அன்றும் மிதுனா எப்போதும் போல தானே தாத்தாவிற்கான காலை சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு அவர் அறை நோக்கி சென்றாள். என்றைக்கும் இல்லாத அதிசயமாய் கதவு சாத்தியிருந்தது. காற்று பலமாய் அடித்தது போலும் என்று எண்ணி தட்டை இருகைகளிலும் ஏந்திய நிலையில் கதவை முழங்கையால் ஓசையின்றி உந்தி தள்ளியபடியே உள்ளே செல்ல முற்பட்டாள். தாத்தா ஒருவேளை அசதியாய் குட்டி தூக்கம் போட்டிருந்தால் எழுப்ப வேண்டாமே என்றும் ஒரு எண்ணம். கதவைத் திறந்தவள் அப்படியே செய்வதறியாது நின்றாள். பாதி திறந்த கதவின் அப்பால் தாத்தாவின் கையை பிடித்தபடி அவர் அருகில் அமர்ந்திருந்தது.. நளந்தன்! அவன் முகத்தில் முதல் நாள் கண்ட அதே புருவ சுளிப்பும், ஏக கடுப்பும். இவன் இன்று வருவான் என்று தெரியாதே! ஓ!! இவன் வரவை எதிர்பார்த்துதான் தாத்தாவிடம் அத்தனை பரபரப்பா?! இந்த தாத்தாவாவது இப்படி என்று அவளிடம் முன்பே சொல்லி இருந்தால் கொஞ்சம் கவனத்தோடு இருந்திருப்பாளே! குறைந்தபட்சம், சிரமம் பாராமல் தட்டை கீழே வைத்துவிட்டு ஒருமுறை கதவை தட்டிவிட்டாவது வந்திருப்பாளே என்று மனம் அடித்துக் கொண்டது. இது இரண்டாவது முறை..இப்படி நாகரீகமின்றி அவனிருக்கையில் முன்னறிவிப்பின்றி அறையினுள் நுழைவது. இந்த முறை என்ன மண்டகப்படி கிடைக்கப்போகிறதோ!! ஒருகணம் உறைந்த மிதுனா அஞ்சியபடிதான் அடுத்த அடியை எடுத்து வைத்தாள். தட்டை அருகிருந்த மேஜை மேல் வைக்கும் வரைகூட அவன் வாய் திறந்து எதுவும் பேசினானில்லை. "வந்து..சாரி..நீங்கள் வந்திருப்பது தெரியாது..கையில் தட்டு..ரெண்டு கைகளிளிலும்..வந்து..கதவை தட்ட முடியவில்லை..கீழே வைதுவிட்டேனும் தட்டி இருக்கலாம்..தாத்தா தூங்குவாரோ என்று..அப்படியே.."திக்கித் தடுமாறி வார்த்தைகள் வந்து விழ அவன் முகத்தை அதுவரை பாராமல் பேசியவள், அவனிடத்தில் இருந்து எந்த பதிலும் வராததைத் தொடர்ந்து பார்வையை அவன் முகம் நோக்கி உயர்த்த, வியந்து போனாள்! அவன் முகத்தில் சற்றுமுன் கண்ட கோபத்தின் சிறு சாயல்கூட இல்லை. மாறாக ஒரு சின்ன புன்னகை! அவனிடமா?! கருத்து அடர்ந்த மீசைக்கடியில், அளவான அழகான புன்னகை! கூட சேர்ந்து சிரித்த கண்கள். அலை அலையாய் படிந்து பளபளக்கும் கேசம். பரந்த நெற்றி. ஏறி இறங்கிய அடர் புருவம். கத்தி போல கூர்மையான கண்கள். கண்கள் கத்தி என்றால், நான் என்னவாம் என்று போட்டியிடும் எடுப்பான நாசி! பிடிவாதத்தைக் காட்டும் உறுதியான தாடை. கச்சிதமாக நறுக்கப்பட்ட மீசை. முக்கால் காதுவரை நீண்ட கிருதா. கீழுதட்டிற்கு கொஞ்சம் கீழே தொடங்கி மத்தியில் ஓர் மெல்லிய நேர் கோடாய் மோவாயில் ஆண்மை கூட்டும் ஒரு சின்ன வெட்டு. மாநிறத்திற்கும் கொஞ்சம் குறைந்த நிறம். செதுக்கியது போல் நேர்த்தியான பிம்பம். கிட்டத்தட்ட ஒரு கருப்பு கிரேக்க சிலை போன்ற அவனது தோற்றத்தில் பிரமித்தாள் மிதுனா. அவன் ஒற்றைப் புருவத்தை மேலே ஏற்றி கேள்வியாய் நோக்க, 'சேச்சே..என்ன இது பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல' என்று தன்னை தானே உள்ளுக்குள் கடிந்துகொண்டு, சடாரென பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். தன் சலனத்தை கவனித்துவிட்டானோ..