குடிலுக்கு வெளியே இருந்த கூட்டம் கவுண்டரம்மா சொன்ன முற்றம் நோக்கி நகர்ந்தது. ஏதேதோ பேச்சுக்குரல். கிணற்றிலிருந்து ஒலிப்பது போல ஒலித்து அதுவும் போக போக தேய்ந்து ஓய்ந்தது. மிதுனாவின் அழுகுரல் மட்டும் ஓயவில்லை. "ஐயோ அம்மா! என் உயிர் இன்னும் போக மாட்டேன் என்கிறதே!" என்று அனலில் இடப்பட்ட புழு போல மிதுனா துடித்தாள். யாரோ குடில் கதவை தாளிடும் ஓசை கேட்டது. பூட்டப்பட்ட இந்த குடிலுக்குள்ளேயே ஜீவசமாதியடைய முடிந்தால்.. "நீங்கள் போன இடத்திற்கே நானும் வருகிறேன் நந்தன். உங்களை விட்டு என்னால் இருக்க முடியாது என்று சொன்னீர்களே.இப்படி என்னை தனியே தவிக்க விட்டு விட்டு போனீர்களே.... " என்று அரற்றினாள். யாரோ ஒருவன் அவள் தோள் தொட்டு பலமாக உலுக்கினான். மறுபடியும் 'பாடி' என்று யாராவது ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று அவளுக்கு பயமாக இருந்தது. கண்களை இறுக மூடிக் கொண்டு, "என்னை தனியே இருக்க விடுங்கள். நான் இப்படியே செத்து போகிறேன்" என்று கத்தினாள். இறுக பற்றியிருந்த அவள் கரங்களில் இருந்து நளந்தனின் சங்கிலியை அவன் பிரித்தெடுக்க முயல, வெறி வந்தவள் போல, "நோ!" என்று வீறிட்டாள். அப்போது குனிந்து கிடந்த அவள் தலையை பலவந்தமாக நிமிர்த்திய அந்த அவன், "ஷ்.. மது.. நான் தான்.. உன் நந்தன்.. இது என்ன பைத்தியக்காரத்தனம். கண்ணை திறந்து என்னை பார்" என்றான். அந்த குரல் மிதுனாவிற்கு உயிர் காக்கும் தேவாமிர்தம் ஊட்டியது. துவண்டு கிடந்த மிதுனா ஒரு உத்வேகத்தோடு முகத்தை நிமிர்த்தினாள். கண்ணை மறைத்த நீர் திரையின் பின்னே அவள் நந்தன் அப்பழுக்கின்றி ஆஜானுபாகுவாக நின்றிருந்தான். முன்னே கண்டது கனவா? இப்போது காண்பது கனவா? என்று சாத்தான் போல சந்தேகம் எழ பித்து பிடித்த மனதின் பிரமையா என்று ஒரு பயங்கர பயம் உயிரை கவ்வியது. நளந்தன் உயிரோடு தான் இருக்கிறான் என்பதை நம்ப மாட்டாமல், தன் தலை மேல் இருக்கும் அவன் கையை கரங்கள் நடுங்க இறுக பற்றினாள். அவளை அப்படியே ஒரு வேகத்தோடு வாரியெடுத்து மாரோடு அணைத்துக்கொண்டான்.அவளும் வாகாக ஒட்டிக் கொண்டாள். காடு மலை எல்லாம் அலைந்து திரிந்து கடைசியில் வீடு வந்து சேர்ந்தது போல அவன் மார்பில் ஒண்டிக் கொண்டாள். நிமிடத்திற்கு நிமிடம் அவன் அணைப்பு இறுக, ஆதி பாஷையான அரவணைப்பே ஆயிரம் வார்த்தை பேசியது போல மிதுனா உள்ளம் தெளிந்தாள். அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க அவனது இறுகிய அணைப்பு இடம் தரவில்லை. அவளது முயற்சியை கண்டு கொண்டவன் போல ஒரு பாச முறுவலோடு தன் அணைப்பை கொஞ்சமாக தளர்த்தினான். நிமிர்ந்து அவன் முகத்தை நன்றாக பார்த்தாள் மிதுனா. அவள் ஊனோடு, உயிரோடு கலந்த முகம். அதை போய் பொன்னம்மா என்னென்னவோ சொன்னாளே! மிதுனாவின் கண் கலங்கியது. கம்மிய