இந்நாட்கள் இன்னும் நீளாதா? இருவர்க்கும் ஆசை இருக்கிறது. நில்லா இளமையிலும் இதுவே தான் நிலைத்திருந்தது. சிரிப்பும் வருகிறது. எது தேவை என்று என்றைக்கு நாம் தீர்மானித்தோம்? நினைவிருக்கிறதா? அதை அடைந்தும் பிறிதை பெரிதென்றோம். அதன் பின்னும் ஓடுதல் நிற்கிறதா? பிள்ளைகளும் புரிந்து கொண்டார்கள். பிறிதில் தனைப் பொருத்திக் கொண்டார்கள். நாம் கூடி மகிழ்ந்த நாட்களையே நினைவிலும் இருத்திக் கொண்டார்கள். நாளை மீண்டும் நீ சென்றிடுவாய். மறுபடியும் வாழ்க்கை வழக்கம் போல். கடந்தவரின் வெறுமை என்னுள்ளே படர்கிறது. சலிப்பும் நிறைகிறது. "போகணுமா?" என்னும் அக்கேள்வி எங்கோ மிக மெலிதாய் ஒலிக்கிறது. "போகட்டுமா?" என்று நீ கேட்ட பொழுதினை மனமின்னும் சபிக்கிறது. ஒரு நாள் நீ மீண்டும் வந்திடலாம். எதுவும் மாறாதென நம்பிடலாம். அவ்வாறில்லை எனப் புரிந்ததுமே என் செய்வது என்றே திகைத்திடலாம்!