மனம் சஞ்சலப்பட்டது. தன் தடுமாற்றத்தை இருவரும் அறியுமுன் அங்கிருந்து அகன்றுவிட துடித்து, "நீங்கள் பேசிக் கொண்டே சாப்பிடுங்கள் தாத்தா..எதுவும் தேவை என்றால் பெல் அடியுங்கள்..நான்..முத்து..வருவான் என்று அவனைப் பாராது உரைத்து நகர முயன்றாள். அவனோ அவள் பேசவே இல்லாதது போல, சம்பந்தா சம்பந்தமின்றி, "இங்கு புலி ஏதும் தப்பி வந்துவிட்டதா, தாத்தா?" என்று ரொம்ப அக்கறையாக கேட்டான். இது என்ன மடத்தனமான கேள்வி? வீட்டில் எங்கிருந்து புலி வரும்? அவள் குழம்பி தாத்தாவை ஏறிட்ட அதே வினாடி, அவர் கண்ணிலும், அவன் கண்ணிலும் எட்டிப பார்த்த குறும்பில் அவன் கேலிப் பேச்சு புரிந்தது! புலியைக் கண்டது போல அவள் அவனைப் பார்த்து ஓடுகிறாளாம்! சட்டென முகமும் அகமும் மலர சிரித்தவள், "புலி ஏதும் வரவில்லைதான். ஆனால், கடுவன் பூனை ஒன்று ஊரிலிருந்து திரும்பிவிட்டதாகக் கேள்வி " என்று அதே குறும்போடு கூறிவிட்டாள்! மனதில் எண்ணியதை யோசியாமல் வாய் விட்டபின்தான், இதை விளையாட்டாய் ஏற்றுக் கொள்வானோ..என்று கலக்கத்தோடு அவனை ஏறிட்ட மிதுனா மறுபடியும் பிரமித்துப் போனாள்! அவனது மென் நகை விரிந்து வெண்பற்கள் மின்ன வாய்விட்டு சிரித்தான் நளந்தன்! அவன் சிரிப்பில் அந்த மாயக் கண்ணனின் சாயல்! கண்ணோரம் சுருங்க சிரித்த அவனது கம்பீரம் அவளை ஈர்த்தது. இவனுக்கு இப்படி சிரிக்க கூட தெரியுமா? தன்னை மறந்து அவள் வியந்து நோக்க, அவன் "Hello!! Welcome Back!" என்று சொடக்கு போட்டு அவளை பூமிக்கு மீட்டு வந்தான்! "என்ன, கடுவன் பூனை சிரிக்கவும் செய்கிறதா?" என கேட்டு அவளை மெலிதாய் அதிரவும் செய்தான். "புரிந்தால் சரி" என்று அதே கிண்டலுடன் பதில் கூறி, ஒரு துள்ளலுடன் வெளியேறினாள் மிதுனா! பரவாயில்லை! நன்றாகத்தான் பழகுகிறான்! அன்று ஏதோ மூடு சரியில்லை போல! ஆமாம் தாத்தாவிடம் கூட சிறு எரிச்சலோடு தானே 'வேறு ஏதாவது' பேச சொன்னான். அந்த நேரத்தில் முன்பின் தெரியாத ஒருத்தி தன் பாட்டில் அறைக்குள் வந்துவிட கோபம் வரும்தானே. என்னவோ நளந்தன் மனம் கோணாமல் நடந்துகொள்ள மனம் துடித்தது. ஏன்?! அவளுக்கு புரியவில்லை. புரிந்துகொள்ளவும் அவளுக்குப் பிரியமில்லை. வீட்டினர் மனம் கோணாமல் நடக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அவள் தாத்தாவும் அதையே தானே சொன்னார்.. 'அவங்க மனம் கோணாமல் பார்த்து நடந்துக்கோ, பாப்பா' என்று.... இதிலென்ன பெரிய ஆராய்சசி?!
Kathai super-a irukku. Nalla nadai, nalla peyargal-Mithuna & Nalanthan Waiting for the next parts. -DDC
Thanks, Uma, Kala, DDC & Gayathri! Hope you like the next parts. Gayathri, Nalla idea thaan. :thumbsup Infact I did draw one such face during my teen years. Infact that is one of the very very few male pictures I have ever drawn. Stupid me failed to preserve it. :bonk But lucky me, my DH resembles that drawing so I can refer to the live picture any time I want. :rotfl And I have the copyright. :cheers