25 -கிருஷ்ண லீலா! வெண்ணை திருடல்! தினம் தோறும் ஹரியின் வெண்ணை திருடும் படலம், வித விதமாய் அரங்கேறியது,தான் மட்டும் சென்றவன், தன் சகாக்களையும் தன்னுடன் இணைத்து கொண்டு, உரி மேலிருந்தவற்றையும்,ஒரு கை பார்த்தான், எட்டாத இடம் இருந்ததை தன் சகாக்களையே ஏணியாக்கி, அவர் மேல் ஏறி,எட்டி எடுத்து அனைவருடன் பகிர்துண்ணான். நித்தம் அவன் செய்கையினால் செய்வதறியாது தவித்தனர் கோபிகைகள். யசோதயிடம் சென்று புகார் செய்தால் ஒரு கோபி,அடியே யசோதே! உன் மகன் செய்கையினை கண்டாயோ,நித்தம் எம் வீட்டினுள்ளே வந்து, தயிர்,வெண்ணை பானைகளை கபளீகரம் செய்து,பின் அதை உடைத்து செல்கிறான், தான் மட்டும் வந்தவன், தற்போது ஒரு படையுடனே வருகிறான், வெண்ணையினை எடுத்து,தன் வாயில் பாதி இட்டு ,மீதியினை அனைவருக்கும் ஊட்டுகிறான்,வீட்டினிலே ஒரு நாளும் தயிரும் வெண்ணையும் மிஞ்சுவதில்லை, எல்லாமே உன் அருமை மகனவனின் வயிற்றினிலே குடி கொள்கிறது. என புகார் செய்தி வாசிக்க,கண்ணால் பார்க்காமல் நம்பேன் என பகர்ந்தால் அன்னை. அன்னையிடம் வசமாக மாட்டி வைக்க விதவிதமாய் கோபிகைகள் செய்த, தந்திரங்கள் பயனற்று போயினவே,அவன் நினைத்தால் அன்றோ அவன் மாட்டுவான்? அவன் தம் விருப்பமின்றி,அன்னையிடம் சிக்குவானோ இந்த மாயவன், அனைத்தையும் மீறி பிடி பட்டால்,அந்த கோபிகையின் முகம் நோக்கி, ஒரு சிரிப்பை ஹரி உதிர்க்க,தனக்கென மறைத்து வைத்த வெண்ணையினையும், அவன் முன்னே படைத்து,மெய் மறந்து போனால் அந்த கோபிகை. இவ்வாறே வெண்ணை திருட்டு வெகு ஜோராய் நடந்தது ஆயர்பாடியில்.