தெருவெல்லாம் பிளந்திருக்க தீ பற்றியது என் தேகமெல்லாம். ஒரு சொட்டு நீர் தேடி ஓடியது கால்களெல்லாம். எரிகிறது தேகம், உறிகிறது உள்ளம். ஓடுகிறேன் ஒரு பொட்டு ஈரம் தேடி ஓடுகிறேன். எல்லை தென்படா தருணம் இது. எவ்விடம் செல்வேன் என்று தெரியாது, அடி எடுத்து வைக்கிறேன், ஆறு வயது ஆணிக் கால்களுடன். வாசகம் படிக்க நேரமில்லை, வாழ்வில் ஜெயிக்க தோன்றவில்லை. வாய் வறண்டிடும் போது, வழியில் துளி நீர் தவிர ஏதும் தோன்றவில்லை. அறுசுவை உணவு வேண்டாம். ஆடம்பர வாழ்க்கை வேண்டாம். அழகிய மாளிகை வேண்டாம். அரை வயிறு சோறு கூட வேண்டாம். தவித்த வாய்க்கு தண்ணீர் போதும். தடம் மறந்த கால்களுக்கு ஈரத் தடயம் தந்தால் போதும். ஒவ்வொரு சொட்டாய் உதிர்த்தால் கூட போதும். உயிரை உடலில் தக்க வைப்பதே போதும். மறுகியது நெஞ்சம். ஆறு வயது வலிகளை யாரிடம் போய் உரைப்பேன். தேறிய கால்களும் உறுதியான உள்ளமும் பெற போதவில்லை போலும் என் வயது. உறிந்த கால்களோடு ஓடும் நான், உங்கள் பிள்ளையாக இருப்பின் உங்கள் உள்ளம் நிம்மதியாய் உலவிடுமா இவ்வுலகில்..? கவலை வேண்டாம் நான் உங்கள் பிள்ளை இல்லை-ஆனால் உங்கள் சந்ததி தான்-ஐம்பது ஆண்டுகட்கு பின்பு. இன்று உங்களின் அலட்சியம், நாளைய எங்களின் மரணம்…!
தமிழ் இளவரசி, என்ன இப்படியான காட்சிப்பதிவையும்,கவிதை வரிகளையும் போட்டு வாசகர் விழிகளைப் பெருகச் செய்கிறீர்களே ? பெருகி என்ன செய்ய ? கண்ணீரால் இச்சிறுவனைப் போன்ற நம் எதிர்கால சந்ததியினரின் உயிர்தாகம் தீர்ந்திடுமா ? நம் கண்களில் வழியும் நீர், நெஞ்சில் எண்ணமாய் வழிந்து, செயலிலும் இறங்கினால் தான் சொல்லிக்கொள்ள நாளை சந்ததி இருக்கும். இயற்கையைச் சுரண்டியே பழகிவிட்ட சுயநலமிகள் சிந்திக்க வேண்டும், இல்லையேல் மிகப்பெரும் சோதனையை சந்திக்க நேரிடும். எக்கணமும் பிரியும் உயிர் உடல்கூட்டில் இருக்கும் போதே, அக்கறையாய் செயல்படுதல் இக்கணத்தில் அவசியமே ! உங்களது சமூகப் பார்வைக்கு ஓர் சல்யூட் !