சொல்விளையாடல் 1. தொடும்-தொடலை (கலிவிருத்தம்) (பதினாறு வயதில் மாண்ட ஒரு சிறுவனின் ஈமச் சடங்கில் இரு புலவர்களுக் கிடையில் உரையாடல்) தொடுமெனச் சொன்னார் தொடலை யென்றேன் சுடுமெனச் சொன்னார் சுடலை யென்றேன் அடுமெனச் சொன்னார் அடலை யென்றேன் விடுமெனச் சொன்னார் விடலை யென்றேன்! [தொடலை = மாலை; அடலை = சாம்பல்; சுடலை = சுடுகாடு; விடலை = பதினாறு வயதுச் சிறுவன்] பொருள்: புலவரவர் தொடும் பிணத்தை என்றார்; நான் தொடலை (மாலை) என்றேன். சுடும் நெருப்பு என்றார்; ஆம், சுடலை (சுடுகாடு) என்றேன். அடும் (அழித்துவிடும் ) என்றார்; முடிவில் அடலை (சாம்பல்) என்றேன். சரி விடும் என்றார்; விடலை (பதினாறு வயதுச் சிறுவன்) என்றேன்! --ரமணி, 16/03/2017 *****
சொல்விளையாடல் 2. உழல்-உழலை (கலிவிருத்தம்) உழல்கிறேன் நாளும் கழுத்தில் உழலை சுழல்கொளும் மனத்தில் இல்லை சுழலை அழல்வணன் உளத்திலை விரைவின் அழலை கழல்கள் பணியேன் வினைகளோ கழலை! [உழலை = செக்கு மரத்தடி; சுழலை = வஞ்சகம்; அழல்வணன் = நெருப்புபோல் வண்ணம்கொண்ட சிவன்; அழலை = களைப்பு; கழலை = கழுத்து, வயிற்றில் வரும் பெருங் கட்டி நோய்] --ரமணி, 16/03/2017 ***** சொல்விளையாடல் 3. புத்தகம்-முத்தமிழ் (கலிவிருத்தம்) புத்தகம் வளர்த்ததால் புத்தகம் விட்டேன் முத்தமிழ்ச் சொல்லற முத்தமிழ் மனத்தில் எத்தனம் போதும் எத்தனமும் வீணெனும் வித்தகம் எழுந்து வித்தகம் விழுந்ததே. பொருள் புத்து-அகம் வளர்த்ததால் புத்தகம் விட்டேன் முத்தமிழ்ச் சொல்லற முத்து-அமிழ் மனத்தில் எத்தனம் போதும் எத்-தனமும் வீணெனும் வித்து-அகம் எழுந்து வித்தகம் விழுந்ததே. --ரமணி, 16/03/2017 *****
சொல்விளையாடல் 4. சிந்தனை-எந்திரி (கலிவிருத்தம்) சிந்தனை மனத்தில் சிந்தனை குறைத்தே எந்திரி வாழ்வில் எந்திரி கண்டதில் கந்துகம் மனத்தில் கந்துகந்து நிற்க வந்தது போக வந்தது நின்றது! பொருள் சிந்து (கடல்) அனை (அனைய = போன்ற, கடைக்குறை விகாரம்) மனத்தில் சிந்தனையைக் குறைத்தே எந்து-((என்ன, எப்படி என்று) இரி (ஓடும்) வாழ்வில், எந்திரி (பொம்மலாட்டப் பாவையை ஆட்டுவிப்போனைக்) கண்டதில் கந்துகம் (மனக் குதிரை) மனத்தில் கந்து (தூண்) உகந்து நிற்க வந்தது எல்லாம் போனது ஆகி, இப்போது வந்த-அது (இந்த ஞானம்) நின்றது! --ரமணி, 16/03/2017 *****
#ரமணி_பிரதோஷம் பிரதோஷத் துதி: ஒத்திவைத்தே ஓய்ந்தேனே! (குறும்பா) (சிவன்: பிரதோஷத்துதி) ஒத்திவைத்தே ஒத்திவைத்தே ஓய்ந்தேனே சித்தமெலாம் பித்தேறி மாய்ந்தேனே .. கண்ணெதிரே தெரிவதெலாம் .. எண்ணெழுத்தாய் அறிவதனால் அத்தனையும் உண்மையெனக் காய்ந்தேனே. ... 1 கற்பனையே விற்பனமாய்க் கொண்டேனே அற்பமெலாம் அற்புதமாய்க் கண்டேனே .. ஆன்மவொளி பேணேனே .. பான்மையதில் காணேனே சிற்சபையின் சன்னிதியை அண்டேனே. ... 2 அஞ்செழுத்துக் காதொலிக்கும் நேரமெலாம் நெஞ்செனிலே ஏதேதோ வேருறுமே .. வேதவொலிப் பண்ணிசையில் .. காதலிலே கண்ணசையும் கொஞ்சமேனும் ஏற்றமிலாச் சீரழிவே. ... 