அலைச்சலும் குழப்பமும் - 11.1.2019 உமக்கு பிடித்திருந்தால் திடமான விசுவாசத்தை என் இடத்தில் வையும். உமது இப்போதைய அலைச்சலும் குழப்பமும் பயனற்றவை. நீர் உமது கடமையைச் செய்யும். சிறிதளவும் அஞ்சாதீர். என் மொழிகளில் நம்பிக்கை வையும். என்னுடைய லீலைகளை நினைவில் கொள். நான் உன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து உன்னுடைய பக்தியை அதிகப்படுத்துவேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
சாய்பாபா யந்திரம், பரிகார பூஜைகள் - 12.1.2019 பக்தர்களின் நம்பிக்கை, நேர்மையான பக்தி, ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப, சாய்பாபா அளித்திடும் அனுபவங்கள் பக்தருக்கு பக்தர் மாறுபடும். சில முக்கியமான நிகழ்வுகள் மூலம் பாபா சில பக்தர்களுக்கு உதவுகிறார். அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறார். சில பக்தர்களுக்கு கனவுகளில் தோன்றி, கனவுகளில் செய்திகள் சொல்லி சிலரது பக்தியை அதிகப்படுத்துகிறார். முழுமையான நம்பிக்கை, நேர்மை மற்றும் பக்தியுடன் சாயிபாபாவை நோக்கி யார் பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் நேராக பேசுகிறார், அவர்கள் இடைத் தரகர்களின் உதவியை நாடத் தேவையில்லை. பாபாவிடம் முழு சரணாகதி அடைந்த ஒருவர், தேர்வு முடிவு, வேலை போன்ற இவ்வுலக வாழ்க்கைக்குரிய சாதாரண விஷயங்களை விடுத்து, பாபாவிடம் என்றும் மாறாத நம்பிக்கைக்கும், அவரது அருளாசிக்காக பிரார்த்தனை செய்யுங்கள். காமதேனு (தேவலோகத்துப் பசு) நாம் விரும்பிய பொருளை உடனே அளிக்கும். காமதேனுவைவிடச் சிறந்தவர் குருதேனு. நம்மால் சிந்தனைசெய்து பார்க்கமுடியாத பதவியையும் (வீடுபேறு நிலையையும்) அளிப்பார்! பாபா கூறியிருக்கிறார், "உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும். ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதைப் போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்" என்று. அதாவது, பாபாவின் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையே பிரதானம்..வியாபாரமயமாகிவிட்ட இந்த உலகத்தில், உங்கள் பிரச்சனைகளை களைய, வேலை கிடைக்க, குழந்தை பிறக்க எனசாய்பாபா யந்திரம், மந்திரித்த எலுமிச்சை, சாய் பரிகார பூஜைகள் என்று நிறைய ஏமாற்று வேலைகள் நடப்பதை நாம் காண்கிறோம். சாயியின் தர்பாரில் யந்திரம், பரிகாரம் என்று எதுவுமில்லை. பாபா தன் பக்தர்களிடம், தன்னை மட்டுமே நம்பும்படி கூறியுள்ளார். இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவது, பாபா மீதான நம்பிக்கை இல்லாமையே காட்டுகிறது. எப்பொழுதும், பாபா உங்கள் உடனே இருக்கிறார். தொடர்ந்து இவ்விதமாக எண்ணிவாருங்கள். மற்றவற்றை பாபா பார்த்துக்கொள்வார்.
