அன்று ஞாயிற்றுக்கிழமை. சுரேஷ் தன்னுடைய மனைவி விஜயா மற்றும் மகன் பாலுவுடன் ஒரு நிச்சயதார்த்தத்திற்குப் போய்விட்டு வந்தான். நிச்சயதார்த்தம் மாலை 3 மணிக்கு முடிந்தது. கொஞ்சம் வித்தியாசமாக, மூன்றேகாலுக்கு இலை போட்டு சாப்பாடு போட்டு விட்டார்கள். மூவரும் சாப்பிட்டு விட்டு , சுமார் நாலரை மணிக்கு மண்டபத்தை விட்டு வெளியே வந்தார்கள். எதிரில் இருந்த பஸ்ஸ்டாப்பில் போய் நின்று கொண்டார்கள். பாலு யுகேஜி படிக்கிறான். அவனுடைய பள்ளிக்கூடம் அந்த மண்டபத்துக்கு பக்கத்திலேயே இருந்தது. பாலு தினமும் ஒரு வேனில் வீட்டிலிருந்து ஸ்கூலுக்கு சென்று வருவான் . அதனால் பாலுவுக்கு அந்த இடத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்கான வழி நன்றாகத் தெரியும். அவர்கள் மூவரும் பஸ்ஸ்டாப்பில் சுமார் அரை மணி நேரம் நின்றிருந்தார்கள் .ஒரு பஸ்ஸும் வரவில்லை. ஒரு ஆட்டோ கூட வரவில்லை. அப்போது ஒரு கார் அவர்களுக்கு பக்கத்தில் வந்து நின்றது . என்ன ஆச்சரியம்! சுரேஷுடைய நண்பர் துரை காருக்குள் இருந்து கூப்பிட்டார்,” சுரேஷ் எல்லோரும் உள்ளே வந்து உட்காருங்கள்”, என்றார். சுரேஷ் தனது நண்பரிடம்,” நல்லவேளையப்பா, தேங்க் காட் ! கடவுள் தான் உன்னை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார். அரை மணி நேரத்திற்கும் மேலாக இங்கே பஸ்சுக்காக நின்று கொண்டிருக்கிறோம் .நல்லவேளையாக நீ வந்தாய் . ரொம்ப தேங்க்ஸ் அப்பா,” என்றார். மூவரும் காரில் ஏறிக் கொண்டார்கள். சுரேஷ் முன்ஸீட்டில் தனது நண்பருடன் உட்கார்ந்துகொண்டார். பின் ஸீட்டில் விஜயாவும் பாலும் உட்கார்ந்து கொண்டார்கள். சுரேஷ் தனது நண்பரிடம்,” west indies,விக்கெட்டு, பவுண்டரி, சிக்ஸர்”, என்று வெகு உற்சாகமாக கடைசிவரை பேசிக்கொண்டே வந்தார். துரை சிறிது நேரம் வரை உற்சாகமாக சுரேஷுடன் பேசிக்கொண்டே வந்தார் ;அதன்பிறகு பேசவே இல்லை. கார் கிளம்பிய உடனேயே பாலு தனது சீட்டில் இருந்து எழுந்து நின்று கொண்டான் . சற்று தூரம் கார் சென்ற பிறகு,” டிரைவர், ரைட்ல போங்க”என்றான். அதன் பிறகு ஒரு சிக்னல் வந்தது .அந்த இடம் வந்ததும் ,”டிரைவர் நேரா போங்க” என்றான். சுரேஷ் இதை எல்லாம் கவனிக்கவே இல்லை ; வெகு உற்சாகமாக கிரிக்கெட்டைப் பற்றி பேசிக்கொண்டே வந்தார். சுரேஷின் மனைவி விஜயா தான் அதை கவனித்தாள் உடனே , “ பாலு ! அப்படியெல்லாம் சொல்லக்கூடாது மரியாதையாக அங்கிள் என்று சொல்ல வேண்டும்”, என்றாள். அடுத்ததாக நாலு ரோடு சந்திப்பு வந்தது .உடனே பாலு,” டிரைவர் அங்கிள், leftல போங்க,” என்றான். விஜயா மறுபடியும் பாலுவிடம் ”அப்படியெல்லாம் சொல்லக்கூடாது .அங்கிள் என்று தான் சொல்ல வேண்டும்”, என்றாள். அடுத்ததாக குறுக்கே ஒரு ரோடு வந்தது உடனே பாலு” டிரைவர் அங்கிள், வலது பக்கம் போங்க”, என்றான். அப்பாடா!ஒருவழியாக சுரேஷின் வீடு வந்து சேர்ந்தது. மூவரும் காரில் இருந்து இறங்கிகொண்டார்கள் . சுரேஷ் தனது நண்பரிடம் நன்றியை தெரிவித்துக் கொண்டு விடைபெற்றுக்கொண்டார். கார் கிளம்பிச்சென்று விட்டது. ---------------------------------- அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் துரை சுரேஷுக்கு போன் பண்ணுவதுமில்லை ,நேரிலும் பேசுவதில்லை. ஏன்,அவர்கள் இருக்கும் தெருவின் பக்கம் கூட காரில் வருவதில்லை,இரண்டு தெரு தள்ளி ஊரைச் சுற்றிக் கொண்டுதான் ஆபீசுக்கு போகிறார்.