முதுமை என்பது இனிமை என்பது மாறி, முதுமைபோலக் கொடுமை எதுவும் இல்லை என்கிற நிலைமை இந்தியாவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் மணிவிழா (60-ஆவது வயதைக் கடக்கும்போது கொண்டாடப்படும் சம்பிரதாய சஷ்டியப்தபூர்த்தி) காண்பது என்பது மிகப்பெரிய அதிசயமாகவும், அதிர்ஷ்டமாகவும் கருதப்பட்டது. பல மாநிலங்களில் பணி ஓய்வு பெறும் வயது 55-ஆக இருந்தபோது, அறுபதைக் கடப்பது என்பது அரிதினும் அரிதாக ஆங்காங்கே நடைபெறும் சம்பவமாக இருந்தது. இப்போது 80 வயதைக் கடக்கும் சதாபிஷேகம் சர்வ சாதாரணமாகவும் பரவலாகவும் கொண்டாடப்படுகிறது. மத்திய அரசின் புள்ளிவிவரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்று நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. 2001-2011 இடையிலான பத்து ஆண்டுகளில், இந்தியாவில் அகவை அறுபதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 35.5% அதிகரித்திருக்கிறது. அதாவது, 2001-இல் 7.66 கோடியாக இருந்த மணிவிழா கண்ட முதியவர்களின் எண்ணிக்கை 2011-இல் 10.38 கோடியாக உயர்ந்திருக்கிறது. முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே நேரத்தில், ஆறு வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை முதல் முறையாகக் குறைந்திருக்கிறது, 19.38 கோடியிலிருந்து 15.88 கோடியாக! கேரளம், தமிழ்நாடு, கோவா ஆகிய மூன்று மாநிலங்களில் ஆறு வயதுக்குள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையைவிட, அறுபதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை அதிகம். 2021-இல் நடக்கவிருக்கும் அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குள் ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இந்தப் பட்டியலில் சேர்ந்துவிடும். முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்குப் பரவலாக மருத்துவ வசதிகள் சென்றடைந்திருப்பது ஒரு முக்கிய காரணம். அதுமட்டுமல்லாமல், உடல்நலம் பேணுதல் குறித்த விழிப்புணர்வு நாற்பது வயது கடந்தவர்களுக்கு அதிகரித்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறதே, அது ஏன்? அதிக குழந்தைகள் வேண்டாம், ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்வோம் என்று பெற்றோர்கள் நினைப்பது ஒரு காரணம். திருமண வயது குறைந்தது 21-ஆக இருக்க வேண்டும் என்று பரவலாக விளம்பரம் செய்துவந்த காலம்போய், இப்போது சராசரி திருமண வயது 30 என்றாகி விட்டிருப்பதும், குழந்தைகள் குறைவாக இருப்பதற்கு இன்னொரு காரணம். முறையற்ற நவீன வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் கருத்தரிப்பு சக்தியைக் குறைத்து விட்டிருப்பதுகூட காரணமாக இருக்கலாம். இந்தியாவில் இருந்த கூட்டுக் குடும்ப முறையும், அதிகம் குழந்தைகள் இருந்ததும், உறவுகளின் பிணைப்பும் முதியோர்களுக்கு வயோதிகத்தில் பாதுகாப்பும் ஆதரவும் தந்தன. அரை நூற்றாண்டுக்கு முன்னால் ஏற்பட்ட குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு, இன்றைய முதியோர்களை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளியிருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்கும் நிலையில் அவர்களை நன்றாகப் படிக்க வைக்க பெற்றோர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை எல்லாம் செலவழித்து விடுகிறார்கள். குழந்தைகளும் வெளிநாடுகளில் வசதியாக வாழ்கிறார்கள். அவர்களுடன் சென்று வாழ, அங்குள்ள சூழ்நிலைகளும் பழக்க வழக்கங்களும் பெற்றோருக்கு ஒத்துவருவதில்லை. எப்போதாவது வரும் குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும் எதிர்பார்த்து வேதனையுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் முதியோர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு கிராமங்களில் இருந்த சொத்துகளையும் வீட்டையும் விற்றுவிட்டு பட்டணத்துக்குக் குடியேறுபவர்களின் நிலைமை இதைவிட மோசம். குழந்தைகள் வளருவது வரை பெற்றோர்களின் உதவி தேவைப்படுகிறது. அதற்குப் பிறகு பெற்றோர் சுமையாகி விடுகிறார்கள். தாங்கள் உதாசீனப்படுத்தப்படுவதைப் பார்த்து வேதனையோடு காலத்தைக் கடத்துவதல்லாமல் முதியோருக்கு வேறு வழியில்லை. வீட்டையும் சொத்தையும் விற்ற பணத்தில் மகன் பெயரிலோ, மருமகள் பெயரிலோ அடுக்குமாடிக் குடியிருப்பில் "பிளாட்' வாங்கிய முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியபடி வாழ்பவர்கள் பலர். முதியோர் எண்ணிக்கை உயர்ந்திருக்கும் அளவுக்கு முதியோர் இல்லங்கள் அதிகரிக்கவில்லை. ஜெர்மனி, ஸ்வீடன், ஜப்பான் போன்ற நாடுகளில் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கைவிட அதிகமாக முதியவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அரசு எல்லா வசதிகளும் உடைய முதியோர் இல்லங்களை அமைத்துப் பாதுகாக்கிறது. இந்தியாவில் முதியோர் மக்கள்தொகை வெறும் 8.6% தான் என்றாலும், வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே வசதியான முதியோர் இல்லப் பாதுகாப்பு கிடைக்கிறது. கிராமப்புறங்களிலும் வறுமையில் வாடுபவர்கள் மத்தியிலும் வயோதிகம் பலரை இரந்து உண்ணும் நிலைமைக்கு தள்ளுகிறது. முதியோர் இல்லங்கள் அதிகரிப்பதற்குப் பதிலாக, தெருவுக்குத் தெரு கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்து வருவது வேதனையிலும் வேதனை. முதியோர் இல்லங்களும், முதியோர் மருத்துவமும் பரவலாக எல்லாத் தரப்பினருக்கும் கிடைக்க அரசும், தன்னார்வத் தொண்டுநிறுவனங்களும் முனைப்புடன் செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும். 10.38 கோடி முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 15.88 கோடி ஆறு வயதுக்குள்பட்ட குழந்தைகளைப் போலல்லாமல் முதியவர்கள் அனைவரும் வாக்காளர்கள். அவர்கள் தேர்தலில் வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்தும் சக்தி படைத்தவர்கள்! Jayasala 42 Courtesy:- Dinamani
Dear Jayasala maam, A beautifully brought out post on the need for elder care especially by Govt. agencies. Yes, as u say, everywhere there are old age homes/retirement communities springing up but these are only by Private agencies, real estate business with the sole aim of cashing in of the growing trend of parents of NRIS living alone in India, and a potential target for financial gain. What is the need of the hour is Government taking serious steps to fill in this demand so that the middle and lower income groups also can have a roof over their heads and live with dignity in their twilight years. I am glad to see it has been published in the Dinamani paper - hopefully it should reach the places that matter.
It may take nearly 50 years for the govt to divert its attention to this issue.By the time many will be orphans. jayasala 42
ம்.. கட்டுரையில் சொல்லி இருப்பது போல முதியோர்களை பாதுகாக்க நல்ல முதியோர் இல்லங்களும் சட்ட திட்டங்களும் நம் நாட்டிலும் அயல்நாடுகள் போல வந்தால் ரொம்ப நல்லா இருக்கும் தான்........ஆனால் ,இதையெல்லாம் கவனிக்க ஆட்சியாளர்களுக்கு நேரம் எது?..தங்கள் தங்கள் பதவிகளைத் தக்கவைத்துக்கொள்வதிலும் தங்களுக்கும் சொத்து சேர்ப்பதிலுமே கவனம் கொண்டிருக்கிறார்களே!............