கூப்பிடும் குரலுக்கு ஓடிப்போய் உதவும் சாய்பாபா - 13.1.2019 சாய்பாபா மீது யார் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கிறார்களோ, அவர்கள் மனங்களை அவரே கட்டுப்படுத்தி, நல்வழியில் மட்டுமே செலுத்தும், தீவிர மனோவசிய சக்தியைக் கொண்டு விளங்கினார், அவர். சாய்பாபா அருளால் எல்லாமும் சாத்தியமாயின. ஏதாவது ஒரு கஷ்டத்தில் அகப்பட்டுக் கொண்டு தப்பிப்பதற்காக நாலா பக்கங்களிலும் துணை நாடும் ஆயிரமாயிரம் நபர்களைக் காட்ட முடியும். மன உளைச்சலில் அவர்கள் கேட்பார்கள். "கடவுளே கிடையாதா? அருள் தந்து காக்க, மன அமைதிக்கு எந்த மந்திரங்களும் கிடையாதா? என்னைக் காப்பாற்ற ஏதாவது ஒன்று எதிர் வராதா?" இது போன்ற சூழலில் யார் மூலமாவது தன்னுடைய மனிதரை தன்னிடம் இழுத்துக்கொள்கிறார் பாபா. இது முழுக்க முழுக்க பூர்வ ஜென்ம புண்ணியத்தால் நிகழ்வது. பாபாவிடம் சரணடைந்தது மட்டுமல்லாமல், அவர் ஒருவரால் தான் உயிர் குடிக்குமாறு நேரும் இடையூறுகளிலிருந்து காக்க முடியும் என்ற அனுபவத்தை அம்மனிதன் பெறுகிறான். தன் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்துவிட்ட பக்தனின் நன்மைக்காக மட்டுமே தனது இறைசக்தி அனைத்தையும் செலவழித்த சாய்பாபாவுக்கு இணையான மற்றொரு சாதுவை, வேறெங்குமே காட்ட முடியாது என்கிறார் நரசிம்ஹ ஸ்வாமிஜி. மேலும் அவர் சொல்கிறார் ; "ஜாதி, மதம், பால் இன பாகுபாடின்றி மனித குலத்தைக் காக்கவல்ல ஒரே இறை சக்தியாய் நன்மைக் காட்டினார் சாய்பாபா. மனித குலமே அவரை இஷ்ட தெய்வமாகவும் அல்லது வழிகாட்டும் குருவாகவும் கொள்ளுமாறு செய்த அவர், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தர்மத்தின்படி, கூப்பிடும் உண்மையான குரலுக்கு ஓடிப்போய் உதவும் எங்கும் நிறைந்த அருளாய் திகழ்கிறார்.
கர்மவினை - 14.1.2019 ஆன்மிகப் பாதையில் முன்னேற முயற்சிக்கும் லெளகீக (சாதாரண) மக்களை கர்மவினை, சிறிய மற்றும் பெரிய சம்பவங்களை தடைகளாக ஏற்படுத்தி, அச்சம்பவங்களின் பிடியில் மனதை சிக்க வைத்து வாழ்வின் சில காலத்தை விழுங்கி விடுகிறது. இச்சம்பவங்கள் நமது சக்தியையும் அறிவின் எல்லையையும் மீறி வாழ்க்கை துன்பங்களால் வெவ்வேறு ரூபங்களில் நம்மை கட்டுப்படுத்துகிறது. இதற்காக பாபாவால் அறிவுறுத்தப்பட்ட தாரக மந்திரமே "நம்பிக்கை" மற்றும் "பொறுமை" ஆகும். லெளகீக (சாதாரண) மக்களுக்கு பாபாவால் அளிக்கப்பட்ட ஒரே சக்தி துன்ப வேளையில் பொறுமை காத்து, பாபாவின் மேல் நம்பிக்கை சிதறாமல் போராடுவதுதான்.
உபதேசம் அளிக்கும் வழிகள் எண்ணிலடங்கா - 15.1.2019 ஒருவருக்கு ஒன்று, மற்றொருவருக்கு வேறு. தீஷை (உபதேசம்) அளிக்கும் வழிகள் எண்ணிலடங்கா. ஒருவரை தம்முடைய காலடியிலேயே கிடக்கச்சொன்னார். அச்சமயத்திலேயே மற்றொருவரை கண்டோபா கோவிலுக்கு அனுப்பினார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவரின் கனவிலும் தோன்றினார். அவருடைய மார்பில் அமர்ந்துகொண்டு கைகளாலும், கால்களாலும் அவரை அமுக்கினார். குடிகாரர் தம்முடைய கைகளை காதுகளில் வைத்துக்கொண்டு இனி மதுவை தொடமாட்டேனென்றும் அறவே விட்டுவிடுவேன் என்றும் சத்தியம் செய்த பின்னரே அவரை விடுதலை செய்தார்.
