நாற்று நட்டு முடித்ததும் பயிர் வளர்ந்து விடும் என்று வயலுக்கு செல்லாமல் இருக்க கூடாது .தினம் ஒரு முறை வயலை பார்வைஇட வேண்டும் .பயிர்களுக்கு இடையே வேறு பல செடிகள் முளைத்திருக்கும் .அவற்றை வேருடன் பிடுங்கி எடுக்க வேண்டும் .இல்லை என்றால் பயிருக்கு போடும் உரம் அனைத்தையும் இந்த செடிகள் உறிஞ்சி விடும் .நமக்கு தரமான நெல் கிடைக்காது .ஆகவே களை எடுத்தல் மிக முக்கியம் .அதன் பின் பயிர்களுக்கு தேவையான நீர் பாய்ச்ச வேண்டும் .வயல் வறண்டு விடாமல் எப்போதும் ஈரப்பதத்தோடு இருக்க வேண்டும் .முன்னம் சொன்னது போல் வரப்புகளுக்கிடையே நீர் ஓடி கொண்டு இருக்கும் .அவரவர்கள் தங்கள் வயலுக்கு தேவையான நீர் பாய்ச்ச முதலில் வரப்பை ஒரு அடி நீளத்துக்கு வெட்டி எடுப்பார்கள் .அந்த இடைவெளி வழியாக நீர் வயலுக்குள் பாய்ந்து கொண்டு இருக்கும் .தேவையான நீர் நிறைந்ததும் வெட்டிய வரப்பை மீண்டும் மண் கொண்டு அடைத்து சீர் செய்து விடுவார்கள் .இதை வாய்மடை என்று சொல்வோம் . அந்த காலத்தில் நீர்வரத்துக்கு மிக அருமையான வழி வகுத்து வைத்திருந்தார்கள் .மலையில் விழும் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து வரும் .ஆற்றில் இருந்து வாய்க்கால்கள் வெட்டி ஊருக்குள் இருக்கும் குளங்களுக்கு வந்து சேரும் .அங்கிருந்து சிறு வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்கு தேவையான நீர் கொண்டு செல்வார்கள் .இதனால் விவசாயம் நன்றாக இருந்தது .பசி பட்டினி பஞ்சம் இல்லை .இன்று மலையில் உள்ள மரங்களை அழித்ததால் மழை இல்லை .மழை பொய்த்ததால் ஆறு குளங்கள் வறண்டு விட்டன. விவசாயம் செய்ய முடியவில்லை .அதனால் விளைநிலங்களை விற்று வீடு கட்டுகிறார்கள் .இதுவே தன் கண்ணை தானே குத்தி கொள்வதற்கு சமம் .கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் மனித இனத்தை என்ன சொல்லி அழைக்க முடியும் .இயற்கை நம்மை வஞ்சிக்க வில்லை .நாம் தான் இயற்கை வளங்களை அழிக்கிறோம்
நல்ல பதிவிற்கு நன்றி பெரியம்மா ! மலையும்,ஆறும்,வாய்க்காலும்,வயல் வரப்புமென்று அழகான படங்கள் ! நற்பயிர்களுக்கிடையே,களைகளும் தண்ணீரை உறிஞ்சி வாழ்வது வயல்களில் மட்டுமல்ல,இந்த உலகிற்கும் பொருந்தும். நற்குணம் நிரம்பிய உயிர்களுடன் ,பிறருக்குத் துன்பம் தருவதொன்றேக் குறியாய் வாழும் சில பிறவிகளும் இருக்கத்தானே செய்கின்றன,இந்த பூமியாகிய வயலில் ? அவ்வப்போது அவற்றைக் கலையெடுத்தால் தான் பயிர்கள் செழித்து வளரும்.கண்ணன் கீதையில் உரைத்ததை நினைவூட்டுவது போலுள்ளது,இவ்வரிகள்."எப்போதெல்லாம் உலகில் தீமை அதிகரித்து,நல்லவர்களுக்குத் துன்பம் உண்டாகிறதோ-அப்போதெல்லாம் நான் பூமியில் அவதரித்துத், தீமைகளை ஒழித்து,நல்லவர்களைக் காப்பேன்" என்று சொல்லியிருக்கிறானல்லவா, அந்த மாயன் ? முற்றிலும் உண்மை. மனிதர்களாகிய நாம் இயற்கையை அழிக்கத் தொடங்கியதிலிருந்து நமது அழிவினை நாமே அழைத்துக் கொண்டு விட்டோம். வானம் பார்த்த வயல் பூமியாகிய நம் ஊர்ப்புறங்களில் "மழை பொய்த்தும் கெடுக்கும், பெய்தும் கெடுக்கும்" என்று சொல்வதுண்டு. ஆயினும் அதை ஒப்ப மனம் வரவில்லை. மழை பொழியும் காலத்தில் அதை சேமித்து வைக்க நம் முன்னோர்கள் கட்டிய அணைகளைப் போல வேறெதையும் உருவாக்கத் தவறி விட்டோம். மாறாக நீர் புகும் இடங்களெல்லாம் தூர்த்து,ஏரியை ஏரியாவாகவும் ,ஆறுகளைக் கழிவு சுமக்கும் சாக்கடைகளாகவும், குளம் குட்டைகளைத் தகர்த்துக் குடியிருப்புகளாகவும் மாற்றிவிட்டோம். இந்தத் தவற்றை எந்தவிதத் தயக்கமும், சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையுமின்றித் தொடர்ந்து செய்வதில் அரசு,அரசியல் கட்சிகள்,அதன் தலைவர்கள் , அரசு அதிகாரிகள், பணமொன்றேப் பிரதானமென்று கொள்ளும் வியாபாரத் தனி மனிதர்கள், நுகர்வோராகிய பொதுமக்கள் ஏன்- நீதித்துறை,காவல்துறை இப்படி அனைவருக்கும் பங்குண்டு. இரு ஆண்டுகள் முன்னர் நடந்த சம்பவத்திலிருந்தும் நாம் எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லையென்பதை,நமது மாநிலத் தலைநகரில் இப்போது பெய்து வரும் மழையின் காரணமாய்ப் பெருக்கெடுத்த வெள்ளம் ஓடும் சாலைகளும்,புறநகர்ப் பகுதிகளும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் எண்ணினால் பெருமூச்சுத்தான் எழுகிறது. தங்களின் அடுத்தப் பதிவிற்குக் காத்திருக்கிறேன் !
@PavithraS நன்றி பவித்ரா .பணமே பிரதானம் என்று நினைக்கும் கயவர்களால் மக்கள் தான் அவதிப் படுகிறார்கள் .ஆனால் மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை .கை நீட்டி பணம் வாங்காமல் இருந்தால் கை நீட்டி தப்பு செய்தவர்களை கேள்வி கேட்க முடியும் .காலம் மாறுமா என்று தெரியவில்லை .
இன்று இந்த பதிவையும் படித்தேன். "வாய்மடை" என்ற ஒரு புதிய வார்த்தையும் இன்று கற்றுக்கொண்டேன் ஆம், நாம் பூமி தாயை மிகவும் வஞ்சிக்கிறோம். பிறகு புலம்புகிறோம். நீங்கள் சொன்னதஹு போல் "கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் " தான்.