பிடித்ததும் பிடிக்காததும் ... கதிரவன் உதிக்கும் முன் கண் விழித்திட பிடிக்கும் விழித்திடும் பொழுதே தோன்றும் உன் நினைவுகள் பிடிக்கும் உன் நினைவுகள் இதழில் தோற்றுவிக்கும் மெல்லிய புன்முறுவல் பிடிக்கும் கதிரவனின் முதல் கிரணங்கள் காண கடற்கரையில் உலவ பிடிக்கும் கடலலைகள் கால் நனையாது அலைகளோடு விளையாட பிடிக்கும் தொலைவில் நீளும் தொடுவானை தொட்டு செல்லும் மேகங்கள் பிடிக்கும் அதிகாலை புல்வெளியில் பனித்துளி பாதம் தழுவ நடக்க பிடிக்கும் அன்று மலர்ந்த மலரை நுகர்ந்து படபடத்து பறக்கும் பட்டாம்பூச்சி பிடிக்கும் வண்ணவண்ண பூக்களில் மகரந்தம் தேடும் வண்டுகள் பிடிக்கும் சட்டென்று துள்ளி குதித்து ஓடி மறையும் முயல்குட்டி பிடிக்கும் தானியங்களை தேடி உண்ண வரும் சிறிய மஞ்சள் நிற பறவைகள் பிடிக்கும் காதலோடு தன் இணைக்கு விதையை ஊட்டிவிடும் சிவப்பு கார்டினல் பிடிக்கும் கொட்டும் பனியில் நீர்தேடி துள்ளி குதித்து ஓடும் மான் கூட்டம் பிடிக்கும் ஒளிரும் தீபத்தில் அழகாய் ஜொலிக்கும் மாலவனின் மயக்கும் புன்னகை பிடிக்கும் மனம் அமைதி அளிக்கும் மெல்லிசையையுடன் ஒலிக்கும் அவன் நாமங்கள் பிடிக்கும் பண்டிகை நாட்களில் மலரும் மணமும் நிறைந்த அவன் வசிக்குமிடம் பிடிக்கும் எப்பொழுதும் பரப்பரப்புடன் பறந்து செல்லும் நாட்கள் பிடிக்கும் பரபரப்பிலும் அழகிய கவிநயமான பாடல்கள் கேட்க பிடிக்கும் நட்போடு என்றும் உடன்வரும் மனம்கவர்ந்த நண்பர்கள் பிடிக்கும் வாழ்விலும் தாழ்விலும் கைவிடாது உடன்நிற்கும் அன்புள்ளங்கள் பிடிக்கும் என்னை சுற்றி இருக்கும் அனைத்தும் பிடித்திருந்தும் வெறுமை நிறைந்த மனதை வாழ்வில் அது அளிக்கும் வருத்தத்தை மட்டும் ஏனோ பிடிக்கவில்லை ...!