பாலை‘ படமும் கடந்த வந்த பாதையும்… http://www.youtube.com/watch?feature=player_embedded&v=15nidJFXPno செம்மை வெளியீட்டகம் தயாரித்துள்ள ‘பாலை’ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் கதை. காலநிலை மாற்றத்தால் தாங்கள் வாழும் பகுதி பாலையாக மாறிவிடும் அபாயத்தில் இருக்கிறார்கள் முல்லைக்குடி மக்கள். பாலை நிலத்தில் கொள்ளையராக வாழ விரும்பாத அந்த மக்கள் பாலையைக் கடக்க காத்திருக்கிறார்கள். அந்த சூழ்நிலையில் அவர்கள் மீது மற்றொரு இனக்குழு போர்த் தொடுக்கிறது. அந்தப் போரில் அவர்கள் வென்றார்களா? பாலையை கடந்தார்களா என்பதுதான் பாலைப் படத்தின் கதை. 2300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களைப் பற்றிய கதை, தமிழுக்கு இதுவே முதல் படம். சரித்திரப் படம் என்றால் பேரரசர்களைப் பற்றியதாக இருக்கும் என்ற வழக்கத்தை உடைத்து, சங்க காலத்தில் வாழ்ந்த சாமானிய மக்களின் காதல், காமம், வீரம் பற்றி பேசுகிறது இந்தப் பாலை. இன்றைய நவீன நவநாகரீக சமூகம் எதெல்லாம் வேண்டும் என்று ஏங்கிக் கிடக்கிறதோ அதெல்லாம் நம் முன்னோர்களான பழங்குடி சமூகத்தினருக்கு சர்வசாதாரணமாக நிகழ்ந்து வந்தன என்பதை மறைபொருளாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள பாலை, பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும் என்பது நிச்சயம்!! படத்தின் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்களும் தற்போது ஹிட்டாகி வருகிறது. சரித்திரப் படம் என்ற போதும், பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஜனரஞ்சகமாக படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அந்தப் பாடல்களை கேட்டாலே புரியும்... மிகுந்த பொருட்செலவில் பாலை படத்தைத் தயாரித்துள்ள செம்மை வெளியீட்டகம் நிறுவனமே பாலை படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. ஏற்கெனவே பாலை படப்பாடல்களை இந்நிறுவனமே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. செம்மை நிறுவனம் முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனம் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை தயாரித்து வெளியிடுவதில் ஆர்வமாக இருக்கிறது பாலை படம், இளைஞர்களின் பட்டாளத்தின் கனவுப் பட்டறையில் உருவானது. படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர், இசையமைப்பாளர் முதல் உதவி இயக்குநர்கள் வரை எல்லோருமே 22 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள். இயக்குநர்: படத்தின் இயக்குநர் ம.செந்தமிழன், கற்றது தமிழ் இயக்குநர் ராமிடம் உதவியாளராக இருந்தவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடமும் பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு. முல்லை நிலத்தில் நடக்கும் கதை என்பதால் தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் அடர்ந்த காடுகளில் (முல்லை நிலத்தில்) ஒட்டுமொத்தப் படத்தின் படப்பிடிப்பும் நடத்தியிருக்கிறார், இயக்குநர் செந்தமிழன். நடிகர்கள்: பழங்குடி மக்களைப் பற்றிய கதை என்பதால் கிராமங்களில் உள்ளவர்களையே கதை மாந்தர்களாக்கி நடிக்க வைத்திருக்கிறார், இயக்குநர். தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைக்கும் வனப்பகுதிகளில் வாழும் இருளர் இன மக்களை முக்கிய கதாப்பத்திரங்களில் தோன்றுகிறார்கள். படத்தில் அதிகளவில் சண்டை மற்றும் போர்க்காட்சிகள் இடம்பெறுவதால் கிராமங்களில் உள்ள சிலம்பம், களறி, மல்யுத்த வீரர்கள் மயில் கூச்செறியும் அளவுக்கு ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகி, நாயகன்: பாலை படத்தின் நாயகி ஷம்மு. இவர் காஞ்சிவரம், மாத்தியோசி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். காஞ்சிவரம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ப்லிம் ஃபேர் விருது பெற்றவர். இந்தப் படத்தில் பழங்குடி இனப்பெண்ணாக தூயத் தமிழில் பேசி நடித்திருக்கிறார். போர்க்காட்சிகளில் ஈட்டி, சிலம்பம் மற்றும் கத்தியை வைத்து டூப் இன்றி நடித்திருக்கிறார். அறிமுக நாயகன் சுனில் படத்தில் ஷம்முவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவரும் ஏறு தழுவல், அம்பு எய்தல், சிலம்பம் சுற்றுதல் என ஆக்ரோஷமாக சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். இதற்காக கிராமத்தில் உள்ள சிலம்பம், மல்யுத்த வீரர்களிடம் இவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. படத்தின் இறுதிக் காட்சியில் இவர் எதிரிகளிடம் சண்டையிடும் காட்சி பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைக்கும்! முல்லைக் குடி: பாலை படத்திற்காக ‘முல்லைக் குடி’ என்ற ஒரு கிராமத்தையே அடர்ந்த வனப்பகுதியில் தத்ரூபமாக மிகுந்த பொருட் செலவில் செட் அமைக்கப்பட்டது. இதற்காக பழங்குடி மக்களின் நிஜ வீடுகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டன. படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகியும் அந்த வீடுகள் இன்றும் அப்படியே உள்ளன. அந்தப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தினமும் கூட்டம் கூட்டமாக வந்து அதைக் கண்டு ரசித்துச் செல்கின்றனர். முல்லைக் குடி மக்களின் எதிரிகளான ஆயக் குடி கிராமமும் கூடாரங்கள் அமைத்து தத்ரூபமாக செட் அமைக்கப்பட்டது. ஒளிப்பதிவாளர்: பாலை படத்தின் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம், எல்வி பிரசாத் திரைப்படக் கல்லூரி பட்டதாரி. கலைஞர் டிவியின் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது பெற்றவர். அத்துடன் தேசிய விருது பெற்ற போஸ்ட் மேன் குறும்படத்தின் ஒளிப்பதிவாளர். திரைப்பட ஒளிப்பதிவில் புரட்சியை ஏற்படுத்தி வரும் 5டி காமிராவை சிறப்பாக கையாள்வதில் தமிழகத்தில் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் என்று திரைத்துறையினரால் மாற்றுக் கருத்தின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டவர், அபிநந்தன் ராமானுஜம். இசையமைப்பாளர் பாலை படத்தின் இசை அமைப்பாளர் வேத் ஷங்கர், ஆஸ்கர் வின்னர் ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பள்ளியில் பயின்றவர். தற்போது நான்கைந்து படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் இசையமைத்த முதல் படம் பாலை தான். பாலையில் ‘கொல்லேறே….’ , ‘மாயமா….’ , ‘யாதோ யாதோ….’ ஆகிய மூன்று பாடல்களும் இப்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சவுண்ட்க்ளவுடு டாட் காமில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் பாலை பாடல்களை டவுன் லோடு செய்வதே இதற்கு சாட்சி! படத் தொகுப்பாளர் சென்னை திரைப்படக் கல்லூரி பட்டதாரி ச.ரிச்சார்ட் முதல் முறையாக பாலை படம் மூலம் படத் தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார். இவர் படத்தொகுப்பாளராக பணியாற்றிய குறும்படங்கள் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டன.