அவர் மகன் வர வில்லை. அவரோ மறுபடியும் வாசல் நாற்காலியில். ஒரு மன உறுத்தலுடன் வெளி வந்தேன். மறு நாள் ‘அவர் மகன் எப்போது வந்தான்’ என்று தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் அலுவகத்திலிருந்து வரும் வழியில் அந்த காப்பகம் சென்றேன். இன்றும் அந்த தந்தை வாசல் நாற்காலியில் அமர்ந்து மகனின் வருகைக்காக காத்திருந்தார். ‘முந்தைய தினம் ஏதாவது வேலை நிமித்தம் வெளியூர் சென்றிருக்கலாம். இன்று நிச்சயம் வருவான்‘ என்பதே அவர் எதிர்பார்ப்பு. எதுவாகிலும் தொலைபேசி மூலம் கூட அவரிடம் மகன் தொடர்பு கொள்ளாததை எண்ணி எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. எனக்கிருந்த எரிச்சலில் அவர் மகனை உடனே தொடர்பு கொண்டு கடுமையாக இரண்டு வார்த்தை கேட்கவேண்டும் போல் தோன்றியது. காப்பக அலுவலகத்தில் இருந்து அந்த ’புண்ணியவானின்’ தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டு வெளியேறினேன். அன்று இரவாகி விட்டதனால் மறு நாட்காலை முதல் காரியமாக அதை செய்வதென முடிவு செய்தேன். அடுத்த நாள் காலை 7.30 மணி அளவில் அந்த மகனைத் தொடர்பு கொண்டு பேசினேன். “உங்கள் தந்தை இருக்கும் காப்பகம் எப்பொழுது போவதாக இருக்கிறீர்கள்?” “இதோ கிளம்பிக்கொண்டே இருக்கிறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கு இருப்பேன்”. எனக்குள் சிறிது சந்தோஷம் பெற்றோரிடம் பிள்ளைகள் அன்பு முழுதும் தொலைந்து விடவில்லை என்று. நான் தொடர்ந்தேன். “உங்களுக்காக காப்பாக வாசலில் நாற்காலியில் அமர்ந்து காத்திருக்கிறார் என்று தெரியுமா?” “அப்படியா? நேற்று நள்ளிரவில் அவர் இறந்து விட்டார் என்றல்லவா சற்று முன்னர் செய்தி வந்தது. இன்னும் உயிரோடு தான் இருக்கிறாரா?” இப்படியும் மனிதர்கள்! அன்புடன், RRG (05/01/2020)