புத்தாண்டே வருக! புது வாழ்வு தருக!! எத்தனையோ புத்தாண்டு இதுவரைக்கும் கடந்து வந்தோம் அத்தனை ஆண்டிலும் நாம் அடுக்கடுக்கா தீர்மானங்கள் அமுலாக்க முடிவு செய்தோம்; ஆரம்பத்தில் முயற்சி செய்தோம் அப்புறம் தான் விட்டு விட்டோம்; அடுத்த ஆண்டு மறுபடியும். ஆயின், இப்புத்தாண்டில் மாற்றம் ஒன்று முடிவு செய்வோம் முடிந்தவரை செயல் படுத்த. புதுப் புதிதா தீர்மானங்கள் தெரிந்தெடுக்க தேவையில்லை புதைத்து வைத்த பழசுகளை புதிதாக்கும் வேலையில்லை புத்தம் புது பிரமாணங்கள் புனைவதெல்லாம் விட்டிடுவோம் - நம் முதாதையர் சொன்ன சில மூதுரைகள் புரட்டிடுவோம். நம்மாலே நடைமுறையில் நாள் தோறும் தேவைப்படும் நாலஞ்சு மாற்றங்களை நடத்தையிலே முயன்றிடுவோம். நல்லதே நினைத்திடுவோம்; பிறர்க்கு நன்மையே செய்திடுவோம். நாம் பேசும் வார்த்தைகளை நாவளந்து பேசிடுவோம். முடிஞ்சா உதவிடுவோம்; முடியாட்டா விலகிடுவோம் வீணாக அறிவுரைகள் வழங்குவதை குறைத்திடுவோம். உண்பதை உணர்ந்து உண்போம்; உடற்பயிற்சி உறுதி செய்வோம்; (உடல்) நலத்திற்கு மேலான செல்வமில்லை; சேர்த்திடுவோம். மாற்றத்தை தேடிடுவோம்; முழு மூச்சா முயன்றிடுவோம்; எதிர்பார்ப்பு குறைஞ்சதுன்னா ஏமாற்றம் குறைந்து விடும். கருமம் எண்ணித் துணிந்திடுவோம்; கடமை எண்ணிச் செயல்படுவோம் கடவுளென எண்ணி நம் பெற்றோரை பணிந்திடுவோம். “உலகத்தை திருத்தும் முன்னே உன்னை நீ திருத்திக்கொள்” உணர்ந்தோர்கள் சொன்ன மொழி உண்மையென உணர்ந்திடுவோம். மேலும் அன்றாடம் பழகி வர ஆறு கட்டளை என்று அழகாக எடுத்துரைத்தார் கவியரசு அன்று அவை: ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி... உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்... நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம். அவர் அன்றே சொன்னது; அதில் அர்த்தம் உள்ளது நம் கவிஞர் சொன்னது; இது காலம் வென்றது. இவையேதும் புதிதாக நான் இயம்பவில்லை - இதை தப்பாமல் கடைபிடித்தால் வானம் நமது எல்லை. அன்புடன், RRG
மிக்க நன்றி. அது ஆண்டவன் கட்டளை. அருமையாக சொன்னீர்கள். இனிய ஆங்புகில புத்தாண்டு தொடங்கட்டும். கடவுள் நம் பக்கம்.