'கட்டையிலே போறவளே! மணி 7 ஆகப் போகிறது. இன்னுமா தூக்கம். கழுதை வயதாகிறது. சீக்கிரம் எழுந்திருக்கனும்னு பொருப்புணர்ச்சி கொஞ்சம் கூட இல்லையே’. தினமும் எனக்கு என் பாட்டியிடமிருந்து காலையில் கிடைக்கும் சஹஸ்ரநாம அர்ச்சணை எனக்கு பழகி விட்ட விஷயம். அதனால் இன்னும் கொஞ்சம் இழுத்து போர்த்திக் கொண்டு குட்டி தூக்கம் போட ஆரம்பித்தேன். சின்ன ஹாலில் எல்லோரும் நடமாடும் இடத்தில் படுதத்திருப்பது என் பாட்டிக்கு மட்டுமென்ன- யாருக்குமே பிடிக்காது தான். .நள்ளிரவு 1 மணி வரை படிக்கும் எனக்கு காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது என்பது பிரம்மபிரத்யனம். சின்ன வீடாதலால் படுப்பதற்கென்று தனி அறை எதுவும் கிடையாது. கனவுககளில் கனவு கன்னி ஹேமா மாலினி விதம் விதமான ஜிகினா புடவைகளில் மரத்தை சுற்றி டூயட் பாடியபடியே ஒடினாள். திடீரென்று குளத்தில் குதித்தாள். அவள் குளித்தால் எனக்கு ஏன் குளிர்கிறது? சில்லென்று தண்ணீர் பட்டு நான் என் கனவுலகத்திலிருந்து வெளியே வந்தேன். உடம்பெல்லாம் குளிரில் நடுன்கியபடியே தலையை நிமிர்த்தினேன். எதிரில் என் பாட்டி கோபத்தோடு பக்கெட்டும் தண்ணியுமாக நின்று கொண்டிருந்தாள். ’எருமை மாட்டையெல்லாம் இப்படித்தான் எழுப்ப வேண்டும் ’எண்ற படியே நகர்ந்தாள். பிரஷ்ஷும் பேஸ்ட்டும் கையில் எடுத்துக் கொண்டு கொல்லையில் துணி துவைக்கும் கல்லின் மீது அமர்ந்து கொண்டேன். வேலியில் படர்ந்து இருந்த கலர் கலரான சங்கு புஷ்பங்களை ரசித்தபடியயே பல்லை தேய்த்தேன். இலைகளின் நுனியில் மழையில் பெய்த தண்ணீர் துளிகள் சூரிய வெலளிச்சத்தில் வைரங்கள் போல மின்னின. ’சனியனே! பல்லை தேய்க்க எத்தனை நேரம். அந்த பக்கத்து வீட்டு தடியனோடு என்ன பேச்சு', உள்ளேயிருந்து வந்த வார்த்தைகள் என்னை பக்கத்து வீட்டை பார்க்க வைத்தன. அங்கிள் தன் வீட்டில் தன் ஸ்கூட்டரை மும்முரமாக துடைத்துக் கொண்டிருந்தார். பாட்டி எதற்கு இப்படி கூப்பாடு போடுகிறாள். 15 வயது ஆன எனக்கு சில விஷயயங்கள் புதிராகவே இருந்தன. பாட்டி போட்டுக் கொடுத்த காபியை குடித்து விட்டு, பின்பு குளித்து விட்டு ஸ்கூலுக்கு செல்ல தயரானேன். என் அம்மாவும் ஆபீசுக்கு செல்ல தயாரானாள். தட்டைபோட்டுக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தோம். தட்டில் சாதம் போட்டவுடன் என் அம்மா என் பாட்டியைப் பார்த்து ‘சாதம் இன்னும் வேக வேண்டும். இப்படி சமைத்தால் எப்படி சாப்பிட முடியும்’ என்றாள். அவ்வளவு தான். பாட்டிக்கு வந்ததே கோபம். கையிலிருந்த கரண்டியை அப்படியே வீசினாள். ஹாலில் அப்பொழுதுதான் குளித்து விட்டு சந்தியாவந்தனம் பண்ண உட்கார்ந்து இருந்த என் தம்பி, கண கச்சிதமாக அதை பிடித்தான். சூப்பர் காச்சுடா என்ற என்னை, என் பாட்டியின் கைகள் பதம் பார்த்தன. அதற்கு பின் சாப்பாடு இறங்கவில்லை. 'அப்பனை விழுங்கியதெற்கெல்லாம் வாய் எதற்கு', என்று என் அம்மா மீது உண்டான கோபத்தை என் மிது திருப்பினாள் பாட்டி. டிபன் பாக்ஸை எடுதத்துக் கொண்டு ஸ்கூலுக்கு கிளம்பினேன். அப்பொழுது பார்த்து எதிர் வீட்டு நாணு கையில் அன்றைய தின பத்திரிக்கையுடன் வீட்டிற்க்கு வந்தான். என் தாத்தாவிற்கு ஓசியில் பேப்பர் படிப்பது என்பது பிடித்த விஷயம். அதற்குள் பாட்டி ‘கண்ட தடி மாடுகளுடன் என்ன பேச்சு’ என்றபடியே வாசலுக்கு வந்து விட்டாள். பாவம், நாணுவின் காதுகளில் பாட்டியின் வார்த்தைகள் விழுந்தனவோ என்னவோ. அவன்’ பேப்பர் கொடுக்க வந்தேன் பாட்டி’ என்ற் படியே ஒரு நிமிடம் கூட நிற்காமல் ஓடி விட்டான். கூண்டை விட்டு கிளி பறப்பது போல நான் எனக்கு சிறிது நேரம் கிடைக்க போகும் சுதந்திரத்தை எண்ணி மகிழ்ந்து ஸ்கூலுக்குக் கிளம்பினேன். காலங்கள் மாறின. எனது 20வது வயதில் என் திருமணம் உற்றார் உறவினர் சூழ இனிதே நடந்தது. மனதிற்குகந்த கணவர் கிடைத்த சந்தோஷத்தில் எனக்கு உலகமே ரம்மியமாக இருந்தது. இதோ வெளியில் என் கணவருடன் முதன் முதலாக வெளியில் கிளம்பப் போகிறேன். ‘அம்மாவிற்கு ஹை ஹீல் செருப்பு இல்லாமல் நடக்க வராதோ. பாஷன் ஷோ மாடல்கள் செய்ய வேண்டிய விஷயங்களை குடும்பப் பெண்கள் செய்யக்கூடாது.’ செருப்போடு என் ஆசைகளையும் கழற்றி போட்டுவிட்டு என் வாழ்க்கை பயணத்தை தொடர்கிறேன்.. ‘இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான், .உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்’. எங்கிருந்தோ ஒலித்தது அந்த பாடல்.