முனுசாமி தொடர்ந்தார் " பஞ்சகல்யாணியை பாண்டிய வீரர்கள் பிடிச்சுகிட்டு போனபிற்பாடு பரமகல்யாணி இறந்துடுச்சு. சிவராசன் பித்து பிடிச்சவர் போல இருந்தார். குதிரைகளின் பிரிவை மறக்க இரண்டு பெரிய மண் பொம்மைகளை அந்த குதிரைகளைப் போல உருவாக்கினார். பஞ்சகல்யாணியும் பரமகல்யாணியும் உயிருடன் இருப்பது போல அந்த மண் பொமைகளை தடவி கொடுப்பது அவைகள் மீது அமர்ந்து சவாரி செய்வது, அவைகளுடன் பேசுவது என்று அவர் செய்ததை பார்த்து அவருக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சு என்று பேசினாங்க. பாண்டிய மன்னரின் குதிரை லாயத்தில் இருந்த பஞ்சகல்யாணி சிவராசன், பரமகல்யாணி இவர்களின் பிரிவினால் வாடி கொடுக்கப்பட்ட தீனிகளை சரியாக உண்ணாமல் இளைத்து போயிற்று. அப்புறம் அதுக்கு தரப்பட்ட போர் கால பயிற்சிகளை அது சரியாக செய்யவில்லை. இதனால் கவலையடைஞ்ச மன்னர் சிவராசனை அரண்மனைக்கு வரவழைத்தார். பஞ்சகல்யாணியை பார்த்த சிவராசன் அதைக்கட்டிக் கொண்டு அழுதார். பிறகு அதன் பிடரி மயிரை நீவி விட்டு அதன் காதுகளை வருடி அதனுடன் உறவாடினார். சிவராசனை கண்டதும் அவருடைய பாசமான ஸ்பரிசங்களாலும் பஞ்சகல்யாணி புத்துயிர் பெற்றது போல தீனிகளை ஒழுங்காக சாப்பிட்டு பயிற்சிகளை முறையாக செய்யவும் தொடங்கியது. இதைக்கண்ட மன்னர் சிவராசனை அரண்மனையில் தங்கி பஞ்சகல்யாணியை பராமரிக்கும் பொறுப்பை கொடுத்தார். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பஞ்சகல்யாணி ஒரு அறிவுள்ள குதிரை. அது பாண்டிய மன்னரை ஒரு முறை ஆபத்திலிருந்து காப்பாற்றியது. ஒரு நாள் பஞ்சகல்யாணி மீது அமர்ந்து காட்டுக்குள் வேட்டைக்கு சென்றார். மன்னர். மானை துரத்தி வெகு தூரம் மன்னர் சென்ற போது அடர்ந்த காட்டிற்குள் எதிரிப்படை வீரர்கள் மறைந்திருந்து அவரை தாக்க முனைந்தனர். இதை தனது விசேட அறிவால் உணர்ந்த பஞ்சகல்யாணி தனது குரலை உயர்த்தி கனைக்க மறைந்திருந்த எதிரிகளின் குதிரைகளும் பதிலுக்கு கனைத்தன. உடனே மன்னருக்கு தனக்கு வரப்போகும் ஆபத்தை உணர்ந்து போரிட தயாரானார். மன்னரின் வீர சாகஸங்களை கேள்விப்பட்டிருந்த எதிரி வீரர்கள் பின் வாங்கி ஓடிவிட்டனர். மற்றொரு முறை போர் களத்தில் பாண்டிய மன்னரின் உயிரை பஞ்சகல்யாணி காப்பற்றியது. களத்தில் சண்டையியிட்டுக் கொண்டிருந்த மன்னரின் மீது எதிரி வீரர் ஈட்டி ஒன்றை எறிந்தார். சண்டை மும்முரத்தில் மன்னர் அதை கவனிக்கவில்லை. ஆனால் ஆபத்தை உணர்ந்த பஞ்சகல்யாணி தனது முட்டிகளை மடக்கி குனிந்து ஈட்டி மன்னரின் மீது படாமல் செய்தது. மன்னரை காப்பாற்ற திடீரென்று பஞ்சகல்யாணி குனிந்ததில் நிலை தடுமாறி மன்னர் கீழே விழுந்தார். மன்னர் விழுவதை பார்த்த தளபதி விரைந்து அந்த இடத்திற்கு வந்து எதிரிகளுடன் சணடையிட்டுக் கொண்டே மன்னரை பஞ்சகல்யாணி மீது அமர்த்தினார். பஞ்சகல்யாணி களத்திலிருந்து லாவகமாக் விலகி மன்னரை பாசறைக்கு கொண்டு சேர்த்தது. இந்த நிகழ்வுகளுக்கு பின் மன்னர் பஞ்சகல்யாணியை பெரும் பொக்கிஷமாக கருதி சிவராசனுக்கு பொற்கிழிகள் வழங்கி கவுரவித்தார். சிவராசனின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பஞ்சகல்யாணிக்கு பாண்டிய நாட்டு இளவரசர் மூலம் ஆபத்து விளைந்தது. தொடரும்