ஆன்மீக வளர்ச்சி வாழ்க்கைக்கு வேண்டிய உணவும் உடையும் எவ்வாறு கிடைக்கும் என்று ஒருகணமும் சிந்திக்க வேண்டாம். ஏனெனில்,அவை முற்பிறவியில் செய்த கர்மங்களுக்கேற்றவாறு பிரயத்தனம் செய்யமலேயே கிடைக்கும். இவற்றை சம்பாதிப்பதற்குப் பெருமுயற்சி எடுத்தீர்களானால் அத்தனையும் வீண். அதற்குப் பதிலாக ஆன்மீக வளர்ச்சியில் இரவுபகலாகக் கவனம் செலுத்துங்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
உனது முந்தைய நல்வினைகளின் சேகரிப்பு அதிகம் செல்வமும் சுபிட்சமும் நிலையற்றவை. இவ்வுடல் அழிவிற்கும், மரணத்திற்கும் உட்பட்டது. இதை உணர்ந்து இம்மை மறுமைப் பொருட்களின் மீதுள்ள பற்று அனைத்தையும் விட்டுவிட்டு உனது கடமையைச் செய். இவ்வாறாகச்செய்து எவன் ஹரியின் பாதங்களில் சரணாகதி அடைகிறானோ அவன் தொல்லைகள் யாவற்றினின்றும் விடுபட்டு பேரானந்தப் பெருநிலை எய்துகிறான். அன்புடனும் பாசத்துடனும் எவன் அவரை நினைத்துத் தியானிக்கிறானோ பரமாத்மா அவனுக்கு ஓடிச் சென்று உதவி புரிகிறார். உனது முந்தைய நல்வினைகளின் சேகரிப்பு அதிகம். எனவே நீ இங்கு வந்துள்ளாய்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
இரவு முழுவதும் உன்னையே நினைத்திருந்தேன் பாபா வாழ்ந்த காலத்தில், பக்தர்கள் அவரை தரிசிக்க வரும்போது "நான் எப்பொழுதும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நேற்று இரவு முழுவதும் உன்னையே நினைத்திருந்தேன் " போன்ற மொழிகளை கூறுவார். அதாவது தனது பக்தர்களை எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் பின் தொடர்கிறார், பாதுகாக்கிறார், காரியங்களை செய்யவும் வைக்கிறார். பாபா என்ற தெய்வீக அவதாரத்திற்கு தனது பக்தன் மேல் அப்படியொரு அன்பு. எப்பொழுதும் உன்னையே நினைத்திருக்கும் பாபாவை தினம் ஒரு பத்து நிமிடம் கூட நீ நினைப்பதில்லை. பாபாவே எல்லாம், அவரிடமே சரணாகதி அடைந்துவிட்டேன் என்று சொல்பவர்கள் கூட அவரது நாமத்தை பத்து நிமிடம் கூட சொல்வதில்லை. பாபாவிடம் நெருங்கிய தொடர்பு வைத்து கொள்வதற்கு வெறும் பத்து நிமிட சாயி நாம ஜபம் மிக சிறந்த சாதனம். சாயிநாம ஜபத்தின் மூலம் உணர்ச்சிமிக்க துடிப்புள்ள சில பக்தர்கள் இன்றும் பாபாவைக் காண்கிறார்கள், விழிப்புடன் இருக்கும்போதே அவருடன் பேசவும் செய்கிறார்கள். சிலருக்கு கனவுகளில் இந்த அனுபவம் கிட்டுகிறது. பாபாவே தெய்வம் என்ற திடமான நம்பிக்கை கொண்ட சாயி பக்தர்கள் நிச்சயம் சாயி நாம ஜபம் செய்யவேண்டும். " ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி "
எல்லா பாவங்களும் ஒழிய பாபாவின் பாதங்களை வழிபடுங்கள் குருவே அன்னை; குருவே தந்தை. குரு, தேவர்களின் கோபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார். குருவினுடைய கோபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும் முடியாது என்பதை நன்கு அறிக. உலகவாழ்க்கையின் வழிகாட்டி குரு. புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு, மனிதனை அவனுடைய நிஜரூபத்தைக் காணும்படி செய்கிறார். மஹா காருண்யமூர்த்தியான குரு, சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார். ஆகவே, எப்பொழுதும் பாபாவின் உறவை நாடுங்கள். எல்லா பாவங்களும் ஒழிய அவருடைய பாதங்களை வழிபடுங்கள்.
