சூரிய வம்சத்தின் நிமியெனும் மன்னனும் மானிடர் அனைவரின் மேன்மைக்கெனவே, யாகம் செய்திட வசிட்டரை நாடியும், அவர் தயங்கிட, கௌசிகரைக் கொண்டே பணியை முடித்ததும் சற்றே உறங்க, வாழ்த்திட வந்த வசிட்டர் நெடுநேரம் முயன்றும் காவல் அனுமதி மறுக்க, சினந்த முனிவரும் விடுத்தார் சாபம். "வீடும், நாடும், ஏன், உருவையும் இழந்தே, ககன வெளிதனில் அலைவாய் நீயும்!" என்றவர் சொல்லும் உடன் பலித்திடவே, முனிக்கும் அச்சாபம் விடுத்தான் பதியும்! இந்நிகழ்வதனால் பிற முனி வாடி, சாபம் தீர்ந்திடும் வழியதை உற்றிட, வசிட்டர், தந்தை பிரம்மனை நாடி தவறும், விளைவும் சொல்லிக் கலங்கிட, கனிந்தே அவரும் ஒரு வழி சொல்ல, மகிழ்ந்தே மகனும் சிங்கர்குடி சென்று, தவத்தில் ஆழ்ந்து தன்னிலையதும் மீள, அரசனும் மீண்டதாய் கதை ஒன்றுண்டு. உக்கிரத் தோற்றம் கொண்டவர் முகத்தினைக் கண்டதும் பயமும், பக்தியும் வந்திடும்! "எங்குளான்?" என்று கேட்டவன் செருக்கினை, கங்காம் விழிகள் சீற எரித்திடும் சிங்கமுகத்தவர் முன் நாம் எம்மாத்திரம்? கரம் பதினாறில் பலவும் ஆயுதம் கொண்டார் சினத்தின் பெரியதோர் ஆயுதம் உண்டோ? இரணியன் விதியும் முற்றிடும் அத்தருணத்தினை உணர்ந்திட மெய்யும் சிலிர்த்தே, கண்களில் நீரும் பெருகிட, எளியோம் எம் பிழை யாவும் பொறுத்திடும் ஐயா! என்றே மனம் கசிந்து வேண்டிட, உள்ளே அமைதியும் படர்வதுணர்வோம்! தன்னடியான் பக்தியில் ஐயம் கொண்டதைப் பொறுக்கிலாரை நம் நெஞ்சில் நிறுத்துவோம்! விட்டிடோம் அவர் நாமம் உச்சரிப்பதை! திருவஹீந்திரபுரத்தில் உறைகின்ற தேவநாதரே இவரென உரைத்த திருமங்கையாழ்வாரின் பாசுரம் பாட திருவினைக் கொண்டோன் அருள் பெறலாமே!
நன்றி. மிக அருமையாக பாடல் வரிகள் புனைந்துள்ளீர். ரசிப்புடன் வாசித்தேன் . உந்துதலால் விக்கிப்பீடியா சென்றேன் . அறிந்தேன் அற்புத பதினாலு கைகள் ஏந்திய ஆயுதங்கள் ஒன்று இரண்யன் தலையில் மற்றொன்று அவன் குடலில்.....கடலூர்/ புதுச்சேரி அருகில் காண கொடுத்து வைக்க வேண்டும். இத்தலத்தில் பாவன விமானத்தின் கீழ் அதிசயிக்கத்தக்க வகையில் லட்சுமி நரசிம்மர் உக்கிர நரசிம்மராக 16 திருக்கரங்களுடன், மேற்கு பார்த்து நின்று இரணியனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாள் தாங்கியுள்ள ஆயதங்கள்: 1.பாதஹஸ்தம், 2.பிரயோக சக்கரம், 3.ஷீரிகா என்ற குத்துக்கத்தி, 4.காணம், 5.அரக்கனின் தலை அறுத்தல், 6.கத்தியால் அசுரன் ஒருவனைக் கொல்லுதல், 7.இரணியனின் காலை அழுத்திப் பிடித்தல், 8.இரணியனின் குடலைக்கிழிப்பது (இடது கை), 9.இரணியனின் குடல் மாலையைப் பிடித்திருப்பது, 10.சங்கம், 11.வில், 12.கதை, 13.கேடயம், 14.வெட்டப்பட்ட தலை, 15.இரணியனின் தலையை அழுத்தி பிடித்திருப்பது, 16.இரணியனின் குடலைக் கிழிப்பது ஆகியனவாகும். பெருமாளின் இடப்புறம் வதம் செய்யப்பட இரணியன் மனைவி நீலாவதியும் வலப்புறம் பிரகலாதன், வசிஷ்டர் , சுக்கிரன் மற்றும் மூன்று அசுரர்களும் காட்சி தருகிறார்கள்.[விக்கீபீடியா நன்றி]
உங்கள் பாராட்டுக்கும், கூடுதல் தகவலுக்கும் நன்றி தியாகராஜன்! நரசிம்மருடைய கரங்கள் தரித்த ஆயுதங்களை பற்றி ஒரு பத்தி எழுத எண்ணி, பின் வேண்டாம் என்றே கருதினேன். ஏனெனில், ஆர்வமுடையவர் எப்படியும் இத்தலத்தைப் பற்றி மேலும் அறிய முயல்வார் எனும் எண்ணமே! அவ்விதம் நிகழ்ந்ததில் மகிழ்ச்சியே!