அங்கத்தை மிகப் பழைய ஆடை மறைக்க, பசியினை, பழக்கத்தால் பாழ்வயிறும் ஏற்க, அன்றும் வழக்கம் போல் வறுமை தொடர, நம்பிக்கை இன்னும் தளராதவள் நகர, "அம்மா!" என்று ஒரு குரல் தடுத்து நிறுத்த, அக்குரலின் மென்மையவள் செவியில் இனிக்க, வெளிவந்து பார்த்தவள் முன் திருக்குறளே போல சிறிதாக இருப்பினும், அருள் செறிந்து மிக்க, பணிவுடன் ஒரு சிறுவன் பிச்சை கேட்டு நிற்க, அவனாலே தன் தாய்மை உணர்ந்தவள் சொக்கி, நிலைமீண்டு அவனைக் கனிவுடன் பார்க்க, அவன் வணங்கி, ஏனத்தை முன்னால் நீட்டி, நின்றிடவும் அனலிட்ட பூந்தளிரே போல சட்டென்று வாடி, பின், கண்கள் நிறைய, ஏதேனும் தந்து அவன் பசியைப் போக்க, முடியாதா எனும் ஆற்றாமையும் பொங்க, இல்லத்தின் உள்ளே விரைந்தவளும் சற்று நேரம் சென்ற பின்பே அவனிடம் வந்து, "இயன்றது இதுவே!" என வருத்தம் கொண்டு, ஒரு நெல்லிக் கனியைப் பணிவுடன் ஈந்து, அவன் முகம் பார்க்கவும் கூச்சம் கொண்டு, தலை தரை பார்த்தே அம்மாதும் நிற்க, அவள் நிலை உணர்ந்து அதனை ஏற்று, நன்றி சொல்லி, அவன் போகாது நிற்க, இவன் சிறுவயிறு நிறையத்தக்க உணவிட முடியா இழிநிலை வந்து, சூழ்ந்ததில் அவள் மனம் கனத்தே போக, சிறுவனோ, கண்களை மூடியே நின்று, அனைத்துயிர்கட்கும் அன்னை அவளை, ஒருமனதுடனே வேண்டியே நின்று, பிச்சையிட்டவள் வருந்திய நிலையை, மாற்றிடுமாறு கேட்கவும், சற்றும் தாமதமின்றியே அவள் அருள் புரிய, பொன்மழை ஆங்கே வலுத்தே பொழிய, தன் இழிநிலை மாறியதனால் அவளும், மகிழவும், சென்றான் சிறுவன் அவனும். குறிப்பு: கனகதாரா ஸ்தோத்ரத்தின் கதையை, என்னால் இயன்றவரை சொல்ல முயற்சி செய்தேன். சிறுவனே சங்கரர். -ஸ்ரீ