கோட்டை உன் சேலை மடிப்பில் கொஞ்சம்.. உன் கல்யாண பட்டுப் புடவைக்கு அடியில் கொஞ்சம்.. அஞ்சறைப் பெட்டியில் கொஞ்சம்.. அரிசி மூட்டையில் கொஞ்சம்.. பக்கத்து வீட்டு அக்காவிடம் கொஞ்சம்.. அப்பாவிற்கு தெரியாமல் வங்கி கணக்கில் கொஞ்சம்.. உன் பொடி நடைக்குப் பின்னால் கொஞ்சம்.. நீ மட்டும் உண்ணும் பழைய சாதத்தில் கொஞ்சம்.. தூர்தர்ஷனுக்கு பின்னால் கொஞ்சம்.. வீட்டிலயே போடும் வடைக்குப் பின்னால் கொஞ்சம்.. உன் தேய்ந்த கைகளுக்குப் பின்னால் கொஞ்சம்.. கசக்கிப் பிழிந்த துணிகளுக்கு பின்னால் கொஞ்சம்.. என் பெயருக்கு பின்னால் சேரவிருக்கும் இரண்டு எழுத்துகளுக்காகவே அத்தனையும்...
சற்றே புரிந்தாற் போலும் பின் புரியாது மேலும், படிக்கத் தூண்டும் கவி இதுவே! அம்மா! எவ்வளவு நன்றாக இருக்கிறது! வாழ்த்துக்கள் ராம்!
மிக்க நன்றி rsgsrinivasan.. ஒரு தாய் பணத்தை மிச்சம் செய்யும் போதெல்லாம் "பணத்தை மிச்சம் பண்ணி என்ன "கோட்டை" கட்ட போறயா"? என்று சிலர் கேட்பது உண்டு.. இந்த அம்மா தன் குழந்தையை பட்டம் வாங்க வைத்து இருக்கிறாள் பல தாய் மார்களைப் போல... அதை தான் இந்த தலைப்பும் கடைசி இரண்டு வரிகளும் சொல்கின்றன...
நான் சரியாகவே புரிந்து கொண்டேன் ராம்! ஆனால் மற்றொரு முறை படித்த பின்பே! அதனால் தான் என் நான்காவது வரியில் குறிப்பால் உணர்த்த முயற்சித்தேன். உங்கள் விளக்கத்துக்கு நன்றி!
ராம் நானும் பல முறை உங்கள் வரிகளை படித்தேன். கவிதை கல்விக் கோட்டையை பற்றியது என்று பின்பே புரிந்து கொண்டேன்...இந்த இரண்டு வரிகளின் மூலம் ஆனால் அப்படி அரும்பாடு பட்டு கல்வி வரம் கொடுத்த அன்னையை தந்தையை இன்று வாழ்க்கைத் தரம் உயர்ந்ததும் பலரும் மறந்து போவதும் உதாசீனப்படுத்துவதும் தான் வேதனையின் உச்சம். நீங்கள் அன்னைக்கு கொடுத்த புகழாரம் மிக அருமை.Bow.Bow.Bow. நன்றி.