குரலில், "என்னடா?! " என்றான் நளந்தன். "பொன்னம்மா.. நீங்கள்.. உங்களை என்னென்னவோ சொல்லி என்னை,," என்று உதட்டை கடித்து கொண்டு தழுதழுத்தாள் மிதுனா. பொன்னம்மா சொன்ன வார்த்தைகளை திருப்பி சொல்ல கூட அவளுக்கு துணிவில்லை. அந்த வேதனையை மீண்டும் அனுபவிப்பவள் போல அவள் மேனி ஒரு தரம் தூக்கி போட்டது. ஏதோ துன்பத்தில் இருந்து அவளை காப்பவன் போல மீண்டும் அவளை இறுக அணைத்தான் நளந்தன். "பொன்னம்மா சரியாக தான் சொன்னாள்.. நீ என்னையே நினைத்து கொண்டிருந்ததால்.. தவறாக புரிந்துகொண்டாய்.." மிதுனாவுக்கு ஒன்றும் புரியவில்லை.. சொன்னாளே பொன்னம்மா? "இல்லையே.. அய்யாவுக்கு பைக் ஆக்சிடென்ட் என்று சொன்னாளே.. வெளியே கூட ஆட்கள் கூட்டம் கூடி பா.. பாடி என்று கூட.." என மிதுனா தடுமாற நளந்தன், "பொன்னம்மா அய்யாவுவிற்கு என்று சொன்னதை நீ ஐயாவுக்கு என்று புரிந்து கொண்டாய்" என்று ஒரு வறண்ட முறுவலோடு விளக்கினான். மிதுனா அவன் கரம் பற்றி, "நான் உங்களிடம் அப்போது ஏதேதோ.." என்று சொல்ல வர, கம்மிய குரலில், "எல்லாம் அப்புறம் பேசி கொள்ளலாம், ம.. மிதுனா" என்று விலா எலும்பு நொறுங்கிவிடும் போலஅவளை ஒரு தரம் இறுக அணைத்தவன், அவளை விட்டு பிரிய மனம் இல்லாத போதும், "நான் பெரியவர் வீட்டிற்கு போக வேண்டும், மிதுனா. ஏதேனும் அவர்களுக்கு ஒத்தாசை தேவைப்படலாம். இல்லையென்றாலும் போவது தான் முறை" என்று சொல்லி எழுந்தான். எப்படியாயினும் ஒரு மரணம் சம்பவித்தது நிஜம். மிதுனாவுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. "பாவம் பெரியவர் குடும்பம்" என்றாள் மெய்யான வருத்தத்துடன். ஆனால் நளந்தன் வேறு சொன்னான். "இறந்தவர் பற்றி இகழ்வாக பேச கூடாது. ஆனால்.. ஒரு வகையில் இந்த இழப்பு பெரியவர் குடும்பத்துக்கு ஒரு விடிவு என்று தான் சொல்ல வேண்டும். பண்பான அந்த குடும்பத்தில் அய்யாவு ஒரு கருப்பு ஆடு. அவனால் நித்தமும் நிம்மதிக்கு கேடு அங்கே. அங்கு மட்டுமல்ல, இந்த குக்கிராமமே அவனது அட்டூழியத்தில் கொஞ்சம் வெறுத்து தான் போயிருந்தது. அந்த ஆற்றங்கரை பெண் ஒரு சின்ன உதாரணம். இப்போதும் குடித்து விட்டு பொறுப்பின்றி கண் மண் தெரியாமல் வண்டியை ஒரு லாரியில் விட்டு.. லாரி டிரைவருக்கும் நல்ல அடி.. " என்றவன் அவளை தவிப்பாய் ஒரு பார்த்து, "நீ தனியாக இருப்பாயா, மிதுனா? அல்லது என்னோடு வருகிறாயா? அங்கே பெண்கள் துணையோடு இருக்கலாம்." என்று எப்போதும் போல பொறுப்பாக கேட்டான். மிதுனா தனியே இருப்பதில் எந்த பயமுமில்லை என்று இருமுறை தைரியமாக சொன்னபின்பே இடத்தை விட்டு அகன்றான். அப்போதும் துணைக்கு பொன்னம்மாவை அல்லது வேறு யாரையேனும் அனுப்புவதாக சொல்லி தான் போனான்.
MST Next episode padikirakkulle enna oru tension............ neenga romba nallavangannu enagalukku theriyum........