சுதந்திரம் --------------- * சின்னஞ் சிறு விஷயத்தையெல்லாம் பெரிது படுத்துகிறாய்… * தாலி கட்டி விட்டால் அடிமையில்லை என்கிறாய்… * கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டுகிறாய்… சமத்துவம்… சம உரிமை பெண்ணீயம் பேசுகிறாய்… * பட்டம் வாங்கியவள்… சட்டம் தெரியும் என்கிறாய்… * நினைத்தால் குடும்பத்தார் அனைவரையும் கம்பி எண்ண வைப்பேன் என்கிறாய்… * பெருமையாகத் தான் இருக்கிறது எனக்கு… உனக்கு நான் கொடுத்திருக்கும் சுதந்திரம்! >சொல்கேளான் ஏ.வி.கிரி, தாம்பரம்.
வண்ணங்கள்…! எங்கே வாங்கினாய் பட்டாம்பூச்சியே இந்த வண்ணங்களை… யார் தீட்டியது உனக்கு? தயவு செய்து எனக்கும் சொல்… புது வீட்டிற்கு வண்ணம் தீட்ட உன் ஆலோசனை வேண்டும்… >குமரன், கொண்டையாங்குப்பம்.
சிறைக்குச் செல்ல வழி - எல்லாம் கிடைக்கிறதாம் சிறைச்சாலையில் கைபேசி முதல் கறிக்கோழி வரை ஆனாலும் தெரியவில்ல என்ன தவறு செய்து விட்டு உள்ளே செல்வது என்று! >கோ.மோகன்ராம் ==================== யாருக்காக - எப்போது அழைத்தாலும் வந்து சாப்பிடத் தயாராக இருக்கும் பாட்டியை அழைக்காமல் எப்போதுமே வராத கடவுளுக்கே போடப்படுகிறது எப்போதும் படையல்! >வீ.விஷ்ணுகுமார் ====================== முகவரி - ஜன்னலிலும் கதவு இடுக்கிலும் கத்திக் கத்தி ஓய்ந்த குருவிக்கு கடைசி வரை சொல்லப்படவேயில்லை நேற்று வரை அந்த வீட்டில் குடியிருந்த குழந்தைகளின் புதிய வீட்டு முகவரி! >எஸ்.ஏ.தாஹிர் ====================== நன்றி; ஆனந்தவிகடன் 9-9-09
இன்னமும்… -------- யாரும் உணர்வதற்கு வழியேதுமில்லை. நாள்தோறும் என் பிரசவ வேதனைகள். - தோட்டத்துச் செடிகள் பூப்பதிலும் காய்ப்பதிலும் கூட இப்போதிங்கு எல்லோர்க்கும் ஆச்சரியங்கள் அம்மாவிடம் விதை வாங்கி நட்டது நானென்பதால்… - குட்டி போட்ட வெளித்தெரு நாய்க்கும் கன்று ஈன்ற வீட்டுப் பசுவிற்கும் தெரிந்திருக்கிறது தீனி போடும் நேரத்தில் என் தாய்மையுணர்வு - குறைந்தபட்சம் முதிர் கன்னியாகவாவது இருந்திருக்கலாம் பெண் என்றாவது ஒத்துக்கொள்ளப்பட்டதிங்கு - சூட்டப்டம் பட்டங்களோடு, சபையில் நான் மெளனமாய் விம்மி அழுகையில் ஏதுமறியாதவளாய் வெளியேறிச் செல்லும் உன்னை… - முழுமையான கணவனாகவே அடையாளம் காட்டுகிறேன் உலகிற்கு இன்னமும்… இன்னமும்… >சூர்யா சுரேஷ் =============== நன்றி; குமுதம் சிநேகதி 1-16 செப்டம்பர் 2009
திருப்பிப் பார்க்கச் சொன்னது தலையில் ரோஜா உதடு சுழித்துப் போகிறாள்! ====================== மூடு இல்லாததால் கவிதை வாங்கப் போனவன் காற்று வாங்கி வந்தான் ===================== புத்தாண்டா, பிறந்த நாளா சிரிக்கும் பூமரம் தினசரி! ==================== பிரசவ அறை அழும் குழந்தை சிரிக்கும் கடவுள்! ==================== என் வீட்டில் போலவே பன்னீர் பூ மரம் எதிர்வீட்டிலும்! ==================== >ஷங்கர நாராயாணன் நன்றி; கடவுளின் காலடிச்சத்தம்(ஹைகூ கவிதைகள்)