பிஞ்சு பிஞ்சாய்க் காணும் மென்கால் விரலும் பஞ்சு போல மெத்தென்றிருக்கும் உன் கையும் நெஞ்சு நிறையக் காணும் அவள் உவகையை விடவும் விஞ்சியதோர் இன்பமென எதைச் சொல்ல இயலும்? ஐயிரண்டு மாதங்கள் இருட்டறைக்குள்ளே ஐயமெனும் நோய் சிறிதும் வாட்டா வண்ணம் அவ்வப்போது அசைந்தவாறு தாய் மனதினிலே மின்னலென இன்பத்தைப் பாய்ச்சிய வண்ணம், வரும் நாளை நீயும் பார்த்தே காத்திருக்க, அந்நாளே தம் வாழ்வின் நன்னாள் என்றே அறுதியிட்டவாறு உன் பெற்றோர் இருக்க வந்தது உயிரை உலுக்கும் வலியதும் அன்றே! ஈருயிரில் ஒருயிரைப் பிரிப்பதென்றும் கடினம்! மரணத்தை விடவும் ஆங்கு வேதனை இருக்கும்! ஆயினும் அதைக் கடந்தால் தான் புது வாழ்விருக்கும் எனும் பாடம் காதலிலும், பிறப்பிலும் தெரியும்! தன்னிடம் பிரிந்த துயராலே நீ அழுதிடவும் உன் குரலைக் கேட்டே மற்றோர் மகிழ்ந்திடவும் இனி இது தான் என்னுலகமென நீ தெளிவு கொண்டாய்! இனி நீயே தன்னுலகம் என உன் தாய் கொண்டாள்!