ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படித்தால் வேண்டியது நிறைவேறும் சாய் பக்தர்களே, மனோகரமான இந்த ஸ்ரீ சாய் சத்சரித்திரம் எல்லா கோரிக்கைகளையும் தீர்த்து வைக்கும். இதனைப் படிப்பவர்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பலன் வரும். ஆகையால் பக்தி சிரத்தையுடன் படித்தால் நீங்கள் வேண்டியது நிறைவேறும். பல ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு இடத்தில் மட்டுமே வைக்கும்போது மிகுதியான பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையை பாபாவின் மீது வைத்து, அவரின் பாதகமலங்களைப் பூஜித்துக்கொண்டு பாபாவையே தியானித்துக்கொண்டு இருங்கள். ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான். பெரும்பான்மையான சாய் பக்தர்கள் ஸ்ரீ சாய் சத்சரிதத்ததை முழுமையாக படித்ததில்லை. சிலர் ஓரிரு முறை பாராயணம் செய்ததோடு நிறுத்திவிடுகின்றனர். உண்மையில் பாபாவை விரும்பும் பக்தர் தினமும் ஒரு அத்தியாயத்தையாவது படிக்கவேண்டும். உங்களின் சத்சரித்திர பாராயணத்தின் போது பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பார்.
உதியின் மகிமை துகாராம் பார்கு, டிசம்பர் 9, 1936. சாயி பாபாவுடன் நெருக்கமாக எனக்குச் சில அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. 1912-ல், கோதாவரி வாய்க்கால்களில் முதன் முதலாக நீர் திறந்துவிடப்பட்டபோது, இருபது மைல் தொலைவிலுள்ள காரஞ்ஜிகாம் என்ற கிராமத்துக்கு, வேலை தேடி பிழைப்பை நடத்துவதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்தேன். கிளம்பிய போதே, ஷிர்டியிலே கோபர்காம் சாலையில் நான் இருந்த போதோ, லெண்டிக்கு செல்லும்போதோ, அங்கிருந்து திரும்பும்போதோ வழியில் பாபா என்னை சந்தித்தார். அவர் என் கழுத்தைச் சுற்றி தம் கையை என் தோளில் போட்டுக்கொண்டு, "போகாதே" எனக் கூறினார். அவருடைய சொல்லை மதியாது நான் அந்த கிராமத்துக்குப் போனேன். நான் அங்கு போய்ச் சேர்ந்த தினம் எனக்கு காய்ச்சல் ஆரம்பித்தது, நீண்ட காலம் விடவே இல்லை. பிழைப்புக்கு வேலை செய்வது எனபது நடவாத காரியம் ஆனது; ஆகவே என்னை கவனிப்பதற்கு என் உறவினர்களின் தயவை நாடியிருக்கும்படி ஆனது. பதினைந்து நாட்கள் காய்ச்சலுக்கு பிறகு, ஷீரடிக்கு திரும்பிச் செல்லும் அளவுக்கு எனக்கு தெம்பு வந்தது. ஆனால் இங்கு வந்ததும் சுமார் 45 நாட்கள் ஜுரத்தால் அவதிப்பட்டேன். பிறகு பாபாவின் ஊதியைப் பெற்று வரும்படி என் தாயை அனுப்பினேன். அதை இட்டுக் கொண்ட மறு தினமே ஜுரம் நின்றது. - ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்.
