ராமன் பதவி உயர்வு பெற்று மங்களூருக்குச் சென்றார் . அவர் மனைவி ரேவதி . இரண்டு பேருக்கும் கன்னடம் , துளு , கொங்கணி மூன்று பாஷையும் தெரியாது . நல்ல வேளையாக பக்கத்து பிளாட்ல பத்து வருஷமாயிருக்கும் சாந்தாவுக்கு தமிழ் தெரியும் . சாந்தா ரொம்ப நல்ல மாதிரி . இவர்கள் வருவதற்கு முதல் நாளே இவர்களுக்காக , வேலைக்காரியின் உதவியுடன் , பிளாட்டைப் பெருக்கி மெழுகி ,கோலம் போட்டு , காய்கறி வாங்கி வைத்து , பாலுக்கு சொல்லி வைத்து ....என ரொம்ப உதவி செய்தார்கள் . ராமனும் ரேவதியும் நன்றி தெரிவித்து மாளவில்லை . மறுநாள் காலை :- பால்காரம்மா ரேவதி வீட்டுக் கதவைத் தட்டி பால் ஊற்றினாள் . ரேவதி ," உன் பேரு என்னம்மா ?" என்று கேட்டாள் . பால்காரம்மா ," பேரு இஜ்ஜி " என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் . ரேவதி ஏதோ கேட்பதற்காக பால்காரம்மாவைக் கூப்பிட்டாள் . அது அந்த அம்மா காதில் விழவில்லை . உடனே ரேவதி உரத்த குரலில் "இஜ்ஜி , இஜ்ஜி " என்று நான்கைந்து முறை கூப்பிட்டாள் . உடனே பக்கத்து பிளாட்டில் இருந்து சாந்தா வந்தாள் . " ஏன் கத்துகிறீர்கள் . என்ன வேண்டும் ?" என்றாள் . ரேவதி : பால்காரம்மாவை கூப்பிட்டுக்கொண்டு இருக்கின்றேன் . சாந்தா : என்ன பேர் சொல்லி கூப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ? ரேவதி : இஜ்ஜி என்றுதான் . சாந்தா : யார் சொன்னது ? ரேவதி நடந்ததை எல்லாம் சொன்னாள் . அதைக் கேட்டதும் சாந்தா விழுந்து விழுந்து சிரித்தாள். சாந்தா : துளு பாஷயிலே 'பேரு ' என்றால் ' பால் ' ; இஜ்ஜி என்றால் இல்லை . நீங்க பேரு ன்னு சொன்ன உடனே பால்தான் கேட்கிறீங்க என்று நினைத்துக் கொண்டு , பால் இல்லை என்பதற்கு "பேரு இஜ்ஜி " என்று சொல்லி இருக்கிறாள் . ஒரே சிரிப்பு .