வியாதியும் வலியும் பாபாவின் தரிசனத்தால் குணமாகிவிடுகிறது ஸ்ரீ சாயிபாபாவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளுங்கள். அவரே நம் அன்னையும் தந்தையும் ! அவரே அனைவருக்கும் கருணைமயமான அன்னை; கூவி அழைக்கும்போது ஓடிவந்து அணைத்துக்கொள்வாள்; தன்னுடைய குழந்தைக்கு என்ன தேவை என்பதை அரிவாள். உங்களுடைய கொடிய வியாதியையும் வலியையும் அவருடைய தரிசனத்தால் குணமாகிவிடுகிறது. எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். சாயியின் திருவடிகளைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளுங்கள். யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். இது அவருடைய உறுதிமொழி; இதற்குக் கட்டுப்பட்டவர் அவர். ஆகவே துரிதமாகச் சென்று சாயி தரிசனம் செய்யவும். - ஸ்ரீ மத் சாயி இராமாயணம்.
புற்றுநோயை குணப்படுத்திய பாபா ஒரு சமயம் பாபா திடீரென்று தனது பக்தர் மகல்சபதியிடம், "உன் மனைவியின் கழுத்தில் கட்டி ஒன்று வந்துள்ளது. அதற்காக நீ கவலைப்பட வேண்டாம். அதனை நான் குணமாக்கித் தருகிறேன்" என்றார். மகல்சபதிக்கோ ஒன்றும் புரியவில்லை. தனக்கு தெரியாமல் தன் மனைவியின் கழுத்தில் கட்டியா ? என்று அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த சமயத்தில் அவர் மனைவி வெளியூரிலுள்ள அவரது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார். ஒரு வாரம் கழித்து அவர் திரும்பி வந்தவுடன் கட்டியைப் பற்றி பேசலாம் என்று நினைத்துக் கொண்டார். இதுபோன்ற தருணத்தில், இரண்டு நாட்கள் கடந்ததும் அவர் மனைவியிடம் இருந்து கடிதம் ஒன்று மகல்சபதிக்கு வந்தது. அதனைப் படித்து பார்த்தபோது அதிர்ந்து போனார். அதில், "ஊருக்கு வந்த அடுத்த நாள் என்னுடைய கழுத்தில் கட்டி ஒன்று தோன்றியது. மிகவும் வலியையும் அது கொடுத்தது. மருத்துவரிடம் காண்பித்தபோது அது புற்றுநோய்க் கட்டி என்று கூறிவிட்டார். அதனால் நான் பயந்து போனேன். ஆனால் நல்ல வேலையாக இப்போது அது முற்றிலும் குணமாகி விட்டது. எனவே இதற்காகத் தாங்கள் கவலை படத்தேவையில்லை " என்று எழுதப்பட்டிருந்தது. பாபாவின் கருணையினால்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது என்பதை உணர்ந்தபோது, மெய்சிலிர்த்துப் போனார் மகல்சபதி.
அன்னதானம் "பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக!"- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
துவாரகாமாயி மற்றும் சாவடி துவாரகாமாயி ஸ்ரீ சாய்பாபா ஷீரடிக்கு வந்த ஆரம்ப காலத்தில், அவருக்குப் பின்புறம் நீண்டு தொங்கும் முடி இருந்தது. பச்சை நிறத்தில் நீண்ட அங்கியும், தலையில் முதலில் ஒரு குல்லாயும், அதன்மேல் காவி நிறத்தில் தொப்பியும் அணிந்திருந்தார். அவர்தம் கையில் ஒரு தண்டத்தையும் புகைக்குழாய், தீப்பெட்டி ஆகியவற்றையும் வைத்திருப்பார். அவர் பிச்சையெடுத்து உண்டு வந்தார். ஷீரடிக்கு வந்த நாலைந்து மாதங்களுக்குப்பின், பாபா வெள்ளை அங்கியும், வெண்மையான தலை உடைகளையும் அணியத்தொடங்கினார். இரண்டாவதுமுறை ஷீரடிக்கு வந்த பிறகும் கூட, பாபா சிறிதுகாலம் வேப்பமரத்தடியிலேயே வாழ்ந்ததாகத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் காரணமாகத்தான், அவர் தமது வாசத்தைக் கிராமத்திலுள்ள ஒரு பழைய பாழடைந்த மசூதிக்கு மாற்றிக் கொண்டார். மசூதிக்கு ( துவாரகாமாயி ) மாறியது. ஒருமுறை ஷீரடியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் அடைமழை பெய்தது. அதன் பெரும்பகுதி வெள்ளக் காடாகிவிட்டது. நீண்ட நேரத்துக்குப்பின் பாபாவின் ஆரம்பகால பக்தர்கள் சிலர், வீடற்ற பக்கீரின் ஞாபகம் வந்தவர்களாய், அவர் இந்த மலையிலிருந்து எங்கு ஒதிங்கியுள்ளார் என்று காண விரும்பினார்கள். மஹல்சபதியும் மற்றும் சிலரும் வேப்ப மரத்துக்கு விரைந்தனர். அங்கே சாயிபாபா அதே மரத்தடியில் பாதி சாய்ந்தவராகக் சமாதி நிலையில் இருப்பதைக் கண்டு செயலற்றுப் போயினர். அவர் மேல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவிதமான குப்பைகூளங்களும் அவர் உடல்மேல் சேர்ந்திருந்தன. அவரை அந்த நிலையிலிருந்து எழுப்ப அவர்களுக்குத் துணிவிருக்கவில்லை. அவர்கள் காத்துக் காத்துப் பார்த்துப் பின் சற்று நேரத்துக்குப்பின் வரலாமென்றெண்ணித் திரும்பச் சென்றனர். சில மணி நேரத்துக்குப் பின், தண்ணீர் முழுதும் வடிந்தபின் அவர்கள் வந்து பார்த்தபோது, அவர் இன்னும் ஈரத் தரையிலேயே கிடப்பதைக் கண்டனர். அவரது உடலும் முகமும் முற்றிலும் மண்ணால் மூடப்பட்டிருந்தன. தமக்குத் துன்பங்கள் வந்துற்றபோது தமது ஒரே பாதுகாப்பாளராகவும், வழிகாட்டியாகவும் இருந்த அவரை ஒரேயடியாகக் கவனிக்காமல் இருந்துவிட்டதைக் குறித்து, அவர்கள் குற்ற உணர்வு அடைந்தனர். பின்னர் அவர் சாதாரண உணர்வு நிலைக்குத் திரும்பியவுடன் அந்த பக்தர்கள், அவரைக் கிராமத்திலுள்ள ஒரு சிறிய பழுதடைந்த மன்கட்டிடமான மசூதியில் தங்குமாறு செய்தனர். சாயிபாபா ஒரு முஸ்லீம் ஆகையால், அவர் ஜானகிதாஸ், தேவிதாஸ் போன்ற மற்ற மகான்களைப் போல் இந்துக்களின் கோவில்களில் தங்குவது சரியல்ல என்று கிராமத்தின் இந்துக்கள் கருதியே இவ்வாறு செய்திருப்பார் போலும். அப்போதிலிருந்து அவர் மசூதியில் சிறிது நேரமும், வெப்ப மரத்தடியில் சிறிது நேரமும் இருப்பார். பின் சிறிது காலத்தில் அவர் மசூதியையே தமது முக்கிய, முழுநேர இருப்பிடமாக்கிக் கொண்டார். சாவடி சாவடி, ஷிர்டி கிராமத்துப் பெரியோர்கள் கூடிப் பொதுநலத்தைப் பற்றிய விஷயங்களை விவாதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கட்டிடம். ஒருமுறை பலத்த மழையின்போது மசூதி (துவாரகாமாயி ) முழுதும் ஈரமாகிவிட்டது. பாபாவும் அவரது பக்தர்களும் அமர்வதற்கு ஒரு சிறு உலர்ந்த பகுதிகூட இருக்கவில்லை. இப்போது போன்ற அந்த நாட்களில் முன்னாலுள்ள முற்றத்துக்குக் கூரை கிடையாது என்பதை நினைவில் கொள்வோமானால், அப்போது நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று அறிந்துகொள்ளலாம். தரையிலும் கற்கள் பதித்திருக்கவில்லை. அது ஒரு மண் கட்டிடம்; அதன் தரை அவ்வப்போது பசுஞ்சாணியினால் மெழுகப்படும், அவ்வளவே! அன்று, நாராயனதேலி என்பவர், மழைக்குப் பாதுகாப்பான சாவடிக்கு எல்லோரும் போகலாமென்று பாபாவிடம் கூறினார். பாபா தமது வழக்கப்படி தாம் போகமருத்துத் தமது பக்தர்கள் யாவரும் அங்கே போகலாமென்று கூறினார். பக்தர்கள் அவரை விடாப்பிடியாக வற்புறுத்தி, இறுதியில் துணிந்து அவரது கைகளைப் பற்றிக்கொண்டு, எப்படியோ ஒரு வழியாக அவரைச் சாவடிக்குக் கொண்டுவந்து சேர்த்தனர். ஒருமுறை அங்கு தூங்கியதும், சாவடியில் இரவைக் கழிப்பதை ஒரு விதியாகவே ஆக்கிக் கொண்டுவிட்டார். அவர் சாவடிக்குப் போகும்போதும், சாவடியிலிருந்து வரும்போதும் அவரைத் தொடர்ந்து பக்தர்களின் ஊர்வலம் எல்லாவிதமான கேளிக்கைகளோடும் இசையோடும் செல்லும்.