3 மூவறமும் நிலைநிற்கும் வாழ்வினிலே ஆவதெலாம் ஆனதெனும் தாழ்வினிலே .. முத்திநிலை நாடேனே .. அத்தனுனைத் தேடேனே போவதுவும் வருவதுவும் ஊழ்வினையோ? ... 4 கத்துகடல் நஞ்செடுத்தே உண்டவனே முத்தெனக்க ழுத்தினிலே கொண்டவனே .. என்னுளத்தில் தெளிவுறவே .. உன்னுருவின் ஒளியருளே சத்தியத்தின் தத்துவமாய் நின்றவனே. ... 5 --ரமணி, 01/12/2017 *****
ஐயா,வருக ! மீண்டும் கவிமழை பொழிக ! வழமையே போல் இக்குறும்பாவில் பதிந்த இறைச்சிந்தனையும்,சொற்றிறமும் அருமை,இனிமை ! மிக்க மகிழ்ச்சி,நன்றி ! என்றும் அன்புடன், பவித்ரா
#ரமணி_கார்த்திகை கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்து (கும்மிப் பாடல்) வானைய ளாவியே பூமியில் ஆழ்ந்திடும் . வன்னெடுஞ் சோதியாய் அண்ணலெழ ஏனென்று மாலயன் தாள்முடி தேடியே . ஏதும்கா ணாதருள் பெற்றதினம் ஊனையு ருக்கியே உள்ளொளி தந்திட . ஊரெங்கும் தீபத்தை யேற்றிவைப்போம் கானமும் பாடியே கைத்தாளம் கொட்டியே . கால்நடம் செய்யவே கும்மியடி! ... 1 கார்த்திகை மாதரும் பாவகி யாய்வந்த . கந்த னுருவாறும் பேணிடவே பார்வதி கண்ணுற்றே ஆறுமு கத்தையோர் . பாலனாய் சேர்த்தன்னை யானதினம் ஆரியை சக்தியாய் ஆர்த்தெரு மைத்தலை . தானவ னைக்கொன்று காத்திடவே ஆரணன் அன்னையைத் தன்னுடல் சேர்த்தவன் . அர்த்தநா ரீசனாய் ஆனதினம்! ... 2 குத்துவி ளக்ககல் தீபங்கள் வீடெங்கும் . கூர்ச்சுடர் வீசவே ஏற்றிவைப்போம் நத்திந மக்கினி மைதரும் பண்டங்கள் . நைவேத்தி யம்செய்தே உண்டிடுவோம் இத்தரை மீதுயிர் யாவையும் நற்கதி . இவ்வொளி யில்பெற்று வாழநாமும் சித்த மொளிபெற்றே சின்னத்த னம்விட்டுச் . சின்மயம் காணவே கும்மியடி! ... 3 --ரமணி, 05/12/2014, கலி.19/08/5115 Deepam Legends A R U N A C H A L A S A M U D R A - Karthigai - Narratives - Deepam Legends Significance of Karthigai Deepam *****
பிரதோஷத் துதி: எவ்வித மெனினும் காத்திருப்பேன்! (அறுசீர் விருத்தம்: விளம் மா காய் => அரையடி) ஆட்டுவித் தாலும் ஆடாத . அகமென தாகில் என்செய்வேன் கூட்டுவித் தாலும் கூடாத . குணமென தாகில் என்செய்வேன் தேட்டுவித் தாலும் தேடாத . தினவென தாகில் என்செய்வேன் ஓட்டுவித் தாலும் ஓடாத . ஒட்டுத லாகில் என்செய்வேன்? ... 1 காட்டுவித் தாலும் காணாத . கல்மன மாகில் என்செய்வேன் பாட்டுவித் தாலும் பாடாத . பண்பென தாகில் என்செய்வேன் நாட்டுவித் தாலும் நாடாத . நலிவென தாகில் என்செய்வேன் பூட்டுவித் தாலும் பூட்டாத . புத்தியைக் கொண்டேன் என்செய்வேன்? ... 2 இவ்விதம் என்னை இயக்குவதும் . ஈசர்-உம் செயலாய் எண்ணுவதோ செவ்விதின் என்னைச் செப்பனிடும் . திருவுளம் இந்நாள் உமக்கிலையோ வெவ்வினை சூழ வாழ்வதுதான் . விதியெனக் கென்றே சொல்வீரோ எவ்வித மெனினும் காத்திருப்பேன் . எண்குணன் என்னை ஆட்கொளவே! ... 3 --ரமணி, 15/12/2017 *****