பாபாவிடம் பக்தியுடன் இரு - 16.1.2019 அக்கல்கோட் சுவாமி சமர்த்த மஹராஜ், இந்தியாவின் தலைசிறந்த மஹான்களுள் ஒருவர். தத்தாத்ரேயரின் அவதாரம். தம்மிடம் வந்தவர்கள் பலருக்கு அவர் உயர்ந்த ஆத்மீக அனுபவங்களைக் கொடுத்து, அவர்களைப் பெரிய மஹான்களாக்கியுளார். அவர் அக்கல்கோட்டில் (மஹாராஷ்டிரம்) 1856 முதல் 1878 வரை வாழ்ந்தார். 1878-ஆம் ஆண்டில் அக்கல்கோட் மஹராஜ் மஹாசமாதி அடைவதற்கான நேரம் நெருங்கிய போது, கேசவ் நாயக் என்னும் பக்தர், அவரிடம் கண்களில் நீர்மல்க, " மஹராஜ், நீங்கள் போய் விட்டால் எங்களுக்கு வேறு புகலேது? " என்று கேட்டார். மஹராஜ் , தம் பாதுகைகளைத் தம் பிரதிநிதியாக வைத்து வழிபடும் கேசவ் நாயக்கிடம் கொடுத்து, "எனது அவதாரம் அஹமது நகரிலுள்ள ஷீரடியில் ஏற்படப்போகிறது. அங்கே எப்போதும் செல். அவரிடம் பக்தியுடன் இரு. அவ்வாறு செய்தால் நான் இல்லாததால் துன்பப்பட மாட்டாய். நீ மகிழ்வுடன் இருப்பாய் என்றார்.
பாபாவின் சமாதி /சாயி சமஸ்தானம் உருவாகுதல் / காகா சாஹேப் தீக்ஷித் - 17.1.2019 1918ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாபாவின் உடலைவிட்டு உயிர் பிரிந்த போது, எல்லா பக்தர்களுக்கும் அது பெருத்த அடியாக இருந்தது. சாயியின் உடலை என்ன செய்வது என்பது பற்றி மேலும் குழப்பமும், முரண்படும் ஏற்பட்டன. "என்னுடைய சமாதியிலிருந்தும் நான் சுறுசுறுப்பாக இயக்குவேன்" என்பது பாபாவின் அருள் முரசு. ஆகவே அவரது உடலை என்ன செய்வது என்பது பற்றி சரியான முடிவு அத்தியாவசியமாயிற்று. அவருடைய சமாதி எங்கே அமையவேண்டும்? அதை யார் கட்டுவது? யாருடைய பொறுப்பில் அது இருக்கவேண்டும்? ஜனங்களுடைய (இந்துக்கள், முஸ்லீம்கள் இரு சாராருடையவும்) பெரும்பான்மையான கருத்து, பாபா மறைந்த போது, பாபா மசூதியில் வசித்ததால் அவர் ஒரு முஸ்லீம் என்பது; ஆகவே படே பாபா உள்பட எல்லா முஸ்லீம்களும் உடலைச் சூழ்ந்து கொண்டு அவருடைய சமாதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகிவிடும். ஆகவே முஸ்லீம்கள் சமாதி தங்கள் பொறுப்பில் தான் இருக்கவேண்டும் என்ற கருத்தை தெரிவித்தனர். துரதிருஷ்ட வசமாக எண்ணிக்கையில் அவர்கள் குறைவானவர்கள். அந்த அவலியாவுக்கு ஏற்றதான ஒரு சமாதி கட்டடத்தை எழுப்புவதற்கு போதுமான செல்வாக்கும், வசதியும் அவர்களிடம் இருக்கவில்லை. பாபாவை வழிபட்ட பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் என்று அடித்துக்கூறி அக்காரணத்தால் சமாதியை வழிபட தாங்களே தகுந்தவர்கள் என்பதை நிலைநாட்டினார். அங்கே வந்த கோபர்காம் மாம்லத்தார் இரு தரப்பினரையும் அவரவரைச் சார்ந்த ஜனங்கள் கையொப்பமிட்ட மகஜர்களைத் தயார் செய்து சமர்பிக்கும்படி கொண்டார். இந்த விஷயத்தில் பாபாவின் விருப்பம் என்னவாயிருக்கும் என்பது நன்கு அறியப்படவில்லை. அவர் அதை பற்றி பேசவில்லை. ஆனால் அவர் கடைசியாக உடல் நலமின்றி இருந்தபோது, 'வாடாவுக்கு என்னை எடுத்திச் செல்லுங்கள்' (அதாவது பூடி வாடா ) எனக் கூறினார். பூடியின் கட்டடம் தமது சமாதியாக இருக்க வேண்டுமென்பது பாபாவின் பூரண