சர்வ சக்திமான் தேகத்துடன் இருந்தபோதும், தேகத்தை விடுத்த பின்னரும் (மஹா சமாதிக்குப் பின்) 'நிராகார'ராக ( அருவமாக ) இருந்தும், எந்த வேளையிலும் அவர் 'ஸகார'ராகவும் ( உருவத்துடனும் ) இருக்க முடிந்தது. இவ்வாறாக பாபா, உடலுடன் இல்லாவிடினும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டான குருவாக தமது பக்தர்களுக்கு திகழ்கிறார். அவருடைய பழைய, புதிய பக்தர்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர் தமது பழைய திருவுடன் தோன்ற முடிகிறது. தோன்றியும் வருகிறார். உடலுடன் இல்லாத ஒருவர் தங்களுக்கு ஏற்றவரல்ல என பலர் எண்ணினார்கள், எண்ணுகிறார்கள். ஆனாலும் பாபாவின் திருவருளால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களை ( நாம் எல்லோருமே ), தமது சரணங்களை நோக்கி வருமாறு பாபாவால் இழுக்கப்பட்டு வருகின்றனர். பாபாவின் செயல் வெளிப்படையானதோ அல்லது காரணங்களை விளக்கி வாதிப்பதோ அல்ல; பேச்சில்லாத, கண்ணுக்குப் புலப்படாத உட்புறமானதொரு தாக்கம். எல்லாவிதமான குறைகாணும் மனப்போக்கையும் அகற்றி, அறவே எல்லா சுவடுகளையும் துடைத்து, பதிலுக்கு ஒரு பணிந்து போகும் மனப்பாங்கை தோற்றுவிக்கிறது. அந்த வினயம், " நான் ஒரு புழுவே, தாங்களே சர்வ சக்திமான், கருணாமூர்த்தி, காத்தருளவேண்டும், என் பாதையை ஒளிமயமாக்குங்கள். தங்கள் கரங்களிலே அடியேனை ஒரு ஆதரவற்ற குழந்தையாக எடுத்துக்கொண்டு, தங்கள் சங்கல்பப்படி செய்யவேண்டும் " என இறைஞ்சும். அந்த கண்முன் தோன்றா குரு ஜீவித்துள்ளார், சக்தி படைத்தவர், இலக்கை நோக்கி அவரே வழிநடத்துவார் ( பாபா ஒருவராலேயே வழி நடத்த முடியும் ) என்ற உணர்வு அம்மனிதனின் உள்ளத்தில் தோன்ற ஆரம்பிக்கும் நிலை அது. அத்தகைய ஒருவருடைய முந்தைய குருமார்கள்,அவரை அந்த அளவு உணர்வு பெறச் செய்ததில்லை. பாபா அந்த பக்தனை மேலே உயர்த்தி, தம்மை பல வடிவங்களில் தோன்றும், பல பெயர்களால் அழைக்கப்படும் ஒரே ஸ்வரூபம் அல்லது ஆதாரசக்தி எனக் கண்டுகொள்ளும்படி செய்துவிடுகிறார். * ஜெய் சாயிராம் *
Life is a song - sing it. Life is a game - play it. Life is a challenge - meet it. Life is a dream - realize it. Life is a sacrifice - offer it. Life is love - enjoy it. Sai Baba
நம்பிக்கையும் விசுவாசமும் குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேலெழுப்பப்படுகிறார்கள். குரு, மந்திரங்கள், புனிதத்தலங்கள், தேவதைகள், வைத்தியர்கள், இந்த ஐந்திற்கும் ஒருவருடைய நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும். நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ, அதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும்.
நான் இங்கு இருக்கும்போது எதற்காக ஒருத்தன் பயப்படவேண்டும்? "இது உன் வீடு. நான் இங்கு இருக்கும்போது எதற்காக ஒருத்தன் பயப்படவேண்டும்?" -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. ஜி.எஸ்.கபர்டே , சாய்பாபாவின் நெருங்கிய பக்தர்களில் ஒருவர். இந்திய அரசியலின் முக்கியப் பெரும் புள்ளியாகவும் மத்திய பிரேதச நீதிமன்றங்களின் சிம்ம சொப்பனமாகவும் விளங்கியவர் இவர். பால கங்காதர திலகுருடன் இவருக்கிருந்த தொடர்பின் காரணமாக இவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட்டு விடலாம் என்ற ஆபத்து அதிகமிருந்தது. 1910ம் ஆண்டு சாய்பாபாவை முதன்முறையாக சந்தித்தார். மனம் லேசாக பல நீதிக்கதைகளை சாய்பாபா சொல்வார் என்றும் மக்களைத் துன்பம் கவ்வும்போது ஓடோடி வந்து அவர் பாதுகாப்பார் என்றும் கேள்விப்பட்டிருந்தார் கபர்டே.ஆங்கிலேய அரசால் எந்நேரத்திலும் கைதாகிவிடலாம் என்ற அவலநிலையில், 1911'ல் மீண்டும் ஷீரடிக்கு கபர்டே ஓடியபோது சாய்பாபா சொன்னார் "இது உன் வீடு. நான் இங்கு இருக்கும்போது எதற்காக ஒருத்தன் பயப்படவேண்டும்? " என்று. எக்காரணம் கொண்டும் கபர்டே கைதாகி விடக்கூடாது என்பதில் ஸ்திரமாயிருந்தார் சாய்பாபா. "என்னை விரும்புவோரின் மீது என்னுடைய கண்காணிக்கும் பார்வை சர்வகாலமும் பதிந்தேயிருக்கும்" என்றார் அவர். பின்னாளில் கபர்டே எம்எல்எக்கு இணையான பதவி அடைந்துவிட, அவரது மகன் மந்திரியாகவே ஆனார்.