உதிரங்கள் சொட்டச் சொட்ட உயிர் கொடுத்த தாயே, உன் உதிர்கின்ற கூந்தல் இழை சுமக்க வரம் தருவாயே. துணிச்சல் இல்லை அம்மா, உன்னை போல் வளைந்திட. காடு கரை அலைந்தாய், கல் சுமந்து காப்பாற்றினாய், வயல் வெளி வாடினாய், வாய்க்கால் வரப்பு கட்டினாய், மீந்து போன மீதியை மகளே இது தான் தெம்பு என மனம் தேற்றி ஊட்டினாய், கருவில் இருந்த எனக்கு மீந்தவையும் சேர்ந்தனவே என்று நெஞ்சம் வெம்பினாய், காரிருளில் ஒளி தேடி நின்றாய், கஷ்டத்திலும் கலங்காமல் வாழ்ந்தாய், உனை போல வாழ உறுதியும் தந்தாய், ஒன்றுமில்லாத நேரத்திலும் உறுதுணையாய் இருந்தாய், நீ போதும் தாயே மனம் நெகிழ்ந்திடுவேன் நானே. யாரோ சொல்ல அறிந்தேன், எலும்புகள் உடைக்கும் போது தோன்றும் வலி எட்டு அலகுகள் – ஆனால், ஒரு தாயின் பிள்ளை வலி பன்னிரண்டு அலகுகள் என்று. என்னை ஈன்ற உன்னை எவ்வாறு மகிழ்விப்பேன், என்ற சிந்தனையில் நான் இருக்க – உன் கையால் ஊட்டப் பட்ட உணவு என் உள்ளே செல்லும் முன்பு உன் கண்ணீர் தரை தவழ்ந்து வந்து சொன்னது, இது போதும் மகளே, நீ என் மேல் அக்கரை கொள்ள வேண்டாம். என் பாசத்தை உன் மேல் படர அனுமதி அதுவே போதும் என்று..
வருக,தமிழ் இளவரசி ! அம்மா பிசைந்து ஊட்டிய சோற்றுப் பருக்கையில் கலந்திருக்கும் அவள் அன்பின் ஈரத்தை, மனதைப் பிசைந்து காட்டிய தரிசனமாய் உங்கள் வார்த்தைகளின் வழியிலும் , இணைத்திருக்கும் புகைப்பட மொழியிலும் கண்டேன் , விழி கசிந்து சோற்றுக்கு உப்பிட்டது. நல்ல பதிவு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ! தொடர்ந்து பதிவிடுங்கள், படிப்பவர் பலருண்டு !
அம்மாவை பற்றி எவ்வளவு எழுதினாலும் தகும் .உங்கள் கவிதை தாய் உள்ளத்தை மிக அழகாக உருக்கமாக காட்டியது .உயிர் தந்த தாயுடன் உங்கள் கவிதை பயணம் ஆரம்பித்து இருக்கிறது .பயணம் தொடர வாழ்த்துக்கள் .