விருப்பம். மாம்லத்தார் தமது சிரமத்தைக் கூறினார். எல்லா பிரிவினரும் ஒத்துக் கொண்டால் அந்த ஒப்பந்தத்தின் அடைப்படையில் உடலை என்ன செய்வது என்று அவரால் தீர்மானித்துக் கூற முடியும் எனப் பகன்றார். அப்படி ஒரு ஒப்பந்தத்துக்கு வராவிடில் அவர்கள் அகமத்நகர் சென்று ஜில்லா மாஜிஸ்டிரேட்டின் உத்தரவைப் பெறவேண்டும் என்றும், மாம்லத்தாரான தாம் அந்த உத்தரவைநிறைவேற்ற வேண்டியிருக்கும் என்றும் சொல்லிவிட்டார். காகா சாஹேப் தீக்ஷித் அகமத் நகர் செல்ல தயாரானார். பாபாவின் தீவிர பக்தரான இவர் மிகவும் புகழ்பெற்ற சட்ட ஆலோசகர் ஆவார். அவர் அகமத்நகர் சென்றால் அவர் தமக்கு சாதகமாக உத்திரவைப் பெற்றுவிடுவார் என்றும் தங்களுக்கு எதுவுமிராது என்றும் முஸ்லீம்கள் யோசித்தனர். ஆகையால், அவர்கள் இந்துக்களுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தார்கள்; பாபாவின் உடல் பூடிவாடாவில் அடக்கம் செய்யப்படவேண்டும். வழக்கம் போல் சமாதியின் நிர்வாகப் பொறுப்பும் இந்துக்களிடம் இருக்கும்; ஆனால் சமாதிக்கு முஸ்லீம்கள் தடையின்றி வந்து போகலாம் என்ற மரபு தொடரவேண்டும். அதன்படி மாம்லத்தார் தாமே ஒரு உத்தரவு பிறப்பித்தார். எந்தப் பிரச்னையும் இல்லாமல் பாபாவின் உடல் பூடி வாடாவில் அடக்கம் செய்யப்பட்டது. இன்றும் அங்கேயே உள்ளது. அது ஒரு தற்காலிக தீர்வே. அதைவிட முக்கியமானது வருங்காலத்தில் நடக்கவேண்டியதற்கான வழிமுறை. அது அகமத்நகர் ஜில்லா கோர்ட்டரால் நிர்ணயிக்கப்படும் ஒரு திட்டம். தமது சிறந்த சட்டத் திறமை. லௌகீக ஞானம், உயர்ந்த பக்தி ஆகியவற்றைக் கொண்டு தீக்ஷித் ஒரு திட்டம் தயார் செய்து, செல்வாக்குள்ள பல பக்தர்களின் கையெழுத்துக்களுடன் சமர்ப்பித்தார். 1922ம் ஆண்டு ஜில்லா கோர்ட்டால் அந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டு, அதன்படி சீரடி சாயி சமஸ்தானம், பாபாவின் சமாதி, மற்ற விஷயங்கள் யாவும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. பதினைந்து நபர்கள் அடங்கிய ஒரு நிர்வாகக் குழு கொண்ட தர்மகர்த்தாக்கள் சபையினரிடம் சமஸ்தான சொத்துக்களின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தீக்ஷித் கௌரவ காரியதரிசியாக பொறுப்பேற்பதில் திருப்தி அடைந்து, அவருடைய நிர்வாகத் திறமையால் எல்லா பிரிவினரையும் சந்தோஷமடையச் செய்தார். இந்த விதமாக தீக்ஷித் சீரடி சாயி சமஸ்தானத்தின் வெற்றிக்கு உறுதியான அஸ்திவாரத்தை போட்டார். இன்று சமஸ்தானம் உள்ள நிலைக்கு அவரே முக்கிய காரணமாவார். "காகா சாஹேப் தீக்ஷித்"
பக்தனின் சாயி நாமஜெபத்தை கேட்கும் பாபா - 18.1.2019 எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்துடன் அதை கேட்டுக்கொண்டிருப்பார். அதில் சந்தேகமேயில்லை. உதாரணமாக, ரேகே என்ற பக்தர், ரயில் பயணத்தின் போது இரவு முழுவதும் விழித்திருந்து பாபாவின் பஜனை செய்தார். அவர் ஷீரடிக்கு வந்தபோது பாபா கூறினார். "அவன் நேற்றிரவு முழுவதும் என்னைத் தூங்கவிடவில்லை. இரவு பூராவும் என் படுக்கையைச் சுற்றிலும் 'பாபா பாபா' என்று ஒலி கேட்டுக்கொண்டிருந்தது" என்றார்.